search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basavaraj Bommai"

    • காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருந்தார்.
    • தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சித்தராமையாவுக்கு கடிதம்.

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

    அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. எனினும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இருந்த போதிலும், கர்நாடகா தரப்பில் தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

     

    முன்னதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி, அம்மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பசவராஜ் பொம்மை அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    அதில், "கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம். கர்நாடக அணைகளில் உள்ள நீர், பெங்களூரு மற்றும் காவிரி விவசாயிகளுக்கே போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால், கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அரிசி வழங்க தவறிவிட்டனர்.
    • இலவச மின்சார திட்ட விஷயத்தில் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேர்தலின்போது ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அரிசி வழங்க தவறிவிட்டனர். அதற்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 வீதம் பணம் வழங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். ஒருவருக்கு ரூ.170 கொடுத்தால், அதற்கு கடையில் 2½ கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும்.

    10 கிலோ அரிசி கொடுத்தே தீருவோம் என்று கூறி வந்தனர். இப்போது அவர்கள் தங்களின் பேச்சை காப்பாற்ற தவறிவிட்டனர். இலவச மின்சார திட்ட விஷயத்தில் நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதனால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு.

    பெங்களூரு:

    துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அவர், 2 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்துள்ளார். இதற்கு முன்பு தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தேன். மூத்த தலைவர்களின் அனுபவத்தை பெறுவதில் தவறு எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவர்களது ஆட்சி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம்.

    அதனை கேட்டு தற்போது செயல்படுத்த முடியும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பசவராஜ் பொம்மை பெங்களூரு பொறுப்பையும் நிர்வகித்து இருந்தார். அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு. குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சியில் தார்மீக குருக்கள் பேச இருப்பது சபாநாயகர் எடுத்திருக்கும் முடிவு. சபாநாயகர் எடுக்கும் முடிவில் அரசு தலையிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழை மக்களுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.
    • எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது.

    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டதாக அவர் சொல்கிறார். அவர் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தற்போது அரிசி கிடைக்கவில்லை என்று காரணங்களை சொல்கிறார்கள்.

    இது காங்கிரஸ் தனது உத்தரவாத திட்டங்களில் இருந்து பின்வாங்கிவிட்டதை காட்டுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அரிசியை கொண்டு வருவதாக சித்தராமையா கூறியுள்ளார். ஏழை மக்களுக்கு அரிசி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். கர்நாடக விவசாயிகள் அரிசி கொடுக்க முன்வந்தால் அரசு அதை கொள்முதல் செய்ய வேண்டும்.

    பா.ஜனதாவினரே அரிசியை கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை வருகிற 1-ந் தேதி ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசியை வழங்காவிட்டால் பா.ஜனதா போராட்டத்தில் குதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது. 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால் இந்த அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    சித்தராமையா காணொலி மூலம் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டார். வறட்சி உள்ள பகுதிகளில் செயல்படையை அமைக்க வேண்டும். இந்த அரசுக்கு மக்கள் மீதான அன்பு நீண்ட நாள் நீடிக்காது என்று கருத தோன்றுகிறது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சட்டசபை கூட்டத்திற்கு முன்பு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • யாருக்கு தேவையோ, அவர்களே சமரச அரசியல் செய்து கொள்கிறார்கள்
    • அரசியல் வேறு, சொந்த விவகாரங்கள் வேறு.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர்கள் காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். நான் பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில் கிடைத்த அதிகாரத்தை மக்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை. அதற்கான அவசியமும், சூழ்நிலையும் எனக்கு இல்லை.

    யாருக்கு தேவையோ, அவர்களே சமரச அரசியல் செய்து கொள்கிறார்கள். எனக்கு அதுபோன்ற நிலைமை இதற்கு முன்பும் வந்ததில்லை, தற்போதும் இல்லை. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்த விவகாரத்தில் பிரதாப் சிம்ஹாவுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் மேலோட்டமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்

    நான் முதல்-மந்திரியாக இருந்த போது ஊழல் தடுப்பு படையில் பதிவான 65 வழக்குகளை லோக் அயுக்தாவுக்கு மாற்றி இருந்தேன். எதிர்க்கட்சி தலைவர்களுடனும் சரி, எதிர்க்கட்சிகளுடனும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சமரச அரசியல் செய்து கொண்டது கிடையாது. அரசியல் வேறு, சொந்த விவகாரங்கள் வேறு. இவை இரண்டையும் ஒரு கண்ணில் பார்ப்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.

