என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக சட்டசபை தேர்தல்"

    • பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.
    • காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது.

    சிக்கமகளூரு:

    சிக்கமகளூருவில் ஒவ்வொரு ஆண்டும் சிக்கமகளூரு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான சிக்கமகளூரு திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதையடுத்து கடந்த 19-ந் தேதி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் அமைந்திருக்கும் சந்திரதிரிகோண மண்டபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி,முருகன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் விழாவில் மத்திய மந்திரி முருகன் பேசியபோது கூறியதாவது:-

    ஒரே பாரதம், ஒரே தாய். நாம் அனைவரும் ஒரே பாரத தாயின் குழந்தைகள் ஆவோம். அந்த வகையில் காசியில் தமிழ்ச்சங்கத்தின் மூலம் பிரதமர் மோடி யாகம் நடத்தினார். அப்போது மக்களிடையேயான ஒற்றுமை, உறவு குறித்து பேசினார். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இனியும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

    கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ரங்கநாதர் உள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் உள்ளார். இரண்டும் ஒரே கடவுள்தான். காவிரி நீரை அண்ணன் - தம்பி போல் பங்கிட்டு விவசாயம் செய்து வருகிறோம். அந்த ஒற்றுமை உணர்வுடன் நாம் வாழ்வது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அவர் தனது உரை முழுவதையும் தமிழிலேயே பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    உலக அளவில் இந்தியா 5-வது வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இங்கிலாந்தைவிட இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.

    சூரியனும், சந்திரனும் உதயம் ஆவது எவ்வளவு உண்மையோ, அதேபோல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. கர்நாடக சட்டமன்ற தேர்தலை தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சந்திப்போம். மீண்டும் அவரே முதல்-மந்திரி ஆவார். காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது. ராகுல் காந்தி, சித்தராமையா போன்றோர் தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம்.
    • தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    மண்டியா :

    மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியையே வெற்றி பெற வைத்தீர்கள். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதும் உண்மையே. மக்களின் மனநிலையை அறிந்து நான் இதை கூறுகிறேன்.

    காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது, அதில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?. அதனால் இந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது இடங்களில் ஆவது காங்கிரசை வெற்றி பெற வையுங்கள். மண்டியா விவசாயிகளுடன் நாங்கள் உள்ளோம். உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு இடையே தான் போட்டி. 123 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. நான் அந்த கட்சியில் இருந்தபேது அந்த எண்ணிக்கையை தொட முடியவில்லை. 59 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். அதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை.

    இந்த முறை அந்த கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இதுவே அதிகம். இதை வைத்து கொண்டு அக்கட்சி ஆட்சிக்கு வர முடியுமா?. மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கடந்த முறை வாய்ப்பு அளித்தோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளாமல், அவர் வெஸ்ட் என்ட் ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். அதனால் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி சொல்கிறார். அப்படி என்றால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்களே, அதற்கு யார் பொறுப்பு?. நாங்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பயந்துபோய் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மண்டியா சர்க்கரை ஆலையை நவீனமயம் ஆக்குவோம். அதை அரசே தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என சித்தராமையா கூறினார்.
    • இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் முதல் மந்திரியாக இருந்தபோது, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கினோம். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அதை 5 கிலோவாக குறைத்துவிட்டது. இதை நான் எதிர்த்தேன். ஆனால் பா.ஜ.க. தனது முடிவை மாற்றவில்லை.

    கொரோனா நெருக்கடி காலத்தில் அன்ன பாக்கிய திட்டம் மற்றும் நரேகா திட்ட கிராமப்புற வேலைவாய்ப்புகள் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தன. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தை நாங்கள் காங்கிரசின் 3-வது உறுதிமொழியாக அறிவிக்கிறோம். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும்.

    எங்கள் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஒவ்வொரு வீட்டிலும் உத்தரவாத அட்டை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் பசியால் யாரும் வாடக்கூடாது என்பது எங்களின் விருப்பம். இது சித்தராமையா திட்டம் அல்ல, மோடியின் திட்டம் என்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகிறார். ஒருவேளை இது மோடியின் திட்டமாக இருந்தால் குஜராத், உத்தர பிரதேசத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டம் அமலில் ஏன் இல்லை என்பதை அவர் விளக்க வேண்டும்.

