search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒற்றுமை பயணம்"

    • காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க தீர்மானம் போட்டவர்களுடன் பாத யாத்திரை செல்கிறார்.
    • சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிக்கிறார்.

    சிம்லா:

    சட்டசபைத் தேர்தலையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முந்தைய மக்களவைத் தேர்தலில் தனது கோட்டையான அமேதியில் தோல்வியடைந்தார், ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் எங்கு சென்றாலும், அங்கு நிலைமை என்ன? காங்கிரஸ் தொடர்ந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறது.

    நாட்டை விமர்சித்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் மாடுகளை அறுத்து புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார்.

    காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களுடன் அவர்கள் யாத்திரை நடத்தினார்கள். சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை உங்கள் தலைவர் ஆதரிக்கும் போது, ​​உங்கள் (காங்கிரசார்) ரத்தம் கொதிக்காதா, உங்கள் தலைவர் பசுவைக் கொல்பவர்களின் முதுகில் தட்டும்போது, ​​உங்கள் ரத்தம் கொதிக்காதா?

    ஒருபுறம் தங்கள் தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்களுக்கும், மறுபுறம், தங்கள் நாட்டை அவமானப்படுத்துபவர்களுக்கும், சிதைந்த இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரை நாளை இரவு மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது.
    • பாஜகவிடம் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்கிறார் ராகுல் காந்தி.

    கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை, தெலுங்கானா மாநிலத்தை தாண்டி நாளை இரவு 9 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள தெக்லூரை அடைகிறது. அந்த மாநிலத்தில் மட்டும் 14 நாள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதே பாத யாத்திரையின் நோக்கம் என்றார். கடந்த எட்டு ஆண்டுகளில், நாடு ஊழல், பயம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்த நிலையில், ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல்காந்தியின் பாத யாத்திரை கர்நாடகா மாநிலத்தில் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தமது வாக்கை பதிவு செய்தார் ராகுல்காந்தி

    பனாஜி:

    காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாதயாத்திரை தற்போது கர்நாடகா மாநிலம் பல்லாரியை அடைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார். பல்லாரியில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தில் அவர் வாக்குப் பதிவு செய்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 


    இதனிடையே, ராகுல்காந்தி தமது பாத யாத்திரையை நிறுத்தி வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், கோவா முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தினா வேண்டுகோள் விடுத்துள்ளார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். கட்சி அடிமட்டத்தில் இருந்து வளர வேண்டும் என்று விரும்புவதாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனா கார்கே போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வகையில் சசிதரூர் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் ராகுல்காந்தியுடன் கலந்துரையாடல்.
    • தேசிய கல்விக் கொள்கை குறித்த பிரச்சினைகளை எழுப்பியதாக தகவல்.

    மாண்டியா:

    காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய அவரது யாத்திரை, கேரளா மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பல கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    அப்போது இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கி கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளை அச்சுறுத்தும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது என்று ராகுல்காந்தி அவர்களிடம் தெரிவித்தாக காங்கிரஸின் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளரான கார்கே தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரின் தாய்மொழியும் முக்கியம் என்றும், அனைத்து மொழிகளையும் காங்கிரஸ் மதிப்பதாகவும், அரசியலமைப்பில் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று ராகுல்காந்தி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

    இந்த உரையாடலில் பங்கேற்றவர்கள் தங்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்திய தாகவும், அரசியலமைப்பைக் காப்பாற்றும் யாத்திரையில் பங்கேற்கிறோம் என்று தெரிவித்ததாகவும் கார்கே கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதால கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை எழுப்பியதாகவும் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

    • காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மைசூர் வருகை.
    • 6ந் தேதி ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் சோனியா பங்கேற்கிறார்.

    மாண்டியா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரையை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அங்கு பேசிய ராகுல்காந்தி, நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளது என்றார்.

    சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும்,ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 


    முன்னதாக மைசூரில் உள்ள சுத்தூர் மடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதி சிவராத்திரி ஸ்ரீ தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் அவரது தாயார் சோனியா காந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர். இதற்காக சோனியா காந்தி மைசூர் விமான நிலையத்திற்கு இன்று வந்தார். 


    அவரை அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிவகுமார் வரவேற்றார். 6ந் தேதி மாண்டியாவில் நடைபெறும் பாத யாத்திரையில் சோனியாகாந்தியும் பங்கேற்பார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • சில பணக்கார தொழில் அதிபர்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது.
    • சிறு கடனை திருப்பி செலுத்தாத விவசாயி சிறையில் அடைக்கப்படுகிறார்.

