search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் பாலஸ்தீன போர்"

    • பேரணிகளில் சில இடங்களில் காவல் கண்காணிப்பை மீறி வன்முறை நடந்தது
    • காசா மக்களுக்கு உதவி கேட்பதாக தெரியவில்லை என சுயெல்லா குற்றம் சாட்டினார்

    இங்கிலாந்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. ஆனால், இங்கிலாந்து மக்களில் பலர் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பை ஆதரித்து இங்கிலாந்தில் பேரணிகள் நடந்தன. சில இடங்களில் வன்முறையும் நடந்தன. தொடர்ந்து, போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஹமாஸ் ஆதரவினர் காவல்துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    யூதர்கள் நடத்தும் கவன ஈர்ப்பு பேரணிகள் காவல்துறைக்கு சவாலாக இல்லை. சமூக ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வது சிக்கலை உண்டாக்குகிறது. தொடக்கம் முதலே இந்த போராட்டங்கள் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகளால் மட்டும் அல்ல; அவர்கள் கையில் கொண்டு செல்லும் பதாகைகள் மற்றும் ஆங்காங்கு அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகளிலும், அவர்கள் எழுப்பும் கோஷங்களிலும், தகாத வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் வாசகங்கள் இடம் பெறுகின்றன. இதனை கண்டு கொள்ளாமல் விட முடியாது. இது காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கேட்கும் கோஷங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சிலர், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எழுப்பும் கோஷங்கள். காவல்துறை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கருத்து நிலவ தொடங்கியுள்ளது. தேச பற்றுடன் போராடுபவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் காவல்துறையினர் சட்டத்தை மீறுபவர்களிடம் ஏன் அந்த கண்டிப்பு காட்டவில்லை? இது ஒரு இரட்டை நிலைப்பாடு. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

    இவ்வாறு சுயெல்லா தெரிவித்தார்.

    இவரது கருத்து இடதுசாரிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டி சுயெல்லாவை, பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் இங்கிலாந்தில் பலமாக எழுந்துள்ளன.

    • செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து புலனாய்வு செய்யும் அமைப்பு, ஹானஸ்ட்ரிபோர்டிங்
    • பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் இது என இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தி 1400க்கும் மேல் இஸ்ரேலியர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இத்தாக்குதலின் போது நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் வலைதளங்களில் வெளிவந்தன.

    இந்நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேல் நாட்டின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) அமைப்பு, காசா பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தது.

    ராய்டர்ஸ், தி அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஹசன் எஸ்லையா, யூசுப் மசோட், அலி மஹ்முத், ஹதேம் அலி, மொஹம்மத் ஃபய்க் அபு மொஸ்டஃபா மற்றும் யாசர் குடிஹ் எனும் காசாவை சேர்ந்த 6 பத்திரிக்கையாளர்களையும் ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ராணுவ டாங்க் ஒன்றை ஹமாஸ் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து அவர்கள் படம் பிடித்துள்ளதை இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்திருப்பதாவது:

    அக்டோபர் 7 அன்று காசா முனை பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் சில புகைப்பட பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த பத்திரிக்கையாளர்களுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நின்றிருக்கிறார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாக பார்க்கிறது.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

    இதுவரை ராய்டர்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
    • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    "போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    "உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

    வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

    போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது
    • உயிரிழந்தோர் எண்ணிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், சுமார் 1400 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று, பல பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தி, பச்சிளம் குழந்தைகளையும் மிருகத்தனமாக கொன்று, 242 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்த தாக்குதலில் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்தது. தொடர்ந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன காசா முனை பகுதி மீது வான்வழி மற்றும் தரைவழி தொடர் தாக்குதல்களை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பகுதிகளில் எல்லாம் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.

    இன்றுடன் போர் துவங்கி ஒரு மாதமாகி விட்டது.

    நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் தாக்குதலில் 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    ஆனால், இந்த எண்ணிக்கையை மறுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.

    போருக்கு பின்னர் காசாவின் நிலை குறித்து அவர் கூறியதாவது:

    எந்த உயிரிழப்பும் துரதிர்ஷ்டவசமானதுதான். பாலஸ்தீனம் கூறும் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேரில் பலர் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள். மேலும் காசா பொதுமக்களை மனித கவசங்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் அதிகமாகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும். போர் நிறைவடைந்ததும் காசா முனை பகுதியின் பாதுகாப்பு பொறுப்பை முழுமையாக இஸ்ரேல் எடுத்து கொள்ளும். எத்தனை நாள் வரை எனும் கால அளவை தற்போது கூற முடியாது. இந்த பொறுப்பை நாங்கள் தவிர்த்தால் மீண்டும் ஹமாஸ் பயங்கரவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலைதூக்கி விடும். அதை விட மாட்டோம்.

