என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார்த்தி சிதம்பரம்"
- வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
- கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.
ராய்பூர்:
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;
"வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
- மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்.
- பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி
பாராளுமன்றத்தில் நேற்று அதானி குழும விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.பி.க்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச்சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அது வருமாறு:-
கனிமொழி (தி.மு.க. எம்.பி.):- அதானி குழுமத்தின் நிலையால் பொதுத்துறைகளில் சாமானிய மக்கள் முதலீடு செய்த பணம் என்ன ஆனது என நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பா.ஜனதா இதை காதில் வாங்கவில்லை. அவையை ஒத்தி வைத்துவிட்டனர். நாங்கள் கூட்டுக்குழு விசாரணை கேட்டு இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதை வலியுறுத்துகிறார். நிச்சயம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
கார்த்தி ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.):- வெளிப்படையான, தரமான சந்தை பரிமாற்றம் உள்ள ஒரு நாட்டில் வெளிநாட்டு அமைப்பு சில கருத்துகளை சொன்னால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கவனிக்கும் மந்திரியோ, அதிகாரியோ மக்களை சந்தித்து நாட்டின் நிலை என்ன? என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். சாதாரண மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளன. இதையெல்லாம் பற்றி அரசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டனர். இதுபற்றி முதலில் அரசு பதில் அளிக்கட்டும். அது திருப்தியா? இல்லையா? என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.
வெளிநாட்டு அமைப்பு சொல்வதாலேயே அது உண்மை என ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?. இதில் பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அது பத்திரமாக இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.
ஜோதிமணி (காங்கிரஸ் எம்.பி.):- அதானி குழுமம் வீழ்ச்சியால் அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யில் ஒரே நாளில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடி நாசமாகியுள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை இந்த பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கடந்த 8 ஆண்டுகளாக இது அதானி அரசு என்று சொல்வது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அ.தி.மு.க. வழக்கில் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை.
- மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகின்றனர்.
பழனி:
பழனிக்கு வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிவாரம் பாதவிநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். அதன் பிறகு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. வழக்கில் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தலைமை போட்டிக்கு வரும் போது உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். நீதிமன்றம் அதனை தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல.
கள்ளக்குறிச்சி மாணவி மர்மச்சாவு தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும்.
வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே சிறையில் அடைத்தது முறையல்ல. இந்தியாவில் 75 சதவீதம் பேர் இதே போல்தான் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக வெளிப்படையான முதல்-அமைச்சராக செயல்படுகிறார். இதனால் மக்களிடம் அவருக்கு நாள் தோறும் மதிப்பு அதிகரித்து வருகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு சரியான முறையில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தற்போது சுங்க கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பழனிக்கு வந்த கார்த்தி சிதம்பரத்தை கட்சி நிர்வாகிகள் வக்கீல் உதயசங்கர், சர்தார்கான், ஹக்கீம்ராஜா, கவுன்சிலர் பத்மினி, முருகானந்தம் உள்பட பலர் வரவேற்றனர்.
- மத்தியில் பாரதிய ஜனதா அரசு சாதாரண மக்கள் மீது வரி சுமையை அதிகரித்துக் கொண்டே செல்வது தான் அவர்களுடைய வழக்கம்.
- தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.
கோவை:
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி தமிழகத்தில் பாதயாத்திரை தொடங்குகிறார். பொதுமக்களை நாடி செல்லும் எந்தவொரு முயற்சியும் கட்சிக்கு பலம் சேர்க்கும். முதலில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவர்களை ஒரு அணியாக திரட்டி ஒரு பாதையில் செல்லும்போது அதுவே கட்சிக்கு வலுசேர்க்கும்.
அதேவேளையில் பொதுமக்களை சந்திப்பதற்கும் ஒரு வாய்ப்பு. ராகுல்காந்தியின் பாதயாத்திரை கட்சிக்கு பலம் சேர்க்கும்.
தமிழகத்தில் ஆளும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் அரசாங்கத்திலே எங்களுக்கு இடம் கிடையாது. ஆளும் கட்சியோடு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். ஏனென்றால் நாங்கள் அவர்களோடு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தில் இடம் பெறாமலும், எதிர்க்கட்சியாகவும் எங்களால் செயல்பட முடியாது. இதுபோன்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது யார் தலைவராக இருந்தாலும் எங்களுக்கு இந்த தர்ம சங்கடமான நிலை இருக்கத்தான் செய்யும்.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு சாதாரண மக்கள் மீது வரி சுமையை அதிகரித்துக் கொண்டே செல்வது தான் அவர்களுடைய வழக்கம். அவர்களின் பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி, குழப்பமான ஜி.எஸ்.டியாக இருந்தாலும் சரி, பெட்ரோல் மீது வரி சுமத்துவதாக இருந்தாலும் சரி, தற்போது சுங்கச்சாவடியில் கட்டணத்தை உயர்த்துவதாக இருந்தாலும் சரி பொதுமக்கள் மீது வரியை அதிகரித்துக் கொண்டே தான் செல்வார்கள். இந்த பிரதமர் மற்றும் நிதி மந்திரி இருக்கும் வரை சாதாரண மக்களுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது.
தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக செயல்படுகிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
- வாக்காளர் பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.
புதுடெல்லி :
கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை தொடர்ந்து, சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழுவை சேர்ந்த சசிதரூர், இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறார். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், இக்குழுவில் உள்ள மற்றொரு எம்.பி.யான மணீஷ் திவாரி, இதே கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியல் வெளியிடப்படாது என்று காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார். யாராவது வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்பினால், மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும், யாராவது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்களுக்கு பட்டியல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக வெளியிடாமல் எப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்? ஒருவேளை யாராவது போட்டியிட விரும்பினால், வேட்புமனுவை 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். கடைசியில், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி, வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, வாக்களிப்பவர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். பட்டியலை பார்ப்பதற்காக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு ஏன் செல்ல வேண்டும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரது கருத்துக்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
யார் யார் வாக்களிப்பார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு தேர்தலுக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.
சீர்திருத்தவாதிகளை கிளர்ச்சி செய்பவர்களாக பார்க்கக்கூடாது. கட்சியை சீர்திருத்த விரும்பும் ஒவ்வொருவரும் ராஜினாமா செய்ய வேண்டுமா? அப்படியானால் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள்தான் கட்சியில் இருக்க வேண்டுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், ஆட்சேபனை தெரிவிப்பவர்களை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நான் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவரின் வேட்புமனுவை ஏதேனும் 10 மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் முன்மொழிந்தால் போதும்.
தேர்தல் நடைமுறை குறித்து என் சகாக்கள் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? வெளிப்படையான முறையை கொண்டுள்ள நாம் பெருமைப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது.
- கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
சென்னை:
பஞ்சாப் மாநிலம், பனவாலா என்ற பகுதியில் வேதாந்தா குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். நிறுவனம் அமைத்து வந்த 1980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் அனல்மின் நிலையத்தில், தொழில்நுட்ப பணிகளை சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது.
இப்பணிக்கு மேலும் தொழில் நுட்பப் பணியாளர்களை சீனாவில் இருந்து அழைத்து வருவதற்காக டி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் துணைத் தலைவர் விகாஸ் மஹாரியா, கார்த்தி சிதம்பரத்தின் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாஸ்கர ராமனை அணுகினார்.
இந்த முறைகேடு நிகழ்ந்த 2011-ம் ஆண்டு கால கட்டத்தில் கார்த்தியின் தந்தை சிதம்பரம் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தார்.
விகாஸ் அந்த திட்டத்தில் பணி செய்வதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களை, அரசின் விதிமுறைகளை மீறி மறுசுழற்சி முறை அடிப்படையில் மீண்டும் வழங்கும்படி பாஸ்கர ராமனிடம் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்காக கார்த்தி சிதம்பரம் தரப்பு ரூ.50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது கூட்டுச் சதி செய்தல், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்குத் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சி.பி.ஐ. வழங்கிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி அமலாக்கத்துறையினர் ஒரு வழக்கை கடந்த மே 25-ந்தேதி பதிவு செய்தனர். இதில் சி.பி.ஐ. வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அனைவரும் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை திரட்டும் வகையில் டெல்லி அமலாக்கத்துறையினர் சென்னையில் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் தொழில் அதிபர் ரமேஷ் துஹார் வீட்டிலும் நடைபெற்றது.
இதே போல எழும்பூர் மார்ஷல் சாலையில் ரமேஷ் துஹார் நடத்தும் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களிலும், தியாகராய நகரில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திலும், ஒரு வர்த்தக சங்கத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறையினர் கூற மறுத்து விட்டனர்.
சில ஆவணங்களில் சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
- கார்த்தி சிதம்பரம் வீட்டில் மே மாதம் 17- ம் தேதி ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை:
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த மே மாதம் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
- டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
- கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
263 சீனர்களுக்கு சட்ட விரோத விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இதற்கிடையே அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தில், 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.
ஆனால் ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தர முடியும். அதற்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் ஒப்புதல் தர முடியும்.
ஆனால் சட்டத்தை மீறி, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது.
2006-ம் ஆண்டு இந்த ஒப்புதல் தரப்பட்டபோது, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.
இந்த நிலையில் சட்டத்தை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்பது பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு இடையே ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இது தொடர்பாக அவரை கடந்த ஜூன் மாதம் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது என்ன நடந்தது என்பது வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இது பற்றி ப.சிதம்பரம் அப்போது டுவிட்டரில் பதிவிடுகையில், “பாதிக்கு மேற்பட்ட நேரம் கேள்விகளுக்கான பதில்களை பிழையின்றி (கணினியில்) ‘டைப்’ செய்வதிலும், படித்துக்காட்டி அதில் கையெழுத்து பெறுவதிலும் கழிந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று மீண்டும் வரவழைத்தது. அவர் டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே இந்த விவகாரத்தில், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப.சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிய வந்து உள்ளது. #AircelMaxisCase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்