என் மலர்
இந்தியா
- பாஜக புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
- போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார்.
அகில இந்திய பா.ஜ.க தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை அகில இந்திய தலைவர் பதவி என்பது 2 ஆண்டுகள் ஆகும். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2020-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும் புதிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் புதிய செயல் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.க-வை பொறுத்த வரை செயல் தலைவராக இருப்பவர்கள் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் ஜே.பி.நட்டாவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய செயல் தலைவர் நிதின் நபின் புதிய தலைவர் தேர்வுக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. நாளை அவர் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கி, முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தது.
- காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், பவானியின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டி கவுரவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது விடுமுறை நாளில், கைக்குழந்தையுடன் காக்கிநாடா- சாமர்லகோட்டா சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்தச் சாலையில் எதிர்பாராத விதமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தன.
இந்தநிலையில், அந்த வழியாக வந்த இரு ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி, முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தன. சைரன் ஒலித்தும் வாகனங்கள் நகர முடியாத சூழல் நிலவியது.
இதை கவனித்த ஜெயா, தான் பணியில் இல்லை என்பதை பொருட்படுத்தாமல், கையில் தனது கைக்குழந்தையை ஏந்தியபடியே உடனடியாக களத்தில் இறங்கினார்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை, ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மறு கையால் போக்குவரத்தைச் சீர்செய்தார்.
வாகனங்களை லாவகமாக அப்புறப்படுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல தனி வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது இந்தச் செயலால் ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது.
இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், ஜெயாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டி கவுரவித்துள்ளனர்.
ஜெயாவின் இந்த நெகிழ்ச்சியான செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
- டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு கூட இல்லை
டெல்லி மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்தை வழங்குவதில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களிடையே பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு கூட இல்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.
- இந்த சம்பவம் காரின் கேமராவில் பதிவாகியுள்ளது
- இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை கத்தியை காட்டி இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரின் கேமராவில் பதிவான இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், காரில் உள்ள நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் ஏன் எங்களை திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு கோவமான அந்த இளைஞர் பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காரின் அருகே வந்து பாக்கெட்டில் உள்ளே இருந்த கத்தியை எடுத்து சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சையத் அர்பாஸ் கான் என்று அவர் ஒரு மீன் கடையில் வேலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், "பெங்களூரு நகரக் காவல்துறை, சாலையில் மோசமாக நடந்து கொள்வதையோ அல்லது பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடத்தைக்கோ பொறுத்துக்கொள்ளாது. வன்முறைச் செயல்கள், ஆயுதங்களைக் காண்பித்தல், மிரட்டல்கள் அல்லது பொது இடங்களில் அநாகரிகமான நடத்தை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது அமைதியைப் பேணுவதற்கும், பெங்களூரு நகரக் காவல்துறை சாலையில் மோசமாக நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும், பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், சட்டத்திற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வீடியோ சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
- தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தீபக் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
- போரின் தன்மை என்பது எல்லைகளைத் தாண்டி தற்போது மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது.
பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் நிங் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலையில் வெடிபொருள் தயாரிப்புப் பிரிவின் தொடக்க விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ராணுவத் தளவாட உற்பத்தி என்பது ஒருகாலத்தில் பொதுத்துறையை மட்டுமே சார்ந்திருந்தது. தற்போது ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் துறை பங்களிப்பை அளிக்கிறது.
மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. வெடிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுகிறது. வெடிபொருள் உற்பத்தியில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்காகும்.
போரின் தன்மை என்பது எல்லைகளைத் தாண்டி தற்போது மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது. எந்த வகையான போராக இருந்தாலும் தனியார் துறையின் வலுவான பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு, உற்பத்தி ஆகியவையே இப்போதைய தேவையாகும்.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 50% அளவுக்குத் தனியார் துறை பங்களிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.46,000 கோடியாக இருந்த உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி தற்போது ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.30,000 கோடியாகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்று மதி தற்போது ரூ.25,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதை வரும் 2029 - 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது" என்று தெரிவித்தார்.
- பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
- இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணதிற்கு சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமணக் கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து, இன்று, ஜார்கண்டின் லாத்தேஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மகுவாடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களாதாரா பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜாமீனைத் தானாகவே மறுக்க முடியாது.