    நான் முதல்-மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா மீதான 5 வழக்குகள் குறித்து விசாரிக்க லோக் அயுக்தாவுக்கு சிபாரிசு செய்திருந்தேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக சமரசம் செய்து கொண்டதில்லை. ஒவ்வொருவரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் எதற்காக பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்கட்டண உயர்விலும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது.
    • காங்கிரஸ் அரசு பொய் பேசுகிறது

    பெங்களூரு :

    பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தால் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர். இந்த 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அறிவிக்கும் முன்பாக மத்திய அரசுடன், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஆலோசனை நடத்தவில்லை. தற்போது மத்திய அரசிடம் இருந்து அரிசி கிடைக்காது என்று தெரிந்தும், அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தடுப்பதாக குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறை மூடி மறைக்கும் விதமாக மத்திய அரசு மீது பழிபோடும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 1-ந் தேதியில் இருந்தே 10 கிலோ அரிசி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு கொடுக்க வேண்டும். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதல்-மந்திரி சித்தராமையா பேசி இருப்பதை பார்க்கும் போது ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி கொடுக்காமல் மோசம் செய்வதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஏழை மக்களை மோசடி செய்வதற்காக இந்த திட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் 5 கிலோ அரிசியை வழங்கி வருகிறது. தற்போது முதல்-மந்திரி சித்தராமையா ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்குவதாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். உண்மையில் 5 கிலோ அரிசியை பிரதமர் மோடி தான் ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார்.

    இதனை மறைத்து விட்டு காங்கிரஸ் அரசும், முதல்-மந்திரி சித்தராமையாவும் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவது போன்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்க நினைக்கிறார்கள். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிவு செய்தால், 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே கூடுதல் அரிசி வழங்குவதற்காக டெண்டர் விட்டு இருக்கலாம். தற்போது டெண்டர் மூலமாக அரிசி வாங்கி இருக்கலாம்.

    ஆனால் காங்கிரசாருக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்க மனம் இல்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மக்களை திசை திருப்ப பொய் குற்றச்சாட்டுகளையும், காரணங்களையும் சித்தராமையா கூறி வருகிறார். 10 கிலோ அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை ஏழை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை காங்கிரஸ் தொடங்க வேண்டும்.

    வருகிற ஜூலை முதல் வாரத்தில் இருந்து பி.பி.எல். கார்டு வைத்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு 10 கிலோ அரிசியை காங்கிரஸ் அரசு வழங்க வேண்டும். காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி இந்த திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், பா.ஜனதா தெருவில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபடும். காங்கிரஸ் உத்தரவாதம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற நினைக்கிறது. இதனை பா.ஜனதா வேடிக்கை பார்க்காது.

    மின்கட்டண உயர்விலும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. மே 12-ந் தேதி மின் கட்டண உயர்வுக்கு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கேட்டு இருந்தது. ஜூன் 2-ந் தேதி மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் 2-ந் தேதி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது பா.ஜனதா இல்லை, காங்கிரஸ் கட்சி ஆகும்.

    காங்கிரஸ் அரசு பொய் பேசுகிறது. காங்கிரஸ் அரசு பொறுப்புடன் நடந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் அரசு கூறியபடி 10 கிலோ அரிசி வழங்காவிட்டால், மக்களுடன் சேர்ந்து பா.ஜனதாவும் தீவிர போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
    • உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 9 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பொருளாதாரம், கல்வி, சமூக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். மோடி பிரதமரான போது நாட்டின் பொருளாதார நிலை சரியாக இருக்கவில்லை. உலக அரங்கில் இந்தியா மீதான நம்பகத்தன்மையும் குறைவாக இருந்தது.

    பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக பணியாற்றிய அனுபவத்தால், நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றுள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பயங்கரவாத செயல்கள் அதிகமாக நடைபெற்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது.

