என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
    • மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு கூறி வந்ததாக தெரிகிறது. சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இது சம்பந்தமாக தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஆனால் அமெரிக்கா தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்வின்பிரபு நிருபரிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியாகிறது.

    தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்ளிட்ட கடல் உணவு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஒரு கன்டெய்னரில் 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே லாபம் கிடைக்கும். அதை விட வரி மிகவும் அதிகமாக இருப்பதால் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அனுப்பப்பட்ட கன்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த கன்டெய்னர்கள் அமெரிக்காவை சென்றடைய இன்னும் 15 நாட்கள் வரை ஆகும். அதுவரை ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா? என்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    அதன்பிறகும் ஏற்கப்படாதபட்சத்தில் அந்த கன்டெய்னர்கள் மீண்டும் கொண்டு வரப்படும். அதுவரை காத்திருக்கிறோம். அந்த கடல் உணவு வேறு நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென்றால், அந்த கன்டெய்னரை பிரித்து, அதில் வேறு நாட்டுக்கு உரிய முறையில் 'பேக்கிங்' செய்ய வேண்டும். இது அதிக பொருட்செலவை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஐதராபாத் செல்லும்.

    மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * ஈரோடு ஜங்சனில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16845), வரும் 30-ந்தேதி வரையில் (9,16,23,30 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) திண்டுக்கல்-செங்கோட்டை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16846), வரும் 30-ந்தேதி வரையில் இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) செங்கோட்டை-திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும்.

    * செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16848), வரும் 30-ந்தேதி வரையில் இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று வழித்தடம் வழியாக மயிலாடுதுறை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 7, 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரியில் இருந்து வரும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12666), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), வரும் 30-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரியில் இருந்து வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07229), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஐதராபாத் செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டது.

    180 பயணிகளுடன் இன்று காலை 4.45 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    • காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது.
    • வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

    காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

    இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பருவகால மாற்றம் காரணமாக இன்புளூயன்சா வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் தான் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது. மருத்துவ சிகிச்சை தேவை. இதேபோல, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது. ஆனால், கட்டாயம் கிடையாது. வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    • எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
    • மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நூதன முறையில் கடத்தி வரப்பட்ட கொகைனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சுமார் ரூ.60 முதல் 70 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ கிராம் கொகைன் எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    சந்தேகம் வராமல் இருக்க, Ferrero Rocher என்ற பிரபல வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்டு பெட்டிகளில் கடத்தி கடத்தி வரப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முதற்கட்ட விசாரணையில் கடத்துவரப்பட்ட கொகைன், மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள கொகைன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது. 

     அண்மையில் இதேபோல் வெளிநாட்டு சாக்லேட் போர்வையில் டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 5.4 கிலோகிராம் கோகைன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.
    • எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல்.

    மக்கள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தியவுடன், அதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.

    இன்று இந்தியாவில் மோடி அரசு என்றால் அது வாக்குத் திருட்டின் சின்னம். மக்களால் நேசிக்கப்படாததால் தேர்தலில் நேர்மையாக வெல்ல முடியாத அரசுதான் பா.ஜ.க. அரசு. சதி, வஞ்சகம், வாக்குத்திருட்டு என்ற மூன்று தூண்கள்மேல் தான் இந்த அரசு தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதன் தோல்வியையும் பயத்தையும் மறைக்கவே ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் என்ற சிரிக்கத்தக்க பொய்க்குற்றச்சாட்டு பவன் கெரா மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உண்மையை வெளிப்படையாகச் சொன்ன காங்கிரஸ் தலைவர்களை மௌனப்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம்.

    ஆனால் இந்த நாட்டின் மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டார்கள். வாக்குத் திருடனை வாக்குத் திருடன் என்றுதான் அழைப்போம். எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, பவன் கெரா அவர்களுடன் உறுதியுடன் நிற்கிறது. மோடி எத்தனை தந்திரங்கள் செய்தாலும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் காங்கிரசின் போராட்டம் இன்னும் தீவிரமாவதே தவிர தளராது என பதிவிட்டுள்ளார் .

