search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nobel peace prize"

    • எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
    • அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார்

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் X- நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

    ரஷ்யா-உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

    இதற்கிடையில், நார்வே எம்.பியான சோபி மர்ஹாக், ஜூலியன் அசாஞ்சேவை பரிந்துரைத்தார். அசாஞ்சே மேற்கத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், இதனால் அமைதிக்கு அவர் பங்களித்துள்ளார். ஆகவே அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று அவர் தெரிவித்தார். 

    • 2016ல் ஈரான் நீதிமன்றம், நர்கெசுக்கு 16 வருட சிறை தண்டனை வழங்கியது
    • தண்டனை முடிந்தாலும், மொபைல் போன் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று, ஈரான்.

    ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், 51 வயதாகும் நர்கெஸ் மொகமதி (Narges Mohammadi).

    பல வருடங்களாக ஈரான் நாட்டில், பெண் உரிமைகளுக்காக போராடி வந்த பவுதிக பட்டதாரியான நர்கெஸ், ஆடை கட்டுப்பாடு, மரண தண்டனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    2016 மே மாதம், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், தேச விரோத குற்றத்திற்காக 16 வருட சிறை தண்டனை வழங்கியது.

    இடையே 2020ல் சில மாதங்கள் விடுதலை செய்து அனுப்பிய அந்நாட்டு அரசாங்கம், 2021ல் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், சிறையிலிருந்த நர்கெசுக்கு பெண்களுக்கான அடக்குமுறையை எதிர்த்து போராடி வருவதற்கும், மனித உரிமை மற்றும் அனைவருக்குமான சுதந்திரம் குறித்து பிரசாரம் செய்து வருவதற்கும் புகழ் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    நார்வே தலைநகர் ஓஸ்லோ நகரில், நர்கெசின் மகன் மற்றும் மகள் தாயாரின் சார்பில் பரிசினை பெற்றனர்.

    ஆனால், ஈரான் வெளியுறவு துறை, இந்த முடிவை கண்டனம் செய்திருந்தது.

    இந்நிலையில், சுமார் 12 வருடங்களை சிறையிலேயே கழித்த நர்கெஸ் மொகமதிக்கு, ஈரான், மேலும் 15 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், மத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சிறை தண்டனை காலம் முடிந்தாலும், அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வெளியே 2 வருடங்கள் தங்கி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த தண்டனை காலம் முடிவடைந்ததும், மேலும் 2 வருடங்களுக்கு நர்கெஸ் அயல் நாடுகளுக்கு பயணம் செய்வதும், மொபைல் போன் வைத்திருப்பதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

    விசாரணையின் போது அவர் நேரில் வரவழைக்கப்படாமல், அவர் இல்லாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 13 முறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டவர், நர்கெஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கும் மனித உரிமை மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இத்தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • ஈரானை சேர்ந்த 51 வயதான மொகமதி ஒரு பவுதிக பட்டதாரி
    • மொகமதிக்கு பலமுறை சிறை தண்டனை விதிக்கப்பட்டது

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியானவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், வேதியியல் மற்றும் இலக்கிய துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரானிய பெண்கள் உரிமை பிரச்சாரகரும், மனித உரிமை போராளியுமான 51 வயதான நர்கெஸ் சஃபி மொகமதி (Narges Safie Mohammadi) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பவுதிக பட்டதாரியான மொகமதி, ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த போராட்டங்களுக்காகவும் கவுரவிக்கப்படுகிறார் என நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் பரிசு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மொகமதி பல முறை சிறைவாசம், கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட நீண்ட போராட்ட வரலாறு கொண்டவர்.

    5 முறை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 13 முறை ஈரான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட மொகமதி, தண்டனையாக 154 முறை கசையடிகளும் வாங்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று ஒஸ்லோ நகர மண்டபத்தில் ஒரு விழாவில் மொகமதிக்கு இப்பரிசு வழங்கப்படும்.

    • நோபல் கமிட்டி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.
    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாகவும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியானது.

    நான் மோடியின் மிக பெரிய ரசிகர், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது-

    ஆனால் இந்த செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    இது தெடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 'ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்' என்றார்.

    நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியானது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். இந்த குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.

    உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பரிந்துரைக்க தகுதியுடையவர்கள், தாங்கள் முன்மொழிந்த நபர் அல்லது அமைப்பின் பெயரை வெளியிடலாம்.
    • காலநிலை ஆர்வலர்களான ஸ்வீடனின் கிரேட்டா தன்பெர்க் பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்

    இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305  பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

    நோபல் சட்டத்தின்படி, பரிந்துரை செய்யப்பட்டவர்களின் அடையாளம் 50 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்க தகுதியுடையவர்கள், தாங்கள் முன்மொழிந்த நபர் அல்லது அமைப்பின் பெயரை வெளியிடலாம்.

    இந்த ஆண்டு அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் மற்றும் ஒரு சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை நிறுவ செயல்படும் உக்ரைன் குழுவும் அடங்கும்.

    சிறையில் அடைக்கப்பட்ட புதின் எதிர்ப்பாளரும், விஷ தாக்குதலுக்கு ஆளான ஊழல் எதிர்ப்பு ஆர்வலருமான அலெக்ஸி நாவல்னி, பத்திரிகையாளரும் அரசியல் ஆர்வலருமான விளாடிமிர் காரா முர்சா மற்றும் ஜனநாயக ஆதரவு இளைஞர் இயக்கம் வெஸ்னா ஆகியோருக்கும் அமைதிப்பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    காலநிலை ஆர்வலர்களான ஸ்வீடனின் கிரேட்டா தன்பெர்க், உகாண்டாவின் வனேசா நகேட், ஈரானிய பெண்கள் உரிமைகள் ஆர்வலர் மசிஹ் அலினெஜாட் மற்றும் அவரது ஹிஜாப் எதிர்ப்பு இயக்கமான மை ஸ்டெல்தி ப்ரீடம், சால்வேஷன் ஆர்மி ஆகிய பெயர்களும் இந்த பட்டியலில் இருக்கும் என நம்பப்படுகிறது.

    கடந்த 2016ஆம் ஆண்டு அதிகபட்சமாக 376 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். அதைவிட இந்த ஆண்டு சற்று குறைவான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • உக்ரைன், ரஷிய மனித உரிமை அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், 2022-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டி மற்றும் ரஷிய மனித உரிமை அமைப்பான மெமோரியல் ஆகிய அமைப்புகளுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணபடுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக அலெஸ் பியாலியாட்டிஸ் மற்றும் உக்ரைன், ரஷிய மனித உரிமை அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×