    தற்போது போர் நடைபெற்று வரும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், பணய கைதிகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறவும் போருக்கு இடையில், ஒரு மணி நேர அல்லது அரை மணி நேர சிறு சிறு இடைநிறுத்தங்களை கொடுக்கலாம். அது கூட சூழ்நிலையை நாங்கள் முற்றிலும் ஆய்வு செய்த பிறகுதான் வழங்கப்படும்.

    ஆனால், போர் நிறுத்தம் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் போன்ற பேச்சுக்களுக்கே இடமில்லை.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • போர் நிறுத்தத்தை பல உலக நாடுகள் கோரி வருகின்றன
    • உலகம் அக்டோபர் 7 தாக்குதலை மறக்க விட மாட்டோம் என்றார் ஹகரி

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதி மீது கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

    பல உலக நாடுகளின் தலைவர்கள் போர் நிறுத்த கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், இதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    "போர் நிறுத்தமா? அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அக்டோபர் 7 அன்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை போர் நிறுத்தம் எனும் பேச்சிற்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெறும் வரை போரை தொடர்ந்து நடத்தியாக வேண்டும்; வேறு வழியில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்திருந்தார்.

    இப்பின்னணியில் இஸ்ரேலிய ராணுவ படைகளின் (IDF) செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி, தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். அதனை இரண்டாக பிரித்து விட்டோம். இப்போது காசா, வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகி விட்டது. வட காசா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். பயங்கரவாத அமைப்பினருக்கு சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது. அக்டோபர் 7 அன்று எங்களுக்கு நடந்ததை உலகம் மறக்க விட மாட்டோம்.

    இவ்வாறு ஹகரி தெரிவித்தார்.

    • இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
    • ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே ஏற்க மறுத்தது என்றார் இலாஹி

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரை இஸ்ரேலிலிருந்து பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்றனர்.

    இந்த தாக்குதலில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது போர் நடத்தி வருகிறது. இப்போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி (Iraj Elahi) இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அவர் இஸ்ரேலை குறித்து தெரிவித்ததாவது:

    இஸ்ரேல் அரசுக்கு பணய கைதிகளின் உயிரை குறித்து சிறிதும் அக்கறை இல்லை. ஹமாஸ் சிறை பிடித்திருக்கும் இஸ்ரேலியர்களை, இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீனர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்ள ஐ.நா. பொதுச்சபை (UNGA) தீர்மானமாக கொண்டு வந்தும் அதை ஏற்று கொள்ள இஸ்ரேல் மறுத்து விட்டது. அவர்கள் ஹமாஸை அழிக்கவே போர் தொடுத்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை. அவர்களின் நோக்கம், காசாவை ஆக்ரமித்து தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி தங்கள் நாட்டின் குடியமர்வை அங்கு அதிகரிப்பதுதான். இப்போரில் இஸ்ரேல் தோல்வி அடைய போவது உறுதி. ஆனாலும் தோல்வியை ஒத்து கொள்ள மறுத்து ஆபத்தான முயற்சியை தொடர்கின்றனர். பாலஸ்தீனர்களின் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ முடியாத நிலைக்கு பாலஸ்தீனர்களை தள்ளி, அல் அக்ஸா மஸ்ஜித்தையும் இடித்து விட்டனர்.

    இவ்வாறு இலாஹி கூறினார்.

    • ஷனி ஒரு பிக்-அப் டிரக்கில் அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்பட்டார்
    • ஷனியின் தாய் தன் மகளை மீட்குமாறு இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிடம் கோரிக்கை வைத்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டுக் கொன்று, 230க்கும் மேற்பட்ட பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும், பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர்.

    ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களுடன் பல வெளிநாட்டினரும் அடங்குவர்.

    இந்த தாக்குதலின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

    இந்த தாக்குதலில் கடுங்கோபமடைந்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது. இந்த போர் 23-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த விவரமும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கவில்லை. தன் மகளை எப்படியாவது மீட்டுத்தருமாறு ஷனியின் தாய் ரிகார்டா லவுக் (Ricardo Louk) ஜெர்மனியிடமும், இஸ்ரேலிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.


