search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை உயிரிழப்பு"

    • குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது.
    • குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

    பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளார்.

    புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பிற்காக மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே வேளையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. அதன்பின், குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குழந்தையின் தந்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதன் அடிப்படையில் குழந்தை உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த பச்சிளம் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • குழந்தையை பெற்றோரே கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும், ஆலப்புழாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் லிவ்விங் டுகெதர் ஜோடியாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றரை மாதம் ஆன பெண் குழந்தை இருந்திருக்கிறது.

    சம்பவத்தன்று அந்த ஜோடி கொச்சி கருகப்பள்ளியில் உள்ள லாட்ஜில் குழந்தையுடன் தங்கியிருந்திருக்கிறது. இந்நிலையில் அந்த ஜோடி, தங்களது குழந்தையை சுய நினைவு இல்லாத நிலையில், எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கிறது.

    அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. அந்த குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார், அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே, குழந்தை மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

    ஆகவே அந்த குழந்தையை அவர்களது பெற்றோரே கொன்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். அது பற்றி குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொன்றது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றதற்கான காரணம் குறித்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கும்மாளத்தை அடுத்த முத்துநாயக்கன்போடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்குமார்.

    இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மல்லிகா மீண்டும் கர்ப்பமானார். இவர் கடந்த சில நாட்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தைக்கு நேற்று இரவு உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. உடனே குழந்தையை ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை பெற்றோர்கள் அடக்கம் செய்து விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நன்றாக பிறந்த குழந்தை திடீரென்று இறந்ததால், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்பாடி கிராமத்தில் இதேபோன்று ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்ததாக கூறி உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் முத்துநாயக்கன்போடூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் விரைந்து சென்று குழந்தை புதைத்த பகுதியை தோண்டி பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் இறந்த பெண் குழந்தையின் தந்தை எல்லப்பாவிடமும், தாய் சத்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பெரிய சப்படி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பா (வயது35). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சத்யா (23) என்ற மனைவியும், சரண் என்ற மகனும் மான்சியா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மீண்டும் 3-வது முறையாக கர்ப்பமான சத்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு கடந்த 10 நாள் முன்பு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    இதைத்தொடர்ந்து தனது சொந்த ஊர் பெரியப்படியில் உள்ள வீட்டிற்கு தாயும், சேயும் வந்ததாகவும், பின்பு இருவரும் நலமாக உள்ளதாகவும் காமன்தொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு குழந்தை திடீரென்று இறந்ததாகவும், குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காமன்தொட்டி ஆரம்ப சுகாதார நிலை மருத்துவர் அயோத்தி என்பவருக்கு ரகசிய தகவல் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று அதிகாலை சூளகிரி தாசில்தார் சக்திவேல், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, வட்டார மருத்துவர் வெண்ணிலா வருவாய் அலுவலர் ஜெயக்குமார், கிராம அலுவலர் மற்றும் மற்றும் அதிகாரிகள் போலீசார் விரைந்து சென்று குழந்தை புதைத்த பகுதியை தோண்டி பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் இறந்த பெண் குழந்தையின் தந்தை எல்லப்பாவிடமும், தாய் சத்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை இயற்கையாக இறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதால் வேறு யாராவது சிசு கொலை செய்துள்ளனரா? என்பது தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயி. இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார்.

    நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார். நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்3 மாத ஆண் குழந்தை திடீரென்று இறந்தது அந்த கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23), இவரது மனைவி செல்வி(21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    தலை பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்தார். அங்கு செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது.

    திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக குழந்தையை அவரது உறவினர்கள் மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.

    அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கணவர் இறந்த நிலையில் கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் பள்ளத்தில் போடப்பட்டு இருந்தது.

    குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையின் முகத்தில் சிறிய காயங்கள் இருந்தன.

