search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவம்"

    • திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர்.
    • பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கோவையை சேர்ந்தவர் ஹரீஷ்குமார். இவருக்கு கடந்த வருடம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள நல்லபுள்ளியை சேர்ந்த அனிதா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அவர்களது ஊரான நல்லபுள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அனிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சித்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை சிகிச்சை பிரிவில் அனுமதித்து பிரசவம் பார்த்தனர். அப்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

    இதற்கிடையே பிரசவத்தின்போது, அனிதாவுக்கு அதிகளவில் ரத்தபோக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து டாக்டர்கள் அவரை திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர். பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே, அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே தாயும், சேயும் இறக்க காரணம் என குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சித்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாயும், சேயும் மரணம் அடைந்தது குறித்து அறிந்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கேரளாவில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்
    • அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை.

    தற்போது இந்தியாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

    அநேகமாக சிசேரியன்தான் என்று முடிவு செய்துவிட்டால், சிகிச்சைக்கு 6-8 மணி நேரத்துக்கு முன்பாகவே திட உணவு சாப்பிடக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்ற கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்; எனிமா கொடுப்பது, சிறுநீர் வெளியேற கதீட்டர் சொருகுவது, உடலைச் சுத்தப்படுத்துவது, குளுக்கோஸ் சலைன் ஏற்றுவது போன்ற முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும்.

    குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும். கர்ப்பிணிக்குப் பொருத்தமான ரத்தம் தயாராக வைத்துக் கொள்ளப்படும். பொதுவாக, சிசேரியனுக்கு மூச்சு வழியாகத் தரப்படும் பொதுவான மயக்கம், முதுகில் ஊசி போட்டு பெறப்படும் முதுகுத் தண்டுவட மயக்கம் (ஸ்பைனல் அல்லது எபிடூரல்) ஆகியவை பயன்படுத்தப்படுவது நடைமுறை.

    இவற்றில் பொதுவான மயக்கத்தில் கர்ப்பிணி உறங்கிவிடுவார். வலி தெரியாது. மற்ற மயக்கத்தில் கர்ப்பிணிக்கு நினைவு இருக்கும். குழந்தையை வெளியில் எடுப்பதைக் காண முடியும். என்றாலும் வலி தெரியாது.

    சிசேரியனுக்குப் பின்…

    சிசேரியன் செய்யப்பட்ட பிறகு 3 - 5 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். இரண்டாம் நாளில் சாப்பிடத் தொடங்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாடிப்படி ஏறலாம். ஒரு மாதம் கழிந்த பிறகு பல வேலைகளைச் செய்ய முடியும். அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதை மட்டும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.

    அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை. இரண்டாவது குழந்தைக்கான சிசேரியன் என்றால், குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சைக்காக இன்னொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டியது வரும்.

    • சிசேரியன் அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
    • அவசர கால சிசேரியன்(Emergency Cesarean) என்று பெயர்.

    இயற்கையான முறையில் பிரசவம் நிகழும்போது, நேரம் அதிகமாக அதிகமாக, பிரசவ வலி அதிகரித்து, கருப்பை வாய் அகலமாக விரிந்து, குழந்தை வெளியில் வரும் அளவுக்குத் திறக்கும். இந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகும்போது, மருந்துகள் கொடுத்து இயற்கை பிரசவத்துக்கு முயற்சி செய்தபிறகும், பிரசவத்தில் சரியான முன்னேற்றங்கள் இல்லை எனும்போது, சிசேரியன் தேவைப்படும். மூன்றில் ஒரு பங்கு சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

    குழந்தைக்கு மூச்சுத்திணறல்குழந்தையின் கழுத்தைத் தொப்புள் கொடி சுற்றியிருந்தால், கருப்பையின் வாய்ப்பகுதி வழியாக முதலில் தொப்புள்கொடி வெளியில் வந்துவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். கருவில் குழந்தையைச் சுற்றியுள்ள திரவம் மிகவும் குறைவாக இருந்தாலோ, மிகவும் அதிகமாக இருந்தாலோ, குழந்தை கருப்பையில் நெடுக்குவாட்டத்தில் படுத்திருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அ்ப்போது இனியும் காத்திருப்பது ஆபத்து என அறியப்பட்டால், சிசேரியன் அவசியப்படலாம். பெரும்பாலான சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே செய்யப்படுகின்றன.

    குழந்தையின் அளவும் நிலைமையும் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பின் துவாரம் சற்றே குறுகலாக இருக்கும். குழந்தை அதன் வழியாகப் புகுந்து வெளியில் வர இயலாமல் போகும் அல்லது குழந்தையின் தலை பெரிதாக இருக்கும். சில நேரங்களில் குழந்தையின் தலை மேலேயும், கை, கால், பிட்டம் கீழேயும் இருக்கும் அல்லது வெளியில் வர முடியாதபடி தலை சற்றே சாய்ந்தபடி இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் இயற்கை பிரசவத்தில் சிக்கல்கள் தோன்றலாம் என்பதால், சிசேரியன் செய்யப்படும்.

