search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkaiah naidu"

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
    • குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    புதுடெல்லி :

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை மாநிலங்களவையில் எழுப்பிய அவர், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது சம்மன் அனுப்புவது அழகா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளும் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.

    இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதாக உறுப்பினர்களிடையே ஒரு தவறான கருத்து இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அதாவது பாராளுமன்ற தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு குற்ற வழக்கில் கைதாவதில் இருந்து ஒரு எம்.பி.க்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.

    அந்தவகையில் பாராளுமன்ற தொடரின்போதும் குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை விசாரணை அமைப்புகளால் கைது செய்யவோ, தடுப்புக்காவலில் வைக்கவோ முடியும்.

    மேலும் குற்ற வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்தும் உறுப்பினர்களுக்கு விலக்களித்து சிறப்புரிமை அளிக்கப்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களை காரணம் காட்டி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    அதேநேரம் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது சிவில் வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து எம்.பி.க்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

    • ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள்.
    • சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்பட வேண்டும்.

    சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் இளைஞர் சங்க வைர விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    ராஜஸ்தான் இளைஞர் சங்கம் செயல்படுத்தும் புத்தக வங்கி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் அற்புதமான பணியைச் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் கடனாக வழங்கப்படுகின்றன.

    அதனை பெறும் மாணவர்கள் அந்த புத்தகங்களை இந்த ஆண்டு படித்து முடித்து பின்னர், அடுத்த ஆண்டு திருப்பிக் கொடுத்து புதிய பாடப்புத்தங்களை பெற்றுக் கொள்கிறார்கள். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,

    சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது அதன் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

    ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள். சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரும் தங்களுடைய பாடப் புத்தகங்களை வாங்க முடியாமலோ அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்தவோ முடியாமலே பின்தங்கி விடக்கூடாது.

    தேச வளர்ச்சியின் வேகத்திற்கு மிக பெரிய உந்து சக்தியாக கல்வி உள்ளது. இளைஞர்களின் முழுத் திறனையும், ஆக்கப் பூர்வமான ஆற்றல்களையும் பயன்படுத்தி இந்தியா வலிமையான நாடுகளின் பட்டியலில் சேரும்.

    அதிக மக்கள்தொகை தரும் நன்மைகள், அதிக திறமையான இளைஞர்களின் இருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு மிகப்பெரிய சாத்தியம் உள்ளது.

    21 ஆம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையிலான தேவைகளுக்கு ஏற்ப, தரமான கல்வியை வழங்குவதும், படித்த மனிதவளத்தின் பரந்த தொகுப்பை மிக திறமையான பணியாளர்களாக மாற்றுவதும் காலத்தின் தேவையாகும். எனவே, தரமான, குறைந்த செலவில் கல்வியைப் பெறுவதில் எந்தக் குழந்தையும் பின் தங்கிவிடாமல் இருக்க, நாம் எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

    தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் சாராம்சம். வாழ்க்கையில் வெற்றியும், புகழும், செல்வமும் அடைந்த ஒவ்வொரு இந்தியனின் கடமை, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அதை திரும்பக் கொடுப்பதுதான் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

    நம்முடையது பரந்த தேசத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களும் இதற்கு முன்வர வேண்டும். சக குடிமக்களின் நலனுக்காக தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

    மகா கவிஞரான திருவள்ளுவர் கூறியது போல், நற்பண்புகளில் மிகவும் சிறந்த இரக்கமே, உலகையே முன்னெடுத்து சென்று இயக்குகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாய் மொழியில் கல்வி கற்பது சுயமரியாதையை அதிகரிக்கும்.
    • முதன்மை நிலையில்உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்ற வேண்டும்.

    ஐதாராபாத்தின் ராமந்தபூர் நகரில் பள்ளி பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

    தேசியக் கல்விக் கொள்கை-ஐ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான வகையில் மாணவர்களின் முழு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

    சில பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை இழிவாகப் பார்க்கின்றன, மேலும் ஆங்கிலத்தில் பிரத்தியேகமாகப் பேசவும் கற்கவும் அவர்களை ஊக்குவிக்கின்றன. தாய் மொழியில் கல்வியை கற்றுக் கொள்வது, சுதந்திரமாக தொடர்பு கொள்ள உதவும், சுயமரியாதையை அதிகரிக்கும். சொந்த கலாச்சார உணர்வை மாணவர்களுக்கு வழங்கும்.

    முதன்மை நிலையில் உள்ள பயிற்றுமொழியை தாய்மொழிகளுக்கு மாற்றவும், படிப்படியாக உயர்நிலைகளுக்கும் விரிவுபடுத்தவும் வேண்டும். நமது குழந்தைகளின் ஆளுமையை வடிவமைப்பதில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை தவிர்க்க முடியாது.

    நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான மிக முக்கியமான பண்புகள். உயர் இலக்கை அடையவும், வாழ்க்கையில் முன்னேறவும் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சி நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும்.
    • வடகிழக்கு மாநிலங்கள் உண்மையிலேயே பயணிகளின் சொர்க்கமாக திகழ்கின்றன.

    நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 8 மாநிலங்களில் இருந்து 5 பெண்கள் உள்ளிட்ட 75 மோட்டார் சைக்கிள் வீரர்கள், 18 மாநிலங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர்.

    நடமாடும் வடகிழக்கு என்ற பெயரிடப்பட்டு நடைபெற்ற இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்கள் டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுவை சந்தித்து கலந்துரையாடினர். அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய வெங்கைய நாயுடு கூறியுள்ளதாவது:

    வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளித்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.

    வடகிழக்கு பகுதி சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கிடையே அடிக்கடி நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், நாட்டின் ஒற்றுமையையும். ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தக் கூடியவை.

    அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் நான் அண்மையில், பயணம் மேற்கொண்டேன். அழகிய நிலப்பகுதி, செழுமையான கலாச்சாரம், மக்களின் இனிய விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்ட இந்த மாநிலங்கள் உண்மையிலேயே சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.

    வடகிழக்குப் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டு அதன் எழில், கலாச்சாரம் ஆகியவற்றை பிற மாநில மக்கள் அனுபவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை விஷயத்தில் வடகிழக்கு பிராந்தியம் நாட்டுக்கே வழிகாட்டுகிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் கற்றுக் கொண்டு படிப்படியாக நீடித்த விவசாயத்திற்கு மாற வேண்டும்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு முன்னேற்றம், இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலை அளிக்கிறது. விபத்துக்களைக் குறைக்க அனைத்து மட்டத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • இளையராஜாவுக்கு, மத்திய இணை மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்து வாழ்த்து.

    விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். 

    பாராளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்ற பிறகு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது அழைப்பின்பேரில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இளையராஜா சந்தித்தார். 

    முன்னதாக பாராளுமன்ற அலுவலகத்தில் இளையராஜாவிற்கு சால்வை அணித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட, இசைஞானி இளையராஜா சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தமது டுவிட்டர் பதிவில், மந்திரி எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.  

    இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி முரளிதரனும் உடன் இருந்தார்.

    • பழமையான மதிப்புகளைப் பாதுகாக்க ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம்.
    • சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை முக்கியம்.

    பகவத் கீதையின் போதனைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஸ்ரீல பிரபுபாதர் குறித்த புத்தக வெளியீட்டு விழா குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:

    ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது. இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம்.

    சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து இந்திய இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம்.

    ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம்,பண்டைய காலங்களிலிருந்து ஆன்மீகமே நமது தேசத்தின் ஆன்மாவாகவும், நமது நாகரிகத்தின் அடித்தளமாகவும் உள்ளது.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நெறிமுறைகள்அடிப்படையில் ஒரு லட்சிய வாழ்க்கையை நடத்த மக்களை வழிநடத்தும் கையேடுகளாக நமது வேதங்கள் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்குகிறது.

    இந்தியா பக்தி பூமி, இந்தியர்களின் நாடி, நரம்புகளில் பக்தி பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் பல ரிஷிகள், முனிவர்கள் மற்றும் ஆச்சார்யர்கள், மதச்சார்பற்ற, உலகளாவிய வழிபாட்டு முறையின் மூலம் மக்களை உயர்த்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது.
    • நல்ல மனிதர் வெளியேறுகிறார் என காங்கிரஸ் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தங்கர் போட்டியிட உள்ளார்.

    இந்நிலையில், ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை காங்கிரஸ் பாராட்டி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெங்கையா நாயுடுவின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனம் தவறவிடப்படும். பல சமயங்களில் அவர் எதிர்க்கட்சியினர் அனைவரையும் கிளர்ந்தெழச் செய்தார். ஆனால் இறுதியில் ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார். அவர் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் சோர்வடைய மாட்டார் என எனக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார்.

    • அரசியல் சட்ட விதிமுறைகளால் ஒரு மொழியை பாதுகாத்து விட முடியாது.
    • கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

    பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:

    சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும்.

    அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசுஉதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது. குடும்பம் குடும்பமாக, சமுதாய அளவில் மற்றும் கல்வி நிறுவனங்களால் தான் அந்த மொழி உயிர்ப்புடன் திகழும். சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது செம்மொழிகளைப் பாதுகாத்து, அதனை பரவச் செய்வதற்கு, தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது.

    பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சமஸ்கிருத கட்டுரைகளின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை புத்தகங்களாக வெளியிடுவது தான், சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும்.

    இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்துகொள்ள சமஸ்கிருதம் நமக்கு உதவுகிறது. இந்தியா குறித்து அறிந்து கொள்ள ஒருவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆகஸ்ட் 12 வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
    • கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.

    பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் நேற்று மாநிலங்களவை அவைத்தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் வேலை பார்க்கும் அனைத்த ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைபோல் மழைக்காலத் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அலுவல் நேரங்களில் உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிவிற்கு பிறகும் பாராளுமன்ற வளாகங்கள் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத் தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • இந்த தேர்தலில் வருகிற 29-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
    • எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக யஷ்வந்த் சின்காவின் பெயர் பரிந்துரை.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. வருகிற 29-ந்தேதி மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பழங்குடியின பெண் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க் கட்சிகள், கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் குடியரசுத் தலைவர் தேர்வு தொடர்பாக பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த குழுவில் 6 மத்திய மந்திரிகள், பாஜக தேசிய செயலாளர்கள் 3 பேர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வுக்கு இடமில்லை.
    • இந்தியர்கள் அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள்.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா  நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது:

    மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உலக அமைதி மிகவும் முக்கியமானது. நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை.

    இந்தியர்கள் தங்களது கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதுடன், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள். உலகமே ஒரே குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

    உலகில் இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. யாராக இருந்தாலும் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இந்தியாவின் மிக உயர்ந்த அரசியல் சாசன பதவியை அடைய முடியும்.

    இந்திய நாகரீகத்தின் முக்கிய பண்பு பகிர்தல் மற்றும் கவனம் செலுத்துதல் என்பதாகும். எந்தவொரு மதத்தையும், மதத்தை சார்ந்த தலைவர்களையும் அவமரியாதை செய்வது, இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது.

    எந்த மதத்துக்கு எதிராகவும் வெறுப்பு பேச்சையோ, அவதூறு கருத்துக்களையோ வெளியிடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஜனநாயக உரிமைக்காக போராடும் போது வன்முறையைத் தூண்டுவது நாட்டு நலனுக்கு பாதகமானது.

    பாராளுமன்றம், சட்டமன்றங்களில் விவாதித்து முடிவெடுத்தலே முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். பாராளுமன்றங்களில் நடைபெறும் அமளிகளைப் பெரிய அளவில் வெளியிடுவதைக் கைவிட்டு, ஊடகங்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோமா அல்லது பலவீனப்படுத்துகிறோமா என்பதை கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். மாணவர்கள் பொதுவாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதுடன், மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து குடிமக்களிடம் பெருமித உணர்வை இந்த அருங்காட்சியகம் ஏற்படுத்துகிறது.
    • அனைத்து மக்களும் டெல்லியில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை காண வேண்டும்

    தலைநகர் டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தில் முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜவஹர்லால் நேரு தொடங்கி, மன்மோகன்சிங் வரையிலான 14 பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளையும், அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதையும் இந்த அருங்காட்சியகம் சித்தரிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி பொது மக்கள் பார்வைக்காக இது திறக்கப்பட்டது.

    இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவரது மனைவி உஷா ஆகியோர் இன்று முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    இந்தியாவின் அரசியல் பயணம் குறித்த ஒலி-ஒளி காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, பிரதமர்களின் அருங்காட்சியகம் அனைத்து குடிமக்களிடமும் பெருமித உணர்வை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

    பின்னர் அங்கிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் அவர் தமது கருத்துக்களை பதிவிட்டார். அதில் நமது தேசிய தலைமையில் பன்முகத்தன்மை மதிக்கப்பட்டதை இந்த அருங்காட்சியகம் வெளிப்படுத்துகிறது.

    நமது தேசத்தின் வறுமையை, எழுத்தறிவின்மையை எதிர்த்த போராட்டத்தில் இருந்து விண்வெளி ஆய்வு புதிய உச்சங்களை தொட்டது வரையிலான மாற்றங்களின் அனுபவத்தை குடிமக்கள் உணரும் வகையில் இதில் உள்ள கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளர்.

    அனைவரும் இந்த அருங்காட்சியகத்தை காண வேண்டும் என்றும் அதன் மூலம் ஊக்கத்தையும், பெருமிதத்தையும் உணர வேண்டும் என்றும் பிரதமர்களின் அருங்காட்சியக அனுபவம் குறித்து தமது முகநூலில் வெங்கையா நாயுடு பதிவிட்டுள்ளார்.

    ×