search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village"

    • உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.
    • திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.

    உடுமலை,

    உடுமலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பாட வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.அப்போது மேல்நிலைபள்ளி மாணவர்கள் சிலர் குடும்ப பொருளாதாரச்சூழல் காரணமாக கட்டுமானம், விவசாயம் சார்ந்த பணிக்குச்சென்றனர்.இதையடுத்து அவ்வப்போது, நேரடி வகுப்புகள் துவங்கிய போதும் மாணவர்கள் சிலர், பல நாட்களாக பள்ளி செல்வதை தவிர்த்து வந்தனர்.

    அவர்களைகட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டாலும், பயன் இல்லாமல் போனது.அவ்வகையில் பள்ளிகள் முழு அளவில் செயல்பட்டும் உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.

    நடந்து முடிந்த 10, 11 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில், ஆப்சென்ட் பட்டியல் அதிகரித்தே காணப்பட்டது.அதில்பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது:-

    கிராமப்புற பள்ளிகளில் குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. காரணம் குழந்தை திருமணங்கள். திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.இதில் பெற்றோர்களே பள்ளி படிப்பை நிறுத்தி வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து வைக்கும் சூழல் உள்ளது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏர்வாடி பகுதியில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
    • வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏர்வாடி:

    வேளாண்மை துறை சார்பில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேளாண் பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் களக்காடு சிங்கிகுளம் பஞ்சாயத்து சமுதாய நலக்கூடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.

    இத்திட்டத்தை பற்றிய விரிவான கருத்தாக்கத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது வழங்கினார். சிங்கிகுளம் கால்நடை உதவி மருத்துவர் ஜான் ரவிகுமார் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்யும் செயல் விளக்கத்தை எடுத்துரைத்தார்.

    வேளாண்மை பொறியியல்துறையின் திட்டங்களை உதவி பொறியாளர் அருணா விளக்கி கூறினார். தோட்டக்கலையின் திட்டங்களை தோட்டக்கலை உதவி அலுவலர் முத்துவிநாயகம் விளக்கி கூறினார்.

    வேளாண் வணிக துறை சார்ந்த திட்டங்களை உதவி வேளாண் அலுவலர் முத்து வீர் சிங் விளக்கி கூறினார். பல்வேறு வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    உதவி கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார். இதில் களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அஞ்சனாதேவி செய்திருந்தார். கோவிலம்மாள்புரம் வேளாண்மை அலுவலர் வானுமாமலை, தோட்டக்கலை அலுவலர் இசக்கியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்துல் ரவூப், செங்களாகுறிச்சி கிராம துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் காமாட்சி, உதவி கால்நடை மருத்துவர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #PonnamaravathiViolence

    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதை கண்டித்தும் அதில் பேசிய இருவரையும் கைது செய்தால்தான் தங்கள் ஊரில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக் கூறியும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பு குடிப்பட்டி கிராமமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்துநடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உறுதி அளித்து வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன்பிறகு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கருப்புக்குடிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமமக்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டனர்.

    பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கைது நடவடிக்கை மேற்கொள்வதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உறுதி அளித்ததையடுத்து நள்ளிரவில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்த 4 கார்கள், 2 வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

     


    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பொன்னமராவதி அருகே சித்தூர், மீனாட்சிபுரம், குழிபிறைப்பட்டி, வீரணாம்பட்டி, பனையப்பட்டி, தேனிமலை, நமண சமுத்திரம் உள்பட மொத்தம் 50 இடங்களில் மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டாலும் சில இடங்களில் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி, ஐ.ஜி.வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லட்சுமி (திருச்சி), லோகநாதன் (புதுக்கோட்டை), மாவட்ட எஸ்.பி.க்கள் செல்வராஜ், ஜியாஉல்ஹக் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ், 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

    அதில், ஏப்ரல்19-ந்தேதி முதல் 21-ந்தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்மூலம் ஒரே இடத்தில் 4பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     


    இதற்கிடையே கலவரம் தொடர்பாக பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்கள் யாரென்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறு பரப்பியவர்கள் தஞ்சை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னமராவதி பகுதியில் நேற்று பல இடங்களில் பஸ்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி பொன்னமராவதியில் இன்று பஸ்கள் ஓடவில்லை.

