என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு
- ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது.
- உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
அரக்கோணம்:
சென்னை, கொரட்டூர் அடுத்த பள்ளத்தெரு, கோபாலகிருஷ்ண நகரைச் சேர்ந்தவர் முத்துக்கு மாரசாமி. இவருடைய மனைவி பாலசரஸ்வதி (வயது 60).
கணவன், மனைவி இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். கடந்த 2-ந் தேதி அங்கிருந்து சென்னை செல்வதற்காக திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர்.
ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பயணிகள் இறங்கியதும் ரெயில் புறப்பட்டு மெதுவாக சென்றது.
அப்போது அதில் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பாலசரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் செயினைப் பறித்தார். உடனே ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பால சரஸ்வதி அலறி கூச்சலிட்டார். உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து பால சரஸ்வதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதில் மெரூன் கலர் நிறமுடைய டீ சர்ட், பேண்ட், கருப்பு பைகள் வைத்திருந்த வாலிபர், பால சரஸ்வதியிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