    அனைத்து கட்சிகளின் நம்பிக்கையையும் பெற்று ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தினார். இதனால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நிதி ஆயோக் ஏற்படுத்தப்பட்டு மாநிலங்களுக்கு 40 சதவீத வரி பங்கு வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளார். உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 4 மருத்துவ கல்லூரிகள், ஐ.ஐ.டி. கல்லூரி மற்றும் கடலோர பகுதிகளின் வளர்ச்சிக்கு ரூ.1,250 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு போய் சேருவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் அரசியல் செய்தால் கர்நாடகத்திற்கு தான் நஷ்டம் ஏற்படும்.

    கிசான் சம்மான் திட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த 54 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 400 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார இலக்கை அடைய கர்நாடகமும் தனது பங்களிப்பை வழங்கும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி.
    • மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.

    பெங்களூரு :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்திருந்தனர். மந்திரிசபை கூட்டத்தில் இலவச திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அமல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனடியாகவே பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

    பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு, பா.ஜனதாவினர் தலை வணங்கி செல்ல வேண்டும் என்ற பிரச்சினையே இல்லை. பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளை நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பல்வேறு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பா.ஜனதா தோல்வி அடைந்திருக்கிறது.

    நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி.

    தற்போது காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியாக இல்லை. அவர்கள் ஆட்சி நடத்தும் விதம், பதவிக்காக மோதல் காரணமாக காங்கிரஸ் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
    • கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம்.

    பெங்களூரு :

    தற்காலிக முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து 6 நாட்களுக்கு பிறகு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். அரசியலில் யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

    பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற மக்கள் ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த கட்சி அளித்த வாக்குறுதிகள் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, நமது மாநிலத்தின் நிதிநிலையை சீர்குலையாமல் பார்த்து கொள்வதும் அவர்களின் கடமை. இந்த விஷயத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    எதிர்க்கட்சியாக நாங்கள் பொறுப்புடன் பணியாற்றுவோம். நிலம், நீர் விவகாரங்களில் அரசியல் இல்லாமல் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் அரசை எச்சரிக்கை பணியை நாங்கள் செய்வோம். மாநிலத்தை வளர்ப்பதில் பெரிய சவால்கள் உள்ளன. கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.

    பா.ஜனதாவின் தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்து வருகிறோம். இந்த பணி பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதே கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். பா.ஜனதாவில் தலைமை பண்பு உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

    சில பகுதிகளில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. தேர்தலுக்கு தயாராவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அதனால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. நாங்கள் மீண்டும் வீறு கொண்டு எழுவோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • 'சார்லி-777' படத்தில் தெருநாய் பற்றி சிறப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளது.
    • இந்த படத்தை பார்த்து மக்கள் விலங்குகள் மீது தனி அன்பு கொள்பவராக மாற வேண்டும்.

    பெங்களூரு :

    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ரக்சித் ஷெட்டி நடித்துள்ள படம் 'சார்லி-777'. பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே உள்ள வணிகவளாகத்தில் இருக்கும் தியேட்டரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 'சார்லி-777' படத்தை பார்த்தார். அவருடன் மந்திரிகள் ஆர்.அசோக், பி.சி.நாகேஸ் ஆகியோரும் அந்த படத்தை பார்த்தார்கள்.

    படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென்று கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

    'சார்லி-777' படத்தில் தெருநாய் பற்றி சிறப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளது. நாய்கள் பற்றி மக்களுக்கு இரக்கம் வேண்டும். தெருநாய்களை மக்கள் முடிந்த அளவுக்கு தத்தெடுத்து வளர்க்க வேண்டும். நாய்கள் செய்யும் செயல்களால் மக்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து மக்கள் விலங்குகள் மீது தனி அன்பு கொள்பவராக மாற வேண்டும்.

    மாநிலத்தில் தெருநாய்களை வளர்க்கவும், அந்த நாய்களை பாதுகாக்கவும் அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நாய் மற்றும் விலங்குகள் பற்றியும், அவற்றின் அன்பு குறித்தும் நடிகர் ரக்சித் ஷெட்டி, இயக்குனர் கிரண் சிறப்பான படத்தை கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ஜூன் 10-ந் தேதி வெளியான படம் ‘777 சார்லி’.
    • கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை படம் பார்த்துவிட்டு தன் நாயினை நினைத்து அழுத புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்து ஜூன் 10-ம் தேதி வெளியான படம் '777 சார்லி'. கன்னடத்தில் உருவான இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றினார்.