    புதுக்கோட்டையிலும் பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஆலங்குடியிலும் பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

    இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    144 தடை உத்தரவால் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூடப்பட்டது. இதனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஆலங்குடி பகுதிக்கு வந்திருந்த பொது மக்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மேலும் ஆலங்குடி பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சை, பேராவூரணி, சிவகங்கை, திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு டவுன் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். இன்று இரவுக்குள் பஸ்களை இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே நேற்றிரவு பொன்னமராவதி கட்டியா வயலில் 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். #PonnamaravathiViolence

    மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அடக்கம் சொந்த ஊரில் இன்று மாலை நடக்கிறது. #JKRitheesh #RIPJKRitheesh
    ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

    தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து கடந்த சில நாட்களாக வாக்கு சேகரித்த அவர், நேற்று சொந்த ஊரான ராமநாதபுரம் வந்தார். அங்கு அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு திரட்டினார்.

    மதிய உணவுக்கு பிறகு ராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த ரித்தீசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை கேட்டு உறவினர்களும், அ.தி.மு.க.வினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தபோது சிலர் இதய துடிப்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    ரித்தீஷ் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அவர், இறந்து விட்ட நிலையில் குடும்பத்தினர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர்.

    மரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணிக்கு ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்படுகிறது.

    ரித்தீசின் மறைவுக்கு தென் இந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளன.

    நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் டைரக்ட் செய்த ‘‘கானல் நீர்’’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த ரித்தீஷ் தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ‘‘எல்.கே.ஜி.’’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.



    தி.மு.க.வில் மு.க. அழகிரியின் ஆதரவாளரான ரித்தீஷ், 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், ஜே.கே.ரித்தீசும் தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

    நடிகர் சங்கத்தில் விஷால், நாசர், கார்த்திக் ஆகியோர் தலைமையிலான அணிக்கு ஆதரவாக செயல்பட்ட ரித்தீசுக்கு சமீபத்தில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. #JKRitheesh #RIPJKRitheesh
    ஊட்டி அருகே 2 ஆண் காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து மலை காய்கறி பயிர்களை சேதப்படுத்தியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி முதல் வரலாறு காணாத கடும் உறைபனி பொழிவு காணப்படுகிறது.

    இதனை தொடர்ந்து வன பகுதியில் பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் கருகி உள்ளன. இதனால் தற்போது வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிறியூர், சிங்காரா வன பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

    இவ்வாறு இடம் பெயர்ந்து செல்லும் யானை கூட்டங்களில் 2 ஆண் யானைகள் ஊட்டி அருகே உள்ள தூனேரி, மரகல், நெல்லிக்கம்பை, தொரையட்டி ஆகிய கிராம பகுதிக்குள் கடந்த 5 நாட்களுக்கு முன் புகுந்தது.

    அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட் போன்ற பயிர்களை தின்று தேசப்படுத்தியது. சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை சேதம் செய்தது.

    யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 ஆண் யானைகளும் கோபம் அடைந்தது. அவைகள் பொதுமக்களை துரத்தியது. பின்னர் பட்டாசுகள் வெடித்து யானைகள் எப்பநாடு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

    யானைகளை வன பகுதிக்குள் விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டதால் அப் பகுதியை சுற்றி உள்ள தேயிலை விவசாயிகள் மற்றும் மலை காய்கறி விவசாயிகள் நேற்று தோட்ட வேலைக்கு செல்லவில்லை.

    மயக்க ஊசி செலுத்தி டாப்சிலிப்பில் விடப்பட்ட ‘சின்னதம்பி’ யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது. யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். #ChinnathambiElephant
    பொள்ளாச்சி:

    கோவை சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையனூர், தாளியூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், ரேசன் கடை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

    விவசாயிகளின் புகாரையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 கும்கிகள் உதவியுடன் விநாயகன் என்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சின்னத்தம்பி யானை தப்பியது.

    மயக்க ஊசியில் இருந்து தப்பிய ‘சின்னத்தம்பி’ யானை பன்னிமடை, சி.ஆர்.பி.எப் கேம், கதிர்நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றி பயிர்களை சேதப்படுத்தி வந்தது.



