என் மலர்
நீங்கள் தேடியது "மெகபூபா முப்தி"
- முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு.
- ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்த பணியை வழங்கினால், வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.
ஜம்மு-காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்கும் நிலையான காவலர் பணிக்கு (static guard duties) சுமார் 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இளைஞர்கள் அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி, முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உமர் அப்துல்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள மிகவும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற உங்கள் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு குறித்து எனது ஆழ்ந்த சந்தேகங்களையும் கவலையையும் தெரிவிக்கவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.
நமது முன்னாள் படைவீரர்களின் சேவை மற்றும் ஒழுக்கத்தை நாங்கள் மதிக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கை கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் வாய்ப்புகளை தேடி போராடி வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையான காவலர் பணிக்குஅ ராணுவ நிபுணத்துவம் தேவையில்லை. உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும். அவர்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.
மேலும், இந்தக் கொள்கை நீண்டகால சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிவர்த்தி செய்யத் தவறும் ஒரு குறுகிய கால பாதுகாப்பு தீர்வாகக் கருதப்படலாம். உள்ளூர் இளைஞர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய தூணான பொதுப் பாதுகாப்பைப் பராமரிப்பதில் பொறுப்புணர்வு மற்றும் பங்கேற்பையும் வளர்க்கும்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- பாகிஸ்தான் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
- இந்தியா பதிலடி கொடுத்த நிலையில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரான டெல்லியை தாக்க முயற்சி செய்துள்ளது. இந்திய ராணுவம் இந்த முயற்சியை முறியடித்ததுடன், பாகிஸ்தானை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 6 விமான தளங்களை தாக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை தணிக்க முதல் படியை இந்தியா எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறுகையில் "துணைக் கண்டத்தில் இந்தியா தனது தலைமை பங்கை ஏற்றுக்கொண்டு, பதற்றத்தைக் குறைப்பதற்கான முதல் படியை எடுக்க வேண்டும்.
இந்தியா நிமிர்ந்து நின்று, உண்மையான பலம் அதன் மென்மையான சக்தியிலும், அமைதிக்கான அர்ப்பணிப்பிலும் உள்ளது. அணு ஆயுதங்களில் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
- பதுங்கு குழிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- இராணுவத் தலையீடு அல்ல, அரசியல் தலையீடு இருக்க வேண்டும்
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நேற்று இரவு முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் சூழலில் வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு விமான நிலையம் மீது நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
மேலும் எல்லையோர பகுதிகளில் உள்ள மக்கள் பதுங்கு குழிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சூழ்நிலை காரணமாக, எல்லையில் உள்ள மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வீடற்றவர்களாக மாறி வருவதாகவும், அவர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து, இந்த நிலைமையை தணிக்க வேண்டும். இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் கொல்லப்படுகிறார்கள். பிரச்சனையை தீர்க்க இராணுவத் தலையீடு அல்ல, அரசியல் தலையீடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் இதை பேசும் போது அவர் மனமுடைந்து கண்ணீர் சிந்தினார்.
- இன்று காஷ்மீரிகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உணர வேண்டும்.
- இன்று அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி காஷ்மீர் மக்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறுகையில் "காஷ்மீரிகள் ரத்தக்களரிக்கு ஆதரவாக இல்லை என்பதைக் காட்டியுள்ளனர். மேலும் அவர்கள் நாட்டின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் மீது ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்துறை அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள்.
இருப்பினும், (பஹல்காம்) தாக்குதலுக்குப் பிறகு தனது ரத்தத்தைக் கொடுத்து ஒரு சுற்றுலாப் பயணியைத் தோளில் சுமந்து மருத்துவமனைக்குச் சென்ற காஷ்மீரியை விட்டுவிடுங்கள்.
22ஆம் தேதி தாக்குதலுக்கு முன் அங்குள்ள (பைசாரன்) மக்கள் வாழ்வதற்கு வருவாய் ஈட்டி வந்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்கு காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். நாள் முழுவதும் உணவு வழங்கப்படாமல் மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். என்னஇது?.
இன்று காஷ்மீரிகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உணர வேண்டும். இன்று அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். உங்கள் காயங்களையும் குணப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் மீது புதிய காயங்களை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்" என்றார்.
- பஹல்காம் தாக்குதல் நம் மீதான தாக்குதல். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.
- உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில பாகிஸ்தான் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது, இது நம் அனைவர் மீதான தாக்குதல், அப்பாவிகளை கொலை செய்வது பயங்கரவாத செயல், அப்பாவிகளை கொலை செய்வதை நிறுத்தவும் போன்ற பதாதைகளை ஏந்தி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கண்டன பேரணியின்போது மெகபூபா முஃப்தி கூறியதவாது:-
பஹல்காம் தாக்குதல் நம் மீதான தாக்குதல். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் வெட்கப்படுகிறோம். காஷ்மீரிகள் வெட்கப்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அரசாங்கம் குற்றவாளிகளைப் பிடித்து, அவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
- ஜம்மு-காஷ்மீரில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
- அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வக்பு திருத்த சட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் சபாநாயரால் நிராகரிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அவை ஒத்திவைக்கப்படடது.
