search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்கா"

    • அறிவியல் பூங்காவில் ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை,

    கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை, ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து, பெரிய கடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 1.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோட்டார் இல்லாத வாகனப் போக்குவரத்து திட்டத்தில் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவிப் பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கு பூங்கா உள்ளது.
    • குரங்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அனுமன் குரங்கை இன்னொரு கூண்டிற்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு குரங்கு கூண்டில் இருந்து தப்பி விட்டது. உடனே அதை பிடிக்க ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    ஆனால் அந்த குரங்கு வனவிலங்கு பூங்காவின் மதில் மேல் ஏறி சாலைக்கு சென்றுவிட்டது. அதனை ஊழியர்கள் துரத்தி சென்றனர். ஆனால் குரங்கு ஊழியர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி விட்டது.

    இந்த குரங்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ராஜபாளையத்தில் நீரோடைகள் தூர்வாரப்பட்டது.
    • பூங்கா ஒன்றில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி 42-வது வார்டில் ஆர்.ஆர். நகர் மற்றும் ஆண்டாள்புரம் பகுதிகளில் நீரோடை நீண்டகாலாமாக சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இதனால் நீரோடைகள் சேறும் சகதியுமாய் புதர்மண்டி கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மேற்படி நீரோடைகளை தூர்வாரி சுத்தம் செய்து தரக் கோரி நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாமிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நீரோடையை தூர்வாரி சுத்தம் செய்ய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். நவீன கனரக ராட்சத எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. நீரோடையின் தற்போதைய நிலையை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

    நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த அவரை அப்பகுதி மக்கள் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

    • மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • கோடை விடுமுறையை ஒரு வார காலமே உள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்வளத்து றையில் பராமரிப்பில் உள்ள இப்பூங்காவில், கோடை விடுமுறையை ஒரு வார காலமே உள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    காவேரி ஆற்றில் வெகு நேரம் நீராடி மகிழ்ந்த அவர்கள் பூங்காவுக்கு சென்று புல் தரையில் அமர்ந்து பொழுதை கழித்த னர். மேலும் இங்கிருந்த பாம்பு, முயல் பண்ணையை கண்டு மகிழ்ந்தனர். சிறிய வர், பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி ஊஞ்ச லாடியும், சறுக்கல் ஆடியும் மகிழ்ந்தனர். மேட்டூர் அணை மீன்களை வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர். இதனால் வியாபாரமும் சூடு பிடித்தது. மேலும் பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உணவும் அருந்தினர்.

    அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், மேட்டூர் கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 14,964 பேர் மேட்டூர் அணை பூங்காவுக்கு வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.74 ஆயிரத்து 820 வசூல் ஆனது. வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 1062 பேர் வந்து சென்றனர்.

    • சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
    • அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை வேளச்சேரி, 100 அடி புற வழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டசபையில் 2023-24-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளிலுள்ள 10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.

    அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று வேளச்சேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பஸ் நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப் பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை முதலமைச்சர் சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

    இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும். இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும்.

    மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் , சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , அடையார் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ர மூர்த்தி, முதன்மைத் திட்ட அமைப்பாளர் அனுசுயா , மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.
    • நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் ஸ்வஸ்திக் நகரில் அம்ருத் 0.2 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் செலவில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    நகராட்சிஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம்,

    வழக்கறிஞர்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
    • உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன.

    பூதலூர்:

    பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது.

    பத்தாயிரம் சதுர அடி பரப்பில் முற்றிலும் நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    பூங்காவின் நடுவில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான அதிநவீன சாதனங்கள் மேற்கூரையுடன் அமைந்த ஒரு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வந்து பயன்பெறுவர் வசதிக்காக தனித்தனியான கழிவறை வசதியும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் இந்த பூங்கா எந்தவித பராமரிப்பும் இன்றி யாரும் பயன்படுத்தப்படாத நிலையில்,அதில் உள்ள குழந்தைகள் விளை யாட்டு அமைப்புகள் எல்லாம் துருப்பிடித்து காணப்படுகின்றன.

    அதேபோல மதிப்புமிக்க உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன. சில சாதனங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

    இந்த பூங்காவின் நிறைவு பகுதியில் காணப்படும் கழிவறை கதவுகள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பூங்காவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டு தற்போது யாரும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள அதிநவீன உடற்பயிற்சி சாதனங்களை சிறப்பு அனுமதி பெற்று பூதலூர் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    அப்படி இல்லாமல் ஒரு நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்ட அமைப்பு வீணாகி கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    எனவே இந்த பூங்காவை நல்ல முறையில் பராமரித்து பயன்படக்கூடிய அளவில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • 10 பேருக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சி விருச்சவனத்தில் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு பயிற்சி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    ஆலக்குடி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், பிள்ளையார்பட்டி ஊராட்சி ஆபுசு நகரில் ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் விளையாட்டு பூங்காவும், நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ரூபாய் 40.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் பூங்காவும், ராஜேந்திரம் ஊராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ராஜேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், மானாங்கோரை ஊராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பீ ட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடமும், ரூ. 23.56 லட்சம் மதிப்பீட்டில் மானாங்கோரை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், ரவுசப்பட்டி ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும் திறக்கப்பட்டது.

