search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.6.18 கோடி மதிப்பில் 26 புதிய அரசு கட்டிடங்கள்- அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    ரூ.6.18 கோடி மதிப்பில் 26 புதிய அரசு கட்டிடங்கள்- அமைச்சர் திறந்து வைத்தார்

    • ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • 10 பேருக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சி விருச்சவனத்தில் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு பயிற்சி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    ஆலக்குடி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், பிள்ளையார்பட்டி ஊராட்சி ஆபுசு நகரில் ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் விளையாட்டு பூங்காவும், நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ரூபாய் 40.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் பூங்காவும், ராஜேந்திரம் ஊராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ராஜேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், மானாங்கோரை ஊராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பீ ட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடமும், ரூ. 23.56 லட்சம் மதிப்பீட்டில் மானாங்கோரை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், ரவுசப்பட்டி ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும் திறக்கப்பட்டது.

    இதேபோல் ஒரத்தநாடு வட்டம் காட்டுக்குறிச்சி ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்பட பல்வேறு புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய கட்டிடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 64 பயனாளிகளுக்கும் , முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 நபர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம் புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் 10 நபர்களுக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் பழனிவேல் தஞ்சாவூர் (பொ), பிரபாகர் (பட்டு க்கோட்டை), கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் நாகவேலு, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர்கள் வைஜெந்தி மாலா, பார்வதி சிவசங்கர் , செல்வம் சௌந்தர்ராஜன், சசிகலா ரவிசங்கர், முத்துமாணிக்கம், அமுதா செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×