இதற்கிடையில் பாஜக-வின் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டத்தில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி அரசு அடிபணிந்து விட்டது என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முஸ்லிம் முதல்வர் (உமர் அப்துல்லா) வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கனும். அல்லது குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
வக்பு மசோதா மீதான தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாட்டிடம் இருந்து தேசிய மாநாடு கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வலுவான மெஜாரிட்டி பெற்ற போதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக-வின் திட்டத்திற்கு முற்றிலுமாக அடிபணிந்ததாக தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் மட்டும்தான் முஸ்லிம் அதிகமாக வாழும் மாநிலம். மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாகக் கூறப்படும் ஒரு அரசாங்கத்திற்கு இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிக்கக் கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது.
நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் முஸ்லிம் முதல்வர், நாட்டில் அதிக அளவில் வாழும் முஸ்லிம் மாநிலம் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பும் அல்லது ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சொல்லும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்தார்.
- புதிய அரசு வரும்போது மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள்.
- உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகாரிகளை மாற்றம் செய்வதில் யாருக்கு அதிகாரம் என்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையான பிரச்சினையில் எடுக்கக்கூடிய நிலை குறித்து கவனம் செலுத்துவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃபதி கூறியதாவது:-
புதிய அரசு வரும்போது (சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்) மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள். துரதிருஷ்டவசமாக 6 மாதங்களாக ஜெயிலில் வாடும் இளைஞர்கள், நம்முடைய வேலைவாய்ப்பு பறிப்பு, தினக்கூலிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை பற்றி பேசப்படவில்லை. அரசாங்கம் எல்லாவற்றிலும் கோழைத்தன்மையை காட்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார்கள். டெல்லியுடன் யாரும் மோதலை விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே சரணடைந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.
- அந்த பங்களா 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி கொடுக்கப்பட்டது.
- அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் :
காஷ்மீரில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி வரை, மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர் வசிப்பதற்காக அரசு சார்பில் ஸ்ரீநகரில் குப்கார் சாலையில் அமைந்துள்ள 'பேர்வியூ' பங்களா ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அந்த பங்களாவை காலி செய்யவில்லை.
இந்த நிலையில் அவர் அந்த பங்களாவை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் காலி செய்தாக வேண்டும் என்று காஷ்மீர் அரசினர் எஸ்டேட் துறையினர் வெளியேற்ற உத்தரவு அனுப்பி உள்ளனர்.
அதில் மெகபூபா, உரிய அங்கீகாரம் இன்றி அந்த பங்களாவைத் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"முதல்-மந்திரி என்ற அடிப்படையில்தான் அந்த பங்களா அவருக்கு 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி கொடுக்கப்பட்டது. அது 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி நீட்டிக்கப்பட்டது. அடுத்து எந்த நீட்டிப்பும் வழங்கப்படவில்லை" எனவும் அந்த உத்தரவில் கோடிட்டுக்காட்டி உள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் அந்த பங்களாவை மெகபூபா காலி செய்யவில்லை என்றால், காஷ்மீர் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1988 இன் பிரிவு 5-ன் துணைப்பிரிவு (2) -ன் விதிகள் செயல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர் :
ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தவர், மெகபூபா முப்தி. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான இவர்தான் காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்-மந்திரியும் ஆவார்.
முதல்-மந்திரியாக இவர் பதவி வகித்தபோது அனந்த்நாக் மாவட்டத்தின் கனாபல்லில் உள்ள வீட்டுவசதி வாரியத்தில் இவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகும் இன்னும் அவர் அந்த குடியிருப்பை காலி செய்யவில்லை.
எனவே அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
24 மணி நேரத்தில் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டு இருந்தது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. அனந்த்நாக் மாவட்ட துணை கமிஷனரின் உத்தரவின் பேரில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதைப்போல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களும் 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
முன்னதாக தலைநகர் ஸ்ரீநகரில் அதிக பாதுகாப்பு நிறைந்த குப்கர் பகுதியில் மெகபூபா முப்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு வீட்டை (பேர்வியூ இல்லம்) காலி செய்யுமாறு கடந்த மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை.
- தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.
ஸ்ரீநகர்
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, தற்போதைய தேசிய கொடிக்கு பதிலாக, காவி கொடியை தேசிய கொடியாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதற்கு காஷ்மீர் பா.ஜனதா மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்கூர் கூறியதாவது:-
மெகபூபா முப்தி, பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கை கண்டு விரக்தியில் பேசி வருகிறார். பா.ஜனதாவை பொறுத்தவரை, 'முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவதுதான் தனிநபர்' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. தேசிய கொடிக்காக எந்த தியாகமும் செய்ய பா.ஜனதா தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே, தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை. அப்படி சொல்வது அபத்தமானது. தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்த மனுவும் இன்று சூரத் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தின் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி? என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததில், ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது.
இதற்கிடையே, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறுகையில், ஜனநாயகத்திற்கு இன்று கருப்பு நாள். நீதித்துறை என்பது மக்களின் கடைசி நம்பிக்கை, ஆனால் தாமதமான அதன் பங்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. இங்குள்ள அரசியல் அமைப்பை ஒழித்துவிட்டு இந்த தேசத்தை அவர்கள் கொள்கைப்படி வழிநடத்த பா.ஜ.க. நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.
- பாட்னாவில் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
- இந்த கூட்டத்தில் பங்கேற்க இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பாட்னா :
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23-ந் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
அதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங்கிரஸ்), தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), உத்தவ்தாக்கரே (சிவசேனா-உத்தவ்) ஆகியோர் பங்கேற்க ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன்சிங் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.