    பிரசவ நேரத்தில் குழந்தையின் தலைக்கு முன்னால் நஞ்சுக்கொடி இருந்தால், குழந்தை வெளியில் வருவதைத் தடுத்துவிடலாம். குழந்தை வெளியில் வருவதற்கு முன்பே அது கருப்பையை விட்டுத் திடுதிப்பென்று துண்டிக்கப்படலாம். அப்போது அளவுக்கு மீறிய ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலைமைகளில் சிசேரியன்தான் கைகொடுக்கும்.

    • துரித உணவுவகைகளை தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது.
    • ஆமணக்கு எண்ணெய் மூல நோயில் நன்மை தருவதோடு, தாய்பாலை பெருக்கவும் செய்யும்.

    பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும், காலம் முழுவதும் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தும் நோய்நிலைகளுள் முக்கிய இடம் பிடிப்பது ஆசனவாய் சார்ந்த நோய்கள் தான். அதில் மூலநோயின் வலியும், வேதனையும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எதிரிக்கு கூட இந்த வேதனை வரக்கூடாது என எண்ணுவார்கள் இந்நோயால் அவதிப்படுபவர்கள்.

    மாறிப்போன உணவுப்பழக்க வழக்கமும், மறந்து போன பாரம்பரிய வாழ்வியல் நெறிமுறைகளும் மூலநோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாக உள்ளன என்பது ஒருபுறம். மறுபுறம் பார்த்தால், பெண்களுக்கு பிரசவ காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் கருவில் உள்ள மகவு கருப்பையில் வளர்ந்து அதன் பின்னே உள்ள மலக்குடலை அழுத்துவதால் பெண்களுக்கு மூலநோய் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது.

    கிட்டத்தட்ட 40 சதவீதம் பெண்கள் பிரசவத்தின் போதும், பிரசவத்தின் பின்னரும் மூல நோய்குறிகுணங்களால் அவதியுறுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. இந்த வருத்தமளிக்கும் புள்ளி விவரம் பல ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. நோயின் தாங்க முடியாத குறிகளோடு, பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டி, குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உரியது. இத்தகைய குணத்திற்கே பெண்களுக்கு விருதுகள் பல குவியவேண்டும். ஆனால் எதையும் எதிர்நோக்காமல் அன்றாட வாழ்வினை நகர்த்துவது அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.

    'குழந்தை பிறந்து நாலு நாள் தான் ஆச்சு, மலம் கழிக்கும் போது ரத்தம் சிதறுகிறது அதோடு வலியும் எரிச்சலும் அதிகமா இருக்கு' என்று மருத்துவரை அணுகும் பெண்கள் பலர் இத்தகைய வேதனையை எண்ணித் துடிப்பது அதிகம். பிரசவத்திற்கு பின்னர் கருப்பையில் இருந்து வெளியேறும் குருதியுடன், மூலநோயில் வெளிப்படும் குருதியும் ஒன்று சேர்ந்து பெண்களை ரத்த சோகை நோய்க்கு அடிமையாக்கி இன்னும் உடலை சோர்வாக்கும். இந்த மன வேதனையால் தாய்ப்பால் சுரப்பும் குறையக்கூடும்.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதமும்,பித்தமும் மலக்குடலில் ஒன்றிணைந்து மூல நோயை உண்டாக்குகிறது. இதனை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்ற தேரையர் சித்தரின் நோய்களுக்கான முதல் காரணப் பாடல் வரிகளால் அறியலாம். அதாவது மலக்குடலில் சேரும் அதிகப்படியான வாயுவும், சூடும் ஒன்றிணைந்து மலச்சிக்கலையும், நோய்நிலையையும் உண்டாக்கி குறிகுணங்களை தோற்றுவிக்கிறது.

    ஆகவே வாதம்,பித்தம் தணிக்குப்படியான அதாவது வாயுவையும், சூட்டையும் குறைக்கும்படியான சித்த மருத்துவம் கூறும் மூலிகைகளை பயன்படுத்த மூல நோயில் நல்ல தீர்வு எட்ட முடியும். சோற்றுக்கற்றாழை, கடுக்காய், திரிபலை, நிலாவாரை, குங்கிலியம், தொட்டாற்சிணுங்கி, கருணை, பிரண்டை, வெங்காயம், துத்தி போன்ற பல எளிய மூலிகைகள் மூலநோய்க்கு பயன்தருவதாக உள்ளன.

    சுவைகள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் அடிப்படை. ஆறு சுவைகளும் நம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டுவது அவசியம். இனிப்பையும்,காரத்தையும் அதிகம் கொண்டாடும் நாம் மற்ற சுவைகளை கொண்டாடுவதில்லை. சுவை மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தின் ஒரு அங்கம். ஆறு சுவைக்கும், உலகில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும், உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆக, ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் ஆறு சுவைகளும் கொண்ட ஒன்று எளிய சித்த மருத்துவ மூலிகையான 'கடுக்காய்' தான். இந்த கடுக்காய் மூல நோய் வகைகள் அனைத்திற்கும் நல்ல பலன் தரக்கூடியது.