    இதேபோல் ஒரத்தநாடு வட்டம் காட்டுக்குறிச்சி ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்பட பல்வேறு புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய கட்டிடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 64 பயனாளிகளுக்கும் , முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 நபர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம் புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் 10 நபர்களுக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் பழனிவேல் தஞ்சாவூர் (பொ), பிரபாகர் (பட்டு க்கோட்டை), கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் நாகவேலு, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர்கள் வைஜெந்தி மாலா, பார்வதி சிவசங்கர் , செல்வம் சௌந்தர்ராஜன், சசிகலா ரவிசங்கர், முத்துமாணிக்கம், அமுதா செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிப்பு
    • கட்டுமானம் நடைபெறும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் தட்டி போர்டு ஒன்று இருந்தது

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே, பத்ம னாபபுரம் நகராட்சிக் குட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை முன்பு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கழிவுகளை வீசி வருவதால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும்.

    இந்தநிலையில் மருத்துவ மனை முன்பு பூங்கா அமைக்க சிலர் திட்டமிட்டு அதற்கான கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். கட்டுமானம் நடைபெறும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் தட்டி போர்டு ஒன்று இருந்தது. இதை கண்ட இந்து முன்னணியினர் அப்பகுதியில் கட்டுமான பணி நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    மேலும் உடனடி நடவடிக்கை எடுக்க தக்கலை போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி நகர தலைவர் ரஞ்சித் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியில் இந்து முன்னணியினர் குவிந்தனர்.

    தகவல் அறிந்த தக்கலை போலீசார் மற்றும் மற்றொரு சமுதாய அமைப்பினர் அங்கு வந்தனர். நகராட்சி தலைவர் அருள் சோபன், தி.மு.க. நகர செயலாளர் சுபிகான், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் வேலுதாஸ், சுரேஷ் குமார் இந்து முன்னணி செந்தில், மிசா சோமன், ரஞ்சித் உள்பட ஏராளமானோர் குவிந்தனர்.

    பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் மற்றும் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் தலைமை யில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சர்வே செய்து முறையான அறிக்கை தாக்கல் செய்த பிறகு பூங்கா அமைப்பது குறித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது. அந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் பேரி கார்டு

    அமைத்து போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன
    • பூங்கா மறுசீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டு உள்ளது.

    நாகர்கோவில் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டி பாலம், மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

    இங்குள்ள ஆற்றின் கரையோரத்தில் பூங்கா உள்ளது. சிதிலமடைந்து கிடக்கும் இந்த பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. பூங்கா எவ்வாறு அமைய வேண்டுமென பொது மக்களின் கருத்து கேட்கும் வகையில் கட்டிட கலை குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் கருத்துருவாக்கம் மற்றும் திட்ட மதிப்பீடு செய்யப் பட்டு, அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பூங்காவினை மறு சீரமைப்பது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்ட னர்.

    தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சீரமைத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு மேம்படுத்தி வருகிறது.

    அதன்படி மாத்தூர் தொட்டிப்பாலம் பூங்கா வினை சீரமைப்பது குறித்து மக்களிடம் கருத்து பெறப் பட்டு, திட்டமதிப்பீடும் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    பூங்கா மறுசீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டு உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் வண்ண மயமான அருமை யான அருங்காட்சியகம், கண்கள் குளிர மலர் கண்காட்சிகள், செடி வகைகள் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் சந்தீப் குமார், பேரூராட்சி தலைவர்கள் பெனிலா ரமேஷ் (திருவட்டார்), மவுண்ட் மேரி மனோஜ் (வேர்கிளம்பி), திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, அரசு வக்கீல் ஜாண்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில். சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி பரபரப்பு பேனர் ஒன்றை வைத்தார்.
    • பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கேசவன் பூங்கா இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கேசவன் பூங்கா இருந்தது. தற்போது, அந்த பூங்கா முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பூங்க இருந்ததற்கான அடையாளம் இல்லாத அளவுக்கு உள்ளது.

    இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கேசவன் பூங்கா இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தொண்டன் சுப்பிரமணி என்பவர் கேசவன் பூங்கா மாயமாகி விட்டதாகவும், அதனை கண்டுபிடித்து தரும்படியும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுகளுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தார்.

    இதற்கிடையே திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில். சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி பரபரப்பு பேனர் ஒன்றை வைத்தார். அதில், கேசவன் பூங்காவைக் காணவில்லை. அதை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி அந்த பேனரை அதிரடியாக அகற்றினர்.

    இதுகுறித்து தொண்டன் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறுகையில், திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே வடக்கே 15 மீட்டர், தெற்கில் 15.2 மீட்டர், கிழக்கில் 8.5 மீட்டர், மேற்கில் 8.9மீட்டர் நீள, அகலத்தில் கேசவன் பூங்கா இருந்தது. தற்போது அந்த பூங்காவை காணவில்லை. நான் எனக்கு சொந்தமான இடத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பேனர் வைத்து இருந்தேன். அதனை அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பல இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றாதது ஏன் எனத் தெரியவில்லை என்றார்.

    • சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணி காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரிக்க வேண்டும்.

    மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

    மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1,54,718 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×