- திருப்திப்படுத்துவது நீதிமன்றத்தின் வேலை அல்ல.
ராஜஸ்தானில் நடந்து வரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்றார்.
டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறிய வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றிச் சிறையில் இருக்கும் உமர் காலித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சந்திரசூட், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'வாழும் உரிமை' என்பது விரைவான விசாரணையைப் பெறுவதையும் உள்ளடக்கியது.
நீண்ட கால விசாரணையின்றி ஒருவரைச் சிறையில் வைப்பது என்பது தண்டனைக்குச் சமமானது.
ஒரு வழக்கில் விசாரணை விரைவாக நடைபெற வாய்ப்பில்லை என்றால், ஜாமீன் வழங்குவதுதான் விதியாக இருக்க வேண்டும், ஜாமீனை மறுப்பது விதிவிலக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜாமீனைத் தானாகவே மறுக்க முடியாது. அந்த வழக்கில் உண்மையில் தேசிய பாதுகாப்பு அடங்கியுள்ளதா என்பதையும், நீண்ட காலத் தடுப்புக்காவல் அவசியம்தானா என்பதையும் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் அதே குற்றத்தைச் செய்ய வாய்ப்பிருப்பது, நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது அல்லது ஆதாரங்களைச் சிதைப்பது ஆகிய மூன்று காரணங்கள் இருந்தால் மட்டுமே ஜாமீனை மறுக்கலாம். இவை இல்லை என்றால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.
திருப்திப்படுத்துவது நீதிமன்றத்தின் வேலை அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் கடமை.
UAPA போன்ற கடுமையான சட்டங்கள் ஜாமீன் பெறுவதைக் கட்டுப்படுத்தினாலும், அவை அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீற முடியாது" என்று தெரிவித்தார்.
உமர் காலித்
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில் அவர்களுக்கு மீண்டும் ஜாமீன் மறுத்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என தெரிவித்தது.
அதாவது, விசாரணையே இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்டாமல் கடந்த 5 ஆண்டுகளாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதே அதற்கு அர்த்தம்.
- தற்போது படைப்பாற்றல் இல்லாத சில நபர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதே பாலிவுட்டில் அதிகாரம் மாறக் காரணம்
- இவரைப் போல ஒரு எதிர்மறையான மற்றும் பாரபட்சமான நபரை நான் பார்த்ததில்லை.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "சமீப காலங்களில் எனக்குப் பட வாய்ப்புகள் குறைவாகக் கிடைப்பதற்கு மதவாத சிந்தனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தற்போது படைப்பாற்றல் இல்லாத சில நபர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதே பாலிவுட்டில் அதிகாரம் மாறக் காரணம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்திருந்தார். "இவரைப் போல ஒரு எதிர்மறையான மற்றும் பாரபட்சமான நபரை நான் பார்த்ததில்லை" என்று அவர் பதிவிட்டார்.
அதேநேரம்பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஏ.ஆர். ரஹ்மான் கருத்தை மறுத்துள்ளார்.
"ரஹ்மான் போன்ற ஒரு பெரிய மேதையை அணுகுவதற்கு மக்கள் தயங்குகிறார்கள். அது அவர் மீதான மரியாதையினால் வந்த அச்சமே தவிர, இனவாதம் அல்ல" என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, ரஹ்மானின் கருத்தை ஆதரித்துள்ளார்.
"பாலிவுட்டில் அதிகரித்து வரும் மதவாதமயமாக்கல் குறித்த ஏ.ஆர். ரஹ்மானின் கவலைகளை ஜாவேத் அக்தர் நிராகரிக்கும்போது, அவர் தனது மனைவி ஷபானா ஆஸ்மி உட்பட இந்திய முஸ்லிம்களின் அனுபவப்பூர்வமான மற்றும் பகிரப்பட்ட யதார்த்தங்களுக்கு முரணாகப் பேசுகிறார்.
ஷபானா ஆஸ்மி, மும்பை போன்ற ஒரு பன்முகப் பண்பாட்டு நகரத்தில் முஸ்லிமாக இருந்த காரணத்தால் தனக்கு வீடு மறுக்கப்பட்டதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பாலிவுட் எப்போதும் நாட்டின் சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒரு வாழும் மினி இந்தியாவாக இருந்து வருகிறது. இதுபோன்ற அனுபவங்களை ஒதுக்கித் தள்ளுவது இன்றைய இந்தியாவின் உண்மையை மாற்றிவிடாது." என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- பாஜக மறைமுகமாக அரசியலமைப்பை திருத்த முயற்சி செய்து கொண்டு வருகிறது.