    மூலநோயில் மகத்துவமிக்க மூலிகையான துத்தி இலை என்ற கீரையை அறிந்திடாத தமிழ் சமூகம் இல்லை எனலாம். துத்தி கீரை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது மூலநோயில் உண்டாகும் வீக்கத்தை குறைத்து அதன் வலி, வேதனையை போக்கும். பிரண்டை எனும் எளிய மூலிகையும் மூல நோயில் நிவாரணம் தரும். பிரண்டையை நெய் விட்டு வதக்கி உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். உணவில் நெய் சேர்த்துகொள்வது என்பதும் வாதம், பித்தம் இரண்டையும் சமனாக்கும் எளிய வழி.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள திரிபலை எனும் மருந்து வீக்கத்தை குறைப்பதுடன் ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி நோய்நிலையை குறைக்கும். இதனை மோரில் கலந்து எடுத்துக்கொண்டால் பலன் தரும். தொட்டால் சிணுங்கி என்ற தொட்டால் இலைகள் சுருங்கும் தன்மையுடைய மூலிகை இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதன் இலைகள் பல ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் மூலநோய்க்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் வாதத்தையும்,பித்தத்தையும் குறைக்க அவ்வப்போது எண்ணெய் குளியல் எடுத்தலும்,பேதி மருந்துகளை எடுத்தலும் மூல நோயின் குறிகுணங்களுக்கு நிவாரணம் தரும். சித்த மருத்துவம் கூறும் எளிமை வழிமுறையாக ஆமணக்கு எண்ணெய்யை பாலில் கலந்து இரவு வேளையில் எடுத்துக்கொள்ள வாதம், பித்தம் இரண்டும் குறைந்து நோய்குறிகளை குறைக்கும். மூலநோயில் எரிச்சலால் அவதியுறும் பெண்கள் கற்றாழை சாறுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ள பித்தம் தணிந்து எரிச்சல் குறையும். இதனை 'குமரி எண்ணெய்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது.

    மூல நோயில் உண்டாக்கும் ரத்தப்போக்கினை கட்டுக்குள் கொண்டு வர துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்க்கலாம்.

    ழைப்பூ, அத்திப்பிஞ்சு, மாதுளைப்பிஞ்சு, பிஞ்சு காய்கறிகள் இவை நல்ல பலனைத் தரும். இம்பூறல் எனும் மூலிகை ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகை. இதனை 'இம்பூறல் காணாது ரத்தம் கக்கி செத்தான்' என்ற சித்த மருத்துவ பழமொழியால் அறியலாம். மேலும் சங்கு,சிலாசத்து, படிகாரம், நாகம் ஆகிய உபரச,உலோகப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பற்ப மருந்துகளும் இந்நோய் நிலையில் உதவும்.

    மூல நோயால் அவதியுறும் பெண்கள் குடலில் வாயுவையும், பித்தத்தையும் அதிகரிக்காத உணவுமுறைகளை பின்பற்றுவது அவசியம். வாழை,உருளை, பட்டாணி வகைகள் இவை குடலில் வாயுவையும், அசைவ உணவுகள், டீ,காபி போன்றவை குடலில் பித்தத்தையும் அதிகரித்து நோய்நிலையை அதிகரிக்கும். ஆகவே பெண்கள் அவரவர் உடல் நிலைக்கு பொருந்தும்,பொருந்தாத உணவுகளை அறிந்து எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். இது மூலம், ஆசன வெடிப்பு ஆகிய நோய்நிலைகளில் நற்பலன் தரும். இதனை சித்த மருத்துவம் 'மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்' என்று குறிப்பிடுகிறது.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கருணைக்கிழங்கு லேகியமும், தேற்றான் கொட்டை லேகியமும் மூல நோயால் அவதியுறும் பெண்களுக்கு பெரிதும் உதவும். இதனை இன்னும் சில சித்த மருந்துகளோடு ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால் நோய்நிலையில் மாற்றம் வரும். மலச்சிக்கலை தீர்க்க ஆமணக்கு எண்ணெய், நிலாவரை சூரணம், கடுக்காய் சூரணம்,சிவதை சூரணம் ஆகிய சித்த மருந்துகள் உதவும்.

    ஆமணக்கு எண்ணெய் மூல நோயில் நன்மை தருவதோடு, தாய்பாலை பெருக்கவும் செய்யும். இது 'குழந்தைகளை தாய்போல் வளர்க்கும்' என்று சித்த மருத்துவம் கூறுகிறது. மலச்சிக்கலை தீர்க்கவும், உட்சூட்டைக் குறைக்கவும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள நார்சத்து மூலநோயில் நன்மை பயப்பதோடு, தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.

