என் மலர்tooltip icon

    இந்தியா

    • கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
    • தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக வலைதளங்கள் காங்கிரஸ்- தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.

    ஆனால் காங்கிரசுக்கு விஜய் அறிமுகம் இல்லாதவர் அல்ல. காங்கிரஸில் சேருவது குறித்து விவாதிக்க 2010 ல் அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை.

    கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.

    சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயங்களை பற்றி விவாதிக்க இன்னும் நேரம் இருக்கிறது.

    தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.

    பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டும் செய்கின்றனர். இதற்கு அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறுகின்றனர்.

    இதுபோல எஸ்.ஐ.ஆர் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பில் இல்லாத தமிழகம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு ஒரு நிலைப்பாடும் என இரட்டை நிலைபாடுகளுடன் செயல்படுகிறது. பா.ஜ.க.வின் ஒரு அணி போல தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார். 

    • ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
    • முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.

    சென்னை:

    பா.ம.க. சார்பில் தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்ற ஆவண புத்தகம் தயாரிக்கப்பட்டது. அதனை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி சென்னையில் இன்று வெளியிட்டார்.

    பின்னர் அதில் உள்ள புள்ளி விவரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. தொழில், வேளாண்மை, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வரைவு நிதி நிலை அறிக்கை என இதுவரை 57 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட ஆவணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீடுகள் எவ்வளவு வந்துள்ளது என்பதாகும்.

    இதில் எந்த அளவுக்கு பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகள் குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மீண்டும் மீண்டும் முதலமைச்சரும், தொழில் துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் சொல்லி வருகிறார்கள். இது பொய் என்று ஆவணங்கள் மூலம் நிரூபித்து உள்ளோம்.

    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முதலீடு 78 சதவீதம். 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இது மிகப்பெரிய பொய். ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.

    2021-22-ம் ஆண்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க ஒப்பந்தங்களாகும். 2022-23-ம் ஆண்டில் முதல் கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டில் ரூ.61,791 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ஹூண்டாய் நிறுவனம் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் ரூ.500 கோடி மட்டுமே அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் செய்தார். இதன் மூலம் 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் ரூ.34,014 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 47 ஆயிரத்து 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் ஒரு பைசா முதலீடு கூட வரவில்லை.

    இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். வெறும் 3 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே வந்துள்ளது. தமிழ் நாட்டில் கங்கை கொண்டானில் தொழில் தொடங்க கையெழுத்திட்ட நிறுவனம் ஒருசில மாதங்களில் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?

    அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல் ஆந்திராவுக்கு சென்றது ஏன்? முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.

    இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் எது என்ற பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் 17 மாநிலங்கள் இடம் பெற்றன. அதில் தமிழகம் இடம் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ம.க. பொருளாளர் சத்யபாமா, வக்கீல் பாலு, அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குதிருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
    • தேர்தல் தோல்வி விரக்கியதால் குற்றச்சாட்டு என முக்கியஸ்தர்கள் கடிதம்.

    காங்கிரஸ் கட்சி மக்களவை, சட்டசபை தேர்தல் என தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதேவேளையில் பாஜக-வின் வெற்றிக்கு வாக்கு திருட்டுதான் முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவி செய்து வருகிறது என ராகுல் காந்தி தொடர்ந்த குற்றம்சாட்டி வருகிறார்.

    ஆதாரங்களுடன் குற்றம்சாட்டிய நிலையிலும், தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக 272 முக்கியஸ்தர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில் "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செயல்படுகிறார்" கையொப்பமிட்டு குறிப்பிட்டுள்ளனர்.

    சுமார் 272 பேர் கையொப்பமிட்டு உள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் மூத்த அதிகாரிகள் யாரும் கையொப்பமிடவில்லை.

    16 நீதிபதிகள் 123 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 133 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், ஹேமந்த் குப்தா உள்ளிட்ட வரும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

    • தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
    • அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

    பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உருவபொம்மையை எரித்துப்போராட்டம் நடத்தப்பட்டது.

    பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

    கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். உருவபொம்மையை எரித்தபடி சாலையில் ஓடியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து கருப்பு கொடி போராட்டம் நடத்திய முற்போக்கு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

    • ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
    • ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர்.

    கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்தது.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சபரிமலை தேவசம்போர்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    * கூட்டம் காரணமாக நேற்று 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங்கில் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * இனி 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் மறுநாளில்தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    * ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

    * சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    * ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
    • பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?

    பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.

    மு.க.ஸ்டாலின் "உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?" என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

    பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?

    ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
    • அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

    அவினாசி:

    தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.

    இந்தநிலையில் பீகார் தேர்தலின்போது, பீகார் மக்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக பொய் பிரசாரம் செய்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்ட இணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வம் தலைமையில் சிலர் தயாராகி வந்தனர்.

    இதையறிந்த அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

    • கேரள அரசு வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
    • நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி கவாய் ஒப்புக்கொண்டார்.

    கேரள அரசு இந்திய தேர்தல் ஆணையத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    SIR நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாக்கல் அவசரமாக பட்டியலிடக்கோரி தாக்கல் செய்த மனுவை இந்திய தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன் எடுத்துரைத்தார்.

    அப்போது, கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வருவதாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் ஆணையத்தை நடத்துவது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி கவாய் ஒப்புக்கொண்டார்.

    உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR-ஐ ஒத்திவைக்க கேரள அரசும் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
    • அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்களின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்றது.

    நாளை மறுதினம் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இலாகா பிரிப்பதில் பாஜக- நிதிஷ் குமார் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டதில் தலைவராக தேர்வு செய்யப்படுவார். பின்னர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி, தனக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.-க்களின் கடிதத்தை வழங்குவார்.

    நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றும் விழாவில பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பதவி ஏற்பு விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார்.
    • நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    மதுரை:

    மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டிலேயே அர சாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.

    இத்தனை ஆண்டுகளாக தெருக்கள் சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவுபடுத்துவதன் நோக்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.

    இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடியிருப்பு பகுதி, சாலைகள், தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இதன்மூலம் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவற்கு ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
    • இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் மட்டுமே அதிக செலவாகிறது. இதிலும் பிள்ளைகளின் கல்விக்காக மழலையர் வகுப்பு தொடங்கி பட்டயப்படிப்பு வரை பெற்றோர் செய்யும் செலவு சொல்லி மாளாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

    தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து, வளர்ந்து, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியாகி உள்ள வீடியோ, மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே அடிப்படை கற்றல் கூட தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியரான கமலேஷ் பாண்டே தொடக்கப் பள்ளியில் ஆங்கில வகுப்பை எடுக்கிறார். அப்போது, Friday-க்கு பதில் FarDay, என்றும் Saturday-க்கு பதில் Saterday என்றும் பலகையில் எழுதுகிறார். Father, Mother, Brother, Sister என்று குடும்ப உறுப்பினர் சொற்களுக்கு முறையே Farder, Mader, Barpr, Sester என்றும், அதேபோல் Nose, Ear, Eye-க்கு பதில் Noge, eare, iey என்று கரும்பலகையில் எழுதி மாணவர்களையும் சொல்லச் சொல்லி நோட்டில் எழுதிக்கொள்கின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    இதனிடையே, தொடக்கப்பள்ளியில் 42 குழந்தைகள் படித்து வருவதாகவும், அவர்களுக்கு கல்வி கற்க இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அடிக்கடி பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்பு நேரங்களில் தூங்குவதாகவும், மற்றொருவர் தவறான எழுத்துப்பிழைகளைக் கற்பிப்பதாகவும் கிராமவாசிகள் குற்றம் சாட்டினர்.

    இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

    • இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • நேற்று கூட சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை சந்திக்கும்போது இதை கருத்தை தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவியது. இருநாட்டு ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் எனத் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால், டிரம்ப் தலையிடவில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

    ஆனால், உலகத் தலைவர்களை சந்திக்கும்போதெல்லாம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்து வருகிறது.

    அமெரிக்க நேரப்படி நேற்று சவுதி பட்டத்து இளவரசரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் "இந்த கூற்று நிறுத்தப்பட்டுள்ள என நினைத்தால் உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறார். இதற்கு முன்னதாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்பு, பிரிடடன், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் பல்வேறு இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதை தெரிவித்தார். தற்போது 60-வது முறையாக கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    சவுதி பட்டத்து இளவரசர் உடனான சந்திப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    நான் உண்மையில் 8 போர்களை நிறுத்தி விட்டேன். மற்றொரு போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதினை பார்த்து எனக்கு சற்று ஆச்சர்யமாக உள்ளது. நான் நினைத்ததை விட சற்று நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினோம். பட்டியலை நான் வெளியிட முடியும். அந்த பட்டியலில் என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ×