என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் தற்போது பிரபலமாக உள்ளது.
    • மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    * நெல்லை வெள்ளத்தில் மிதந்த போதும் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி தரவில்லை. கேட்டது 37,907 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தது ரூ.276 கோடி. மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டாம்.

    * கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அறிவிப்புகளையும் திட்டங்களையும் கொடுக்கின்றனர்.

    * மத்திய அரசை குறை சொல்லிவிட்டு அமைதியாக இருக்காமல் புதிய திட்டங்களை நிறைவேற்றுகிறோம்.

    * நாளுக்கு நாள் புதிய திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது.

    * மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் தற்போது பிரபலமாக உள்ளது.

    * மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

    பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை மேடையில் வைத்து கொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்தார். 

    • அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
    • கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக தனது வியூகப் பயணத்தை கோவையில் இருந்து தான் ஜெயலலிதா தொடங்கினார்.

    கோவை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஆளும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க, என அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயும் 2026 தேர்தலே இலக்கு என்று கூறி அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதனால் 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படுவதற்கான நிலை உருவாகி உள்ளது.

    2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2026 தேர்தலில் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை மக்களிடம் நேரடியாக எடுத்து சொல்லி, மக்களின் குறைகளையும் கேட்டறிவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் விரைவில் தொடங்க உள்ளார்.

    இந்த சுற்றுப்பயணத்தை கொங்கு மண்டலமான கோவையில் இருந்து தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.

    இதற்கு முக்கிய காரணம், கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக தனது வியூகப் பயணத்தை கோவையில் இருந்து தான் ஜெயலலிதா தொடங்கினார். அவரது வழியை பின்பற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையிலிருந்தே தொடங்குகிறார்.

    2006-2011 வரை தி.மு.க. ஆட்சியில் நடந்த மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் அ.தி.மு.க. பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரில் வந்து தலைமை தாங்கி, தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    இது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. கோவையில் தொடங்கிய இந்த பயணத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்திய அவர், இதனை தேர்தல் பிரசார பயணமாகவும் மாற்றிக் கொண்டார்.

    2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் சென்டிமென்டாக கோவை வ.உ.சி. மைதானத்தில் இருந்தே தொடங்கினார். இப்படி மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களே 2011-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு அடித்தளமாக அமைந்தது.

    அந்த வகையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 இடங்கள் வீதம், கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து 20 இடங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறுவதுடன், அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்ட ங்களையும், வளர்ச்சியையும் மக்களிடம் எடுத்து கூறுகிறார். மக்களை சந்திக்கும்போது, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிய உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அதற்கு முன்னதாக அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தியதற்காக நாளை மறுநாள் (9-ந் தேதி) அன்னூரில் அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது.

    இந்த பாராட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

    பாராட்டு விழா முடிந்த சில நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கோவையில் தொடங்கும் புரட்சி தமிழர் பழனிசாமியின் பிரசார பயணம் மாநில அளவில் பேசுபொருளாக மாறும். இது கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும்.

    அன்னூர் பாராட்டு விழாவிலும், கோவை சுற்றுப்பயணத்திலும் திரளப்போகும் மக்களின் பெரும் திரட்சியானது மீண்டும் அ.தி.மு.க. அதிகாரத்துக்கு வர முன் அறிவிப்பாக இருக்கும்

    2010-ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அதேபோன்று பெரும் தொடக்கத்தை பழனிசாமியின் கோவை சுற்றுப்பயணம் தரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாங்குநேரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.
    • நெல்லை மாநகரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நெல்லை மாவட்டத்திற்கு 5 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர்,

    * பாபநாசம் கோவிலில் உட்கட்டமைப்பு வசதி ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * நாங்குநேரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.

    * நெல்லை மாநகரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    * நெல்லை மாநகரத்தில் புதிய கழிவு நீரகற்று நிலையம் கொண்டு வரப்படும்.

    * மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம்.

    * சென்னை, கோவை மட்டுமில்லாமல் தென் தமிழ்நாட்டில் நவீன தொழிற்சாலைகள் நிறைய அமைய வேண்டும்

    * இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் இதுதான் என் இலக்கு.

    * தென்பாண்டிச்சீமையை தொழில் வளர்ச்சி மிகுந்த சீமையாக மாற்றியது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று வருங்காலம் சொல்லும்! அந்த அளவிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார். 

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
    • ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    இதேபோல் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் உறுதிமொழியுடன் 8.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. கோட்டாட்சியர் சக்திவேல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் நத்தம் மூங்கில் பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24),மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பழனி ராஜ் (26), மாட்டின் உரிமையாளர்கள் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த நவீன் (28), தவசிமடையச் சேர்ந்த குணா (21), சிங்கராயன் (23), மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த வெற்றி (42), ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஜெரோம் (35), நத்தம் புங்கம்பாடியை சேர்ந்த ராமர் (55), முனியப்பன் (23) உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் குணா, ராமர், முனியப்பன் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, குடம், சைக்கிள், குத்து விளக்கு, வயர் கட்டில், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லை வந்தார்.