    எண்ணெய் தோய்ந்த பொருட்களும், மசாலா மிதக்கும் பொருட்களும், அசைவ உணவுகளும் குடலில் வாதம் மற்றும் பித்தத்தைக் கூட்டி மூல நோயாளிகளின் வலியை,வேதனையை பெருக்கி மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தும். ஆகவே நவீன வாழ்வியலை விடுத்து, துரித உணவுவகைகளை தவிர்ப்பது மூலநோயாளிகளுக்கு நல்லது.

    மூலநோய் எரிச்சலுக்கு எளிய வீட்டு வைத்திய மருந்து மோர் தான். மோரை உணவுப்பொருளாக பார்க்காமல் மருந்தாக பார்ப்பது சித்த மருத்துவம். அதனை மூல நோயின் எரிச்சலால் அவதிப்படும் பெண்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதும் நல்லது. எளிமையாக சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய்யை பயன்படுத்த நோய்க்காரணத்தை குறைத்து நன்மை பயக்கும். எரிச்சல் உள்ளவர்கள் அவ்வப்போது சீரகம் அல்லது சோம்பு இவற்றில் ஒன்றை கசாயமிட்டு குடிக்க குறிகுணங்கள் விரைவில் மாறும். மலம் கழித்த பின் சிட்ஸ் பாத் எடுக்க திரிபலை சூரணம் பயன்படுத்தலாம். நார்சத்து அதிகமுள்ள பிஞ்சு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கலை போக்கி மூலநோய் மற்றும் ஆசனவெடிப்பு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    மூலக்குடோரி தைலம் என்ற சித்த மருந்தினை பயன்படுத்துவது மூலநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றது. அதாவது கடுக்காய் பிஞ்சும், ஆமணக்கு எண்ணெய்யும் சேர்ந்தது தான் இந்த மருந்து. மிக எளிய மருத்துவ முறைகளே சித்த மருத்துவத்தில் பல்வேறு வியாதிகளுக்கு நல்ல பலன் தரும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். குங்கிலிய வெண்ணெய் எனும் சித்த மருந்து மூல நோயின் எரிச்சலை போக்கும்,உட்சூட்டினை நீக்கும். இதில் சேரும் குங்கிலியம் எனும் மூலிகைப்பிசின் பித்தத்தை குறைத்து வீக்கத்தை குறைக்கும்.

    மூல நோயால் அவதியுறும் பெண்கள் சித்த மருத்துவம் கூறிய ஆசனப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். பாலாசனம், பாவன முக்தாசனம், வஜ்ராசனம், விபரீத கரணி, பத்த கோணாசனம், அர்த்த மச்சேந்திராசனம், ஹாலாசனம் ஆகிய ஆசனப்பயிற்சிகளை மேற்கொள்ள அபானவாயு வெளியேறி மூல நோயின் வேதனையை குறைக்கும். அதோடு சீரணத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலையும் போக்கும். அத்துடன் இடுப்பு தசைப் பயிற்சி செய்வதும் நல்லது.

    மூல நோயின் பெரும்பாலான அறிகுறிகள் குழந்தை பிறப்புக்கு பின்னர் தன்னிச்சையாகவே பல பெண்களுக்கு குறைந்துவிடுகிறது. உணவில் நார்ச்சத்து அதிகரிப்பதன் மூலமும், மலச்சிக்கலை போக்குவதன் மூலமும் இந்த நோய் நிலையின் குறிகுணங்களில் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.

    காலை விரதமும், அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதும், தினசரி ஒரு லிட்டருக்கு குறைவான நீராகாரங்களை எடுத்துக்கொள்வதும், உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளாததும் மூலநோயில் தாபிதத்ததை உண்டாக்கி குருதிப்போக்கை உண்டாக்குவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    இந்த ஆய்வுமுடிவுகள் கூறுவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்த மருத்துவம் கூறிவிட்ட மூலநோய்க்கான காரணமுறைகளோடு பொருந்துவது என்பது ஆச்சர்யத்திற்குரியது. ஆக சித்த மருத்துவம் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்தலே அடுத்த தலைமுறையை நோயிலிருந்து காத்து மகிழ்ச்சியான வளமான வாழ்விற்கு அடித்தளமிடும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • தற்போது 'சிசேரியன்' பிரசவங்கள் அதிகரித்து வருகிறது.
    • உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம்.

    கர்ப்பம் தரித்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுகப்பிரசவம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தற்போது 'சிசேரியன்' எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர் அர்ச்சனா கந்தசாமி.

    சுகப்பிரசவம்: கருப்பையில் வளரும் குழந்தை, உரிய காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையைக் கடக்கும். பிறகு கர்ப்பப்பை வாயைக் கடந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம்.

    சிசேரியன்: குழந்தை வெளியேறும் இந்தப் பாதையில் தடை ஏற்படுதல், பிரசவத்தின் போது உடல் நலம் காரணமாக, தாய் அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகுதல், உரிய காலத்தில் பிரசவ வலி வராமல் இருத்தல் போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதுதான் சிசேரியன்.

