என் மலர்
இந்தியா
- இது முழுக்க முழுக்க வரும் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் அரசியல் தந்திரம்.
- இத்தகைய போக்கு தொடர்ந்தால் இந்தியா என்ற தேசமே ஆபத்துக்குள்ளாகும்.
தேர்தல் லாபத்திற்காக நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வேண்டுமென்றே பிரிவினை உருவாக்கப்படுவதாக பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் முக்கியத் தலைவர் பரூக் அப்துல்லா, "நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியும் பிரிவினையும் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது.
இது முழுக்க முழுக்க வரும் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் அரசியல் தந்திரம்.
மக்களை மதம் மற்றும் ஜாதியின் பெயரால் பிரிப்பது இந்தியாவை வலுவிழக்கச் செய்யும். இத்தகைய போக்கு தொடர்ந்தால் இந்தியா என்ற தேசமே ஆபத்துக்குள்ளாகும்.
இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும்
சில திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தவறாகச் சித்தரிப்பதன் மூலம் மக்களிடையே வெறுப்பை விதைத்து நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றன" என்று தெரிவித்தார்.
- பாஜக கூட்டணி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- உத்தவ் தாக்கரே கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆண்டிற்கு 74 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மும்பை மாநகராட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
227 கவுன்சிலர் வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சியில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா 29 இடங்களை பிடித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 114 தேவை. ஆனால் பாஜக கூட்டணி 118 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜக மேயர் பதவியை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.
அதேவேளையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (UBT) 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் எங்களுக்கு 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
தற்போது சிவ சேனா (UBT)- 65, மகாராஷ்டிலா நவநிர்மன் சேனா- 6, காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள்- 24, ஏஐஎம்ஐஎம்- 8, சமாஜ்வாடி-2, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்-3, சரத் பவார் கட்சி-1 என எங்களுக்கு 108 இடங்கள் உள்ளன. இலக்கு 114. எங்களுக்கு இன்னும் 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள். மும்பை அரசியலில் எதுவும் நடக்கலாம்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
- பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
- 2006 இடைத்தேர்தலில் முதல்முறையாக பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் செயல்தலைவராக உள்ள நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக தேசிய தலைவராக தற்போது ஜே.பி.நட்டா இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிதின் அக்கட்சியின் தேசிய செயல்தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டதே, தேசியத் தலைவர் பதவிக்கு பாஜக மேலிடத்தின் தேர்வாக அவர் இருக்கிறார் என்பதை மறைமுகமாக கூறத்தான்.
இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்றது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 37 வேட்புமனுக்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் கையெழுத்துகளும் இடம் பெற்றிருந்தன.
மேலும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறைக்கான தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கே. லக்ஷ்மன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் அனைத்து மனுக்களும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இப்போட்டியில் நிதின் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) அன்று முறைப்படி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதின் நபின் பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம் விரைவில் கூட்டப்பட வாய்ப்புள்ளது.
யார் இந்த நிதின் நபின்?
பீகாரைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தந்தை மறைவால் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக 2006-ல் பாஜக எம்எல்ஏ ஆனார். அன்றுமுதல் தற்போதுவரை பாஜக எம்எல்ஏவாக தொடர்கிறார். மேலும் பீகார் அமைச்சரவையில் 2021 முதல் 2022 வரை சாலைப் போக்குவரத்து அமைச்சராகவும், 2024 முதல் 2025 வரை நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
- கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
- இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது
மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜன.19) உத்தரவிட்டது.
ஆட்சேபனைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் இந்தச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பெயர் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தந்தை பெயரில் மாற்றம், வயது முரண்பாடு (எடுத்துக்காட்டாக, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15-க்கும் குறைவாகவோ அல்லது 50-க்கும் அதிகமாகவோ இருத்தல்) போன்ற காரணங்களால் இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த 1.25 கோடி பேரின் தரவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்பட உள்ளது
- தஜ்முல் ஹொசைன் 3 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்.
- அவரது தந்தை முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் வரை வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதில் பெயர் இல்லாதவர்கள் பெயர்களை சேர்க்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
2002-ல் உள்ள வாக்காளர் பட்டியலுக்கும், தற்போதுள்ள பட்டியலுக்கும் இடையில் வேறுபாடு இருப்பின், அவர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க கேடடுக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மேற்கு வங்க மாநில அமைச்சர் தஜ்முல் ஹொசைனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படடுள்ளது. அதில் தொடர்பான ஆவணங்களுடன் ஜனவரி 29-ந்தேதி காலை 10.30 மணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஜ்முல் ஹொசைன் கூறியதாவது:-
இதே தேர்தல் ஆணையம் தன்னை 3 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது தகுதியான வாக்காளர்தானே என்பதை உறுதிப்படுத்த கேட்கிறது. தேர்தல் நடைபெற 3 மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக ஆதாயம் அடைவதற்காகவே SIR நடத்தப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக அரசை நிறுவுவதற்கு இதுபோன்ற சதித்திட்டதிற்கு எதிராக மேற்கு வங்க மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.
