search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்கா"

    • நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
    • பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராயபுரம்:

    இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிப்பு என்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. கட்டுரை, கதை , நாவல்கள் உள்ளிட்டவற்றை செல்போன்களில் ஒலியாகவே கேட்கும் வசதி வந்து விட்டதால் வாசிப்பு பழக்கம் முடங்கிவிட்டது.

    இந்த நிலையில் பொதுமக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் மேம்படுத்தும் விதமாகவும் பூங்காக்களில் சிறிய நூலகம் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர்.

    இதில் முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்திற் குட்பட்ட சென்னை சூளை ஏ.பி.சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்கா மற்றும் சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் சிறிய நூலகம் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் காமிக்ஸ், சிறுகதைகள் போன்ற புத்தகங்கள் உள்ளன.

    பூங்காவிற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்காக வருபவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து பசுமையான பூங்காவில் அமர்ந்து படிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். புத்தகங்களை பூங்காவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும் நூலகம் தொடர்பாக பொதுமக்கள் அங்கு வைத்துள்ள நோட்டு புத்தகத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளிப்படுத்தலாம்.

    புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

    இதைத்தொடர்ந்து வடசென்னை பகுதியில் மேலும் 8 பூங்காக்களில் வரும் நாட்களில் இதேபோல் சிறிய நூலகம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து இளநிலை பொறியாளர் எஸ்.சர்தாஜ் கூறும்போது, பூங்காவில் அமைக்கப்படும் சிறிய நூலகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புத்தகம் வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் எம்.ஆர்.எப். கார்டன், பூந்தோட்டம் பூங்கா, மணலி மண்டலத்தில் 2-வது பிரதான சாலையில் உள்ள பூங்கா, எம்.எம்.டி.ஏ. பூங்கா, மாதவரம் மண்டலத்தில் பத்மகிரி பூங்கா, கே.கே.ஆர்.கார்டன், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஜி.என்.டி. சாலையில் உள்ள அன்சா கார்டன் மற்றும் ஜீவாபூங்காவில் நூலகம் திறக்கப்பட உள்ளது என்றார்.

    • திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்
    • இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன.

    திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பார்வையாளர்களை உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேற்றி, சிங்கத்தை கூண்டில் அடைத்தனர்

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் டிக்கெட் எடுத்து உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவில் வழக்கம்போல் இன்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகளை தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே குதித்தார். இதை அங்கிருந்த ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதற்கிடையே அந்த நபர் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்றார். இந்த வேளையில் துங்கார்பூர் என்ற பெயர் கொண்ட ஆண் சிங்கம் அவரது கழுத்தை ஆக்ரோஷமாக கடித்தது. இதனால் அவர் அலறினார். இதை பார்த்த ஊழியர் மற்றும் சக பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். ஆனால் சிங்கம் அவரை விடவில்லை. சிங்கத்திடம் இருந்து தப்பித்து மரத்தில் ஏற அந்த நபர் முயன்றார். ஆனால் சிங்கத்தின் பிடியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து வனஊழியர்கள், உயிரியல் பூங்கா ஊழியர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சிங்கம் தாக்கி இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பலியான நபர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பதும், அவருக்கு வயது 34 என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் இன்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    • பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
    • பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

    குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.

    எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர்.
    • கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காங்களில் தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். குறிப்பாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    மேலும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மாநகராட்சி பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட விடுவார்கள். மேலும் ஆண்கள், பெண்கள் அனைவருமே பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து மிச்சாங் புயல் வருவதற்கு முன்பே சென்னையில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர். பொதுமக்களும் குழந்தைகளுடன் மாலை நேர பொழுது போக்குக்கு இடமில்லாமல் அவதிப்பட்டனர். மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பூங்காக்களை திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன. பல பூங்காக்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நடைபயிற்சி செல்லும் பாதைகளில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களில் கிளைகள் முதலில் அகற்றப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    • திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது.
    • காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 13 கோடியே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது திருச்சி - கரூர் நெடுஞ்சாலையை ஒட்டி, காவிரி கரையோரத்தில், 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகளை இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இதில் பறவைகள் தங்குமிடம் 60 ஆயிரம் சதுர அடியில் அதன் நல்வாழ்வை உறுதிசெய்ய காற்றோட்டம் மற்றும் இயற்கை விளக்குகளை எளிதாக்கும் வெளிப்படையான கண்ணிகளுடன் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதில் தீக்கோழிகள் மற்றும் அரிய வகை பறவைகள் உட்பட பலதரப்பட்ட கவர்ச்சியான பறவை இனங்களை பாதுகாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட உள்ளது. இதுவும் தஞ்சாவூரில் உள்ள ராஜாலியின் பறவை பூங்காவைப் போன்று பெரிய அளவில் அமைய உள்ளது.

    இந்த பறவைகள் பூங்கா உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உருவாகிறது. காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    இந்த பூங்காவின் பறவைக் கூடத்திற்குள், மரங்கள் மற்றும் செயற்கை குளங்களுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது புதிய அனுபவமாக இருக்கும்.

