என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும்.
- உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில விளையாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய அளவில் வளர்ச்சி சதவீதம் 5.6 சதவீதமாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் வளர்ச்சி 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குறுக்கு வழியில் மட்டுமே ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. பாஜவிற்கு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்.
அதனால் தான் கடந்த தேர்தலில் துரோகத்திற்கும், குறுக்கு வழிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற ஒற்றை கருத்தோடு தி.மு.க.வை வெற்றி பெற வைத்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்தீர்கள்.
இன்று புதியதாக வந்த ஒருவர்(விஜய்) மீது இளைஞர்கள் மோகத்தில் உள்ளனர். அம்மாக்கள் சொன்னால் தான் அவர்கள் கேட்பார்கள். படத்தை பார்க்க சொல்லுங்கள், விசிலை அடிக்க சொல்லுங்கள். ஆனால் வாக்குகளை தி.மு.க.விற்கு போட சொல்லுங்கள்.
மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், ஆயிரம் ரூபாயை தடுக்க பார்த்தவர்களுக்கு சவுக்கடியாக 5,000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர். அதை அடுத்த முறை ஆட்சி பொறுப்பேற்றதும் 2,000 ரூபாயாக தருவதாக உறுதி அளித்துள்ளார்.
கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி 16,000 ரூபாயாக உள்ள நிலையில் அதை இந்திய அளவில் இலவசமாக கொடுத்து வருபவர் நம் முதலமைச்சர். எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் இல்லை.
தேவைப்பட்டால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம். ஆனால் திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும். ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திரம் கிடைத்தபோது அவர்கள் மொழியை 97 சதவீதம் பேர் பேசி வந்தனர். ஆனால் இன்று 3 சதவீதம் பேர் தான் அவர்கள் தாய் மொழியை பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தி திணிப்பால் ஒரு மொழியே அழிந்து வருகிறது.
உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்றவர் சமுத்திரகனி. இவர் இயக்கி நடித்த 'விநோதய சித்தம்' படம் ஓ.டி.டி. தளமான ஜீ5-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் 'தடயம்'. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'தடயம்' தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.
இந்த நிலையில், 'தடயம்' தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கூர்மையான புத்திசாலித்தானம் கொண்ட காவல் அதிகாரியான சமுத்திரகனி, குற்றவாளிகளையும், கொலைகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களையும் கண்டறிகிறார். அதிரடி க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ள திகில் நிறைந்த 'தடயம்' தொடரை வருகிற 27-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.
- இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளது.
- மீனவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்களும் அவர்களது நான்கு மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், 18.02.2026 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களது மூன்று மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டதையும், அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவ சமூகத்தின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலையே நம்பியுள்ளதால் இலங்கை அதிகாரிகளால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளது.
மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது, அவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது.
எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் உங்களின் ராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அனுப்பி வைத்து உள்ளது.
இதையடுத்து இந்த வார இறுதியில் ஈரானை தாக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதிபர் டிரம்ப் ஆயுத மோதலுக்கு அனுமதி அளிப்பாரா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறும்போது, இந்த வார இறுதியில் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது. ஆனால் அதுதான் சிறந்த நடவடிக்கை என்பதில் அதிபர் டிரம்ப் இன்னும் உறுதியாக இல்லை.
அமெரிக்க தலைமைத் தளபதி தனிப்பட்ட முறையில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டார். சிறந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்கள் மற்றும் நட்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் டிரம்ப் ஒரு முடிவை எடுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் இதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரம் செலவிடுகிறார் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி நிலை நிறுத்தியுள்ளது. எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உட்பட பல நவீன விமானங்கள் அங்கு சென்று உள்ளன.
யு.எஸ்.எஸ். ஜெரால்ட் போர்டு போர் கப்பல் இந்த வார இறுதியில் ஈரான் அருகே செல்ல உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை டேங்கர்கள் மற்றும் போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும். இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
- சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடித்துள்ளார்.
- போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.
அந்த வகையில், சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடித்துள்ளார். ஆர்.பி.டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் லவ்வின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் வறண்ட மற்றும் தரிசு கிராம மக்களைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு 'கெணத்த காணோம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
போஸ்டரில் கிராம மக்களுடன் சேர்ந்து தண்ணீருக்காக யோகி பாபு பிரார்த்தனை செய்கிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
- இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.
அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.
அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!
இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?
தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!
இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.
இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது.
- ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.
மதுரையில் ம.தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. வரும் தேர்தல் கடுமையாக இருக்கும் என சில ஏடுகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நாங்கள் தி.மு.க.வோடு பேசும் போதுதான், எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என தெரியவரும்.
அதுபற்றி முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதால் 234 தொகுதிகளில் நிற்பேன் என கூறினேன். மைக்கேல்பட்டி மாணவி இறப்பை மத மாற்றம் என பா.ஜ.க. அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தது.