    தற்போது சிசேரியன் அதிகரிக்க காரணம் என்ன?

    தாமதமான திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவ தால் 35 வயதுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையே சிசேரியன் அதிகரிக்கக் காரணம். இது தவிர கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல் காரணமாகவும் சிசேரியன் செய்ய நேரிடும்.

    சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதை மருத்துவர்கள் எப்போது தீர்மானிக்கிறார்கள்?

    கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை மருத்துவரால் முற்றிலுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதைப் பொருத்தே சிசேரியன் செய்வது திட்டமிடப்படுகிறது. அதே சமயம், கடைசி நேரத்தில் சிசேரியன் தேவைப்படும் சூழலும் ஏற்படும். இரட்டைக் குழந்தையாக இருந்தால் பெரும்பாலும் சிசேரியன் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது, தாய் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது.

    முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதா?

    முதல் குழந்தை பிறப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, கர்ப்பப்பையை குறுக்கே வெட்டி தையல் போட்டிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்கையில் சுகப்பிரசவமாகும் வாய்ப்பு உண்டு.

    சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம். யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி எப்போதும் அவசியம். உணவு முறையிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

    • ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
    • ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார்.

    சென்னை:

    மங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் ''வெஸ்ட் கோஸ்ட்'' விரைவு ரெயிலில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக வேலை பார்க்கும் அஸ்வின் குமார் தனது மனைவி சாந்தினியுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தினியை பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிப்பதற்காக திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இருவரும் ஏறினர்.

    மதியம் 2.20 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரி துரிதமாக செயல்பட்டு சாந்தினியை ரெயிலில் இருந்து இறக்கி அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச்சென்றார். சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே அரக்கோணம் ரெயில்வே டாக்டரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை ரெயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று பிரசவத்துக்கு உதவியாக இருந்த பெண் போலீஸ் பரமேஸ்வரியை பயணிகளும், பொதுமக்களும் வெகுவாக பாரட்டினர்.

    • பிரசவம் நிகழ்ந்த பின், அடுத்த ஆறு வாரங்கள் அவர்களுக்கு பெரும் சவாலான காலம்.
    • பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிகக்கடினமான மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.

    பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு. தாய்மை என்ற நிலையை அடைய பெண்கள் பிரசவ காலத்தில் படும்பாட்டினை வெறும் வார்த்தைகளால் கூறுவதால் அதன் வலியும்,வேதனையும் யாருக்கும் தெரிய வராது.

    அத்தகைய தாய்மையை அடைந்த பின், பிரசவத்திற்கு பிந்தைய நிலையில் பெண்கள் இன்னும் பல்வேறு உடலியல், மனவியல் சார்ந்த மாற்றங்களுக்கு ஆட்படுவது என்பது அவர்களுக்கு மீண்டும் ஒரு சவால். அத்தகைய மாற்றங்களோடு உடல் எதிர்கொள்ளும் வேதனைகளைத் தாங்கிக்கொண்டு மகவின் மீது பேரன்பும், அக்கறையும் காட்டி வளர்ப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. அத்தகைய தருணத்தில் பெண்களை அன்பும், அரவணைப்பும் கொடுத்து பேணிக்காக்க வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

    பிரசவம் நிகழ்ந்த பின், அடுத்த ஆறு வாரங்கள் அவர்களுக்கு பெரும் சவாலான காலம். தன் உடல் நலத்தோடு, மகவின் நலனையும் சேர்த்து காக்க வேண்டிய தருணம் அது. அந்த காலத்தில் அவர்களை அதிகம் பாதிப்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் 'பி.பி.டி.' எனப்படும் பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் தான். இதனைப் பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரிவதே இல்லை.

    ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமான பணி. ஒரு தாயின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் தேவையான ஆற்றலை பிரசவத்தின் போது எடுத்துக்கொள்ளும் என்கிறது நவீன அறிவியல். உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிகக்கடினமான மன சோர்வு அல்லது மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். சிலருக்கு பிரசவத்திற்கு பிந்தைய ஒரு வருடம் கூட இந்த மன அழுத்தம் நிலைத்திருப்பதாக ஆய்வுகள் கூறுவது வருத்தம் தான்.

    இதனால் குழந்தைகளை, கவனித்துக்கொள்வதும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் கடினமாவதால், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதும் கடினமாகிறது. பிரசவத்திற்கு பின் ஏற்படும் இத்தகைய மன அழுத்தத்தை போக்க எளிய மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன் பால் சுரப்பினை அதிகரிக்கும். மணத்தக்காளி கீரை மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்பது அதன் பெயரிலேயே விளங்கும். இந்த கீரை பிரசவத்திற்கு பின் அடிக்கடி செய்து கொடுக்க மனஅழுத்தம் குறையும்.

