என் மலர்
நீங்கள் தேடியது "Madurai Meenakshi Amman temple"
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் ஆகியவற்றின் விலை கடந்த 2011-ம் வருடத்தில் இருந்து ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு இவை யாவும் தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த பிரசாதங்கள் தற்போது 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலையேற்றம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வளாகத்திற்குள் பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய இந்த பிரசாதங்களின் விலை ஏற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
- இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 27-ந்தேதி நாரைக்கு முக்தி அருளிய திருவிளையாடலும், 28-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 29-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 30-ந் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 31-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடைபெற்றது.
1-ந்தேதி வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று (2-ந்தேதி) நரியை பரியாக்கிய திருவிளையாடல் நடைபெற்றது.
ஆவணி மூல திருவிழாவின் முத்தாய்ப்பாக 9-ம் நாளான இன்று மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி சிறப்பு அலங்காரமாக பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.
முன்னதாக சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பேச்சியம்மன் படித்துறை வழியாக புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு சென்றனர்.
அங்கு மதியம் 1.35 மணிக்கு மேல் 1.55 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், அப்போது பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உற்சவம், மண் சாற்றுதல் லீலையும் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் முருகன், திருவாதவூர் மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக புட்டுத்தோப்புக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் புறப்பாடை முன்னிட்டு இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. மாலை அவர்கள் கோவிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
திருவிழாவின் 10-ம் நாளான நாளை (4-ந்தேதி) விறகு விற்ற லீலை திருவிளையாடல் நிகழ்வும், 5-ந்தேதி இரவு 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் சட்டத்தேரில் வீதி உலா நிகழ்வு நடக்கிறது. 6-ந்தேதி 12-ம் நாள் தீர்த்த வாரியுடன் ஆவணி மூலத்திருவிழா நிறைவு பெறுகிறது.
முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாண்டிய மன்னன் அமைச்சர்களை கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையில் வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகை கரையை வலுப்படுத்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மதுரையில் வசித்து வந்த 'வந்தி' என்னும் மூதாட்டி. இவள் பிட்டு சுடும் தொழில் செய்பவள். முதலில் சோமசுந்தரக் கடவுளுக்குப் பிட்டைப் படைத்து விட்டுப் பின்னர்தான் விற்பனை செய்து வந்தாள். வைகை கரையை வலுப்படுத்த மன்னன் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவர் சென்றனர்.
வந்தி, 'தனக்கு யாரும் இல்லையே' என்று சோமசுந்தரக் கடவுளை நினைத்துக் கண்ணீர் மல்க வேண்டினாள். அடியவர்க்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள்செய்ய பிட்டுக்கு மண் சுமக்கும் கூலி ஆளாய் வந்தியிடம் வந்து சேர்ந்தார். கூலியாகப் பிட்டைப் பெற்றுக்கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு வந்தார்.
வைகைக் கரைக்கு வந்த இறைவன், மண் சுமந்து கரையை வலுப்படுத்தாமல், நீரில் குதித்தும், மற்றவர்கள் சுமந்து வரும் மண்ணைக் கீழே தள்ளிவிட்டும், ஆடியும், பாடியும் தனது விளையாட்டைத் தொடங்கினார். இதைக் கவனித்த காவலர்கள், 'இவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டதோ?' என நினைத்தனர். உடனடியாக மன்னனிடம் சென்று முறையிட்டனர்.
வைகை நதிக்கு வந்த மன்னன் ஆத்திரம் அடைந்து, தனது தங்கப் பிரம்பால் அடித்தார். முதுகில் ஓங்கி அடித்தான். இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. இந்திராதி தேவர்களையும் அந்த அடியின் வலி விட்டு வைக்கவில்லை. எல்லா உயிர்களுக்கும் அந்த அடி விழுந்தது.
அதன் பிறகு மறைந்து போன இறைவன், நந்தி முதலிய கணாதிபர்களுடன் வானத்தில் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளைத் தன்னோடு வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் இந்தத் திருவிளையாடலைக் கண்ட மன்னனும் மக்களும் இறைவனைத் தொழுதனர் என்பது வரலாறு. இறைவனை மனிதனாக அவதரித்து அடியார்களுக்கு உதவி பிரம்படி பட்ட திருவிளையாடலை நினைவு கூறும் வகையில் பிட்டுத் திருவிழா இன்று நடைபெற்றது.