    சின்னத்தம்பி யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து சலிம், தெப்பக்காடு முதுமலை முகாமில் இருந்து முதுமலை என்ற கும்கிகளும் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்த விஜய், சேரன் ஆகிய கும்கிகள் உதவியுடன் கோவை ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், விரைவு காப்பாட்டு குழுவினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 50 பேர் விடிய, விடிய போராடி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி கடந்த 25-ந்தேதி சின்னதம்பி யானையை பிடித்தனர்.

    3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் சின்னத்தம்பி யானையை கும்கிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றினர். லாரியில் யானையை ஏற்றும்போது அதன் தந்தங்கள் முறிந்தன. கும்கிகள் குத்தியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. லாரியில் கொண்டு செல்லப்பட்ட சின்னதம்பி யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை டாப்சிலிப் பகுதிக்கு அன்று இரவே கொண்டு செல்லப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னர் டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டது.

    ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டது. 26-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்பட்டதில் விடப்பட்ட வரகளியாறு பகுதியிலேயே தண்ணீர், உணவு அருந்தி அந்த பகுதிலேயே தூங்கியது தெரியவந்தது. நேற்று முதல் சின்னத்தம்பி யானை மெதுவாக நடந்து ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊரை நோக்கி வந்தது. இந்த ஊர் ஆழியாறில் இருந்து 9 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

    சின்னதம்பி யானை இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இன்று காலை 6 மணியளவில் ரோட்டில் நடந்து வந்தது. யானை புகுந்த தகவல் தெரியாத சிலர் வழக்கம்போல் வெளியில் நடமாடினார்கள். யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். கம்பீரமாக அதே சமயம் தந்தங்கள் முறிந்த நிலையில் சுற்றிய யானை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னத்தம்பி என்ற யானை என்பதை அறிந்தனர்.

    சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது அது சின்னதம்பி யானைதான் என்பதை உறுதிப்படுத்தினர். காட்டுயானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இதேபோன்று ஊருக்குள் நுழைந்துகொண்டே இருந்தால் அதனை வளர்ப்பு யானையாக முகாமில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். #ChinnathambiElephant
    கிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள்.
    தமிழர் திருநாளான பொங்கல் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும். அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் பொங்கல்விழா களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை மர உரலில் வைத்து, இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு மாறி மாறி உலக்கையால் இடித்து, முறத்தால் புடைத்து, பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள்.

    பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஜே ஜே என்று குதிபோட ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். நேரடியாகச் சென்று காளவாய்களில் வாங்கி வந்திருந்த சுண்ணாம்புக் கற்களை பெரியபானைகளில் வைத்து, அதில் நீரூற்றிக் கலந்து சுவர்களுக்கு வெள்ளையடிப்பார்கள் ஆண்கள். வெளித்திண்ணைகளில் காவி நிறத்துப் பட்டைகளை அழகாகத்தீட்டுவார்கள்.

    அன்றைய பொங்கல் விழாவில் வாழ்த்து அட்டை அனுப்புவது பிரதானமாக இடம் பெற்றிருந்தது. இளைஞர்கள் தனக்குப் பிடித்த நடிகர், நடிகையரின் படம் அச்சடித்த அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பத் திட்டமிடுவார்கள். காதலர்களோ, இதயத்தில் அம்புபாயும் படம் வாங்கலாமா அல்லது பூக்களில் வண்ணத்துப் பூச்சிகள் தேன்பருகும் காட்சி பொருத்தமாயிருக்குமா என்று சிந்தித்துச் சிந்தித்து அட்டைகள் வாங்க கடைக்குச் செல்வதே ஒரு தித்திக்கும் அனுபவம். அதை, யாருக்கும் தெரியாமல், எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு காதலியின் கைகளில் சேர்க்கும் அந்த நேரம் வரை திக்திக் நிமிடங்கள்.