    • நேரடி தேர்வுக்கு எதிராக மேல்முறையீடு.
    • இந்த வழக்கில் தமிழக அரசு, பணி நியமனம் வழங்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தங்களுக்கு சேர வேண்டிய 2% ஒதுக்கீடு இல்லாமல் நியமன ஆணை வழங்கக் கூடாது என ஆசிரியர் அல்லாதோர்  முறையீடு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையில் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அனுமதி அளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி, 2500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில், ஆசிரியர்கள் அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்காமல், நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமனம் வழங்கக் கூடாது என அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2500 பேருக்குப் பணி நியமனம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. மேல்முறையீட்டாளர்கள் தரப்பில், "தனி நீதிபதியின் இடைக்காலத் தடையால் 2500 பேரின் பணி நியமனம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்கி, அவர்களுக்குப் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

    தமிழ்நாடு அரசின் தரப்பில், "நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாகப் பணி நியமன உத்தரவுகளை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர். பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை 3ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன்,

    ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர்காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல் முதல் மற்றும் 2-வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமிகவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லைநகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம்,

    ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், ஆர்.என்., புரம் ஒரு பகுதி, கொங்கணகிரி கோவில் மற்றும் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றம்.
    • 40 வாக்குறுதிகள் பரிசீலனைஉயில் உள்ளதை அமைச்சர்கள் விளக்கியுள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சோவி செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.

    இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வர் காலை உணவு திட்டம் (#CMBreakfastScheme), நான் முதல்வன் (#NaanMudhalvan), புதுமைப்பெண் (#PudhumaiPenn), தமிழ் புதல்வன் (#TamilPudhalvan) போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் (#ElectionManifesto) குறிப்பிடப்படாதவை!

    முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!

    Accessibility, Accountability, Transparency, Inclusivity, Responsibility, Sustainability இதுதான் தி.மு.க.!

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? 'சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' கதை தானா?

    2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யுரைத்து வந்த நிலையில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில், விடியல் எங்கே? என்ற ஆவணத்தை தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் வெளியிட்டேன்.

    அந்த ஆவணத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளை பட்டியலிட்டிருந்தேன். வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருந்த நான், அவற்றையும் அந்த நூலில் பட்டியலிட்டிருந்தேன். அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது; எந்த அளவுக்கு செயல்படுத்தப் படவில்லை என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன். அதை திமுக அரசால் மறுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சக அமைச்சர்கள் இருவருடன் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

    மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை" என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்; அதைத் தவிர வேறொன்றுமில்லை. வாக்குறுதிகளின் எண்ணிக்கையை மட்டுமே அமைச்சர் தெரிவித்தாரே தவிர, அவற்றின் பட்டியலை வெளியிட வில்லை. இதிலிருந்தே பா.ம.க.வின் குற்றச்சாட்டுக்கு திமுகவிடம் பதில் இல்லை என்பதை அறியலாம்.

    அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளாக கருத முடியும்? என்று தெரியவில்லை. அமைச்சர் கூறுவதைப் போல 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூட தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு வெளியிட்டு இருந்திருக்கலாம். செய்யாத சாதனைகளையே செய்ததாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, யாருக்கும் பயனற்ற அரசாணை பிறப்பித்திருந்தால் கூட அதைக் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்யவில்லை.

    ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் வீசப்பட்டதைப் போல, பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை எல்லாம் கூவம் ஆற்றிலும், அடையாறு ஆற்றிலும் திராவிட மாடல் அரசு வீசி விட்டதோ, என்னவோ தெரியவில்லை.

    ஒருவேளை அரசாணைகளே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும் தான் அது நிறைவேற்றப்பட்டதாக பொருள் ஆகும். அரசாணைகள் எனப்படுபவை ஏட்டுச் சுரைக்காய்கள் தான்.

    அவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுவதைப் போல அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றபட்டவையாக கருத வேண்டும் என்றால், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, "சீனி சக்கரை சித்தப்பா.... ஏட்டில் எழுதி நக்கப்பா" என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் இருக்குமே தவிர மக்களுக்கு பயன்படாது.

    திமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன? என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். 2021-ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், 221 வாக்குறுதியாக, 'மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும்" என்று கூறப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

    அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மின்துறை அமைச்சரிடம் கேட்ட போது, அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்திர மின் கட்டண வசூல் நடைமுறைக்கு வரும் என்று பதிலளிக்கிறார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு தான் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை. ஏன் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கேட்டால் ஸ்மார்ட் மீட்டரை காரணம் காட்டுவார்கள்.

    திமுக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே தொடரும் என்ற நிலையில், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பது தெரியவில்லை. இப்படியாக திமுக அரசின் அனைத்து விளக்கங்களுமே, "அத்தைக்கு மீசை முளைத்தால்" என்ற ரீதியில் தான் உள்ளன. அத்தைக்கு ஒரு போதும் மீசை முளைக்காது; திமுக அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதேபோல், திமுகவால் இனி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது தான் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும்.

    நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்; தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

    ×