    அதே போல் வல்லாரை, பிரமி ஆகிய கீரை வகைகளையும் நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பிரமி நெய் எனும் சித்த மருந்து அதற்கு நல்ல தீர்வினை தரும். மற்றொரு எளிய சித்த மருத்துவ மூலிகை அமுக்கரா கிழங்கு. நரம்புகளைப் பலப்படுத்தவும், மன அழுத்தத்தைப் போக்கி நிம்மதியான தூக்கம் உண்டாக்கவும் வல்லது. எல்லா வயதினரும், எல்லா பருவத்திலும் பயன்படுத்த ஏற்புடைய மூலிகை அமுக்கரா எனும் அஸ்வகந்தி. பிரசவத்திற்கு பின் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்த உகந்தது.

    மேலும் அமுக்கரா கிழங்கு இயற்கை வலிநிவாரணியாக இருப்பதால் பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட உடல் வலியும் நீங்கும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு தினசரி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள பிரசவத்திற்கு பின் உண்டாகும் சிறுநீர் பிரச்சினைக்கும் பலன் தரும். தூக்கமின்மை இருப்பின் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் சேர்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவத்திற்கு பின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் பழக்கத்தில் உள்ள பாட்டி வைத்தியம் என்னவெனில் 'செலவு குழம்பு' எனப்படும் 'பத்திய மருந்து குழம்பு' தான்.

    பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு பத்தியக் குழம்பாக இந்த மருந்து குழம்பு கொடுக்கப்படுவது இன்றளவும் பல ஊர்களில் வழக்கத்தில் உள்ளது. கர்ப்ப காலத்திலும் சரி, கர்ப்பத்திற்கு பின்னரும் சரி சித்த மருத்துவம் பாட்டி வைத்தியமாக கையாளப்பட்டு வருவதற்கு இதுவும் உதாரணம். 'பிரசவத்திற்கு பின்னர் கருப்பை மற்றும் உடலில் சேரும் நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை அகற்றி உடலை சுறுசுறுப்பாக வைக்கக்கூடியது மருந்து குழம்பு. பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடலைச்சுத்தம் செய்வதற்காக மட்டுமின்றி அவர்களுக்கு ஊட்டம் தரும் உன்னதமான உணவுப்பொருள்.

    மேலும் இதன் மூலம் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்க முடியும். மிளகு, சீரகம், சுக்கு, திப்பிலி, கருவேப்பிலை, ஓமம், பெருங்காயம், தனியா போன்ற கடைசரக்குகளின் கலவையாக உள்ளது இந்த பத்திய குழம்பு. இது சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்றுக்கள் வராமல் காக்கக் கூடியது. பிரசவமான 15 நாட்கள் கழித்து இதனை பயன்படுத்துவது நல்லது. 'பிரசவ லேகியம்' என்ற சித்த மருந்து பலராலும் அறியப்பட்ட பெண்களுக்கான மருந்து. இது பிரசவம் ஆன பிறகு கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை தெளிவாக்கும்.

    சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரசவம் இவை இரண்டிலும் இதனை பயன்படுத்தலாம். சுகப்பிரசவம் எனில் உடனே இதனை எடுக்கத் துவங்கலாம். சிசேரியன் பிரசவம் எனில் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து இதனை எடுக்கத் துவங்கலாம். இதனால் கருப்பையில் உள்ள ரத்தகட்டிகள் விரைவில் நீங்கி பாலூட்டும் தாய்க்கு சுகம் தரும். 'சவுபாக்கிய சுண்டி லேகியம்' எனும் சித்த மருந்து பாட்டிகாலம் முதல் மிகப்பிரபலமான ஒன்று. சுக்கினை முதன்மையாக கொண்ட இந்த லேகியம் கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை பலப்படுத்தும். மேலும் கருப்பை இயல்பு நிலைக்கு திரும்பவும் பேருதவி புரியும்.

    இது மட்டுமின்றி மார்பில் பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் சுக்கினால் உடல் வலியும், அசீரணம், செரியாமை, வாய்க்குமட்டல் ஆகிய குறிகுணங்கள் நீங்கி பெண்களுக்கு நலம் பயக்கும். பிரசவத்திற்கு பின்னர் உடல் வலி, இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு சுடுநீரில் நொச்சி இலையை போட்டு காய்ச்சி குளிப்பதற்கு பயன்படுத்த நல்ல பலன் தரும். இது உடல் வலியை குறைக்கும் எளிய மருத்துவ வழிமுறை. நொச்சி இலை வீக்கத்தை குறைக்கும் தன்மையும், வலியை நீக்கும் தன்மையும் உடையது. சித்த மருத்துவத்தில் வெளி மருத்துவம் சிறப்பு மிக்கது. அந்த வகையில் பிரசவத்திற்கு பின்னரும், இடுப்பு பகுதியை வலிமையாக்க உளுந்து தைலத்தை பயன்படுத்தலாம்.

