என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் தற்போதைய நிலையில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன.
    • பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்தது.

    சென்னை:

    தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பை மற்றும் கரும்பு வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டன.

    அதேபோல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. அதோடு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ரொக்கத்தொகை மத்திய -மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை.

    அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை.

    இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அதோடு ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அது ரூபாய் ஆயிரமா?, ரூ.2 ஆயிரமா?, ரூ.3 ஆயிரமா அல்லது ஏன் ரூ.5 ஆயிரமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தால்தான் தெரியும். இருந்தாலும் வரும் பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்குவது மட்டும் உறுதியாகி உள்ளது.

    ஏனென்றால் அதற்கான முக்கிய காரணம் சட்டசபை தேர்தல் தான். தமிழகத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகிவிடும். எனவே தேர்தலை தமிழகம் சந்திக்கவுள்ள நிலையில் ரொக்க பணம் அரசு வழங்கும் என்று மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ஏனென்றால் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அ.தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி-திராட்சை, ஏலக்காய், ஒரு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கினார்.

    எனவே சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளதால் கடந்த முறை அ.தி.மு.க. அரசு வழங்கியதை விட கூடுதலாக தி.மு.க. அரசு வழங்கும் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும், பொங்கல் ரொக்க பணமாக ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போதைய நிலையில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் உள்ள அனைத்து கார்டுகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வழங்கினால் தமிழக அரசுக்கு ரூ.6 ஆயிரத்து 817 கோடி தேவைப்படும். அதுவே ரூ.5 ஆயிரம் என்றால் ரூ.11 ஆயிரத்து 361 கோடி தேவை ஆகும்.

    தமிழக அரசை பொறுத்தவரை ஏற்கனவே மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, முதியோர்- விதவை- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கி வருகிறது.

    அதோடு 100 யூனிட் இலவச மின்சார மானியம், பெண்கள் விடியல் பயணம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதி சுமை இருந்தாலும், பொங்கலுக்கு ரொக்க தொகை வழங்குவது உறுதி என்று கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாத தொடக்கத்திலேயே அறிவிக்க உள்ளார்.

    அதற்கிடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. அதில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு டோக்கன் கொடுப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்தாண்டு டோக்கன் கொடுக்கும் பணி 7-ந்தேதியும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி 11-ந்தேதியும் தொடங்கியது. அதே போல், இந்த பணி தொடங்குமா? அல்லது முன்னதாக தொடங்குமா? என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

    • சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.
    • சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது.

    ஆலந்தூர்:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களில், இன்றும் நாளையும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தென் மாவட்ட மக்கள், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி டிக்கெட் பெறுவதோடு, பயண நேரமும், கூடுதலாகி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகிவிட்டதால், பயணிகள் சென்னையில் இருந்து, பெங்களூரு வழியாக, மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பயணிகள் கூடுதல் கட்டணம், அதிக பயண நேரத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,100. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் கட்டணம் ரூ.13,400. சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம், ரூ.5,173. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி போவதால், ரூ.17,331 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

    சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.4,121.பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால், ரூ.13,842 கட்டணமாக உள்ளது. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.3,093. பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் ரூ.8,688 கட்டணம் செலுத்தி செல்கிறார்கள்.

    சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது. தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்வதற்கு போதிய நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தால், பயணிகள் அண்டை மாநிலங்களான திருவனந்தபுரம், பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியது இருப்பதால், கூடுதல் டிக்கெட் கட்டணங்கள் செலுத்துவதோடு, பயண நேரமும் பல மணி நேரம் அதிகமாகி, பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    எனவே விமான நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணிகள் பயணிப்பதற்கு தேவையான அளவு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
    • ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து இயந்திர மயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23.12.2025 அன்று சிறைப்பிடித்துள்ளனர்.

    இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இது போன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

    எனவே, இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு, மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (2024 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் உட்பட) இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளனர்.

    இலங்கைக் கடற்படையினரால் மேலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார்.
    • மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    கூட்டணிகளை உறுதிப்படுத்துவது, தொகுதிகளை அடையாளம் கண்டு கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற பணிகள் திரை மறைவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    பீகார் தேர்தல் முடிவு, கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் "மிஷன் தமிழ்நாடு" என்ற திட்டத்துடன் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளது.

    ஏற்கனவே தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் 3 மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை பா.ஜ.க. மேலிடம் அமைத்து உள்ளது.

    பியூஸ்கோயல், அமித்ஷாவின் வலதுகரமாக இருப்பவர். தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிக்கு இவரது வியூகம் காரணமாக அமைந்தது.

    ஏற்கனவே பல தேர்தல்களில் தமிழ்நாட்டில் கூட்டணிகளை உருவாக்கியது, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டு.

    எனவே தமிழகத்திலும் தேர்தலில் சாதிக்க பியூஸ் கோயல் வியூகம் கை கொடுக்கும் என்று பா.ஜ.க. உறுதியாக கருதுகிறது.

    தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

    அவரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, சக்கரவர்த்தி, பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

    பின்னர் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் சென்றார். அங்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கூட்ட அரங்கில் உயர்மட்ட குழுவினருடன் பியூஸ்கோயல் கலந்து பேசினார். இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா, வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காலை 10.40 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. தற்போதைய அரசியல் சூழல், தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி அவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

    அதன் பிறகு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார்.

    இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பது குறித்து பியூஸ்கோயல் முடிவு செய்வார்.

