search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓபிஎஸ்"

    • ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
    • இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.

    நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
    • தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா
    • அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.

    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் போது தன்னிடம் இருந்த தங்க நகைகளை அப்போதைய பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் அளித்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இது ஜெயலலிதாவுன் தேசப் பற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஜெயலலிதாவின் தெய்வீகப் பற்று என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

    இசை, நடிப்பு, நாட்டியம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சிப் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளை கற்றறிந்தவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பல்திறன் படைத்தவர், பன்மொழிப் புலவர் ஜெயலலிதா. ஜெயலலிதா எவ்வித அரசியல் பின்பலமின்றி, தன்னுடைய தனித் திறமையால், மதி நுட்பத்தால், சாணக்யத்தனத்தால், ராஜதந்திரத்தால், சோதனைகளை சாதனைகளாக்கி, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

    எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் தலைமையேற்று நடத்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. நாடாளுமன்ற மக்களவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமையும் ஜெயலலிதாவுக்கு உண்டு.

    சமூக நீதியைக் காத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்' என்பதற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி, அந்த மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்கள், குறிப்பாக சுனாமி ஏற்பட்டபோது, உலக நாடுகள் வியக்கும் வகையில், அவற்றை திறம்பட கையாண்ட பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

    இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்மராவ், தேவகவுடா, அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, டாக்டர் மன்மோகன் சிங், சந்திரசேகர், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதி பாசு, ஏ.பி.பரதன், என்.சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், நரேந்திர மோடி என அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். ஜெயலலிதாவும் அனைவரின்மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

    2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காதிருந்தால், ஜெயலலிதா இந்தியத் திருநாட்டின் பிரதமராகவே பொறுப்பேற்றிருப்பார். ஜெயலலிதாவிடம் இருந்த ஆளுமைத் திறன், பன்மொழித் திறன், முடிவெடுக்கும் திறன், கட்சி வித்தியாசமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா மீது வைத்திருந்த மதிப்பு ஆகியவைதான் இதற்கான காரணங்கள்.

    இப்படிப்பட்ட உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

    ஜெயலலிதாவின் 1991-1996 ஆண்டு ஆட்சி முடிவடைந்தவுடன், ஜெயலலிதாவை அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற தீயநோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டுச் சென்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்.

    உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    • மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரை மேகதாது அணைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதே கட்சிகளின் நிலைப்பாடு.

    கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில், டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்துக்களுக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,

    'கர்நாடக துணை முதலமைச்சருக்கு பதில் அளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.'

    'தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக உள்ள திரு. டி.கே. சிவகுமார் அவர்கள் கர்நாடக சட்டமன்றப் பேரவைக்கு எட்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்வதில் இருந்து யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் வேண்டுமென்றே மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.'

    'கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் ஏதோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் மான்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு.'

    'தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையலில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.

    • கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
    • காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

    "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

    "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

    "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."

    "காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."

    "ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."

    "கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    • பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கு.
    • புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டார்.

    கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்து இருந்ததாக கூறி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி புகார் அளித்து இருந்தார்.

    எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். இதன் காரணமாக வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொளுளாகி இருக்கிறது.

    • திருச்சி மாநாட்டின்போதே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்கள் தெரிவித்தனர்.
    • அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

    சென்னை:

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறினர்.

    திருச்சி மாநாட்டின்போதே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்கள் தெரிவித்ததாகவும், உரிய நேரம் வந்ததால் இப்போது சந்தித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

    • அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
    • பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனுடனான சந்திப்பில் பங்கேற்றார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதில் இருந்தே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. அடுத்தடுத்த நகர்வுகளில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர், பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதனால் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன, அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் கைவசம் சென்றுள்ளது. சட்டப்போராட்டத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திவந்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.
    • ஓபிஎஸ் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்களின் அபார ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி சிஎஸ்கே தனது 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்த போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்த நிலையில், இந்த போட்டியை முன்னாள் முதmமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டு ரசித்தார்.

    அவர் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார். இந்த புகைப்படத்தை டுவிட்டரில் டேக் செய்தருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

    அந்த பதிவில், தோனிக்கு பதிலாக தன்னை கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டையிடும் ஓபிஎஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது.
    • ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்து விட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான். 2 முறை முதல்-அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார். 3வது முறை சின்னம்மா தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள். திரும்ப கேட்டார்கள், கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுக்கு யார் பதவியை தந்தது? எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி நீங்கள்? வரலாறு உங்களை மன்னிக்குமா?

    உங்களில் ஒருவராக தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது. உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கட்சியின் நிதியை ஒரு பைசாகூட நீங்கள் செலவு செய்யக்கூடாது. அதை எப்படி நீங்கள் கையாள்கிறீர்கள்? என்பது தொடர்பாக உறுதியாக விசாரணை நடத்தப்பட்டு, தவறாக பயன்படுத்தியவர்களுக்கு தண்டனை உறுதியாக வழங்கப்படும்.

    அதிமுக தொண்டர்களை நம்பிதான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம். ஜனநாயக முறையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும். தொண்டர்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது.
    • மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

    திருச்சி:

    அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு கட்சிக்கு உரிமை கொண்டாடினர். இந்த அதிகாரப்போட்டியில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையகத்தை கைப்பற்றினார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

    அத்துடன் கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால் தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. அத்துடன், தொண்டர்களின் ஆதரவு இருப்பதை காட்டும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர்.

    அதன்படி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது.

    அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஐயப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் மாநாட்டு நிகழ்வுகளை எளிதில் பார்வையிடுவதற்காக ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

    • ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திசென்ற நிலையில் ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார்.
    • தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார். சென்னையில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஒற்றைத் தலைமை குறித்த தனது வீட்டில் 3 நாட்களாக ஓபிஎஸ் ஆலேசனை மேற்கொண்டு வந்தார்.

    சற்று நேரத்திற்கு முன் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த நிலையில், ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வந்தார்.

    ஆலோசனைக்கு முன்பாக தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திசென்ற நிலையில் ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வைத்திலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், தர்மர், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    ×