    உடல் வலி, கை கால் வலி, தசை வலி இவற்றிக்கு 'பிண்ட தைலம்' எனும் சித்த மருந்தை வெளியே தடவி லேசான சுடுநீரில் ஒற்றடமிட வலி குறையும். தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், பிரசவத்தில் இழந்த குருதியையும், உடல் வன்மையையும் மீண்டும் பெறுவதற்கும் அதிகப்படியான கலோரி அளவுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளையும், அன்னபேதி செந்தூரம் போன்ற மாத்திரைகளையும் மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், சங்கு பற்பம் போன்ற மருந்துகளையும் எடுக்க வேண்டியது அவசியம். முருங்கைக்கீரை சூப், கறி வேப்பிலை சூப், காய்கறிகள் சூப், சத்துமாவு கஞ்சி, கருப்பு உளுந்து கஞ்சி, பிரண்டை துவையல், முளை கட்டிய தானியங்கள், மாமிச சூப் வகைகள் இவற்றை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

    பிரசவத்திற்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து ஹார்மோன் மாற்றங்களை சீராக்கும் மற்றொரு சித்த மருந்து சதாவேரி லேகியம். தண்ணீர்விட்டான்கிழங்கு மூலிகையை முதன்மையாகக் கொண்டு உருவாகும் இந்த லேகியம் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது கருப்பைக்கு வலுவை தரும். மேலும் கருப்பை ரணங்களை ஆற்றவும், அதனால் ஏற்படும் வெள்ளைப்போக்கினை குறைக்கவும் கூடியது. பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு சிறுநீர்ப்பை பலவீனம் அடைவதால் அடிக்கடி சிறுநீர் கழிதல், சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

    இது பெண்களுக்கு சிறுநீர் பாதை சார்ந்த தொற்றினையும், ஒரு வித மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அவர்களுக்கு சித்த மருத்துவம் பாதுகாப்பானதாக இருக்கும். நரம்புகளை வன்மைப்படுத்தும் உள் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, வெளி மருத்துவம் செய்தலும் நல்லது. உளுந்து தைலம் என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவி வர நல்ல பலன் தரும். அத்துடன் கருப்பு உளுந்தினை பாலுடன் சேர்த்து கஞ்சியாக்கி எடுத்துக்கொள்ள தசைகளுக்கும், நரம்புகளுக்கும் வன்மை தரும். இது பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட சிறப்பு பாரம்பரிய உணவு.

    மன அழுத்தத்தை போக்கவும், உடல் சோர்வை களையவும் நேரம் கிடைக்கும் போது தியானப் பயிற்சி செய்வது நல்லது. மேலும் பிரசவத்திற்கு பின் பழகக்கூடிய யோகாசன பயிற்சி முறைகளான சவாசனம், பத்த கோணாசனம், புஜங்காசனம், காலை உயர்த்தி பிடித்த நிலை போன்ற எளிய பயிற்சி முறைகளை செய்து வருவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். பிரசவத்திற்கு பின் வயிறு பெரிதாவதை தடுக்கும். பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் உடல் எடை பொதுவாகவே கூடும்.

    அதற்காக உணவு வகைகளை குறைத்தால் சேய்க்கு பால் சுரப்பு குறையும். ஆதலால், எளிய யோகாசனப் பயிற்சிகளை செய்து உடல் எடையை நிர்வகிக்க வேண்டும். தடாசனம், திரிகோணாசனம், கோமுகாசனம், மர்ஜரியாசனம், பத்மாசனம் ஆகிய எளிய பயிற்சிகளை செய்வது இதற்கு நற்பலன் தரும். கணவன்மார்கள் மனைவியின் மன அழுத்தத்தையும், உடல் பலவீனத்தையும் புரிந்து கொண்டு குழந்தையின் பராமரிப்பில் சரிபங்கு தருவதுடன், மனைவிக்கு பக்க பலமாக நின்று ஆதரவு தந்து தாய்மைக்கு ஒத்துழைப்பு நல்குவது அத்தகைய சூழலில் அவசியமான ஒன்று.

    இவ்வாறாக, பெண்கள் பிரசவத்திற்கு பின் சித்த மருத்துவம் கூறும் பாரம்பரிய உணவு முறைகளையும், எளிய மருந்துகளையும் கையாள்வது அவர்களுக்கு பின்னாளில் பல்வேறு உடல் நலக்கேடுகள் வரவிடாமல் தடுக்கும். அவர்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் கூட்டும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.
    • எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி புஷ்பா (வயது 33). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2-வதாக கர்ப்பம் அடைந்தார்.