சுவாமி தங்க கூடையில் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேறெங்கும் இல்லாத வகையில் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
- மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சந்திர கிரகணம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (8-ந்தேதி) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
- சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன்றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது திரண்டிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.
4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி சென்றதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் மதியம் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (10-ந் தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி நாளை தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்கிறார்கள். மதுரையில் மூன்றுமாவடியில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபாராதனை காட்டியும் அழகரை மதுரை மக்கள் வரவேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
12-ந்தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார். பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
- மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.
இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
- மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது.
- மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார்.
மதுரையின் அரசி மீனாட்சி அம்மனுக்கு, சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று ஸ்தானீக பட்டர் ஹலாஸ் கூறியதாவது:-
மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார். அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணி கலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். அவரது திருமுகத்தை கண்டு மதுரை மக்கள் பரவசம் அடைந்து தரிசித்தனர்.
மேலும் முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தார்கள். திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இது தவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமணக்கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் இன்று காலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிகழ இருக்கிறது.
மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால் தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். ஆதலால் கணவனின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள்.
ஆட்சியையும் மக்களையும், கவனிக்கும் தன்னால் கணவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறாள் என்றார்.
- 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
- இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்ககொடி மரம் பல வண்ண மலர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரரும், மீனாட்சி அம்மனும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
விழாவின் முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சம்-சிம்ம வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.
2-ம் நாளில் (30-ந்தேதி) காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு பூதம்-அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறார்கள். 1-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
4-ம் நாளில் (2-ந்தேதி) காலை 9 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சின்னடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளுகிறார்கள். மாலை 6 மணி அங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சுவாமி-அம்பாள், மாலை மீண்டும் கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.
5-ம் நாள் (3-ந்தேதி) காலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் மாசி வீதிகள் வழியாக வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் எழுந்தருளுகிறார்கள். இரவு தங்கக்குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.
6-ம் நாள் (4-ந்தேதி) காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் வீதி உலாவும், இரவு தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 7-ம் நாள் (5-ந்தேதி) காலை கங்காளநாதர் மர சிம்மாசனத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதி வழியாக உலா வருகின்றனர். இரவு நந்திகேஸ்வரர், யாழி வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.
8-ம் நாள் (6-ந்தேதி) காலை தங்க பல்லக்கில் சுவாமி-அம்பாள் அருள் பாலிக்கின்றனர். இரவு 7.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
அப்போது அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் வைபவம் நடக் கிறது. மறுநாள் (7-ந்தேதி) காலை மரவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து மீனாட்சி அம்மன் வெற்றி பெறும் திக்குவிஜயம் நடக்கிறது. இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 8-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிதுன லக்னத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்கள்.
மறுநாள் (9-ந்தேதி) அதிகாலை 5.05 மணி முதல் 5.28-க்குள் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங் குகிறது. பெரிய தேரில் சுந்தரேசுவரரும், சிறிய தேரில் மீனாட்சியும் எழுந்தருளுவார்கள். பக்தர்கள் வெள்ளத்தில் 4 மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வரும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று இரவு சப்தவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.
12-ம் நாள் இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள். இத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே12-ந்தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
- தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பங்களில் இதுவும் ஒன்று.
- மதுரையின் எல்லைக்காவல் தெய்வமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
மாரியம்மன் வெவ்வேறு பெயர்களில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அருளாசி செய்து வருகிறார். பெயர் வெவ்வேறாக இருந்தாலும், அம்மா என்று அம்மனை வேண்டி அழைத்தால் தன்னுடைய குழந்தைக்கு தேவையான சேவையை செய்வதற்கு ஓடோடி வருபவராக விளங்குகிறார்.
அது போலத்தான் மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் கரையில் குடிகொண்டு, மக்களின் காவல் தெய்வமாக சங்கடங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் மாரியம்மன்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட் டில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்துக்குட்பட்டது வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாநகரை கூன்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தார். அப்போது, மதுரையின் கிழக்கே தற்போது கோவில் அமைந்துள்ள பகுதி மகிழம் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
அதனை திருத்தி, அருகே வைகை ஆற்றில் கிடைத்த அம்மனை தெற்கு கரையில், தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக அறியப்படுகிறது.
மாரியம்மன், துர்கையும் என வெவ்வேறு வடிவமாக இருந்தபோதும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும் வகையில், மாரியம்மன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கி வைத்திருக்கிறார். துர்கை அம்மனின் இடது காலுக்கு கீழே எருமைத்தலை உள்ளது.
மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள் போருக்கு செல்லும் முன் வீர தீரத்துடன் செயல்படவும், போரில் வெற்றி பெறவும், அம்மனை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பிற்காலங்களில் இந்த அம்மனே மதுரையின் எல்லைக்காவல் தெய்வமாகவும், தெப்பக்குளம் மாரியம்மன் ஆகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
மதுரை மன்னராக திருமலை நாயக்கர் இருந்த போது, தற்போது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனையை கட்டுவதற்கான மணல் இங்கிருந்து தோண்டப்பட்டது. அப்படி மணலை தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தை, சதுர வடிவ தெப்பக்குளமாக மாற்றினார்.
தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பங்களில் இதுவும் ஒன்று. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் மரங்களுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது.

தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கு சுரங்கக் குழாய்கள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த தெப்பம் தோண்டும்போது கிடைத்த விநாயகர் சிலையே மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகராக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தைப்பூசத் தன்று மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இத்தெப்பத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மதுரைக்கு வருவார்கள்.
இங்கு அம்மனே பிரதானம் என்பதால், வேறு பரிவாரத் தெய்வங்கள் இல்லை. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் உள்ளனர்.
அம்மைநோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தீராத நாள்பட்ட நோய்கள், குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் தீர பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் வேண்டுதல் செய்து நேர்த்தி செய்கின்றனர். வேண்டிய காரியங்கள் நிறைவேறினால் அம்மனுக்கு அக்னிச்சட்டி, பால் குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை நிறை வேற்றுகின்றனர்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பருகினால் சகல நோய்களும் நீங்கும் என்பதால், பக்தர்கள் தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பக்தர்கள் எலுமிச்சை தீபமேற்றியும் வழிபடுகின்றனர். உள்ளம் உருகி வேண்டி நிற்கும் பக்தர்களின் சங்கடங்களை தீர்த்தருளும் மகாசக்தியாக விளங்குகிறார் தெப்பக்குளம் மாரியம்மன்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
- உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 11 உபகோவில்களின் உண்டியல்கள் கோவில் வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 கிடைத்தது.
0.540 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 323 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.
- ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.
மதுரை:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.
மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று ரோஜா வழிபட்டார்.
- சொக்கரையும் கும்பிட்டு விட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன் என ரோஜா கூறினார்.
மதுரை:
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று ரோஜா வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி பார்த்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி தரிசனம் செய்து விட்டு அம்மன் சன்னதி வழியாக வெளியே வந்த ரோஜா நிருபர்களிடம் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் அருளால் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கோவிலுக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளேன். சொக்கரையும் கும்பிட்டு விட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன் என்றார்.
அவரிடம் தொடர்ந்து நிருபர்கள் அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன்.
- கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அருகே உள்ள கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கருமுத்து கண்ணன் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது மரண செய்தி அறிந்ததும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருவதுடன் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மரணமடைந்த கருமுத்து கண்ணன் கடந்த 1953-ம் ஆண்டு தொழிலதிபர் கருமுத்து தியாகராஜர்-ராதா தம்பதியருக்கு ஒரே மகனாக பிறந்தார். இவர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரி, திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், நூற்பாலைகளில் தலைவராகவும் இருந்து வருகிறார்.
மிகச்சிறந்த நிர்வாகியாக போற்றப்பட்ட கருமுத்து கண்ணன் கடந்த 18 ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொடர்ந்து பதவி வகித்தார்.
இவரது பதவி காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பல்வேறு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. அங்கு குளிர்சாதன வசதி, தகவல் மையம், சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை உள்ளிட்ட ஆன்மீக பணிகள் நேர்த்தியாக செய்யப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உப கோவில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த கருமுத்து கண்ணன் ஏற்பாடு செய்தார்.
மேலும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க துரித நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியம்மன் கோயில் உள்ள வசந்த ராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதிலுள்ள தூண்கள் சேதம் அடைந்தது.
அதனை மீண்டும் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கருமுத்து கண்ணன், அந்த பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வந்தார். மத்திய அரசின் ஜவுளிக்குழு தலைவராக பதவி வகித்துள்ள அவருக்கு தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், கவுரவ பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருமுத்து கண்ணனுக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களுக்கு தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மதுரைக்கு விரைந்துள்ளனர்.
எனவே கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அவரது இறுதி சடங்குகள் மற்றும் உடல் தகனம் நாளை பிற்பகலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