    '777 சார்லி' என்ற நாயுடனான அன்பைச் சொல்லும் நகைச்சுவைப் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை '777 சார்லி' திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் வளர்த்த நாயினை நினைத்து அழுதுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பசவராஜ் பொம்மை

    பசவராஜ் பொம்மை


    மேலும், படம் குறித்து அவர் கூறுகையில், ' நாய்களை பற்றிய பல படங்கள் உள்ளன, ஆனால் இந்த திரைப்படம் உணர்சிகள் மற்றும் விலங்குகளின் ஒத்திசைவை காட்டுகிறது. நாய் அதனுடைய கண்கள் வழியாக உணர்சிகளை வெளிப்படுத்துகிறது. இது ஒரு நல்ல திரைப்படம். இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். நாயின் அன்பானது நிபந்தனையற்ற அன்பு அது தூய்மையானது' என்று அவர் கூறியுள்ளார்.

    முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று கடந்த ஆண்டு இறந்தபோது அதனை அவர் கட்டிப்பிடித்து கதறி அழுத புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

    அன்னிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க கடந்த 22-ந்தேதி சென்றார். அவர் கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல நிறுவனங்களின் நிறுவனங்களை கர்நாடகத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவோஸ் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இந்தியாவில் தொழில் தொடங்க கர்நாடகம் பாதுகாப்பான மாநிலம். நாங்கள் பிற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை. முதலீடுகளை ஈர்ப்பதில் சர்வதேச அளவில் போட்டி போடுகிறோம். இந்தியாவில் உள்ள மொத்த வெளிநாட்டு நிறுவனங்களில் 50 சதவீதம் கர்நாடகத்தில் உள்ளது.

    இந்த நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்கு கர்நாடகத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு, திறமையான மனித வளம் மற்றும் தொழில் தொடங்க எளிமையான நடைமுறைகள் இருப்பது தான் காரணம் ஆகும். நடப்பு ஆண்டில் மேலும் 4 விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பெங்களூரு மீதான அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் 2, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.

    பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தின் வரலாறு வேறுபட்டது. இந்த தாவோஸ் பயணம் என்க்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இங்கு வந்த சர்வதேச முதலீட்டாளர்கள், பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதை அங்கீகரித்துள்ளனர். குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலை, சீனாவின் வீழ்ச்சி போன்றவற்றால் உலக நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. அந்த நிறுவனங்கள் கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கின்றன.

    ஏனென்றால் இங்கு உயர்ந்த தொழில்நுட்ப சுற்றுச்சூழல், அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனங்கள், விமானவியல், பாதுகாப்பு, உபகரணங்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் கர்நாடகத்திற்கு நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது.

    கடந்த ஓராண்டாக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வந்த அன்னிய நேரடி முதலீடுகளில் 42 சதவீதம் கர்நாடகத்திற்கு வந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள் உற்பத்தி, பேட்டரி சேமிப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. காலநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.தீ மூலம் வெளியேறும் வாயுவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

    கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 63 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகும். கர்நாடகத்தில் உள்ள எந்த நிறுவனமும் வேறு மாநிலத்திற்கு செல்லாது. ஏனென்றால் இங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொழில் செய்வதற்கான உகந்த சூழல் இருக்கிறது. கர்நாடகத்தில் அடுத்தப்படியாக செமிகண்டக்டர், ஹைட்ரஜன் எரிபொருள், அம்மோனியா வாயு உற்பத்திக்கு நாங்கள் அதிக முன்னுரிமை செலுத்துகிறோம்.

    ஹைட்ரஜன் எரிபொருள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் பேசி வருகின்றன. அதற்கு சில குறிப்பிட்ட இடங்கள் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன. அதை செய்து கொடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. கர்நாடக அரசு ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை அமல்படுத்தியது. ஹைட்ரஜன் எரிபொருளை அதிகளவில் உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுகின்றன. பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் இந்த நிறுவனங்களை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    ×