- அதன் ஒரு பகுதியாக SIR அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில் உள்ள கம்மம் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயகத்தை நிலைநிறுத்த விரும்பினால், பிரதமர் மோடியை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால், அரசியலமைப்பை திருத்தும். இடஒதுக்கீட்டை ஒழிக்கும் என்றார். பாஜக-வால் 240 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தற்போது, பாஜக மறைமுகமாக அரசியலமைப்பை திருத்த முயற்சி செய்து கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SIR அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எழை மக்களின் வாக்கு உரிமையை பறிக்க பாஜக SIR-ஐ பயன்படுத்தி வருகிறது. நாட்டில் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
- சுமார் 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
- அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 27 வயது சாப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
யுவராஜ் மேத்தா என்ற அந்த இளைஞர், இரவு வேலை முடிந்து கார் மூலம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாகப் சாலையில் எதுவும் தெரியாததால், கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய ஆழமான குழியில் விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை சுமார் 5 மணி நேரம் போராடி காரையும், யுவராஜையும் மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்.
முன்னதாக அவ்வழியே வந்த டெலிவரி ஊழியரும் அவருக்கு உதவ முயன்றுள்ளார். கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதும், யுவராஜ் தனது தந்தைக்கு அலைபேசியில் அழைத்துள்ளார்.
"அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள். எனக்குச் சாக விருப்பமில்லை" என்று கதறியுள்ளார். இதை அவரது தந்தை ஊடகங்களுக்கு வேதனையுடன் தெரிவித்தார்.
அந்தச் சாலையில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று யுவராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள்.
- இறுதியாக ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களை ஓரங்கட்டி விடுவார்கள்.
இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல், பாஜக-வின் உத்தி ஆட்சியை பிடிப்பதோ, மெஜாரிட்டி பெறுவதோ அல்ல. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிகாரத்திற்கு வந்து, அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கபில் சிபல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக-வின் அரசியல் உத்தி: மாநிலங்களில் அவர்கள் அதிகாரத்திற்கு வருவது அல்லது மெஜாரிட்டி பிடிக்க வேண்டும் என்பதல்ல. மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அதிகாரத்திற்கு வந்து, பின்னர் அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான்.
இந்த உக்தி பீகாரில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் அரங்கேறி வருகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது:-
மகாராஷ்டிரா மாநில மாநகராட்சி தேர்தல் சில தகவல்களை அந்த மாநிலத்திற்கும், தேசிய அளவிலான தேர்தலுக்கும் கொடுத்துள்ளது.
இந்த நேரத்தில் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் 74 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் முக்கியமானது என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த மாநகராட்சி தேர்தலில், சிவ சேனா ஒருங்கிணைந்து இருந்த நேரம், மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தலைமை பொறுப்பில் இருந்தார்.
2012-ல் பாஜக வெறும் 31 இடங்களைத்தான் பெற்றது. 2017-ல் அவர்கள் 82 இடங்களை பிடித்தார்கள். தற்போது 89 இடங்களை பிடித்துள்ளனர். சிவசேனா 2012-ல் 74 இடங்களையும், 2017-ல் 84 இடங்களையும், தற்போது 29 இடங்களையும் பிடித்துள்ளது.
காங்கிரஸ் 2012-ல் 52 இடங்களையும், 2017-ல் 31 இடங்களையும், தற்போது 24 இடங்களையும் பிடித்துள்ளது. 2012-ல் என்சிபி 13 இடங்களையும், 2017-ல் 9 இடங்களையும், தற்போது 3 இடங்களையும் பிடித்துள்ளது. எம்என்ஸ் 2012-ல் 28 இடங்களையும், 2017-ல் 7 இடங்களையும், தற்போது 6 இடங்களையும் பிடித்துள்ளது. இது பாஜக-வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் இறங்கு முகத்தில் உள்ளன என்பதை காட்டுகிறது.
அவர்கள் எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள். இறுதியாக ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களை ஓரங்கட்டி விடுவார்கள்.
இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.