தஜ்முல் ஹொசைனின் தந்தை பெயர் திதர் ஹொசைன். இவர் யாதவ் சமூதாயத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர். இவருடைய மூதாதையர் வீடு உத்தர பிரதேசத்தில் உள்ளது. இவருடைய குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர்.
தஜ்முல் ஹொசைன் 2006 மற்றும் 2016-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2021-ல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.
அதேபோல், ஐ.எஸ்.எஃப் சட்டமன்ற உறுப்பினர் நவுசாத் சித்திக் என்பவருக்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சித்திக் சமர்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடு இருப்பதை கண்டறிந்தோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- புஷ்பராஜுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
- மீதமுள்ள நால்வரும் ஆரோக்கியமாக உள்ளனர்
ஆந்திர மாநிலம் அன்னமய்யா கிராமத்தில் பந்தயம் கட்டி, போட்டி போட்டுக் கொண்டு தலா 19 பீர்கள் குடித்து ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் சங்கராந்தி பண்டிகை அன்று நண்பர்கள் ஆறுபேர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மணிகுமார் (34) மற்றும் புஷ்பராஜ் (26) இருவரும் போட்டியிட்டு மதியம் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை 19 பீர் குடித்தனர். இதனால், அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது.
உடனே நண்பர்கள், இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே மணிக்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து புஷ்பராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். பந்தவடிப்பள்ளியைச் சேர்ந்த மணிகுமார் சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். புஷ்பராஜுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களின் இறப்புக்கு காரணம், அதிகப்படியான மது அருந்தியதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ள நால்வரும் ஆரோக்கியமாக உள்ளனர்.
இதனிடையே இரண்டு மென்பொருள் பொறியாளர்களும் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக YSRCP கட்சி குற்றம் சாட்டியது. இதனைத்தொடர்ந்து மதுவில் எந்த குறைபாடும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கலால் கண்காணிப்பாளர் மதுசூதன் தெரிவித்தார்.
- டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார்.
- குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12-ந்தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
அவரிடம் அடுத்த நாளும் (அதாவது, 13-ந்தேதி) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் துயரம் தொடர்பான இன்றைய சி.பி.ஐ. விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள்? என கேள்வி எழுப்பியது.
சாலையில் வளைவுகள் நிறைய இருந்ததால் கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ. எழுப்பி உள்ளது.
இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காலையில் இருந்து விஜயிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
- மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வாக்குகளுக்காக ஆர்.எஸ்.எஸ். பாணியில் பிளவுப்படுத்தும் அரசியலை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வி.டி. சதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்குகளை பெறுவதற்காக மக்களை பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். வழியான அதே பாதையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயணம் செய்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கு அதரவு தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறியதாவது:-
UDF ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரங்கள் வெடிக்கும் என்று சி.பி.எம். தலைவர் ஏ.கே. பாலன் கூறிய கருத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரிக்கிறார். அதேவேளையில் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் காசர்கோடு நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதத்தை பற்றி அமைச்சர் சஜி செரியன் குறிப்பிடுகிறார். கேரள மாநில சட்டசபை வரலாற்றில் இதுபோன்று எந்த உறுப்பினரும் வகுப்புவாதம் குறித்து கருத்து தெரிவித்ததில்லை. வெற்றி பெற்றவர்களின் மதத்தை பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும். மாநிலத்தின் முக்கிய மதிப்பை அழித்துவிடும். மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது. பினராயி விஜயனும் தானும் ஒரு நாள் நினைவுகளாகிவிடுவார்கள், ஆனால் கேரளா தொடர்ந்து நிலைத்திருக்கும்.
சிபிஐ(எம்) கட்சி கேரளாவின் அடித்தளங்களையே எரித்துக்கொண்டிருக்கிறது. இது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு கொடூரச் செயலாகும். வரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற அநீதியை இழைத்துவிடாதீர்கள்.
இவ்வாறு சதீசன் தெரிவித்தார்.
- வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
- நிதின் கட்கரிக்கு தற்போது 68 வயதாகிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் உள்ள விதர்பாவில் 'அட்வான்டேஜ் விதர்பா-காஸ்தர் ஆத்யோகிக் மஹோத்சவம்' என்ற முதலீட்டு மாநாடு மற்றும் வணிக விழா பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது,
"தலைமுறை மாற்றமும் படிப்படியாக நிகழ வேண்டும் என்று நான் நம்புகிறேன். இப்போது நாம் படிப்படியாக ஓய்வுபெறச் செய்யப்பட்டு, புதிய தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வின் நோக்கம், விதர்பாவை இந்தியாவின் தொழில்துறை வரைபடத்தில் வலுவான மற்றும் வளர்ந்து வரும் வளர்ச்சி மையமாக நிலைநிறுத்துவதாகும்" என தெரிவித்தார். மேலும் எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் தொழில்துறை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் சேவைத் துறையின் முக்கியத்துவத்தையும் கட்கரி வலியுறுத்தினார். ஓய்வு குறித்த நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
- VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது.
- அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் (MGNREGA) கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், MGNREGA திட்டத்தை காப்போம் (MGNREGA Bachao Sangram) என்ற பெயரில் கடந்த 10-ந்தேதியில் இருந்து 45 நாட்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் VB-G RAM G திட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பொய் கூறி வருகின்றனர் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிவராஜ் சவுகான் கூறியதாவது:-
VB-G RAM G பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம், உங்களால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக காங்கிரஸ் பலவீனம்தான் ஆகும் என மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி தனது சிந்தனை, சித்தாந்தம் மற்றும் லட்சியத்தை கைவிட்டுவிட்டது. சிந்தனை என்பது தேசம் முதன்மை, நாட்டின் வளர்ச்சி. VB-G RAM G கிராமங்களின் வளர்ச்சிக்கானது.
MGNREGA-ஐ சிறந்ததாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்கு சாட்சி காங்கிரஸ் அரசாங்கம் 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இத்திட்டத்திற்கு செலவழித்த நிலையில், நாங்கள் 9 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். வேலைக்கான உரிமை பறிக்கப்படும் என்ற கங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு பொய்யானது.
100 நாட்களுக்குப் பதிலாக நாங்கள் 125 நாட்கள் வேலை கொடுக்க இருக்கிறோம். வேலைக்கான உரிமை மட்டுமல்ல, 12 நாட்களுக்குள் வேலைவாய்ப்பின்மைக்கான அலவன்ஸ் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். நீங்கள் பேப்பரில் உரிமையை கொடுத்தீர்கள். நாங்கள் அதை களத்தில் வலுப்படுத்தியுள்ளோம்.
ஒரு குறிப்பிட்ட பஞ்சாயத்துகளில் மட்டுமே வேலை வழங்கப்படும் என தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இந்த திட்டம் அனைத்து பஞ்சாயத்திற்கும் என்ற அளவில் அமல்படுத்தப்படும் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மாநிலங்களுக்கு கூடுதல் சுமை கிடையாது, மத்திய அரசு ஏற்கனவே அதிக நிதி கொடுத்து வருகிறது. மாநிலங்களுக்கான முதலீடு கிராமங்களில் கட்டமைப்புகளை வலுப்படுத்தும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- மத்திய பிரதேச அரசு பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
- உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசு உதவியின் மூலம் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்கிலால் என்ற உடல் ஊனமுற்ற நபர் பிச்சை எடுத்து கோடீஸ்வரரான சம்பவத்தை அறிந்து அரசு அதிகாரிகளுக்கு தலையே சுற்றியுள்ளது.
சமீபத்தில் மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்திய பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையால் இவரது பின்னணி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.
மங்கிலால் என்பவர் பிச்சை எடுத்து மூன்று கான்கிரீட் வீடுகள், மூன்று ஆட்டோக்கள், மாருதி சுசுகி கார் என கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.
தன்னிடம் உள்ள வீடுகளையும் கார், ஆட்டோக்களையும் வாடகை விட்டு பணம் சம்பாதிக்கும் அவர், வட்டிக்கு பணம் கொடுத்தும் உதவுகிறாராம்.
இவர் தினமும் கடைவீதிகளில் மக்களிடமிருந்து 400-500 ரூபாய் வரை வசூலிக்கிறாராம். உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசு உதவியின் மூலம் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ள அவர், தொடர்ச்சியாக பிச்சை தொழிலை விடாமல் செய்துவருகிறார்.
- பாஜக புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
- போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார்.
அகில இந்திய பா.ஜ.க தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை அகில இந்திய தலைவர் பதவி என்பது 2 ஆண்டுகள் ஆகும். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2020-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும் புதிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் புதிய செயல் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.க-வை பொறுத்த வரை செயல் தலைவராக இருப்பவர்கள் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் ஜே.பி.நட்டாவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய செயல் தலைவர் நிதின் நபின் புதிய தலைவர் தேர்வுக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. நாளை அவர் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.






