என் மலர்tooltip icon

    மதுரை

    • திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார்.
    • தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும் மகாலட்சுமி தனது கணவருடன் குடும்பம் நடத்த மனமின்றி விரக்தியில் இருந்து வந்தார்.

    இதையடுத்து திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு அறிவுரைகள் கூறியும் மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. மாறாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த விஷயம் அறிந்த முன்னாள் காதலன் சதீஷ் குமார் மீண்டும் மகாலட்சுமியிடம் காதலை தொடர்ந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயங்களில் மகாலட்சுமி அடிக்கடி சதீஷ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

    இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் கடுமையான ஆத்திரம் அடைந்தார். மேலும் சதீஷ்குமாரையும், மகாலட்சுமியும் கண்டித்துள்ளார். ஆனாலும் சதீஷ்குமார் அத்துமீறி மகாலட்சுமியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட எண்ணிய பிரவீன் குமார், சதீஷ்குமாரை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.

    இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரவீன்குமார், அக்காவின் முன்னாள் காதலன் சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதனை சற்றும் எதிர்பாராத சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற பிரவீன்குமார், சதீஷ்குமாரை அங்கிருந்த நாடக மேடை அருகே சுற்றி வளைத்து மடக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையை தனியாக துண்டித்து நாடக மேடையின் நடுவில் வைத்தார்.

    இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார், அதே கொலை வெறியுடன் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த பிரவீன்குமாரின் தாய் சின்ன பிடாரி வீட்டிற்குள் வந்தார்.

    ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றி மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று தடுக்க முயன்றார். ஆனாலும் வெறி அடங்காத பிரவீன் குமார் தாயின் கையையும் வெட்டி துண்டாக்கினார். இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சதீஷ் குமாரின் தம்பி முத்துக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கூடக்கோவில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்டு கிடந்த சதீஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கை துண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான பிரவீன்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்.
    • தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பா.ஜ.க.வினரிடம் தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் கூறமுடியாது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம், அதன் பின் சொல்கிறேன்.

    கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும். ஓ.பி.எஸ்.சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பயணிக்கிறோம். அது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. கவர்னரின் செயல்பாடு என்பது அந்த பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது, அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.


    அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. இணைப்பு குறித்து அவர் எதன் அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்கள் நிர்வாகிகளும், எனது நண்பர்களும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    கூட்டணி என்பது உறுதியான பிறகு தான் நாங்கள் சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்

    தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.


    ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிக விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தனர், கட்டப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராமர் கோவில் விவகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.

    எந்த கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்து விடும். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
    • மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.

    மதுரை:

    தேசப்பிதா என்று நாட்டு மக்களால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மத நல்லிணக்க நாளாகவும் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுவதுடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மத நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் என்ற பெயரில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் "மதவெறிக்கு மகாத்மா பலியான ஜனவரி 30" என்று ரத்தத்துளிகள் சிதறும் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

    மேலும் மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம், மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும், தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

    இந்த சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. காந்தியின் சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பாக சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

    அதில் மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
    • திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கட்ட பொம்மன் சிலை சந்திப்பில் இன்று காலை ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மறியல் செய்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். பிப்ரவரி 10-ந் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 15-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். 26-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 

    • இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.
    • இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் பழனியில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின்படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.

    தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.

    இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது.

    எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உபகோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் ஏற்கனவே நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்றும், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும்,

    மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாதம் "உறுதிமொழி" எழுதிக்கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, இந்து அறநிலையத்துறை ஆணையர் கோவிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

    • சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி ஆனந்தி (வயது 26). கடந்த 2014 ஆம் ஆண்டு குபேந்திரனுக்கும், ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் மாமியார் இருளாயி மருமகள் ஆனந்தியுடன் மிகுந்த பாசமாக இருந்து வந்தார். அவரும் கடந்த 2023 மார்ச் மாதம் இறந்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தன் மீது பாசமாக இருந்த மாமியார் கனவிலும், நேரடியாகவும் தோன்றி அழைப்பதாக கூறி ஆனந்தி அடிக்கடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் புலம்பி கொண்டிருந்தார். இதனால் அவரை கோவில்களுக்கு அழைத்து சென்று தண்ணீர் தெளித்தனர். மேலும் சாமியார்கள், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்று மந்திரித்தும் வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி, பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு மாமியாரிடம் செல்வதாக கூறி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் ஆனந்தியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம்.
    • தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் தெற்கு சண்முகநாதபுரம் எம்.கே.புரத்தை சேர்ந்தவர் பெரியாம்பிள்ளை மகன் திருமுருகன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களாக 77-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார்.

    திருமுருகன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவர் கோர்ட்டு வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வந்தார். எப்போதும் 4 முதல் 5 பேருடன் வெளியில் சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம். அதேபோல் நேற்றும் வாகனங்களில் போலீசார் ரோந்து சென்றுவிட்டு திரும்பினர்.

    இதற்கிடையே அந்த பகுதிக்கு ஏற்கனவே வந்து பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத திருமுருகன் அவர்களின் பிடியில் இருந்து வீட்டுக்குள் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. அப்போது அங்கு திருமுருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தெற்குவாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 பேரை பிடித்துள்ளனர். தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தி.மு.க. வட்டச் செயலாளர் நள்ளிரவில் 5 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது.
    • சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நாடார் மகாஜன சங்க 72-வது மாநாட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லையில் வெள்ளம் சற்றே தணிந்திருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் மீள பல நாட்கள் ஆனது. 6 நாட்களுக்கு பிறகு நான் அங்கு சென்றபோது பிரதான 2 சாலைகளை தவிர மற்ற சாலைகளை பயன்படுத்த முடியவில்லை.


    சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது இரண்டே நாட்களில் அப்புறப்படுத்தி விட்டார்கள். ஆனால் தூத்துக்குடிக்கு அப்படி எதையும் செய்யவில்லை. நான் அனைவரிடமும் கேட்டுக்கொண்டேன். தூத்துக்குடிக்கு ஏதாவது உதவிகள் செய்யுங்கள் என்று. காலநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியம். இதனை வருங்கால சந்ததியினர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

    கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது. அதுபோன்ற திட்டங்கள் அவருக்கு பின்னர் யாரும் செயல்படுத்த முன்வரவில்லை. எனவே மீண்டும் அது போன்ற திட்டங்களை கொண்டுவர ஒன்றாக சேர்ந்து நாம் ஆளுவோம்.

    மற்றவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து விட்டோம். போதும், 5 ஆண்டு காலம் நாம் ஆண்டு பார்ப்போம். சரியில்லை என்றால் ஒதுங்கிவிடுவோம். அமைதியான முறையில் வளர்ச்சியை அடைய வாய்ப்பு தாருங்கள். சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழிப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது.
    • திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள்.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பங்கேற்க வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணைக்கு நிகராக ஒரு புதிய அணையை கட்டுவோம் என்ற கவர்னரின் உரையும் தான். இந்த இரண்டையும் பா.ம.க. வன்மையாக கண்டிக்கிறது.

    இப்போது இருக்கும் முல்லைப்பெரியாறு அணை வலிமையாக உள்ளது என உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு ஐந்து முறை உறுதி அளித்துள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை எல்லாம் பார்க்கும்போது வேண்டுமென்றே கர்நாடகா தமிழகத்திடம் மோதி கொண்டிருக்கிறது. தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது, இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பை மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி நலத் திட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இருக்க காரணம் ஒரு பக்கம் மது, இன்னொரு பக்கம் கஞ்சா. கடந்த மூன்று ஆண்டு காலமாக போதை பொருள் பயன்பாடு 100 மடங்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ அத்தனை போதை பொருளும் தமிழ்நாட்டில் சரளமாக கிடைக்கிறது.


    தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழிப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது. முதல்வர் அதில் கவனம் செலுத்த வேண்டும். திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள்.

    மருந்தகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில்தான் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    கடந்த காலத்தில் 20 லட்சம் கோடி 30 லட்சம் கோடி என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள். ஆனால் பார்த்தால் ஒன்றுமே இல்லை. 1,700 ஏக்கரில் ஆரணி ஆற்றில் 4ஜி சிட்டி என்ற திட்டத்தை மதுரையில் கொண்டு வாருங்கள். ஏன் எல்லா திட்டத்தையும் சென்னையில் கொண்டு வருகிறீர்கள்? சென்னையில் போதிய இடமில்லை. 65 சதவீத தொழிற்சாலைகள் அங்கு தான் உள்ளன.

    தென் மாவட்டங்களில் 12 சதவீதம் தான் தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் இன்னும் நான்கு மாதத்தில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவர்களிடம் திட்டமிடல் இல்லை. வெள்ளம் வருகிறதா, ரூ.6,000 கொடுத்து விடுவோம், அதிலும் 2,000 கமிஷன். ஆண்டாண்டு காலமாக இந்த இரண்டு கட்சிகளும் இதை தான் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க. மூன்றாவது அணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்த பாராளுமன்ற தேர்தல் குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்றார். அதேபோல் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, இன்னும் கல்யாணமே ஆகவில்லை. அதுக்குள்ள குழந்தைக்கு பேர் வைக்க சொல்கிறீர்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங்கள் என்றார்.

    • திருமாவளவன், செங்கோட்டையன், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை:

    நாடார் மகாஜன சங்கத்தின் 72-வது மாநாடு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சங்கத் தலைவர் குருசாமி வெள்ளையன் கொடியேற்றினார்.

    வடக்கன்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் துரை பாண்டியன் தலைமை தாங்கினார். என்.என்.ஜே. குரூப்ஸ் சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன் மாநாட்டினை தொடங்கி வைத்தார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ராஜமோகன் வரவேற்று பேசினார்.

    அதனைத் தொடர்ந்து மாநாட்டில் மருத்துவ முகாம், சட்ட ஆலோசனை வழங்கும் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு கல்விதான் முக்கிய காரணம் என்றும், நாடார் சமுதாயத்தினர் வியாபாரம் மட்டுமே செய்தார்கள். ஆனால் இன்று கல்லூரி தாளாளர், பத்திரிகை உரிமையாளர்கள், பெரிய நிறுவனங்களை வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்.


    இந்த சமூகம் இன்னும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இன்னும் பெரும் வெற்றியை பெறமுடியும் என்றும், கடினமாக உழைப்பவர்கள் தான் நாடார்கள் என்றும் புகழாரம் சூட்டினர். முன்னதாக சிறப்பு விருந்தினர்களை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் தலைமையில் குழுவினர் வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை தொடங்கின. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. தலைவர டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொருளாளர் திலக பாமா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கமிட்டி சார்பில் எம்.பி.க்கள் விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ரூபி ஆர்.மனோகரன், அசோகன், பிரின்ஸ், ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக பிற்பகலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதனை வலியுறுத்தி நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

    • சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திரு விழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 23-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது.

    11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்மாள் எழுந்தருளினர்.

    தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.

    இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

    இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

    9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.

    ×