என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.

    அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் 2 நாட்களாக முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த மிஜனூர் ரஹ்மான் (33), முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எதற்காக திருப்பூர் வந்தனர், சதி திட்டங்களை தீட்டுவதற்காக வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று 6 பேரிடமும் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது.
    • இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடை தரித்த வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.



    • அறிவும், முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ள எவரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள்.
    • நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தில்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவையும், உலகையும் அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு? என்பது குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்படும் மாநாட்டில், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்வது போன்ற செயலில் ஈடுபட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறது என்பதை உலகுக்கு காட்டியிருக்கிறது.

    அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த எதிர்ப்பு நாகரிகமாக முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்களும் பங்கேற்ற இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒரு நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அறிவும், முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ள எவரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள்.

    உலகின் போற்றத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தில்லி செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கில் இப்படி ஒரு நாகரீகமற்ற செயலை அரங்கேற்றியதன் மூலம் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவப்பெயர் தேடித் தந்திருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுப்பதுடன், இதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது.

    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மார்ச் 11-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர் பான இறுதி முடிவை அறிவிப்போம்.

    200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் கூறி வருவதாக சொல்கிறீர்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை அக்கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது.

    இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி வலுவிழந்து உள்ளது.

    அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ். மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

    தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக் கொண்டு நிதி கொடுக்கவில்லை தமிழக அரசு கூறுகிறது.

    ஆண்டுதோறும் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், மார்ச் 11-ந் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கான இடங்களை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.

    • அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
    • டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.

    பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.

    எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.

    திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.

    வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.

    நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.

    வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.

    அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார். 

    • கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
    • முதன்மைக் கண்காணிப்பாளர்களாக ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள்.

    சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக N.ஆனந்த், கழகப் பொதுச்செயலாளர், K.A செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர், கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன.
    • மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை (45 நாட்கள்) இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையில் இருந்தும். மறுமார்க்கமாக வரும் ரெயில்கள் 5-வது நடைமேடையில் இருந்தும் இயக்கப்பட்டன.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.

    எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    இதனால், பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பராமரிப்பு பணியின் முதல் நாளிலேயே சென்னை மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் மாம்பலத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    எழும்பூரில் இருந்து புறப்படும் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் மாம்பலத்தில் நாளை முதல் ஏப்.6 வரை நின்று செல்லும். மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது.
    • புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை 3 வகையாக நடைமுறையில் உள்ளது.

    அதன்படி தினமும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண கட்டண சேவை, கோடை விடுமுறை, பிற விடுமுறைகள், வார இறுதிநாட்கள் மற்றம் பண்டிகைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவை, திருமணம், குடும்ப விழா, நிறுவன விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிக்காக முழு ரெயிலையும் தனியாக வாடகைக்கு எடுப்பது (சார்ட்டர்டு சிறப்பு ரெயில்) என்று மூன்று வகைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டண ரெயில்களில் பயணிக்க முதல் வகுப்பில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூருக்கு ரூ.500, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.250 கட்டணம் வீதம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னூர்-ஊட்டி இடையே முதல் வகுப்பில் பயணிக்க ரூ.290, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.150 மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.1000, 2-வது வகுப்பு கட்டணம் ரூ.550 வீதம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த ரெயில்களின் கட்டணம் தற்போது 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அதிகரிக்கப்படவில்லை.

    ஆனால் மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயிலின் இயக்க செலவுகள், பராமரிப்பு செலவு மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை கணிசமாக உயர்ந்து உள்ளன.

    இதனை ஈடுகட்டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரெயில் பிரிவில் சாதாரண ரெயில்களின் அடிப்படை கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி சாதாரண ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சதவீதம் உயர்த்தப்படும். மற்றபடி முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

    மேலும் ஏற்கனவே பழைய கட்டணத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் செல்லுபடியாகும். அதற்கு கூடுதல் கட்டண வித்தியாசம் வசூலிக்கப்படாது. இன்று முதல் புதிய கட்டணத்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும்.

    ஊட்டி மலை ரெயில் பிரிவில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரெயில்கள் ஆகியவற்றின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது.
    • மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர்.

    கடலூர்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைவர் விஜய்க்கு பிடித்த மாவட்டம் கடலூர். தானே புயல், சுனாமி வந்த போது, மக்களுக்கு உதவி செய்தார். கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்.

    எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர். ஓய்வு பெற்று, படம் ஓடாமல் அரசியலுக்கு வரவில்லை.

    தி.மு.க. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மக்கள் வரிப்பணத்தில்தான் செய்தீர்கள். அதுவும் சரியாக செய்யாமல் கையாளாகாத அரசாக தி.மு.க. இருக்கிறது.

    நீங்கள் எப்படி வேஷம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஒரே தளபதி, தலைவர் விஜய்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளும் த.வெ.க. கோட்டையாக இருக்கும். தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக இருக்கும். ஆனால் தி.மு.க. 5 ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்யவில்லை.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், விசில் சின்னத்தை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார்.

    தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பிப்ரவரி 20-ந்தேதி (நேற்று) தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடைசி சட்டசபையாக இருக்கும்.

    பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், உண்மையான விவரம் தெரிய வரும். சமூக நீதி கூட்டணி என்று சொல்லும் தி.மு.க., ஏன் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. அந்த கூட்டணியில் உள்ளவர்களும் இதுவரை கேட்கவில்லை. பா.ஜனதா போல், தி.மு.க.வுக்கும் அந்த எண்ணம் இல்லை.

    விஜய் முதலமைச்சர் ஆன பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை என்று கூறும், தி.மு.க.வினர், பேப்பர், நிர்வாகிகள் இல்லாமல், விஜய்யுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த தயாரா? தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் போட்டி. பழம் நழுவி பாலில் விழும் என்பது அவுட் ஆப் சிலபஸ், பழம் நழுவி கெட்டுப்போன பாலில் விழுந்துள்ளது. கெட்டுப்போன பாலை யாரும் குடிக்கமாட்டார்கள். ஜி.பே. மூலமாக தான் தி.மு.க. கூட்டணி ஓடுகிறது. விஜய்யை ஜெயிக்க ஷேர் ஆட்டோவில் ஏற்றுவது போல கட்சிகளை ஏற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரலாற்றில் 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. கருணாநிதி இருக்கும் போதே நடக்கவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் போதா நடக்கப்போகிறது என்றார்.

    நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், 45 ஆண்டுகால அரசியலுக்கு பிறகு தூக்கி எறிந்த என்னை தூக்கி பிடித்தவர் தலைவர் விஜய். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு 3-வது தலைவராக விஜய் ஆள போகிறார்.

    நம்மை வீழ்த்த எவராலும் முடியாது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிய தலைவர் விஜய்யால் மட்டுமே முடியும். தி.மு.க.வை வீழ்த்த த.வெ .க. தலைவரால் மட்டுமே முடியும். 234 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும் என்றார்.

    • சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார்.
    • பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன் (வயது 55). இவர் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவதுடன், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். மேலும் தமிழகம், பாண்டிச்சேரியில் பர்னிச்சர் டீலராகவும் இருந்து வருகிறார்.

    இவர் வேடசந்தூர் கோவிலூர் பிரிவில் உள்ள தோட்டத்தில் தனது மனைவி தாமரைசெல்வியுடன் வசித்து வருகிறார். இவரது 2 மகன்கள் ஸ்ரீகாந்த், சச்சின் ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அவர்கள் தந்தையின் தொழிலையே கவனித்து வருகின்றனர். இவரது தோட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து கட்சி பணிகள் ஆற்றி வந்தார். தினந்தோறும் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகளும் வழங்கி வந்தார்.

    இதனால் அவரை பார்க்க தினந்தோறும் காலையிலேயே கட்சியினர் தோட்டத்து வீட்டிற்கு வருவது வழக்கம். இன்று காலை அவரது உறவினரான குளத்தூர் காளனம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வந்தார். அழைப்பிதழை வீராசாமிநாதனிடம் கொடுத்து விட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவருக்கு சால்வை அணிவிக்க வந்தார். சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு சத்தம் போட்டார். இருந்த போதும் வீராசாமிநாதனின் பின் தலையிலும் குத்தினார். உடனே அருகில் இருந்த நாச்சிமுத்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது நாச்சிமுத்துவையும் அவர் கத்தியால் குத்தினார்.

    இதனை தொடர்ந்து அவர் சத்தம் போடவே அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த வீராசாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் உடனடியாக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வீராசாமிநாதன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் எரியோடு பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் மணிகண்டன் (27) என தெரியவந்துள்ளது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தேர்தல் முன்விரோதம் காரணமாக குத்தினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீராசாமிநாதனை கத்தியால் குத்திய சம்பவம் அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். பிடிபட்ட வாலிபரின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
    • அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கௌசால்யபுரம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பி.சி.வி சர்வதேச பள்ளியில் (Holy Angels BCV International School) 2026-ம் ஆண்டு விழா ''சிற்பிகா 26'' என்ற பெயரில் நேற்று நடைபெற்றது.

    இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலந்து கொண்டு பள்ளியில் சிறந்து விளங்கிய மாணவிக்கு பொன்னாடை அணிவித்து விருதினை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    அப்போது விஜய் வசந்த் எம்.பி. பேசியதாவது:-

    தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவ- மாணவிகள் இருக்க வேண்டும். அதை போல் மொபைல் போனை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மாணவர்கள் நமது தேசத்தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தியாகங்கள் நாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை போல் நாமும் இந்த சமுகத்திற்கு தனது பங்களிப்பை செலுத்த வேண்டும். நமது தாய், தந்தைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என பேசினார்.

    படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டு, நடனம் மற்றும் உங்களது திறமைகளை அறிந்து அதை வெளி கொணர வேண்டும். தாய், தந்தையர்களும் உங்களது குழந்தைகளின் திறமைகளை அறிந்து வெளி கொண்டு வர உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. பேசினார்.

    நிகழ்ச்சியில் குழந்தைகளின் கண்கவர் நடனம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
    • மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித்து சென்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று கோடியக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் உள்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. பலத்த காற்று குறைந்த உடன் மீண்டும் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

    ×