    பெரியவர்கள் சாமி படங்கள் உள்ள அட்டைகள் வாங்கி, அதில் தங்கள் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டி, சொந்தங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்கள். வாழ்த்தை வாசிக்கும் உறவுகளும், அடுத்த பொங்கல்வரை, அதை பொக்கிஷமாகக் கருதி, பீரோக்களில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இந்த நவீனயுகத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எல்லோர் கைகளிலும் ஒரு செல். அதில் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாகவோ அல்லது மெசேஜ் வாயிலாகவோ, உணர்ச்சியே இல்லாத மரத்துப்போன ‘ஹேப்பி பொங்கல்’ என்ற ஒற்றைச்சொல்.

    கிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். கணவன் வீட்டின் முற்றத்தில் சிறிய மணல் மேடை அமைத்து, அதன் மேலே பாறாங்கல்லையோ, செங்கல் கற்களையோ அடுக்கி அடுப்புப் போன்ற அமைப்பை உண்டாக்கியிருப்பார். பாறாங்கல் அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    மனைவி வாரச்சந்தையில் வாங்கிவந்திருந்த மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி, அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு, பானையின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பாள். எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் குழந்தைகள் போட்டிபோட்டுக் கொண்டு தூக்கிவருவார்கள். மனைவி பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் ஊற்றுவாள்.

    அடுப்பில் நெருப்பு எரிய எரிய அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கும். பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு. அந்தக் குதூகல நிமிடமும் வரும். பால் பொங்கும். மனைவி குலவைச்சத்தமிட்டு பின் வலம்புரிச் சங்கெடுத்து ஊதுவாள். கணவன் வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை முழக்குவான். குழந்தைகள்“பொங்கலோ பொங்கல்” என்று கூறுவர்.

    மனைவி பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலிட்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்குவாள். பொங்கலை குலசாமிக்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் உண்ணத் தொடங்குவார்கள். குழந்தைகள் வழியாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து அனுப்புவார்கள். நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தாத்தாவுக்கு, பேரன் ஊட்டி விடுவான்.

    ‘இது ஒண்ணு போதுமுடா பேராண்டி, நேரே சொர்க்கந்தாண்டா’ என்று பேரனை மெச்சுவார் தாத்தா. தாத்தா பக்கத்தில், கால்நீட்டி வெற்றிலை பாக்கு இடித்துக்கொண்டிருக்கும் பாட்டிக்கு பேத்தி ஓடிப்போய் பொக்கைவாயில் பொங்கலைத் திணிப்பாள். ‘அடி என்னப் பெத்தாரு, நீ தீர்க்காயுசா வாழணுமுடி ஏஞ்செல்லம்’ என்று பேத்தியை பாட்டி உச்சி முகர்ந்து சொடக்குப் போடுவாள். இதெல்லாம் நடந்தது அந்தக்காலம். இப்போது அது மலையேறி விட்டது. கணவன் கடைகளில் வாங்கிவரும் ஆலைப் பச்சரிசியை, வெண்கலப் பானையில் இட்டு, கடனுக்கு கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து இறக்குகிறாள் மனைவி.

    நல்ல நேரம்பார்ப்பது என்கிற சடங்கு போய், கூட்டாக அமர்ந்து பொங்கல் உண்ணும் முறையும் ஒழிந்து, ஆளாளுக்கு எப்போதைக்கு வசதிப்படுகிறதோ அப்போது எழுந்து, அதுவும் டி.வி.யில் மூழ்கியபடியே பொங்கலை உண்டு பொழுதைக் கழிக்கும் வெற்று நாளாக உருமாறிவிட்டது இன்றைய பொங்கல். அதிலும் முதியவர்கள் பாடுதான் பெரும் கொடுமை. விழிப் பானையில் கண்ணீர்ப் பொங்கல் பொங்க அவர்கள் அனாதை விடுதிகளில்.

    அந்த கால பொங்கல் விழா நிகழ்வுகளை அசைபோடுகிறபோது மனசுக்குள் மழை அடிக்கிறதே. இதயம் இனிப்பாய் இனிக்கிறதே. அதை யாரும் மறுக்க முடியுமா?.

    கவிஞர்.எல்.பிரைட்
    ஆந்திராவில் கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவருக்கு ரூ.1000 சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NightyBan #AndhraVillage
    நகரி :

    பெண்கள் இரவில் தூங்கும் போது அணிந்துகொள்வதற்காக கண்டறியப்பட்ட இலகுவான உடை ‘நைட்டி’. ஆனால் தற்போது பெரும்பலான பெண்கள் நைட்டியை பிரதான உடையாக மாற்றிக்கொண்டு பகல் நேரங்களிலும் அதனை அணிந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கிற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கிராமத்தில் வட்டி என்கிற இனத்தை சார்ந்த மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை வேத வாக்காக எண்ணி அதன்படி செயல்படுவது மக்களின் வழக்கம்.