    பாலக்காடு:

    இந்திய ஒற்றுமை பயண யாத்திரை மேற்கொணடு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேரள மாநிலம் கொப்பத்தில் நேற்று மாலை திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய பாஜக அரசு ஒரு சில பணக்கார தொழில் அதிபர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. அதே நேரத்தில் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பிறரிடம் அதே அக்கறை காட்டப்படவில்லை.  எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போதோ, வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் போதோ, கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அந்த பணம் மறைவதில்லை, நாட்டின் ஐந்தாறு பணக்கார தொழிலதிபர்களின் பாக்கெட்டுகளுக்கு அது போகிறது. இந்த அநியாயத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பின்னர் தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இன்று பெரிய தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு விவசாயி அல்லது சிறு வியாபாரி சிறு கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவரை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். கடனை செலுத்தாதவர் என்று அவரை கூறுகிறார்கள். இது போன்ற ஒவ்வொரு அநீதியையும் எதிர்த்து, இந்திய ஒற்றுமை பயணம் நடைபெறுகிறது. மன்னரின் (பிரதமர் மோடியின்) இது போன்ற இரண்டு இந்துஸ்தான் கொள்கையை நாடு ஏற்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை.
    • யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி இப்போது பயனற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள் நடைபெறுகிறது, உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. கர்நாடகாவில் 19 நாட்கள் நடைபெறுகிறது என்றால், அது குறித்து ராகுல் காந்தியிடம் கேளுங்கள், அவர் பதில் அளிப்பார்.

    நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சி மீது கோபப்பட வேண்டும்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது திட்டங்களை நிறைவேற்ற ஜனநாயக உரிமை உள்ளது. இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பயனற்றது.

    இது மக்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலுக்கு முதலில் மாநில அளவில் ஒன்றுமை உருவாக்கப்படும். அதிகபட்சமாக மதச்சார்பற்ற ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற சிபிஎம் முயற்சி செய்து வருகிறது.

    2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக யார் என்ற கேள்வி எழுந்தது.கடைசியில் அவருக்கு எதிராக, பாஜக அல்லாத ஆட்சி அமைந்தது, அது 10 ஆண்டு நீடித்தது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அவசியம், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மக்களிடையே வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டி தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது.
    • இந்திய ஒற்றுமை பயணம் காங்கிரஸ் கட்சியை 100 மடங்கு புத்துணர்ச்சி அடைய செய்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த பாத யாத்திரை மொத்தம் 150 நாள்களாக 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது. இந்த பாத யாத்திரை கடந்த 10ந் தேதி கேரளாவில் நுழைந்தது.

    நேற்று மாலை கன்னியாபுரம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களிடையே வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறுவதாகவும், ஆனால் நாடு எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சினை மற்றும் வேலை வாய்ப்பு பிரச்சினைகளை அது தீர்க்க முடியாது என்றும் கூறினார். 


    மக்களின் குரல் அமைதியாகி விட்டதாகவும், ஆளும் கட்சியால் ஊடக நிறுவன உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து தமது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் கனவு உடைந்து விட்டாலும் சிதறவில்லை, அந்த கனவை நனவாக்க, நாங்கள் இந்தியாவை ஒன்றிணைக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் கேரளாவில் 3வது நாள் பயணத்தை இன்று காலை கன்னியாபுரத்தில் இருந்து அவர் தொடங்கினார். ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் காங்கிரஸ் கட்சியை 100 மடங்கு புத்துணர்ச்சி அடைய செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் மொத்தம் 19 நாட்கள் ஏழு மாவட்டங்களை கடக்கும் இந்திய ஒற்றுமை பயணம் அக்டோபர் ஒன்றாம் தேதி கர்நாடகாவிற்குள் நுழைகிறது.

    • ஆர்எஸ்எஸ்-ஐ தடுக்க காங்கிரஸ் தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது.
    • உண்மையான கொள்கைகள் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து வளர்ந்தது.