    இந்த துயரச்செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை எதிர்க்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஷனி கொல்லப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

    • லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் எர்டோகன் உரையாற்றினார்
    • இரு நாட்டு உறவு மறுபரிசீலனை செய்யப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்ற ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து காசா பகுதி முழுவதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரக்கும் பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், துருக்கி நாட்டு அதிபர் டாயிப் எர்டோகன் (Tayyip Erdogan), அந்நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுமார் 15 லட்சம் பேர் நடத்திய ஒரு பேரணியில் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காசாவில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும், படுகொலைகளுக்கும் மேற்கத்திய நாடுகளே காரணம். இஸ்ரேலும், கிறித்துவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்றியுள்ளது. மேற்கத்திய நாடுகளை ஒன்று கேட்க விரும்புகிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்தது போல் மீண்டும் இரு மதத்தினருக்கிடையே (பிறை-சிலுவை போர்) சச்சரவு நிகழ வேண்டுமா? மத்திய தரை கடல் பகுதியில், இஸ்ரேல் நாட்டை மேற்கத்திய நாடுகள் தங்கள் அதிகார ஆட்டத்திற்கு ஒரு பகடைக்காயாக மாற்றி விட்டன. இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடாக மாறி விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனையடுத்து, துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், இஸ்ரேல்-துருக்கிக்கான இரு நாட்டு உறவு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

    சுமார் பத்தாண்டு காலம் சீரற்று இருந்த இஸ்ரேல்-துருக்கி பொருளாதார மற்றும் அரசியல் உறவு, சமீபத்தில்தான் சுமூக நிலைமையை அடைந்தது. இந்நிலையில், இந்த சம்பவம், இரு நாட்டு உறவுக்கு ஒரு பின்னடைவாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • நாக்பூரில் 1925ல் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 6 லட்சத்திற்கும் மேல் தன்னார்வல தொண்டர்கள் சேவை செய்கின்றனர்

    இந்திய தேசியவாதத்திலும் கலாச்சாரத்திலும் நம்பிக்கையுடைய தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொது சேவை சங்கம், ஆர்.எஸ்.எஸ். (RSS) எனப்படும் 'ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் ஸங்'. இந்த அமைப்பின் கிளைகள் உலகின் முக்கிய நகரங்களில் உள்ளது.

    சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களை தன்னார்வலர்களாக இதில் இணைத்து கொண்டுள்ளனர். இயற்கை பேரழிவு, இயற்கை சீற்றம், போர், பெருந்தொற்று உட்பட பல அவசரகாலங்கள் மற்றும் நெருக்கடி காலங்களில் இதன் தன்னார்வலர்கள் நாடு முழுவதும் சென்று தேச சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    நாக்பூரில் 1925-ஆம் வருடம் விஜயதசமி பண்டிகையன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. எனவே வருடாவருடம் அதன் கூட்டம் விஜயதசமியன்று நடைபெற்று வருகிறது.

    இவ்வருட விஜயதசமி சந்திப்பு கூட்டம், மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இதன் தலைவர் மோகன் பகவத் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    மதவெறியால் ஏற்படும் துன்பங்களை உலகம் தற்போது கண்டு வருகிறது. காசாவில் நடைபெறும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர்களை முடிவுக்கு கொண்டு வர தீர்வு காண்பது உலக நாடுகளுக்கு மிக கடினமாக உள்ளது. இதனால் உலக நாடுகள் சந்தித்து வரும் சமகால சவால்களுக்கும், சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வை தேடி பாரதத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. பாரதத்தின் தொன்மையான சனாதன வழிமுறைகளின் மூலம் ஒரு புதிய பாதையை தேடுகின்றன. இதனை வழங்க பாரதம் முன் வர வேண்டும்.

    இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

    • இத்தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரிகிறது
    • தற்போதைய தொழில்நுட்பத்தில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடுகின்றன

    பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் (Hamas) அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ள இஸ்ரேலிய ராணுவ படை (IDF) பாலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட ஒரு ராக்கெட் தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெர்ரஸ் (Antonio Guterres) உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என கூறி அதற்கு ஆதாரமாக பல வீடியோ காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள இஸ்ரேலுக்கான தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இது குறித்து தெரிவித்ததாவது:

    அல் அஹ்லி மருத்துவமனை மீது பாலஸ்தீன ஐ.ஜே (Palestinian Islamic Jihad) அமைப்பினர் ராக்கெட் ஏவி நடத்திய தாக்குதல் இது. அவர்கள் எங்கள் நாட்டினை குறி வைத்தனர்; ஆனால் எங்கள் குழந்தைகளை கொல்ல நினைத்தவர்கள் தங்கள் நாட்டு குழந்தைகளை கொன்று விட்டனர். உலகில் இன்னும் சிலர் அவர்களை ஆதரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். இந்த ராக்கெட் தாக்குதல் குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மக்களை கேடயமாக பயன்படுத்தி சுரங்கங்களில் ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர் துணிச்சலுடன் வெளியே வந்து எங்களுடன் போரிட வேண்டும்.

