தி.மு.க. வட்டச்செயலாளர் சரமாரி வெட்டிக்கொலை... 5 பேர் கும்பல் வெறிச்செயல்

வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம். தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
தி.மு.க. வட்டச்செயலாளர் சரமாரி வெட்டிக்கொலை... 5 பேர் கும்பல் வெறிச்செயல்
Published on

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் தெற்கு சண்முகநாதபுரம் எம்.கே.புரத்தை சேர்ந்தவர் பெரியாம்பிள்ளை மகன் திருமுருகன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களாக 77-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார்.

திருமுருகன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவர் கோர்ட்டு வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வந்தார். எப்போதும் 4 முதல் 5 பேருடன் வெளியில் சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம். அதேபோல் நேற்றும் வாகனங்களில் போலீசார் ரோந்து சென்றுவிட்டு திரும்பினர்.

இதற்கிடையே அந்த பகுதிக்கு ஏற்கனவே வந்து பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத திருமுருகன் அவர்களின் பிடியில் இருந்து வீட்டுக்குள் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. அப்போது அங்கு திருமுருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தெற்குவாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 பேரை பிடித்துள்ளனர். தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தி.மு.க. வட்டச் செயலாளர் நள்ளிரவில் 5 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com