என் மலர்
நீங்கள் தேடியது "baby death"
- சகோதரி தோட்டத்தில் உடல் கருகி கிடந்தார்
- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
சூலூர்,
சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த நல்லூர் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லிமுத்து (வயது 53). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 9 மாதங்களாக இவர் தனது மனைவி மற்றும் மகள்களை பிரிந்து தனியாக வசித்தார்.
நேற்று காலை செல்லிமுத்து தனது சகோதரி பரமேஸ்வரியின் தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரயாணன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்ெகாண்டனர். போலீஸ் மோப்பநாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.
செல்லிமுத்துவின் மரணம் மர்மமாகவே உள்ளது. இதனால் மர்ம மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சுல்தான் பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்லிமுத்துவின் குடும்பத்தின் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் தான் செல்லிமுத்துவின் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு செல்லிமுத்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.
இதுதவிர பணம்- கொடுக்கல் தொழில் செய்து செல்லிமுத்துவுக்கு தொழில் போட்டியும் இருந்துள்ளது. இந்த பிரச்சினைகளால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது போதையில் தனக்கு தானே தீவைத்துக் கொண்டாரா என்பது பற்றி தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். செல்லிமுத்துவின் உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மேலும் செல்லி முத்துவின் கருகிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவிலேயே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும். இந்த சம்பவம் சுல்தான் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
- இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 42). இவர் நகைக்கு பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு கோபிகா (4) என்ற மகளும், கேசவ் (3) என்ற மகனும் உள்ளனர். இதில் குழந்தை கோபிகா யூ.கே.ஜி. படித்து வந்தார்.
இந்நிலையில் கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் 4-வது மாடியில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் கோபிகாவை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு ராஜா சென்றார்.
அப்போது வீட்டு பால்கனியில் கோபிகா தனியாக விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து கோபிகா தவறி கீழே விழுந்தார். இதில் ரத்த காயங்களுடன் குழந்தை மயங்கி கிடந்தது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கோபிகா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.
இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கோணாப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 39). இவரது மனைவி நீலா (33). இந்த தம்பதிக்கு பவதாரணி (5). என்ற மகள் இருந்தார்.
உதயகுமார் பெங்களூருவில் சில ஆண்டாக கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த உதயகுமார் மீண்டும் வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இதனால் தம்பதியடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனிடையே உதயகுமார் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறேன் அதற்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது என நீலாவிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நீலா தனது பெயரில் இருந்த நிலத்தை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் ரூ.5 லட்சம் பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட உதயகுமார் வெளிநாடு செல்வதாக கூறி பெங்களூருவுக்கு சென்று தங்கி விட்டார்.
பெங்களூருவில் இருந்து உதயகுமார் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும் நல்ல சம்பவம் கிடைக்கிறது என்று கூறி அவ்வபோது நீலாவிடம் போன் செய்து பேசியுள்ளார். இனியும் கஷ்டபட தேவையில்லை என்று நிலா எண்ணி வந்தார்.
இந்நிலையில் கணவர் வெளிநாடு செல்லவில்லை பெங்களூருவில் தான் உள்ளார் என்பது நீலாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலா தனது கணவரிடம் இது குறித்து கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நீலா நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவதாரணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நீலாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு நீலா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை கனகசெட்டி குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இளநீர் வியாபாரியான இவர் கருவடிக்குப்பம் சந்திப்பில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 22).
இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு ரக்சனா, ரஞ்சனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வந்தனர்.
நேற்று சத்யா கணவருக்கு உதவியாக கருவடிக்குப்பத்தில் இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது குழந்தை ரக்சனா அழுததால் அந்த குழந்தைக்கு சத்யா தாய்ப்பால் புகட்டினார்.
அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர்கள் போராடி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.