    ராய்பூர்:

    ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி டிரவுசரில் தீப்பிடிக்கும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாட்டை வெறுப்புச் சூழலில் இருந்து விடுவித்து, பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த சேதங்களை அகற்ற வேண்டும், அந்த இலக்கை படிப்படியாக அடைவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மூன்று நாள் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்ட நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளதாவது:

    இந்திய மக்களை இணைக்கும் வேலையை யாராவது செய்தால் அது நல்ல விஷயம்தான், ஆனால் வெறுப்பின் மூலம் எப்படி இணைவது? உண்மையான அர்த்தத்தில் மக்களை இணைக்கும் கூறுகளை அங்கீகரித்து நாட்டை ஒன்றிணைக்க அவர் (ராகுல்காந்தி) முயற்சித்தால், வரவேற்கப்படுவார். இல்லையெனில், நீங்கள் வெறுப்பின் மூலம் மக்களை ஒன்றிணைக்க முயற்சித்தால், அது ஒரு அரசியல் வித்தையாக இருக்கும். மக்களை இணைக்கும் நோக்கத்திற்கு உதவாது.

    அவர்கள் (காங்கிரஸ்) நீண்ட காலமாக (ஆர்.எஸ்.எஸ். மீது) வெறுப்பை வளர்த்து வருகின்றனர். அவரது ( ராகுல் காந்தி) முன்னோர்கள் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) அவமதித்துள்ளனர். அதை தடுக்க தங்கள் முழு பலத்தையும் செலுத்தினர். இரண்டு முறை தடை விதித்தனர். ஆனால் எங்களிடம் உண்மையான கொள்கைகள் இருப்பதால் சங்கம் தொடர்ந்து வளர்ந்து வந்தது. அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவுடன், சங்கம் தொடர்ந்து வளர்ந்தது. 


    காங்கிரஸால் ட்வீட் செய்யப்பட்ட தீயில் எரியும் காக்கி உடை படம் அவர்களின் வெறுப்பை பிரதிபலிக்கிறது. அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்தியாவின் ஆன்மீக அடையாளம் இந்துத்துவா என்று அழைக்கப்படுகிறது. இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை வெளியீடு
    • ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவில் ஒற்றுமையை நிலை நிறுத்த வும், இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலை வர் ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டு உள்ளார்.

    7-ந்தேதி பொதுக்கூட்டத் துடன் குமரியில் தொடங்கிய பயணம் 8,9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.

    இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், டாக்டர் பினுலால்சிங், நவீன்குமார், வட்டார, நகர, பஞ்சாயத்து தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ராகுல்காந்தியை பெருந்திரளாக கூடி வரவேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சர்ச்சைக்குரிய பாதிரியாருடன் ராகுல் சந்திப்பு குறித்து பாஜக கடும் விமர்சனம்.
    • பாதிரியாருடனான ராகுல் சந்திப்பில் எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் விளக்கம்.

    இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டம் புலியூர் குறிச்சியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றார். அங்கிருந்த பாதிரியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இயேசுநாதர் கடவுளின் வடிவமா, இது சரிதானா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இயேசுவே உண்மையான கடவுள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடவுள் அவரை ஒரு உண்மையான மனிதராக வெளிப்படுத்துகிறார், சக்தியை போல் அல்ல, அதனால் நாம் அவரை (ஏசுநாதரை) மனிதராக பார்க்கிறோம் என்றார். 

    ஏசுநாதர் உண்மையான கடவுள் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி மற்றும் ஜார்ஜ் பொன்னையா இடையேயான உரையாடல் குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதற்கு முன்பு இந்த மனிதர் (ஜார்ஜ் பொன்னையா) இந்து குறித்த வெறுப்பு கருத்துக்களை கூறியதற்காக கைது செய்யப்பட்டார், பாரத மாதாவின் அசுத்தங்கள் நம்மை மாசுபடுத்தக் கூடாது என்பதற்காக நான் காலணிகள் அணிகிறேன் என்று அவர் கூறியிருந்தார் என ஷெஹ்சாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் ராகுல்காந்தி சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தி தனது பாதயாத்திரையின் போது பலரை சந்தித்து உரையாடுவார், அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

    • நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியால் பாடுபட முடியாது.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரசால் செயல்பட முடியும்.

    ஜோத்பூர்:

    கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    இந்தியா குறித்து பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையை காங்கிரஸ்காரர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. இந்த தேசத்திற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

    தற்போது பாரதத்தை இணைக்க வெளிநாட்டு உடை அணிந்து ராகுல் காந்தி சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது, (சிலரை) திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே (காங்கிரசால்) செயல்பட முடியும்.

    ×