என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பிடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளை பந்து தொடரில் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பீகாரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- என்டிஏ கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமார் கட்சி பிரதான கட்சிகளாக உள்ளன.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம் (நிதிஷ் குமார் கட்சி) முக்கிய கட்சிகளாகும். இந்தியா கூட்டணியில் ராஷ்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பிரதான கட்சிகள் ஆகும்.
இந்த முறை தேர்தல் மிகக்கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில் பீகார் மாநில பாஜக தலைவர், திலிப் ஜெய்ஸ்வால், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரை டஜன் எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திலிப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
இன்னும் அடுத்த சில நாட்களில் அரை டஜன் எதிர்க்கட்சி எம்.எம்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள். இது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைத்துவம் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையின் தெளிவான அறிகுறியாகும்.
இவ்வாறு திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ஆனால் கட்சி தாவும் எம்.எல்.ஏ.-க்கள் யார் யார் என்பதை வெளியிடவில்லை. முன்னதாக இரணடு முறை எம்.பி.யாகவும், கடந்த முறை காங்கிரஸ் சார்பில் முசாபர்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஜய் நிஷாத் மீண்டும் பாஜக கட்சிக்கு திரும்பினார். அவரை வரவேற்றார். அவரது வருகறை திர்கட் பிராந்தியத்தில் கூடுதல் வலிமையைக் கொடுக்கும் என்றார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்தார்.
- இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 318 ரன்கள் குவித்தது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் கில் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.
அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரராக ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.
8 முறை 150+ ரன்கள் அடித்து முதலிடத்தில் பிராட்மேன் நீடிக்கும் நிலையில், 2-வது வீரராக 5 முறை அடித்து ஜெய்ஸ்வால் நீடிக்கிறார்.
இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் 4 சதங்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
- பல நாடுகளில் போரை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி பெண் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார். இந்திய- பாகிஸ்தான் உள்ளிட்ட பல போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளேன் எனத் தெரிவித்தார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிவு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை வைத்தன.
டிரம்பிற்கு நோபல் பரிவு வழங்கப்படாத நிலையில், நார்வே நோபல் கமிட்டியை வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் செயுங் கூறுகையில் "அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது. ஆனால், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்வார். போரை முடிவுக்கு கொண்டு வருவார். மக்கள் உயிரை காப்பாற்றுவார். அவர் மனிதாபிமான இதயத்தை கொண்டுள்ளார். டிரம்ப் தனது விருப்பத்தின் சக்தியால் மலைகளை கூட நகர்த்துவார். அவரை போன்று எவரும் இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், டொனால்டு டிரம்ப் இது தொடர்பாக நேரடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் விரைவாக இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.
அதன்படி காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வலுப்பெறும்.
- சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்று செய்தி வெளியானது.
- என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.
இந்த நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் "என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திரிஷா இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை எனத் தெரிகிறது.
- இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 7 நாட்களே உள்ள நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் டிரெய்லர் வெளியாகி தேதியை மாற்றியது படக்குழு. அதன்படி வருகிற 13- ந் தேதி டிரெய்லர் வெளியாகும் என புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் உள்ளனர்.
- சாதாரணக் கட்டண பேருந்தில் பெண்கள் கட்டணமில்லைா பயணம் மேற்கொள்ளலாம்.
- மலைப்பகுதியில் மாற்று திறனாளிகள் இனிமேல் விடியல் பயணம் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்தில் பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு விடியல் பயணம் என பெயரிடப்பட்டுள்ளது. விடியல் பயணம் என பெயரிடப்பட்டு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
மலைப் பகுதியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில, மலைப்பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தி, அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
- இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.
- ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
- சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கேரள பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த ஒரு சில ஆவணங்கள் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2019 ஜூலை 19 அன்று அகற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பலகைகளின் எடை 42.8 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டது.
மறுநாள் (ஜூலை 20, 2019) பலகைகள் உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரின் பொறுப்பில், முலாம் பூசும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இவை 39 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
சென்னை நிறுவனத்தில் பலகைகள் பதிவு செய்யப்பட்டபோது, அவற்றின் எடை 38.25 கிலோகிராம் எனப் பதிவாகியிருந்தது. இதன் மூலம், பயணத்தின் போது சுமார் 4.54 கிலோகிராம் தங்கம் அல்லது தங்க முலாம் பூசிய செம்பு குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
பலகைகள் சென்னைக்குச் செல்லும் வழியில் நேரடியாக கொண்டு செல்லப்படாமல் வழியில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பலகைகள் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் கோயில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்கள், பெங்களூருவில் உள்ள அய்யப்பா ஆலயம் மற்றும் கேரள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு ஒரு தனியார் பூஜைக்காகவும் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும், இந்த கவசங்களுக்கு நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி 2019 இல் அனுப்பிய மின்னஞ்சலில், தங்கத்தை ஒரு திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?. திரும்பக் கொண்டுவரப்பட்ட பலகைகள் அசல் துண்டுகள்தானா, அல்லது அதுபோன்ற பிரதிகள் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கேரள அரசு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு வாரங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதன் பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.
- ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைத்தனர். 38 ரன்கள் எடுத்த ராகுல் 19-வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் அரை சதமும், மறுபுறம் ஜெய்ஸ்வால் சதமும் விளாசினர்.
தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து கில்- ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
- வேடந்தூரில் நடைபெற்ற விழாவின்போனது உதயநிதி ஸ்டாலின் காலை தொட்டு ஆசி.
- தனது மகன் வயதுடைய உதயநிதி ஸ்டாலின் காலை தொடலாமா? என விமர்சனம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் மாவட்டம் சென்றிருந்தார். நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி உள்ளிட்டோர் இருந்தனர். வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் உதயநிதி, அமைச்சர் பெரியசாமிக்கு மாலை அணிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து அவரது காலை தொட்டு ஆசி பெற்றார். 74 வயதான எம்.எல்.ஏ., தனது மகன் வயதுடைய உதயநிதி ஸ்டாலின் காலில் விழந்து ஆசி பெறலாமா?. ஓஹோ இதான் திமுக கற்றுத் தந்த சுயமரியாதையா, இதுதான் திமுக சமூக நீதி ஆட்சியா....? என வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காந்திராஜன் அதிமுக சார்பிலும் எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். மேலும், துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.






