என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல்.
- வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் வாக்கு திருட்டுக்கான ஆதாரத்தை வழங்குவோம்.
பாட்னா:
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார்.
சீதாமர்ஹி பகுதியில் இன்று நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:-
வாக்காளர் உரிமைக்கான இந்தப் பயணத்தில் நீங்கள் உங்கள் முழு பலத்தையும் செலுத்தியுள்ளீர்கள். சிறு குழந்தைகள் வருகிறார்கள், அவர்கள் என் காதில் நரேந்திர மோடி வாக்குகளை திருடுகிறார் என்று சொல்கிறார்கள்.
பீகாரில் தேர்தலை திருட முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இங்குள்ள மக்கள் புத்திசாலிகள், எச்சரிக்கையானவர்கள். பீகாரில் ஒரு வாக்கு கூட திருட விட மாட்டார்கள் என்பதை பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் அறிந்து கொள்ள, வாக்காளர் உரிமை யாத்திரையை இங்கு தொடங்கியுள்ளோம்.
உங்கள் குரலை அடக்க விரும்புவதால் ஏழைகளின் வாக்குகளை திருடுகிறார்கள், இந்த மேடையில் இருந்து நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், அவர்களால் உங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.
அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு ஒரு புனித நூல். அது நமது நாட்டின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தை கொண்டது.
அரசியலமைப்பு தலித்துகள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க. இந்த உரிமையை உங்களிடம் இருந்து பறிக்க விரும்புகிறது.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்குகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழை மக்களின் பெயர்கள் அடங்கும். பணக்காரர்கள் பெயர்கள் அல்ல.
கர்நாடகாவில், பா.ஜ.க. 'வாக்கு திருட்டு' செய்திருப்பதை நாங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம். அதற்கு முன்பு பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. பா.ஜ.க.வினர் கவனமாகக் கேட்க வேண்டும். நாங்கள் ஒரு சட்டசபைக்கான ஆதாரத்தை மட்டுமே வழங்கியுள்ளோம்.
வரும் காலத்தில் பாராளுமன்றம், அரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் 'வாக்கு திருட்டு'க்கான ஆதாரத்தை வழங்குவோம். வாக்குகளை திருடுவதன் மூலம் மட்டுமே பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
- நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
- நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
- தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
- வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளா ங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள்.
விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனா்.
சிலர் தென்னங்கன்றுகளை வாங்கி ஆலயத்தில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
- நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க மதுரை மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரையில் தி.மு.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் பணியா? என்று பொதுமக்களே கேவலமாக பேசுகிறார்கள். இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் சைலண்ட் ஆகிவிட்டார். அவர் வருகிற தேர்தலில் நிற்பாரா? நிற்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. உங்க பொங்க சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்வதை கூட மக்கள் அசிங்கமாக பார்க்கிறார்கள். மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடுகள் நடந்துள்ளதை ஏன் அமைச்சர்கள் கண்காணிக்கவில்லை. மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்கள் இரண்டு பேரும் மாநகராட்சியை கண்காணித்து இருந்தால் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள சொத்துவரி முறைகேடுகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேருமே காரணம்.
மாநகராட்சியில் நிழல் மேயராக மேயரின் கணவர் இருந்தார். அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மேயர் இன்னும் பதவி விலகவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நேர்மையான விசாரணை நடக்கும். ஆனால் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தமில்லாத நபர்களை விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அழைக்கிறார்கள், இது ஏற்கத்தக்கது அல்ல. மதுரை மாநகராட்சி மேயர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பாகும். அடுத்து வரும் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் கலந்துகொண் டால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். மதுரை மேயர் பதவியில் நீடித்தால் தி.மு.க.வுக்கு தொடர்ந்து கெட்ட பெயர் மக்கள் மத்தியில் ஏற்படும்.
அமைச்சர் மூர்த்தி இன்னும் 6 மாதத்திற்கு பிறகு எங்கு இருப்பார் என்று தெரியாது. அநேகமாக நார்வே, சுவீடன் போன்ற நாடுகளுக்கு அவர் சென்று விட வாய்ப்பு இருக்கும். மத்திய, மாநில நிதியை கொண்டு சாலைகள் போடுவது சாதனை இல்லை. நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
40 ஆண்டு காலமாக நிறையாத தெப்பக்குளத்தை வைகை தண்ணீர் மூலம் நிரப்பினோம். ஆனால் இப்போது அந்த தடுப்பணையில் உள்ள ஒரு செட்டர் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்துள்ளது, இதுவே ஒரு முறைகேடாகும். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை அவர்கள் சொல்ல முடியுமா?
முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் பகுதியில் இந்த தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனை குடித்த பெண்கள் இளநீர் போல தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தண்ணீரை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. தாகம் தீர்த்த அவரை வரவேற்க மதுரை மக்களே தயாராக இருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார். திசை தெரியாத காட்டுக்குள் சென்று விட்டு வழி தெரியாமல் தவிப்பது போல தவித்து வருகிறார். வேறு எதுவும் அவரைப் பற்றி சொல்வதற்கு இல்லை. அ.தி.மு.க. எப்பொழுதும் தனது கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாது. அது திருமாவளவனுக்கும் தெரியும். கொள்கைகளை கடைபிடிப்பதில் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.ம.மு.க. தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்.
- பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் இதனை கூறுகிறேன்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க நிர்வாகி இல்லத் திருமணத்தை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதுபோல் வரும் 2026- சட்டமன்றத் தேர்தலிலும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன்.
ஏனென்றால் பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் நான் இதனை கூறுகிறேன். அந்த அறிக்கையின் படி விஜயின் அரசியல் பிரவேசம் பல்வேறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை. இதற்காக நான் அவருடன் கூட்டணிக்கு செல்வேன் என்று எண்ணி விட வேண்டாம்.
அ.ம.மு.க. தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2024 பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கருதி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம். தற்போதும் அந்தக் கூட்டணியில்தான் உள்ளோம் என்றார்.
- முதுகலை படிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்தில் இருந்து இன்னொரு பாடத்திட்டத்திற்கு மாற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
- புதிய விசா கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதில் விசாக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு மாணவர்கள், தொழிலாளர்கள், வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கான விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படும் கால அளவு கட்டுப்படுத்தப்படும். இந்த புதிய விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்து உள்ளது. சட்டவிரோதமாக தங்குபவர்களை கண்டு பிடிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் இந்த மாற்றம் தேவை என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.
சர்வதேச மாணவர்கள் விசா (எப்) மற்றும் கலாச்சார பரிமாற்றத் திட்டங்களில் பார்வையாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் விசாக்களுக்கு (ஜெ) இனி அதிகபட்சமாக 4 ஆண்டுகள் தங்கியிருக்க கால அவகாசம் கொடுக்கப்படும். காலஅவகாசத்தை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது படிப்பு மற்றும் வேலையில் இருக்கும்வரை விசா காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாவுக்கு காலக்கெடு விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு வேலை தேட 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த அவகாசம் 30 நாட்களாக குறைக்கப்படுகிறது.
முதுகலை படிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்தில் இருந்து இன்னொரு பாடத்திட்டத்திற்கு மாற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஊடக பிரதிநிதிகளுக்கான விசா வைத்திருப்பவர்கள் 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படும். இந்த புதிய விசா கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
- மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம்.
- ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது.
அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.
ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை இத்தொடரில் கைப்பற்றி அசத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சோக சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் போடாமல் இருந்தது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இன்று ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது.
ஆனால் ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அன்றிலிருந்து மௌனம் எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல், மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.
அப்படித்தான் RCB CARES உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை. ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க... ஒன்றாக முன்னேற... கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும். விரைவில் மேலும் விவரங்கள்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.
- திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாப்பட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாப்பட்டி. இந்த சிறு கிராமம் தான் தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் படுபயங்கர ஃபேமஸ் ஆனது.
ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க... சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இதையடுத்து கூமாப்பட்டிக்கு வெளியூரில் இருந்து இளைஞர்கள் படையெடுத்தனர்.
கூமாப்பட்டி கிராமத்தை டிரெண்ட் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி, பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் பணி எதுவும் நடக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது.
- மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.
சென்னை:
சென்னையின் பாரம்பரிய கட்டிடத்தின் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது. அதன் எழில்மிகு தோற்றம் மாறாமல் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையத்துடன் மெட்ரோ ரெயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகர பஸ் வசதி, கார், ஆட்டோ போன்றவை எளிதாக பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க ஓட்டல்கள், ஷாப்பிங் செய்ய வணிகப் பகுதி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பல அடுக்கு பார்க்கிங் வசதி தயாராகிறது.
ரெயில்கள் வருகை மற்றும் புறப்பாடுக்கான கட்டிடம், தரை தளம் மற்றும் 3 அடுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. ரெயில்கள் வருகை மற்றும்புறப்பாடுக்கு தனித்தனி பிரத்யேக பகுதிகள் ஒதுக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு பயணிகளுக்காக சிறப்பு வழியும் அமைக்கப்படுகிறது.
ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது. காந்தி இர்வின் சாலையிலும் பூந்தமல்லி சாலையிலும் 5 அடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.
