என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
- மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல.
மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த மாதம் 7-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் மத்திய அமைச்சரை கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சந்தித்திருப்பதைப் பார்க்க வேண்டும்.
70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகைபாலைவனமாகிவிடும். அதைத் தடுக்க வேண்டியது அவசர, அவசியத் தேவையாகும்.
மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று கூறி கடந்து சென்று விடுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது. இவற்றைப் பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தீர்ப்பளித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்தத் தீர்ப்பை மீறித்தான் 2018-ஆம் ஆண்டில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது. வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, அணை கட்டவும் அனுமதி அளிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததன் காரணமாகத் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், இப்போதும் மேகதாது அணை கட்டப்படுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் காரணமாக இருந்து விடக் கூடாது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதி செல்லுபடியாகும் வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும். அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
- தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
- நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7000 வழங்கப்படும்.
மதுரையை சேர்ந்த பிச்சைராஜன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்ற றிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்க டன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.
ஆகவே தங்க நகைக் கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
- ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது.
- உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
அரக்கோணம்:
சென்னை, கொரட்டூர் அடுத்த பள்ளத்தெரு, கோபாலகிருஷ்ண நகரைச் சேர்ந்தவர் முத்துக்கு மாரசாமி. இவருடைய மனைவி பாலசரஸ்வதி (வயது 60).
கணவன், மனைவி இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். கடந்த 2-ந் தேதி அங்கிருந்து சென்னை செல்வதற்காக திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர்.
ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பயணிகள் இறங்கியதும் ரெயில் புறப்பட்டு மெதுவாக சென்றது.
அப்போது அதில் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பாலசரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் செயினைப் பறித்தார். உடனே ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பால சரஸ்வதி அலறி கூச்சலிட்டார். உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து பால சரஸ்வதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதில் மெரூன் கலர் நிறமுடைய டீ சர்ட், பேண்ட், கருப்பு பைகள் வைத்திருந்த வாலிபர், பால சரஸ்வதியிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
- காவல் ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெபபோலியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியுள்ளார்.
இதனால், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டிய நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் புகாரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நெப்போலியனை தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
- முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி.
- நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
எம்புரான் படத்தில் இடம்பெற்ற முல்லைப் பெரியாறு வசனம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர், எம்புரான் பட காட்சிகளை சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியாகி எதிர்ப்பு கிளம்பிய பிறகு தான் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது" என்றார்.
எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்தார்.
அதற்கு, நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும் அவர்," அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும், கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சனை வரலாம்" என்றார்.
- பிரதமர் மோடி 6-ந்தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
- அ.தி.மு.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்-ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரெயில்வே பாலம் பழுதானதையடுத்து ரூ.550 கோடியில் பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி திறந்து வைக்கிறார். முன்னதாக இன்று 3 நாள் பயணமாக இலங்கை செல்லும் அவர் எரிசக்தி துறை உள்ளிட்ட இருநாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் செய்வதுடன், தொழில், வர்த்தகம், மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் (6-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் இலங்கையில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு நேரடியாக வருகிறார். இதற்காக அங்கு ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு அதில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.
பின்னர் பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
ராமேஸ்வரம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்து பின்னர் டெல்லி செல்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனியே சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவைச் சந்தித்தார். அப்போது அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்மு கம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாநில அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்களும் சந்தித்துப் பேச பிரதமர் அலுவலகம் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு பா.ஜ.க., அ.தி.மு.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழக காவல் துறை ஏவல் துறையாகவே செயல்பட்டு வருகிறது.
- நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அ.தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு குறித்து பேச அனுமதி அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் பிரச்சனை பற்றி பேரவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் அனுமதி கேட்டு போராட வேண்டுமா என அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஊடகவியலாளரான சவுக்கு சங்கர் வீட்டில் அசிங்கத்தை கொட்டி தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கீழ்தரமான செயலாகும். இந்த விவகாரம் தொடர்பாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் சபையில் விவாதிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அவை முன்னவர் இதெல்லாம் பெரிய பிரச்சனையா? என்று கேட்கிறார்.
மக்கள் பிரச்சனைகள் பற்றி சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது. செய்திகளை பதிவிடும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினரை கைது செய்து 15 நாள் காவலில் வைத்து விடுகிறார்கள். ஆனால் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை ஜாமினில் விட்டு விட்டனர். தமிழக காவல் துறை ஏவல் துறையாகவே செயல்பட்டு வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்தை போடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசுக்கு மக்கள் வருகிற தேர்தலில் மரண அடி கொடுப்பார்கள்.