    இவர் சூனாம்பேடு ஊராட்சி, இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புஷ்பா பரிசோதனைக்கு சென்றபோது நேற்று (19-ந்தேதி) அவருக்கு பிரசவ தேதி என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். இதையடுத்து நேற்று காலை புஷ்பா பிரசவத்துக்காக இல்லீடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு பிரசவ வலி வராததால் அங்கிருந்த டாக்டர்கள் வலி எடுத்தால் ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து புஷ்பாவும் அவருடன் வந்த உறவினர்களும் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். மதியம் 2.30 மணி அளவில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் மீண்டும் அழைத்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அங்கிருந்த நர்சுகள் 3 பேர் புஷ்பாவுக்கு பிரசவம் பார்க்க முயன்றனர். ஆனால் பிரசவத்தில் சிக்கல் இருந்ததால் அவர்களால் பிரசவம் பார்க்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுகுறித்து டாக்டர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரவித்தனர். ஆனால் அந்த டாக்டர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அவர் நர்சுகளிடம், தான் செல்போனில் வீடியோ காலில் தொடர்ந்து பேசுவதாகவும், கூறும்படி செய்தால் சுகப்பிரசவம் பார்த்து விடலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் புஷ்பாவுக்கு நர்சுகள் 3 பேரும் டாக்டர் வீடியோ காலில் கூறியபடி பிரசவம் பார்க்க தொடங்கினர். சிறிது நேரத்தில் குழந்தை தலைகீழாக மாறி முதலில் கால்கள் மட்டும் வெளியே வந்தது. ஆனால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் நர்சுகள் திணறினர்.

    இதற்கிடையே புஷ்பாவின் உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுபற்றி வீடியோ காலில் இருந்த டாக்டரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து பிரசவ வலியுடன் துடித்த புஷ்பாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது.

    இதனால் பதட்டம் அடைந்த நர்சுகள், பிரசவத்தில் புஷ்பாவுக்கு குழந்தை இறந்து பிறந்து விட்டது என்று உறவினர்களிடம் கூறினர். மேலும் புஷ்பாவை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு சென்றுவிட்டனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பாவின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டினர்.

    மேலும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து குழந்தையின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

    நர்சுகள் பிரசவம் பார்த்ததில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் புஷ்பாவின் உடல்நிலை மோசம் அடைந்து உள்ளது. அவருக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதனை நர்சுகள் கவனிக்காமல் டாக்டர்கள் இல்லாததால் விபரீதமாக அவர்கள் சினிமா பாணியில் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்து உள்ளனர். இதனால் பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோய் உள்ளது. இதுகுறித்து புஷ்பாவின் உறவினர்கள் சூனாம்பேடு போலீஸ நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவுக்கு பிரசவம் பார்த்த நர்சுகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    அலட்சியமாக பிரசவம் பார்த்த நர்சுகள் மற்றும் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்க்க கூறிய டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புஷ்பாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (வயது 28). இவருக்கும் சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தெப்பக்காடு அடுத்த காசிகல் பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் ( 22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாதம்மாளை அழைத்துக்கொண்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்டு, தாயையும், குழந்தையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா, கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். தொழிலாளி. இவரது மனைவி சரிதா (31). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் குன்றி கடம்பூர் பாதையில் அஞ்சனை பிரிவு அருகே வந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், தாயும்-சேயும் கடம்பூர் அரசு ஆரம்ப நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்.

    • பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
    • சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். இதனால், சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு இத்தனை நாள்கள் கழித்துதான் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்ட கால இடைவெளி எதுவும் வலியுறுத்தப்படுவதில்லை. ஆனால் பிரசவமான அடுத்த ஆறு வாரங்களுக்கு உறவு கொள்ள வேண்டாம் என பொதுவாக அறிவுறுத்தப்படும்.

    கர்ப்பத்தின் போது விரிந்திருந்த கர்ப்பப்பை சுருங்கி, சிறியதாக ஆறு வாரங்கள் ஆகும். நார்மல் டெலிவரி என்றால் வெஜைனா பகுதியில் போடப்பட்ட தையல் ஆறுவதற்கும் அந்த அவகாசம் அவசியம் என்பதால் ஆறு முதல் 8 வாரங்களுக்கு உறவைத் தவிர்க்கும்படி அறிவுறுத்துவோம்.

    தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பீரியட்ஸும் வராமலிருக்க வேண்டும்.

    எனவே தாய்ப்பால் மட்டுமே கொடுத்துக் கொண்டும், பிரசவமான ஆறு மாதங்கள் வரை பீரியட்ஸ் வராமலும் இருப்பவர்கள், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

    சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம். அது அவர்கள் மீண்டும் கருத்தரிக்கத் தயாராகிவிட்டதையே குறிக்கும். அவர்களுக்கு கருத்தடை அவசியம். ஆணுறை உபயோகிக்கலாம் அல்லது பிரசவமானபோதே காப்பர் டி பொருத்திக்கொள்ளலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவு குறையத் தொடங்கும். இதன் காரணமாக சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் அது குறித்துக் கவலைப்படத் தேவையே இல்லை. நாள்கள் போகப் போக, உங்களால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும். இழந்த ஆர்வம் மீண்டும் திரும்பும்.

    ×