    உணவு பாதுகாப்பு சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தாரா? பசவராஜ் பொம்மை பொய் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக தான் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முதல் மந்திரி பதவியில் அமர வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

    • கர்நாடகாவில் தற்போது தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    • கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகின்றன.

    தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரசார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள வேண்டும்.

    அதற்கு தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை தொடங்கி வைத்தது யார் என எண்ணி பார்த்தால் பிரசாந்த் கிஷோர் தான் நினைவிற்கு வருவார்.

    தற்போது இவர் தேர்தல் வியூக நிபுணர் பதவியில் இருந்து ஓய்வுபெற்று விட்டு பீகார் மாநிலத்திற்கு சென்று விட்டார். அங்கு அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவரது நிறுவனம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

    பிரசாந்த் கிஷோரிடம் பயிற்சி பெற்ற அவரது சீடர்கள் தற்போது அந்த பணியை செய்து வருகிறார்கள். தற்போது இவர்களை கர்நாடக அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஐபேக் நிறுவனமும், பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகமும் தான். அதன்பிறகு பிரசாத் கிஷோரின் எனும் பி.கே.யின் புகழ் பரவியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் பகுதி பி.கே.வை அழைக்க தொடங்கினர்.

    கர்நாடகாவில் தற்போது தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி எம்.எல்.ஏக்களும் தனியாக தேர்தல் வியூக நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். பி.கே. சீடர்கள் மூலம் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் கள நிலவரத்தை அறிந்து, பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்காக சுமார் 50 தேர்தல் வியூக நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு களப்பணியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் பணியாற்றும் நபர்கள், 'நாங்கலாம் பி.கே பாய்ஸ்' என்று பெருமையாக கூறி வருகிறார்களாம். அதுமட்டுமின்றி இந்த பெயரால் ஒரு நம்பகத்தன்மையும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை 'வராஹி' என்ற பெயரில் தேர்தல் வியூக நிறுவனத்தை கட்டமைத்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் தேர்தல் பணிகளை ஆற்ற முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது 'மைண்ட் ஷேர்' என்ற நிறுவனத்தை வேலையில் அமர்த்தியுள்ளது. இவை இரண்டில் பணியாற்றும் நபர்களும் பிரசாந்த் கிஷோரிடம் அரசியல் பாடம் கற்றவர்கள்.

    இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பலரை தேர்தல் வியூகத்திற்காக நியமித்துள்ளது. இவர்களும் பி.கே மற்றும் ஐபேக் உடன் தொடர்புடையவர்கள். தேர்தல் அரசியலில் வியூக நிபுணர்களை பயன்படுத்துவதில் மூத்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
    • ஹஸ்சன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசினார்.

    கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றன.

    கடந்த ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய பேருந்து பயணமான 'பிரஜா த்வனி யாத்ரே'யின்போது கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

    இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் ஹஸ்சன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இலவச மின்சாரம் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் இலவச மின்சாரம் தருவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்களின் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் கொடுக்கவே இல்லை. கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களால் (பாஜக) 24 மணி நேர மின்சாரம் வழங்க முடிந்தது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. அதனால் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
    • விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    பெலகாவி:

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத் மட்டத்திலும் இத்தகைய யாத்திரைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்கள் கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். போட்டி போட்டு செயல்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிட யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஒவ்வொருவராக கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார்கள். அசாம், மத்திய பிரதேச முதல்-மந்திரிகள் வந்துவிட்டு சென்றுள்ளனர். மத்திய மந்திரிகள் வந்து விஜய சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டுவிட்டு செல்கிறார்கள். இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றாது. உத்தரவாத அட்டை வழங்கினாலும் அதை செயல்படுத்த மாட்டார்கள்.

    பெலகாவியில் சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்க எம்.இ.எஸ். அமைப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்கள் மீண்டும் எங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்த தயாராக உள்ளனர். நாங்கள் நடத்தும் விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மூன்று கட்சிகளும் பல்வேறு பெயர்களில் யாத்திரைகள் மூலம் பொதுக்கூட்டங்களை நடத்தி பலத்தை காட்டி வருகின்றன.

    கா்நாடக தேர்தல் களத்தில் வழக்கமாக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தான் போட்டியில் இருக்கும். இந்த முறை புதிய வரவாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதிக்கின்றன. 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான தனது அரசியலை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

    தேர்தலை சந்திக்கும் விதமாக பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா சென்றார்.

    விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். இதனால் எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

    எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நேரடியாக போர்க்கொடி தூக்கியிருப்பது, பா.ஜ.க.வில் இருக்கும் உட்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கும், வீட்டு வசதி மந்திரி சோமண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    யாரும் யாரையும் புறக்கணிக்க முடியாது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது மகன் விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். மற்ற விஷயங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்துவதால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிருப்தியை சரிசெய்யும் பணியை கட்சி மேலிட தலைவர்கள் செய்கிறார்கள்.

    அனைத்து சமூகங்களையும் சமமாக பார்க்க வேண்டும். லிங்காயத்து சமுதாய ஓட்டு தேவை இல்லை என்று சி.டி.ரவி கருத்து கூறி இருந்தால் அது தவறு. இதுபற்றி அவருடன் பேசுகிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    இந்த சூழலில் விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு கர்நாடகம் வருகிறார். தனி விமானம் மூலம் சித்ரதுர்கா மாவட்டம் தோரனகல்லில் உள்ள விமான நிலையத்திற்கு வருகிறார். அவர் அங்கிருந்து கார் மூலம் செல்லகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    ஏற்கனவே பா.ஜ.க. சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் மக்கள் குரல் என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) கர்நாடக  மாநிலத்திற்கு வந்துள்ளார். பெலகாவியில் காங்கிரசின் இளைஞர் புரட்சி மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன் மூலம் ராகுல் காந்தி கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் அவர் வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம் போன்ற விஷயங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகுல் காந்தியின் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடகாவில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. பெலகாவி நிகழ்ச்சிக்கு பின்னர் பெங்களூரு வரும் ராகுல் காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதையடுத்து, மைசூர் செல்லும் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரசின் செயல் தலைவராக இருந்து மறைந்த துருவநாராயணின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். ராகுல் காந்தியின் வருகை கர்நாடக காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

    அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகம் வந்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெலகாவியில் நடைபெற்ற இளைஞர்கள் புரட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாமல் உள்ள பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்ட வாக்குறுதியை அறிவித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரமும், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும்.

    கர்நாடகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். கர்நாடக அரசு துறைகளில் காலியாக உள்ள 2½ லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், ரேஷன் கடைகளில் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம்.

    கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும். கர்நாடகத்திற்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது என தெரிவித்தார்.

    • கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
    • தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

    தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

    கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பதாக கூறியது.

    அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 20ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை ஏப்ரல் 21ம் தேதி என்றும் வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சில தொகுதிகளில் பாரதிய ஜனதா- காங்கிரஸ் இடையே கடுமையான பலப்பரீட்சை இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
    • கர்நாடகாவில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் அங்கு "கை" ஓங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

    பெங்களூரு:

    224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இதை தவிர ஒரு சில சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    இருந்த போதிலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி மோதல் நிலவுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா 104 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

    இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 68 முதல் 80 இடங்களும் , மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    காங்கிரசுக்கு 40.1 சதவீத ஓட்டுகளும், பா.ஜ.க.வுக்கு 34.7 சதவீத ஓட்டுகளும், மத சார்பற்ற ஜனதாதளத்திற்கு 17.9 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில தொகுதிகளில் பாரதிய ஜனதா- காங்கிரஸ் இடையே கடுமையான பலப்பரீட்சை இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

    அடுத்த முதல் மந்திரியாக யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 39.1 சதவீதம் பேர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், குமாரசாமிக்கு 21.4 சதவீதம் பேரும், காங்கிரசை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு 3.2 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பாரதிய ஜனதா ஆட்சி மோசம் என கருத்து தெரிவித்து உள்ளனர்

    கர்நாடகாவில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் அங்கு "கை" ஓங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

    கர்நாடகாவில் சமீபத்தில் லஞ்ச புகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விபாட்சப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    மேலும் சமீபத்தில் கர்நாடக பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் கடுமையான போராட்டங்கள் நடந்தது. போலீஸ் தேர்வில் நடந்த ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் சிக்கினார்கள்.

    இதனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.

    இருந்த போதிலும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா மும்முரமாக உள்ளது. பிரதமர் மோடி பல தடவை கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளதால் எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு என பாரதிய ஜனதாவினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.

    ×