நீட் தேர்வு பற்றி இனி மக்கள் கேள்வி கேட்பார்கள் என்கிற அச்சத்திலேயே தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதில் பங்கேற்பது பற்றி பின்னர் தெரிவிப்போம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களே சுவரி உடனுறை மங்கள நாதர் சுவாமி கோவில் உள்ளது. உலகின் முதல் சிவாலயமாக கருதப்படும் இந்த ஸ்தலத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
மேலும் இங்குள்ள மரகத நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நாளன்று சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள்.
இதுபோன்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு உள்ள இந்த கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் இன்று (4-ந்தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. நேற்று வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சிகர நிகழ்ச்சியான கும்பாபி ஷேகம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி இன்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மங்களநாதர்-மங்களேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் அதனைத் தொடர்ந்து ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை யில் இருந்து புனித நீர் உள்ள கும்பத்துடன் வலம் வந்தனர். சரியாக 9.30 மணிக்கு மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் சிவனே போற்றி என பக்தி கோஷ மிட்டு வழிபட்டனர். தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வடக்கு வாசல் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
கும்பாபிஷேக விழாவில் ராமநாதபுரம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் சேதுபதி ராணி, ராஜேஸ்வரி நாச்சியார், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நடராஜரை தரிசிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இன்று இரவு மரகத நடராஜருக்கு 32 வகையான திரவ பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்படும். அதன் பின் ஆருத்ரா நாளன்று மரகத நடராஜர் சன்னதி திறக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவது ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்த மாதம் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கும் என்று இருந்த நிலையில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-
தென் தமிழகத்திலும், உள் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 20-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் ஏற்படுவதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகம் இருக்காது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்ப அலை இருந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதுபோல வெப்பத்தின் தாக்கம் இருக்காது. 44 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு இருந்தது. இந்த மாதம் பரவலாக மழை பெய்யக்கூடும் என்பதால் வெயில் தாக்கம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
- சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய வரும் 9-ந்தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்
சட்டம ஒழுங்கு குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
- போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
- அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். த.வெ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர்புஸ்சி ஆனந்த் தலைமையில் இன்று அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற புஸ்சி ஆனந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை சாலையில் இருந்து போலீசார் கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையோரமாக சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் 16 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே போலீஸ் தரப்பில் அறி வுறுத்தப்பட்டு இருந்தது. இப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
'இஸ்லாமியர் பாதிக்கப்படும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை உடனே திரும்பப்பெற வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலி யுறுத்தலின் பேரில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உங்களது சொத்தில் இன்னொருவர் பெயரை சேர்த்தால் ஏற்றுக் கொள்வீர்களா? சிறுபான்மையினரின் குரலை நெறிக்கும், ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள். மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
சென்னை (தெ) வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு தலைமையில் தி.நகர் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர்களை திடீரென இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்தெறிந்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களிடம் மற்ற அரசியல் கட்சி போஸ்டர்கள் எல்லாம் அப்படியே இருக்கும்போது த.வெ.க. போஸ்டரை மட்டும் ஏன் கிழித்து எறிகிறீர்கள்? என த.வெ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நீட் தேர்வு வந்த பின்னர் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாது.
- மருத்துவ துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சென்னை:
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்ட பூர்வமான நடவடிக்கைகள் குறித்து நடைபெறவுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் தொடர்பாக தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:-
மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நமது மாநிலத்தில் பல்லாண்டுகளாக பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை முறையே இந்த சாதனைகளுக்கு அடிப்படை.
2006-ம் ஆண்டில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயிலக்கூடிய பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூகநீதியையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குச் சம வாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை தலைவர் கலைஞர் உருவாக்கினார்.
சமூகநீதியை நிலைநாட்டி, கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கக்கூடிய இந்த முறையால் தான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறோம்.
ஆனால், நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்தத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது.
மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளிலும் - பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும்.
நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பதிலும், இந்தத் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும், தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்தொற்றுமையின் அடிப்படையில், சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவினை இந்த அரசு அமைத்தது.
அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தச் சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று, தமிழ்நாடு மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் கவர்னரால் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனைச் செய்திட திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் என் தலைமையில் 5.2.2022 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, இந்தச் சட்டமுன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 8.2.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், கவர்னர் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை - ஆயுஷ் துறை - உள்துறை உயர்கல்வித் துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது.
ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காமல், நமது மாணவர்களுக்குப் பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நமது நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்க செய்தியை இந்தப் பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை அவமதித்துள்ள ஒன்றிய அரசின் இத்தகைய எதேச்சாதிகார போக்கு, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சிக் கருத்தியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், இந்தப் பேரவையின் தீர்மானங்களையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதனை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம்; ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்ட பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடமும் கலந்தாலோசிக்கப்படும்.
மேலும், இதுதொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9-ந்தேதி அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் நமது சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இந்தத் தருணத்தில் தங்கள் வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை இந்தப் பேரவையில் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டு, அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.