    மேலும் இங்கு 50 பேர் அமரும் திறன் கொண்ட ஒரு மினி தியேட்டர் அமைய உள்ளது. இதில் அறிவியல் ஆவணப்படங்கள் திரையிடுவதற்கும், பறவையியல் குறித்த குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிற்றுண்டிச்சாலை, சிமெண்ட் அணுகு சாலை மற்றும் சுமார் 60 கார்கள் மற்றும் 100 பைக்குகளுக்கான பார்க்கிங் வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இந்த பூங்கா அமைவதால் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வழித்தடத்தின் வடிவமைப்பை மாற்றியமைத்து நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    • நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கே.ஜே.நகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், திட்ட இயக்குனர் பாஸ்கரன், மேலும் எம்.கே.டி.சரவணன் 9-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் ஜினோ, அவைத்தலைவர் கணேசன், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு, ரவி பங்கேற்றனர்.

    • அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.
    • பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா மையமாக உடுமலை பகுதி அமைந்துள்ளது. அமராவதி அணை, திருமூர்த்திமலை மற்றும் வனப்பகுதிகள் என ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையமாக உள்ளது.

    ஆனால் அவர்களை ஈர்க்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெயரளவிற்கு மட்டுமே சுற்றுலா மையமாக உள்ளது. இதில் அமராவதி சுற்றுலா மையத்தில் அமராவதி அணை மற்றும் பூங்கா, வனத்துறை முதலை பண்ணை, அமராவதி மலைத்தொடர்கள், படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.

    ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் அணையின் கரை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பசுமையான பூங்கா அமைந்திருந்தது.இங்கு பல செயற்கை நீரூற்றுக்கள், அழகான நடை பாதை, புற்கள், வண்ணமயமான செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.

    அதே போல் அணையின் எதிர்புறம் 2 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள் தனித்தனி அறைகளிலும், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.மேலும் பூங்காவில், புலி, மான், காளை என சிலைகள் மற்றும் செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான அம்சங்கள் இருந்தன.

    சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்தாலும் அணை பூங்காவை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அணை பூங்கா முட் புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.உயிரியல் பூங்கா முழுவதும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற்றின் உபகரணங்கள் உடைந்தும், மின் விளக்குகள் திருடப்பட்டும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் இடமாகவும் பூங்கா மாறியுள்ளது. அணை பூங்கா முழுவதும் அடர்ந்த வனப்பகுதி போல் மாறியுள்ளதால், பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    அதே போல் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லை.வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களும் மாயமாகியுள்ளது.அணை மற்றும் அணைப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள், அணை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கண்டு கொள்வதில்லை.அழகாக இருக்க வேண்டிய பூங்கா அலங்கோலமாக மாறியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் அவல நிலை உள்ளது.

    எனவே அமராவதி அணை பூங்காவை முழுமையாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணை பூங்காவை புதுப்பிக்க, பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் பல முறை திட்ட அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு நிதி கோரி அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அணை பூங்கா அடையாளத்தை இழந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தலமாக உள்ள நிலையில் இதனை மேம்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த கள்ளி வகைகள் இருக்கும் வகையில், பாறை பூங்கா அமைக்கப்பட்டது.பல்வேறு வகையான மற்றும் வடிவங்களிலுள்ள கள்ளி செடிகள் இங்கு அமைக்கப்பட்டு பல வண்ண மலர்களுடன் அவற்றின் ரகங்கள், இயல்புகள் குறித்து அறிவிப்பு பலகைகள் என அழகாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்த அறிவு வளர்க்கும் அம்சமாகவும் இருந்தது. தற்போது கள்ளிப்பூங்காவும் பராமரிப்பின்றி, அடையாளத்தை இழந்து அடர்ந்த வனமாக மாறியுள்ளது. 

    • ஊட்டி பகுதியில் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதாக செய்தி வெளியானது
    • பூங்காவை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உத்தரவு

    ஊட்டி,

    ஊட்டி பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் அங்கு நடைபயிற்சிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக மாலைமலர் பத்திரிகையில் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி அந்த பூங்காவில் தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    • நெசவாளர் காலனி பூங்காவில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
    • இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் உள்ள நெசவாளர் காலனி பூங்காவில் விதைப்போம் வளர்ப்போம் குழு சார்பில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதில் பசியில்லா சங்கரன்கோவில் அறக் கட்டளை நிறுவனர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாட்டினை சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மற்றும் குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர். கோவில்பட்டி வட்டம் இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகைகள் கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த பூங்காவுக்கு செல்வதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த பூங்கா கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பூங்கா சரிவர சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக காட்சிஅளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்திலும் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    ஆனாலும் இதுவரை பூங்காவை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பெருநகராட்சி என்ற பெயர் பலகையும் மாநகராட்சியாக தரம் உயராமல் அப்படியே காட்சி அளிப்பதால் இதனை பார்த்து செல்லும் மக்கள் பூங்காவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆவது எப்போது? என்ற கேள்வியுடனே செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப்பணிகளில் மாறவில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டாலும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.இதற்காக காரணம் என்ன என்று தெரிவியவில்லை.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல குழு அலுவலகங்கள் புதிதாக புனரமைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிடித்து அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கணேசபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. பூங்காவுடன் கூடிய இந்த குடியிருப்பில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 45 போலீசார் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களது குடும்பத்தினர் ஓய்வு நேரங்களில் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழிப்பது வழக்கம். குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் இங்கு விளையாடுவது உண்டு.

    இந்த சூழலில் சமீப காலங்களில் பூங்காவில் சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகளும், நாய்களும் திரிந்து வருகின்றன. வழியை மறித்து படுத்திருக்கும் மாடுகள், எழுந்திருக்க மறுப்பதால், பூங்காவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடி விளையாடும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் விரட்டுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையை மாற்ற மாநகராட்சி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
    • உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×