    அந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் பகலில் அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்து உள்ளனர். அதனை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். பெண்கள் பகலில் நைட்டி அணிந்திருப்பதை பார்க்கும் நபர் வட்டி இன தலைவர்களுக்கு அதனை தெரியப்படுத்தினால் அவருக்கு ரூ.1000 சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை விரும்பாத அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியப்படுத்தினர். அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போது, அங்குள்ள யாரும் வட்டி இன தலைவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். #NightyBan #AndhraVillage
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலிகள் காப்பகத்தில் நுழைந்த கிராம மக்கள், கொடூரமாக தாக்கி புலி ஒன்றை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UP
    லக்னோ:

    இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கும் புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேவேளை மனிதர்களை கொன்று உண்ணும் புலிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவற்றை வனத்துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்துவதும் வழக்கம். இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சால்டவ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புலி தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை தடுக்க வந்த காப்பகத்தின் பாதுகாவலரை தாக்கிய கிராம மக்கள், வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 10 வயது பெண் புலியை அங்கு இருந்த ஒரு ட்ராக்டரை கொண்டு ஏற்றியுள்ளனர். அதோடு விட்டுவிடாமல், அதனை கட்டையால் சாகும்வரை தாக்கி கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட பெண் புலி இதுவரை எந்த மனிதரையும் தாக்கியது இல்லை என்றும், கிராம மக்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு புலியை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். புலியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். #UP
    சங்கரன்கோவில் மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ளது நெடுங்குளம் கிராமம். இங்கு 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும்.

    இந்த கிராமத்தை பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் டவுன் மின்வாரியத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெடுங்குளம் கிராமத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் மின் இணைப்பை, நடுவக்குறிச்சி கிராம மின்வாரிய தொகுப்பிற்கு மாற்ற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்குளம் கிராம மக்கள் சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் நடுவக்குறிச்சி கிராம மின் தொகுப்பிற்கு மாற்றி அமைக்க முயற்சி செய்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் டவுண் போலீசார் சென்று முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்ததை நடத்தி உரிய முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    நாமக்கல் அருகே 9 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வீசாணம், மரூர்பட்டி, ராசாகவுண்டனூர், செங்காளி கவுண்டனூர், கொண்டம்பட்டி, செம்பாறைபுதூர், கரடிப்பட்டி, பொட்டணம், செல்லிப்பாளையம் ஆகிய 9 கிராமங்களுக்கு மின்சாரம் செல்லும் மின்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்து, மின் வினியோகத்தை சீரமைத்தனர்.

    ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மீண்டும் 9 கிராமங்களுக்கும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று மின்பாதையில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து, மீண்டும் மின்சாரம் வழங்கினர். இதுபோன்ற பிரச்சினை அடிக்கடி ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    மத்திய பிரதேச மாநிலம் டிகம்கர் மாவட்டத்தில் உள்ள தரம்பூர் கிராமத்தில் தன் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக தலித் இளைஞரை பஞ்சாயத்து தலைவர் கொடூரமாக தாக்கியுள்ளார். #BanPartiality #DalitManAttacked
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் டிகம்பர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது தரம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் வாழும் தலித் சமூகத்தைச் சார்ந்த தயாராம் அகிர்வால் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ஹேமந்த் குர்மியின் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஹேமந்த் குர்மி, அவரது சகோதரர் வினோத் குர்மி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான தினேஷ் யாதவ் ஆகியோர் தயாராம் அகிர்வாலை மிக கொடூரமான முறையில் தாக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து தயாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ஹேமந்த் குர்மி, வினோத் குர்மி, முன்னு குர்மி, அனிருத் குர்மி, மற்றும் அவர்களது அண்டை வீட்டார் தினேஷ் யாதவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று இரவு ஹேமந்த் குர்மி உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். #BanPartiality #DalitManAttacked
    ×