    நேற்று மாலை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் இருந்து பாளை மார்க்கெட் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ரோடு-ஷோ சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.

    அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.

    தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வ மிகுதியில் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.

    அப்போது பச்சிளங்குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது குழந்தைகள் பாரதியார், திருவள்ளுவர் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்தார்.

    அப்போது அந்த குழந்தைகள் திருக்குறளை வாசித்தனர். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் குழந்தைகள் அவருக்கு அன்போடு ரோஜாப்பூக்களை வழங்கினர்.

    பின்னர் சிறிது தூரம் வேனில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிமன்றம் அருகே இறங்கினார். அப்போது அவரை வக்கீல்கள் சந்தித்தனர். தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக ஆவலுடன் சாலையோரம் காத்திருந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் விழா மேடைக்கு சென்றடைந்தார்.

    • பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அருகே உள்ள கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 50).

    தி.மு.க. நிர்வாகியான இவர் கோ.புளியம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி (40). இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி தனியாக வசித்து வரும் நிலையில், திருப்பதி மற்றும் வசந்தி ஆகியோர் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் கதவை லேசாக சாத்திவிட்டு இருவரும் தூங்கினர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பதி வீட்டில் மர்ம கும்பல் புகுந்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் 2 பேரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வசந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-

    திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளது. அந்த இடம் சம்பந்தமாக கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலத்திலிருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று திருப்பதி கேட்டு வந்தார்.

    இன்று அந்த வழிக்கான பத்திர பதிவு நடக்க இருந்தது. இந்த நிலையில் இன்று மர்ம கும்பல் திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேரையும் திட்டமிட்டு வெட்டியுள்ள சம்பவம், அந்த நிலத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி வசந்தி நிலப் பிரச்சனை சம்பந்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வரும் நவம்பருக்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும்.
    • தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் விழாவில் ரூ.1,304.66 கோடி மதிப்பில் முடிவுற்ற 23 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.309.05 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * தமிழகத்தின் வரலாற்று பெருமைக்கு நெல்லை மண் அடையாளம்.

    * எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கியமான நகரமாக இருந்த ஊர் நெல்லை.

    * நெல்லையப்பர் கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்தவர் கலைஞர். வரும் நவம்பருக்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும்.

    * சென்னை அண்ணா மேம்பாலம் போல் நெல்லையில் ஈரடுக்கு பாலம் அமைத்தவர் கலைஞர்.

    * தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.

    * பொருநை ஆற்றின் கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

    * ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை அருங்காட்சியகம் பணிகள் நிறைவடையும்.

    * தாமிரபரணி உபரி நீர் இணைப்பு திட்டம் மிக முக்கியமான திட்டம்.

    * உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளைக்கு கால்வாய்கள் மூலம் கொண்டு செல்ல உள்ளோம்.

    * நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    * தாமிரபரணி-நம்பியாறு- கருமேனியாறு உபரி நீர் இணைப்பு திட்டம் மிக முக்கியமான திட்டம்.

    * வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது.

    * நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் உயர் சிறப்பு மருத்துப்பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.



    முன்னதாக, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

    • திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
    • வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.

    நத்தம்:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செட்டிநாடு பகுதிகளான காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனூர் பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குழு வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.

    10 நாட்கள் இவர்கள் பாதயாத்திரையாக தங்கள் பயணத்தை தொடங்கி வைர வேலை காணிக்கையாக முருகனுக்கு செலுத்துவதுடன் தங்கள் நேர்த்திக்கடன் முடிந்ததும் நடந்தே தங்கள் ஊருக்கு திரும்புவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் கடந்த 2-ந்-தேதியன்று தேவக்கோட்டை நகரப் பள்ளியில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து இக்குழுவினர் புறப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களை கடந்து இவர்கள் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர்.

    நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை அடைந்ததும் அங்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக ஏராளமான மயில்காவடியினர் பழனியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

    அப்போது முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைர வேல் முன்னே கொண்டு செல்லப்பட்டது. இதை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் போன்றவைகளை செலுத்தி வழிபட்டனர்.

    அதைதொடர்ந்து முருகன் புகழ்போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் காவடியை சுமந்து சென்றனர். வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்று வணங்கி வழியனுப்பினர். 

    • திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார்.
    • ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப். இவரது மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்ல ரேவதி முடிவு செய்தார். அதன்படி கணவருடன் ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார்.

    திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டை வந்தவுடன் சக பெண் பயணிகள் இறங்கிவிட்டனர். ரேவதி மட்டும் தனியாக இருந்தார்.

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் (வயது 28) என்பவர் பெண்கள் பொது பெட்டியில் ஏறினார். அப்போது ரேவதி இது பெண்கள் பெட்டி என்று கூறினார். அதற்கு ஹேமராஜ் அவசரமாக ஏறி விட்டதாகவும், அடுத்த ரெயில் நிலையம் வந்தவுடன் இறங்கி விடுவதாக கூறி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

    சிறிது நேரத்திற்கு பின்னர் ரெயில் பெட்டியின் கழிவறைக்கு சென்றார். பேண்ட் மற்றும் சட்டை இல்லாமல் ரேவதியின் முன்னால் அரை நிர்வாணத்துடன் வந்து நின்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி கத்தி கூச்சலிட்டார். திடீரென ரேவதியை சரமாரியாக வாலிபர் தாக்கினார்.

    கர்ப்பிணி என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். வாலிபரிடமிருந்து தப்பிக்க கர்ப்பிணி போராடினார்.

    இதில் ஆத்திரமடைந்த ஹேமராஜ் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். ரெயில் காட்பாடி வந்தவுடன் ஹேமராஜ் அங்கிருந்து இறங்கி தப்பி சென்றார்.

    ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து ஜோலார்பேட்டை ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த கர்ப்பிணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ரெயில்வே எஸ்.பி. உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ஹேமராஜை தேடி வந்தனர். காட்பாடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஹேமராஜை இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஹேமராஜ் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் இருந்து ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் செல்போன் பறித்ததும், காட்பாடி அருகே வந்தவுடன் இளம்பெண்ணை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதும் தெரிந்தது.

    2023-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து காட்பாடிக்கு அழைத்து வந்ததும், அங்கு வைத்து இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து ஜாமினில் வெளியே வந்ததும் தெரிந்தது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் ஹேமராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி அருகே டிரைவர் தூக்க கலகத்தில் டேங்கர் லாரியை ஓட்டியதால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் உட்பட 2 பேர் பலியாகினர். ஆறாக ஓடிய பால் வீணானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு டேங்கர் லாரியில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் ஏற்றி சென்றார். இந்த லாரியை நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அந்த லாரியில் அருள் (வயது27) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

    பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கரடிகுட்டை என்ற இடத்தில் சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ராஜேஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் ராஜேஷ் குமார் மற்றும் அவருடன் பயணம் செய்த அருள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பால் சாலையில் கொட்டி அந்த பகுதி முழுவதும் ஆறாக ஓடி வீணானது.

    இந்த விபத்து குறித்து உத்தனபள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2026 தேர்தலில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
    • மக்களுக்கு நன்றாக தெரியும். யார் மக்கள் பணியாற்றுவார்கள்?

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்ற நிலையில், அதன் ஒருபகுதியாக பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு மற்றும் உறுப்பினர் படிவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க.விற்கு வலுசேர்க்கும் வகையிலும், புகழ் சேர்க்கும் வகையிலும் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிசெய்யும் இயக்கம் தி.மு.க. மட்டும் தான்.

    ஏழை-எளிய மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தொழிலாளர்கள், விவசாயிகளுக்காக, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்காக இந்த இயக்கம் பாடுபடுமென அண்ணா தெரிவித்தார். அந்த இயக்கத்தை என் கையில் தந்தார்கள்.

    அப்படிப்பட்ட கழகத்தில் வந்து நீங்கள் எல்லாம் இணைந்து இருக்கிறீர்கள். பா.ஜ.க.வில் இருந்து வந்த தயாசங்கர் எங்களுக்காக தனி நேரம் ஒதுக்கி வந்ததற்கு நன்றி தெரிவித்தார். இதைவிட எங்களுக்கு வேறு வேலை இல்லை. இதுதான் எங்கள் வேலை. மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அனைவரையும் வரவேற்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

    சிலர் கட்சியை தொடங்கியதுமே நாங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என கூறி வருகின்றனர். அதெல்லாம் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு நன்றாக தெரியும். யார் மக்கள் பணியாற்றுவார்கள்? யார் மக்களுக்கு தொண்டாற்றுவார்கள்? என்பது மக்களுக்கு தெரியும். 2026 தேர்தலில் 7-வது முறையாக வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன் குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் முட்டைக்கோசை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் தற்போது தாளவாடி மலைப்பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ ரூ.2-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து தாளவாடி விவசாயிகள் கூறும்போது, வெளி மார்க்கெட்டில் முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகும் நிலையில் வியாபாரிகள் எங்களிடமிருந்து முட்டைக்கோஸ் ரூ.2-க்கு கொள்முதல் செய்வதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழ்நாடு அரசு, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் முட்டைகோசை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×