    இவ்வாறு நவோர் கிலன் தெரிவித்தார்.

    • இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் பெரும்பாலான உடல்கள் வைக்கப்பட்டுள்ளன
    • உயிரிழந்தவர்களின் உடல்களை யூதர்கள் முழுமையாக எரியூட்ட வேண்டும்

    கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமை காலை, இஸ்ரேல் நாட்டிற்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர், அங்குள்ள பொதுமக்கள் மீது பெரும்தாக்குதலை நடத்தி 1400க்கும் மேற்பட்ட பொதுமக்களை பயங்கரமான முறையில் கொன்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக கூறி பாலஸ்தீன காசா பகுதி மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் பட்டியலிடப்பட்டு ஏராளமான ஸ்ட்ரெட்சர்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அந்நாட்டின் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் (National Center of Forensic Medicine) பெரும்பாலான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இது போல் உள்ள மேலும் 4 மையங்களிலும் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.

    உருக்குலைந்த உடல்களை அவர்கள் ஆய்வு செய்த பின் தாங்கள் கண்டறிந்ததாக கூறும் தகவல்கள் மூலமாக ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் பரிதாப நிலை குறித்து அறிய முடிகிறது.




     


    அந்த உண்மைகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது.

    இது குறித்து அந்த தடயவியல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

    பல டிரக்குகளில் இன்னமும் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் மிகவும் அதிகமாக உள்ளது. பல உடல் பாகங்களை ஒன்று சேர்க்கும் மிக சோகமான மற்றும் கடினமான செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

    கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒருவருடன் ஒருவராக கட்டப்பட்டு, கொல்லப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்ட உடல்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமான செயல். அனைத்து உடல்களும் அடையாளம் தெரியாத அளவு எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. யூத நம்பிக்கையின்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக எரியூட்டப்பட வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த முடியாத அளவு அவர்கள் உடல்களை எரியூட்டி கொலை செய்துள்ளனர். குழந்தைகளை தாக்குதலில் இருந்து காக்க இறுகி அணைத்தபடி பலர் உயிர் விட்டுள்ளனர்.



    பெண்கள் கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளன. அவர்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டுள்ளனர். பல உடல்களில் பத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஒரே நேரத்தில் துளைத்திருக்கின்றன. மரபணு மாதிரிகளையும், கைரேகை அடையாளங்களையும், பல்வரிசை குறிப்புகளையும் கொண்டு ஆய்வு செய்து உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயல்கின்றோம்.

    உயிரிழக்கும் போது அந்த மக்கள் எத்தகைய துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை நாங்கள் உலகினருக்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள் நடக்காதவற்றை கூறுவதாக உலகின் சில நாடுகள் கூறின. ஒரு சிலர் நாங்கள் நாய்களின் எலும்புகளை காட்டுவதாக குற்றம் சாட்டினார்கள். எனவே உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம். இதுவரை இப்படியொரு கொடுமையை எங்கள் பணியில் நாங்கள் கண்டதில்லை.

    இவ்வாறு தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திடீரென ஹமாஸ் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
    • எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றார் ஹாரிஸ்

    கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது ஒரு எதிர்பாராத தாக்குதலை நடத்தியது.

    வான்வழியாக 5000 ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் தாக்குதல் நடத்தி அந்நாட்டிற்குள்ளே ஹமாஸ் ஊடுருவியது. இத்தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் பலியானார்கள்; பல இஸ்ரேலியர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவர் மீதும் நடந்த இந்த தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.

    இப்போர் 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

    இந்நிலையில், அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இது குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்ததாவது:

    எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இஸ்ரேலை ஆதரித்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. தன்னை காத்து கொள்ள இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். அங்குள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பே இப்போது மிகவும் முக்கியம். நானும் அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொடர்பில் உள்ளோம். இஸ்ரேலிய மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக உள்ளோம் என்பதை தெரிவித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹமாஸ் தாக்குதலில் இருபதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×