search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayabaskar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.
    • சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

    இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

    • கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
    • இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    விராலிமலை:

    முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இதில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க பணியாட்களை நியமித்து அவ்வப்போது அந்த காளைகளுடன் பழகியும் வருகிறார்.

    இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.

    வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த தடுப்பு கட்டையில் தலைமோதி அந்த இடத்திலேயே காளை சுருண்டு விழுந்தது. தன்னுடைய வளர்ப்பு காளை களத்தில் நின்று விளையாடுவதை நேரில் காண வந்திருந்த டாக்டர் விஜயபாஸ்கர், காளை காயமடைந்து விழுந்ததை பார்த்ததும் பதறிப்போனார். அதன் மீது தண்ணீர் தெளித் தும் பயனில்லை.

    கேலரியில் இருந்து இறங்கி வந்த அவர் அசைவற்று மயங்கிய நிலையில் கிடந்த காளையை தடவிக்கொடுத்தார். எப்படியும் காளை எழுந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த காளை உயர் சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தையை போல் பார்த்துக்கொண்ட டாக்டர் விஜயபாஸ்கர் சொந்த ஊரில் இருந்து 2 முறை காளையை பார்க்க ஒரத்தநாடு சென்றார். நேற்றும் காளைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்னரே அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருப்பு கொம்பன் காளை இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.

    ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கரின் புகழ்பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கல்லில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் டாக்டர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதற்கிடையே இறந்த கருப்பு கொம்பன் காளைக்கு டாக்டர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    • அனல்பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனம் இரட்டை இலை பக்கம் உள்ளது.
    • தி.மு.க.வின் 2 ஆண்டுகளில் நகர் மன்ற உறுப்பினர்களின் அராஜகம், மக்களை திரும்பி பார்க்காத செயல்கள் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் துரிதமாக நடக்கிறது. அனல்பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனம் இரட்டை இலை பக்கம் உள்ளது. இன்றைக்கு கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கின்ற ஆட்சிக்கு கடிவாளம் போன்று அ.தி.மு.க. வெற்றி இருக்க வேண்டும். கண்முன் தெரியாமல் போகக்கூடிய ஆட்சிக்கு வேகத்தடை வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

    கடந்த அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் 2 ஆண்டுகளில் நகர் மன்ற உறுப்பினர்களின் அராஜகம், மக்களை திரும்பி பார்க்காத செயல்கள் உள்ளது.

    பேரறிஞர் அண்ணா சொன்னது போல் இந்த ஆட்சியின் அவலங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியின் தெருவோரங்களிலும், டீக்கடைகளிலும் பேசப்பட்டு வாக்குச்சாவடியில் முடிவடைகின்ற போது இரட்டை இலை வெற்றி பெறும்.

    இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு தி.மு.க. வரிந்து கட்டிக்கொண்டு ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுவிடும் என்ற தேர்தல் பயத்தை தேர்தல் ஜூரத்தில் இருப்பதையும் காண முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.80 கோடி மதிப்பில் பேனா சின்னம் வைப்பது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பேனாவை சட்டை பாக்கெட்டில் தான் வைக்க வேண்டும். அதை தாண்டி வேறு எங்கு வைத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்றார்.

    • ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தினர்.
    • தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்ட ஊராட்சி துணைதலைவர்களுக்கான தேர்தல் இன்று ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 12 மாவட்ட கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 6 மாவட்ட கவுன்சிலர் தி.மு.க. தரப்பினரும், 6 மாவட்ட கவுன்சிலர்கள் அதிமுக தரப்பினரும் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார். இன்று இவரை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் கரூர் அழைத்து சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி அருகே பாலம் உள்ளது. அந்த பாலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவர்களது காரை சுற்றி வளைத்து வைத்து முன்பக்க கண்ணாடி மற்றும் பின் கண்ணாடிகள் மீது ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தி சென்றனர்.

    இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்தில் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடக்கும் தருணத்தில் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், இது போன்ற தாக்குதல் சம்பவம் நடத்தி எங்களுடைய வேட்பாளரை கடத்தி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும். மேலும் இந்த ஆசிட் வீசிய சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் மூலம் காரில் பயணம் செய்த இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்றார்.

    இது தொடர்பாக காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது.
    • முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

    இதுபற்றி நிருபர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

    எனது வீட்டில் ஏற்கனவே 2 முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.

    இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை எடுத்து சென்றுள்ளனர். வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்று உள்ளனர்.

    காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வரவுள்ள நிலையில் எங்களை பழி வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரை ஏவி சோதனை நடத்துகிறார்.

    மின் கட்டண உயர்வை திசை திருப்பவும் அண்மையில் கோவை, திருப்பூர் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    லஞ்ச ஒழிப்பு துறையினர் என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து கைபேசிகள் இரண்டையே எடுத்து சென்றுள்ளனர்.

    முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்து சென்று உள்ளனர். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது.

    மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், தி.மு.க. ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எல்லாம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

    இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

    • எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 44 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது அனைத்து இடங்களிலும் மாலை வரை நீடித்தது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 கார்களும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் 2 வங்கி லாக்கர் சாவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபால் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8 கிலோ 28 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்பாக 120 ஆவணங்கள், 4 வங்கி லாக்கர் சாவிகள், 1 பென் டிரைவ், 1 வன் தட்டு உள்ளிட்டவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர்.
    • அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீடு உள்பட கோவையில் 9 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு சோதனை நடைபெறும் தகவல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது.

    தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வாசலில் அமர்ந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். சோதனை நடப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் அறிந்து, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

    இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.க்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

    தொடர்ந்து தொண்டர்கள் வாசலில் நின்றபடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு இருந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கு மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    • ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது.
    • எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் துயர் துடைக்க, வருகிற 16-ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் கழக செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

    ஏற்கனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது இந்த விடியா தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது.

    தி.மு.க. அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள தி.மு.க. அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் தி.மு.க. அமைச்சர் கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது தண்டனை வாங்கித் தருவாரா?

    எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

    ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடு பொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த விடியா தி.மு.க. அரசு, மீண்டும் குறுக்கு வழியில் தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. தி.மு.க. மந்திரிகளைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும்.
    • இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர் ஊரக வளர்ச்சித்துறை பணிகளில் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே 3 தடவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அப்பாவு எம்.எல்.ஏ. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.

    அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ்.வி.வேலுமணி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் ஒப்பந்த பணிகளை அரசு விதிகளுக்கு மாறாக தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாக தெரிய வந்தது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விதிமுறைகளை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து எந்தெந்த இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி பகுதிகளில் 7 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.

    எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எஸ்.பி.வேலுமணி வீட்டில் திட்டமிட்டு 4-வது முறையாக சோதனை நடத்தப்படுவதாக அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் தனது பணி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மஞ்சக்கரணை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அந்த தனியார் மருத்துவ கல்லூரி உள் நோயாளி படுக்கை வசதியுடன் 2 வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்றும் விஜயபாஸ்கர் அனுமதி வழங்கி உள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டு பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் தலா 1 இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படும்போது யாராவது ஒரு தலைவரின் வீடுகளில்தான் சோதனை நடத்தப்படும். ஆனால் இன்று ஒரே நாளில் 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள் என மொத்தம் 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முற்றுகையிட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த 39 இடங்களிலும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைக்குமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

    • சென்னையில் உள்ள எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
    • சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை நடந்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இவர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆர்.சந்திரசேகர் உள்ளார். இவருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள சபரி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி வேல்முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஞானமூர்த்தி நகர் பவுனம்மாள் தெருவில் சுதன் கனக்‌ஷன் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டில் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கும் இன்று காலையில் சோதனை நடைபெற்றது. இதன் பங்குதாரராக பரசுராமன் என்பவர் உள்ளார்.

    வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓரியன்ட் போல்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் பங்குதாரராக விஜயகுமார் என்பவர் உள்ளார். இந்த இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    கோடம்பாக்கம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஆர்.கே.எம். எலக்ட்ரிக்கல்ஸ் கடையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் உரிமையாளராக மணிவண்ணன் உள்ளார்.

    சென்னையில் உள்ள இதுபோன்ற எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அடையாறு எஸ்.பி. ரோட்டில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கம் மற்றும் நந்தனத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 15 இடங்களில் சோதனை நடைபெற்ற நேரத்தில் தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    தாம்பரத்தில் 2 இடங்களிலும், ஆவடி பகுதியில் 3 இடத்திலும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.

    தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும், தாம்பரம் கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள எல்.டி. பல்புகள் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு கோகுலாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான கணேஷ்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவரது வீட்டில் முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடந்து வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த படூர் கிராமத்தில் ஜே.சி.பி. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிமுக ஆட்சியின்போது கிராமப் புறங்களில் உள்ள தெருவோர விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும்.
    • குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கிறது. என்றாலும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குட்கா ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களது குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் ஏராளமான ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் சென்னையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து அந்த டைரி தகவலை டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. குட்கா பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அ.தி.மு.க. அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து குட்கா விற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் எனவே இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் அப்போதைய எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

    அதன் பேரில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர்.

    அடுத்தடுத்து நடந்த அதிரடி நடவடிக்கைகளால் குட்கா விற்பனையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. குறிப்பாக அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர்கள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

    குறிப்பாக சென்னை புறநகரில் குட்கா, பான் மசாலா போதை பொருட்களை இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் லஞ்சம் கொடுக்கப்பட்ட வகையில் சுமார் ரூ.40 கோடி பணம் கைமாறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளில் இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் டைரி தகவல் மூலம் தெரியவந்தது.

    சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள். பணப் பரிமாற்றம் நடந்தது பற்றி அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அதன் பிறகு அவர்கள் குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து ஆவணங்களை கைப்பற்றி , சுமார் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினார்கள். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

    2-வது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் தற்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.

    டெல்லி சி.பி.ஐ.யின் 3-வது லஞ்ச ஒழிப்பு பிரிவின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குட்கா ஊழல் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, மற்றும் ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ.யிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழக அரசின் பரிந்துரைகள் உள்ளடங்கிய பதிலாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகளை அளித்து தமிழக அரசு கடிதம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கொடுக்கும் ஒப்புதலைத் தொடர்ந்து சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.

    சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும். ஆனால் குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    ×