    அதே நேரம் சில சிறு கட்சிகளின் தலைவர்கள் இன்று பியூஸ்கோயலை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

    மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார். மாலை 6 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஏற்கனவே பா.ஜ.க. 80 தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் கண்டு வைத்து உள்ளது. இதில் இருந்துதான் கூட்டணியில் தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த தொகுதிகளின் நிலவரங்களை பற்றியும் மூத்த நிர்வாகிகளிடம் பியூஸ்கோயல் ஆலோசனை நடத்தினார். மாலையில் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுடன் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பியூஸ்கோயலின் இன்றைய நிகழ்வுகள் பற்றி பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

    பியூஸ்கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று சென்னை வந்து முதற்கட்ட ஆலோசனை செய்துள்ளார்.

    அடுத்தடுத்து கூட்டணி தொடர்பான நகர்வுகள் சூடுபிடிக்கும். தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இடம் பெறும். முக்கியமாக கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் பியூஸ்கோயல் ஈடுபடுவார் என்றார்கள்.

    • திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது.
    • அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் டி.டி.வி.தினகரனையோ, ஓ.பி.எஸ்.சையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா? இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ்கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ் நாட்டின் அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால் நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.

    சாக்கு போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இருமுனைப் போட்டி என்பதை முன் வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும்.

    மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.5 ஆயிரம் கொடுத்து இருக்கலாம், கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பிரச்சனையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உடன் சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியும்.

    செவிலியர் போராட்டம் உள்ளிட்டவைகளால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட்-2 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க.வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது.

    அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. அனைவரும் தி.மு.க.வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க.வை சொல்லித்தான் பேச முடியும். தி.மு.க.தான் எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான் தி.மு.க.வை சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக்குழுதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு என்றார்.

    • 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
    • இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அரசின் அலட்சியம் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 13-ந் தேதி வரை சராசரியாக 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்திருந்தன.

    சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டிருக்கும் அப்பட்டமான வாக்குத் திருட்டு முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    வாக்குகளைத் திருடும் தி.மு.க.வின் பேராசைக்காகவும், மோசடிக்காகவும் உழவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் ஏமாற்ற முயன்றால், தி.மு.க. அரசுக்கு எதிராக காவிரி பாசன மாவட்ட மக்கள் கொந்தளிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட உழவர்களின் உணர்வுகளையும், துயரத்தையும் அரசு புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உழவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம்.
    • ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

    சென்னை:

    தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்!

    வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து சாதனை புரிகிறது தமிழ்நாடு.

    உழவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம். MGNREGA திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

    உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்! என்று கூறியுள்ளார். 



    • பா.ம.க. என்ற 46 ஆண்டு கால வரலாற்றுக்கு சொந்தமானவர் டாக்டர் ராமதாஸ்.
    • வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூர், சேலம் உள்ளிட்ட 20 தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பா.ம.க.இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாக்டர் ராமதாஸ் ஜனநாயக பூர்வமான தலைவர். தேர்தல் வருகிறது. அதனால் மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்டு வருகிறார்.

    பா.ம.க. என்ற 46 ஆண்டு கால வரலாற்றுக்கு சொந்தமானவர் டாக்டர் ராமதாஸ். வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் அல்ல நாங்கள். பா.ம.க.வை பொறுத்தவரையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. 6 இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் ராமதாஸ். மக்கள் பிரச்சனைகளுக்கு போராடி பெற்று தந்தவர். நூற்றாண்டு கால சாதனைக்கு சொந்தக்காரர் அவர்.

    பா.மக. தலைவர் பதவி முடிவுற்றது. புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அதிலும் சரியாக செயல்படவில்லை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்புவதற்கு அன்புமணிக்கு எந்தவிதமான தகுதியும், உரிமையும் இல்லை என்றார். 

    • கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டு.
    • தமிழகத்திலும் தேர்தலில் சாதிக்க பியூஸ் கோயல் வியூகம் கை கொடுக்கும் என்று பா.ஜ.க. உறுதியாக கருதுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    கூட்டணிகளை உறுதிப்படுத்துவது, தொகுதிகளை அடையாளம் கண்டு கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற பணிகள் திரை மறைவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    பீகார் தேர்தல் முடிவு, கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் "மிஷன் தமிழ்நாடு" என்ற திட்டத்துடன் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளது.

    ஏற்கனவே தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் 3 மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை பா.ஜ.க. மேலிடம் அமைத்து உள்ளது.

    பியூஸ்கோயல், அமித்ஷாவின் வலது கரமாக இருப்பவர். தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிக்கு இவரது வியூகம் காரணமாக அமைந்தது.

    ஏற்கனவே பல தேர்தல்களில் தமிழ்நாட்டில் கூட்டணிகளை உருவாக்கியது, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டு.

    எனவே தமிழகத்திலும் தேர்தலில் சாதிக்க பியூஸ் கோயல் வியூகம் கை கொடுக்கும் என்று பா.ஜ.க. உறுதியாக கருதுகிறது.

    தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, சக்கரவர்த்தி, பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.



    • தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும்.
    • மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

    கோவை:

    மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, தேர்தல் அறிக்கை குழு கோவையில் இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். தொழில் துறை, விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும். தி.மு.க. தயாரிக்கும் தேர்தல் அறிக்கை, மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை சொல்வதாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

    இங்கிருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும்.

    மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதை வாக்குறுதியாக கொடுப்போம். அதில் எண்ணிக்கை என்று எதுவும் கணக்கு இல்லை.

    அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு மிகத் தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்றார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை.
    • பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ந்தேதி சேலம் ஐந்து சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும். சென்னை ஐகோர்ட்டிலும், டெல்லி சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது.

    எனவே, சேலத்தில் 29-ந்தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×