தற்போது சி.பி.ஐ. விசாரித்தது. மத மாற்றம் காரணம் இல்லை என கூறி உள்ளது. பா.ஜ.க. பழி சொன்னதற்காக அப்போது யாரெல்லாம் பழித்து பேசினார்களோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது.
ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். அ.தி.மு.க. குறித்து நான் பேசியதை முழுமையாக வெளியிடவில்லை. முழுமையாக பேசியதை பார்த்தால் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்.
ம.தி.மு.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தொண்டர்களுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கலாம், அது இயற்கை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
- மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தாணியை சேர்ந்தவர் தேவரகொண்டா மகேஷ் (வயது 32). இவர் கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம், திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மகேஷ் மற்றும் சுனிதா ஆகியோர் கனடா சென்றனர். கனடாவிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் 8 மாதத்திற்கு பிறகு சுனிதா இந்தியா திரும்பினார். கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மகேஷுக்கு அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பினர்.
கடந்த 2024-ம் ஆண்டு மகேஷ், சுனிதா ஜோடி விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு சுனிதா ஐதராபாத் வந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது வனஸ்தலிபுரம் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்த ஸ்ரீநாத் (32 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். முதல் திருமணம் குறித்து சுனிதா தனது கணவரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மகேஷின் தாயார் இறந்து விட்டதால் மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். மீண்டும் கனடா செல்ல முயன்ற போது சுனிதா கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரது விசா முடக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் சுனிதா மீது மகேஷுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சுனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐதராபாத் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
சுனிதாவின் இருப்பிடம் குறித்து சமூக வலைத்தளத்தில் தேடிய போது பேஸ்புக்கில் அவரது முகவரி இருந்தது. சுனிதாவை கொலை செய்வது எப்படி என்பது குறித்து யூடியூபில் படங்களை பார்த்தார்.
மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார். சில நாட்கள் கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்தார்.
பின்னர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். கடந்த 5 நாட்களாக சுனிதாவின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் அவரது கணவர் எப்போது வெளியே செல்வார், எப்போது சுனிதா தனியாக இருப்பார் என்பதை அறிந்து கொண்டார்.
நேற்று மதியம் கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரு கேனில் பெட்ரோல் பிடித்துக் கொண்டு 4-வது மாடியில் உள்ள சுனிதா வீட்டிற்கு சென்றார்.
கதவை தட்டியபோது சுனிதா கதவை திறந்தார். உடனடியாக கதவை உள் பக்கமாக பூட்டிய மகேஷ் தன்னிடம் இருந்த சுத்தியலால் சுனிதாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுனிதா மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் தன்னிடம் இருந்த ரம்பத்தை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மாமியார் வந்து பார்த்த போது சுனிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பாளர்களை அழைத்தார்.
குடியிருப்பாளர்கள் வந்த போது மகேஷ் ஓடி சென்று கழிவறையில் கதவை உள்புறமாக பூட்டி கொண்டார். பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேசை கழிவறையில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால் மகேஷ் தன்னை பிடிக்க வந்தால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டினார்.
போலீசார் கதவை உடைக்க முயல்வதை அறிந்த மகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். போலீசார் அதிரடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மகேஷ் லைட்டரால் உடலில் தீ வைக்க முயன்றார். போலீசார் மகேஷை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
- 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
* பலரின் கற்பனைகளுக்கும் தே.மு.தி.க. இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
* சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிடுவேன்.
* 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன்.
- மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.
தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில்,
தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பதிவிட்டுள்ளது.
- ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
- போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் திமுக அரசை விமர்ச்சி "தோல்வி அடைய வாழ்த்துகள்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு?
ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே!
இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் திரு. மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.
நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய பொம்மை முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது.
விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான
அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.
அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.
7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்.... மு.க.ஸ்டாலின்
(ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!)
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
- நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:-
பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அற்புதமான நாட்டில், இந்த அற்புதமான நகரத்திற்கு எங்களை வரவேற்றதற்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு தெரு வியாபாரி வங்கிக்கணக்கை திறக்க முடியவில்லை. முகவரி இல்லை, ஆவணங்கள் இல்லை. இன்று அதே விற்பனையாளர் தனது தொலைபேசியில் பணம் செலுத்துகிறார்.
உலகில் வேறு எந்த நாடும் உருவாக்காத ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது. 140 கோடி மக்களுக்கான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் ஒரு கட்டண முறை செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் இந்தியாவிடம் கூறியது. ஆனால் அது தவறு என்று இந்தியா நிரூபித்துள்ளது.
விரைவாக புதுமைகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு நமது மனித குலத்திற்கு உதவும் என்று நாங்கள் கூறி வருகிறோம். நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.
செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய துறையாக மாறியுள்ளது. இந்த பெரிய தொழில்நுட்பம் இன்னும் பெரியதாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் புதுமை மற்றும் பொறுப்புணர்வு, தொழில் நுட்பத்தை மனிதநேயத்துடன் இணைப்பவர்களால் கட்டமைக்கப்படும். இந்தியாவும் பிரான்சும் இந்த எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைக்க உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.