    இதற்கிடையே காலை 10 மணியளவில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து போனது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் ஒருவர் குழந்தை பிறந்ததும் அதனை வீசி சென்று இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணவர் இறந்த நிலையில் கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார். இதில் குழிக்குள் விழுந்த குழந்தை காயம் அடைந்து இறந்து உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மாடசாமி இறந்து விட்டார்.
    • குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் மது என்ற பெண் குழந்தை இருந்தது.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மாடசாமி இறந்து விட்டார். இதையடுத்து இசக்கியம்மாள் கரிவலம் வந்தநல்லூர் இந்திரா காலனியில் உள்ள அவரது சகோதரி மாலதி வீட்டின் அருகே வாடகை வீட்டில் குழந்தை மது மற்றும் தனது தாயார் ராமாத்தாளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இசக்கியம்மாள், மதுவை அருகிலுள்ள வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றார். சிறிது நேரத்தில் மது தனது தாயை பார்க்க வேண்டும் என கூறி அழுததாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயங்கிய அந்த குழந்தையை உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது35). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, ஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்த நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி செயலாளருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நாகலட்சுமி இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

    மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் தோட்ட வேலைக்கு சென்று விட்டார். 2-வது மகள் விஜயதர்ஷினி (வயது9), 4-வது மகள் சண்முகப்பிரியா(4) ஆகிய 2 பேர் வீட்டில் இருந்தனர்.

    அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த விஷப்பாம்பு 2 பேரையும் கடித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயதர்ஷினி மற்றும் சண்முகப்பிரியாவை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சிறுமி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார். மற்றொரு சிறுமி விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் தற்கொலை செய்து கொண்ட சில மாதங்களில் மகள் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த மலை பகுதிகளுக்கு இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை.

    மலை உச்சியில் வசிக்கும் இந்த மக்கள் தங்களது தேவைகளை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    அதேபோல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு, தலை மீது சுமந்தபடியே மீண்டும் மலை கிராமத்துக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாதபோது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோள் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    இந்த நிலையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது அல்லேரி அடுத்த அத்திமரத்து கொல்லை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடல் கொண்டுவரப்பட்டது அங்கிருந்து பெற்றோர்களை இறக்கி விட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

    அல்லேரி, அத்திமரத்து கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்து கொல்லை மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி மற்றும் ஆரம்ப துணை சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.
    • அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    பாம்பு கடித்து பலியான குழந்தை தனுஷ்காவின் தாய் கூறியதாவது:-

    என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

    அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    அல்லேரி மலை பஞ்சாயத்து மக்கள் நீண்ட காலமாக அடிப்படை சாலை மற்றும் சுகாதார வசதிகளை கோரி வந்தனர். "சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வசதிகளுக்காக நாங்கள் பலமுறை கெஞ்சினோம், ஆனால் எங்கள் பலன்கள் வீணாகிவிட்டன." என்றார்.

    இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-

    2021-ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்களுக்காக சாலை அமைத்து வருகிறோம். அல்லேரி கிராமத்திற்கும் சாலைப் பணிகளைத் திட்டமிட்டுள்ளோம், ஆனால் பணிகளை தொடர வனத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    விரைவில் கிராம மக்களுக்கு அடிப்படை சுகாதார துணை மையத்தை ஏற்பாடு செய்வோம் என்றார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற குழந்தை உள்ளது. 8 மாதத்தில் மரியா ஆரோனிக்கா என்ற குழந்தை இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மரியா ஆரோனிக்காவை அவளது பெற்றோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மரியா ஆரோனிக்காவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மரியா ஆரோனிக்காவுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை மரியா ஆரோனிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதைகேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை மரியா ஆரோனிக்காவை பெற்றோர் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்ததில் டைப்-1 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. குழந்தைக்கு சர்க்கரை அளவானது 520 இருந்துள்ளது. இதுமாதிரியான நோய் 4 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி இந்த நோய் வரும் பட்சத்தில் 6 மாதத்தில் இருந்து 1 ஆண்டுக்குள் தான் தெரியவரும். 6 மாதத்துக்கு பிறகு தாய்பாலை தவிர வேறு உணவு குழந்தைக்கு உட்கொள்ள கொடுக்கும்போது இதுமாதிரியான சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    சம்பவத்தன்று மரியா ஆரோனிக்காவுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால், மூளை செயலிழந்து விட்டது. நோயின் தன்மை தீவிரமடைந்ததால், சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. எனவே ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டால் பெற்றோர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    ×