பயணிகள் நடந்து செல்வதற்கு உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது. பிளாட்பாரங்களை கடக்கவும், சாலைக்கு செல்ல நடை மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. இது தவிர பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் எளிதாக செல்ல எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் புதிதாக நிறுவப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து எளிதாக வெளியேறி பஸ், ஆட்டோ, கார்களில் செல்லவும் அதே போல ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பயணிகளை இறக்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இது தவிர புதிதாக பார்சல் அலுவலகம், ரெயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம் பூந்தமல்லி சாலை பகுதியில் கட்டப்படுகிறது. துணை மின்நிலையம், புதிய ரெயில்வே குடியிருப்புகளின் தரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக லிப்ட் வசதி, எஸ்கலேட்டர், குளர்ச்சியான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவை கட்டப்படுகிறது.
எழும்பூர் ரெயில் நிலையத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க வடக்கு பகுதியில் பிரமாண்ட குடிநீர் தொட்டி "சம்ப்" தரைக்கு அடியில் கட்டப்படுகிறது. இங்கிருந்து ரெயில்களுக்கு குடிநீர் நிரப்பும் வசதியும் அளிக்கப்படுகிறது.
- கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு.
- அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்" என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி விஜித ஹேரத் கொழும்புவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜித ஹேரத் கூறியதாவது:-
முதலாவதாக கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு ஆகும். அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிப்பதற்கு ஒவ்வொரு விஷயங்களையும் கூறுவார்கள். அப்படித்தான் கச்சத்தீவு பற்றி கூறுகிறார்கள். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல்முறை அல்ல.
இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்த ஒரு ராஜதந்திர செயல்பாடுகளுக்காகவும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாங்கள் வழங்க மாட்டோம் என்று தெளிவாக கூறுகின்றேன். இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் பேச்சு குறித்து கவனம் செலுத்தலாம்.
எனவே அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.
- இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும்.
புதுடெல்லி:
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், மின்சார எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அத்துறை கடுமையாக பாதிக்கும்.
இந்த நிலையில் பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ஜவுளித்துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, கடந்த 19-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை பருத்திக்கான இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது.
ஏற்றுமதியாளர்களை மேலும் ஆதரிக்கும் வகையில், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை செப்டம்பர் 30-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. மேலும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை கடந்த 18-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.
இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும். உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு சந்தையில் கச்சா பருத்தி கிடைப்பதை அதிகரித்து பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தம் குறையும். இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பதன் மூலமும் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும் என்று அரசு தெரிவித்து உள்ளது.
- கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன்.
- வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் சுமார் 30 சதவிகிதம் என்ற அடிப்படையில் 15000 கோடி ரூபாய் அளவிலான ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மேலும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் விலை அதிகம் உள்ள ஆடைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இதில் லாபமும் குறைவாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 50 சதவிகித வரி விதித்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவை விற்பனையின்போது 150 ரூபாய் என்ற உச்ச விலையை அடையும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம் வியட்நாம் ஜோர்டான் போன்ற நாடுகளில் பனியன் ஆடைகளை வாங்க வர்த்தக விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு முன்பு பெற்ற ஆர்டர்கள் முழு பணியும் நிறைவடைந்து பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெறாமல் அமெரிக்க வர்த்தகர்கள் தாமதம் செய்து வருவதால் தங்களின் முதலீடு முடங்கி உள்ளதாகவும் பெரும் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் தயார் நிலையில் உள்ள ஆடைகளை பெறாமல் அப்படியே நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதனை பெற முடியாமல் உள்ளேன். இந்த தொகை முழுவதும் கடன் பெற்று ஆடைகளை உற்பத்தி செய்துள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என தெரியவில்லை வர்த்தகர்கள் உடனான சந்திப்புக்கு பிறகே நிலை தெரியும் இந்த நிலை மாற விரைவில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறுகுறு நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரும் என தெரிவித்தார்.
திருப்பூரில் தயார் நிலையில் 10 லட்சம் ஆடைகள் மற்றும் உற்பத்தி நிலையில் 25 லட்சம் ஆடைகள் என சுமார் 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் ஆடைகள் தேங்கி உள்ளதாகவும் வரி விதிப்பு குறித்த முறையான தெளிவான அறிவிப்பு வரும் வரை பணிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க வர்த்தகர்கள் கோரி உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆரம்ப நிலையிலேயே 500 கோடி வர்த்தக பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் மேலும் இடைக்காலமாக மற்ற நாடுகளிடமிருந்து ஆடைகள் வாங்கப்பட்டால் வர்த்தகர்களை மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வருவது சிரமமான நிலையை அடையும் என்பதால் இதில் தாமதமின்றி அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.






