search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனியாகாந்தி"

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    • ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.
    • இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனதாதளம்(எஸ்) சார்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அந்த கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி போன்றோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஹுப்பள்ளியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் . ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து சோனியாகாந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு 3.30 மணிக்குத் டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியாகாந்தி பிரசாரம் செய்யும் அதேநாளில் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி 36.6 கி.மீ. ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று பிற்பகலில் மேல்முறையீடு செய்கிறார்.
    • ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி தீர்ப்பு விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது.

    2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று பிற்பகலில் மேல்முறையீடு செய்கிறார். அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

    மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்வதற்காக ராகுல்காந்தி இன்று காலை சூரத் புறப்பட்டார்.

    சூரத் புறப்பட்டு செல்வதற்கு முன்பு ராகுல்காந்தியை சோனியாகாந்தி சந்தித்தார். அவரது வீட்டுக்கு நேரில் சென்று சோனியா சந்தித்தார். இதேபோல பிரியங்காவும் ராகுல்காந்தி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

    ராகுல்காந்தி குஜராத் மாநிலம் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய வரும்போது காங்கிரஸ் தலைவர்கள் உடன் செல்வார்கள்.

    காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், இமாச்சலபிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங், மேல்சபை எம்.பி. கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் செல்லலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேல்முறையீடு மனுவில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் ரத்தாகும்.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம்.
    • காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் மட்டுமே உள்ளது.

    தெக்ரி கர்வால்:

    காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

    மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும், காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பாஜக விமர்சித்துள்ளது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியுள்ளதாவது:

    முதல் நாளிலிருந்தே நான் கூறியதை சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தி உள்ளார். அதிகாரம் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. காங்கிரசில் நடைபெற்ற தலைவர் தேர்தல், கட்சியில் ஜனநாயகம் மற்றும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக சிலர் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம். கார்கேவை ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    • எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:-

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்குகளை ஈர்க்கும் திறன் சோனியாகாந்தி குடும்பத்திற்கு இல்லை என்று வதந்தி பரப்படுகிறது.
    • காங்கிரஸ் உட்கட்சி பூசல் பற்றி விளம்பரப் படுத்தப்படுகின்றன.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில், ரீகர் சமூகத்தினர் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரசில் உட்கட்சி பூசல் பற்றிய பேச்சுக்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஆனால் (எங்களுக்குள்) எந்த சண்டையும் இல்லை, நாங்கள் ஒன்றாக இணைந்து அடுத்த அரசை அமைப்போம். சோனியா காந்தி குடும்ப உறுப்பினர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும், அவர்களால் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை என்றும் தற்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது முட்டாள்தனம்.

    சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை. அவர்கள் நாட்டில் எங்கு சென்றாலும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பாதுகாத்துள்ளது. இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் இடஒதுக்கீட்டை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இன்றைய பாரதிய ஜனதா கட்சி முன்பு ஜனசங்க வடிவில் இருந்தது. அப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மைசூர் வருகை.
    • 6ந் தேதி ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் சோனியா பங்கேற்கிறார்.

    மாண்டியா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரையை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அங்கு பேசிய ராகுல்காந்தி, நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளது என்றார்.

    சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும்,ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 


    முன்னதாக மைசூரில் உள்ள சுத்தூர் மடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதி சிவராத்திரி ஸ்ரீ தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் அவரது தாயார் சோனியா காந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர். இதற்காக சோனியா காந்தி மைசூர் விமான நிலையத்திற்கு இன்று வந்தார். 


    அவரை அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிவகுமார் வரவேற்றார். 6ந் தேதி மாண்டியாவில் நடைபெறும் பாத யாத்திரையில் சோனியாகாந்தியும் பங்கேற்பார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ந் தேதி நடைபெறும்.

    காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காரிய கமிட்டிக் கூட்டம் இன்று பிற்பகல் மூன்றரை மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி காணொலி வாயிலாக இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவருடன் சென்றுள்ள ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காணொலி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்

    கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மல்லிகார்ஜூன் கார்க்கே, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பி.சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


    செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாத யாத்திரை தொடங்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தாமதமாகலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், அக்டோபர் 17ந்தேதி கட்சித் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தாக தெரிவித்தார். 


    கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22ந் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தேவைப்பட்டால் அக்டோபர் 17ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ந் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    • காணொலி மூலம் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.
    • கட்சித் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்ற விபரம் வெளியாகாத நிலையில், அங்கிருந்தபடி காணொலி மூலம் கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. சோனியாகாந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சென்றுள்ள நிலையில் அவர்களும் நாளைய கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அந்த கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக உள்ள நிலையில், நாளை நடைபெறும் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • தனது தாயாரை சோனியா காந்தி சந்திக்க உள்ளார்.
    • சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா வெளிநாடு செல்கின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார்.

    வருகிற 7-ந்தேதி இந்த யாத்திரையை அவர் தொடங்குகிறார். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 4ந் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று ராகுல் உரையாற்றுகிறார்.

    இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம் மேற் கொள்ள உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வெளிநாடு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் அவர்கள் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர். எந்த நாடுகளுக்கு அவர்கள் செல்கின்றனர் என்ற விபரங்கள் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் முன்பு, உடல் நிலை சரியில்லாத தனது தாயாரை சோனியாகாந்தி சந்திப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக சோனியா காந்தி கருத்து.
    • ராகுல் காந்தியும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், அவரையும் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி.ரா குல் காந்தியும் திரவுபதி முர்மு தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு நமது அரசியல் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாப்பார் என நாடே எதிர்நோக்கி உள்ளதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

    சரத் ​​பவார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசு தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். உங்கள் பதவிக்காலம் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையில் அகமது படேல் செயல்பட்டார்.
    • கலவர வழக்கு தொடர்ந்த செடல்வாட்டிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர்.

    இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மோடி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கில் போலி ஆவணங்களை தயாரித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்கும் சதியின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளதாவது:

    சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் மறைந்த அகமது படேல், குஜராத் மாநிலத்தில் பாஜக அரசை சீர்குலைக்கவும், மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தும் வகையிலும் செயல்பட்டார். எனினும் அவர் சோனியாகாந்தியால் இயக்கப்பட்டார்.

    சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்ட டீஸ்டா செடல்வாட், நீதிமன்றத்தின் முன் அளித்த வாக்குமூலத்தில் அகமது பட்டேல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செடல்வாட் மனைவியிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை படேல் வழங்கியதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணம் சோனியாகாந்தி வழங்கியது.

    குஜராத் கலவர வழக்குகளைத் தொடர்ந்த செடல்வாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் அவர் சேர்க்கப்பட்டார். இது குறித்து சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சம்பித் பத்ரா குறிப்பிட்டுள்ளார்.

    ×