search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எஸ்.பி.வேலுமணி-விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நிறுவனங்களில் சோதனை
    X

    சோதனை நடந்த அடையாறில் விஜயபாஸ்கர் தங்கி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு.

    எஸ்.பி.வேலுமணி-விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நிறுவனங்களில் சோதனை

    • சென்னையில் உள்ள எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
    • சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    சென்னையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை நடந்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இவர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ஆர்.சந்திரசேகர் உள்ளார். இவருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள சபரி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி வேல்முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஞானமூர்த்தி நகர் பவுனம்மாள் தெருவில் சுதன் கனக்‌ஷன் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டில் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கும் இன்று காலையில் சோதனை நடைபெற்றது. இதன் பங்குதாரராக பரசுராமன் என்பவர் உள்ளார்.

    வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓரியன்ட் போல்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் பங்குதாரராக விஜயகுமார் என்பவர் உள்ளார். இந்த இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    கோடம்பாக்கம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஆர்.கே.எம். எலக்ட்ரிக்கல்ஸ் கடையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் உரிமையாளராக மணிவண்ணன் உள்ளார்.

    சென்னையில் உள்ள இதுபோன்ற எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் பலவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது கல்லூரி தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அடையாறு எஸ்.பி. ரோட்டில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கம் மற்றும் நந்தனத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் 15 இடங்களில் சோதனை நடைபெற்ற நேரத்தில் தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    தாம்பரத்தில் 2 இடங்களிலும், ஆவடி பகுதியில் 3 இடத்திலும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.

    தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும், தாம்பரம் கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள எல்.டி. பல்புகள் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு கோகுலாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான கணேஷ்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவரது வீட்டில் முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடந்து வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த படூர் கிராமத்தில் ஜே.சி.பி. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×