search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Rain"

    • கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
    • முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் சேதமானது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் சேதமான ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதமான ஆவணங்களை பெறுவதற்கு இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பழைய தாசில்தார் அலுவலகம், தாசிதார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரல் வட்டத்தில் பழையகாயல் மரிய அன்னை மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கிராம நிர்வாக அலுவலகம், ஆழ்வார்திருநகரி கிராம நிர்வாக அலுவலகம், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சாயர்புரம் கிராம நிர்வாக அலுவலகம், ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    திருச்செந்தூர் வட்டத்தில் ஆத்தூர் சமுதாயநலக்கூடம், புன்னைக்காயல் புனித வளனார் திருமணமண்டபம், சுகந்தலை சமுதாய நலக்கூடம், திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகம், மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி, மானாடு தண்டு பத்துக்கு வெள்ளாளன் விளை சர்ச் மகால், நங்கைமொழி, லெட்சுமி புரம், செட்டியா பத்து, உடன்குடிக்கு உடன்குடி வருவாய் அலுவலகம், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, இருப்பிச்சான்று, வருமானச்சான்று, வாரிசுச்சான்று, விதவை, ஆதரவற்றோர் சான்று உள்ளிட்டவைகள் வருவாய்த்துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, பட்டா நகல்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு, டிரைவிங் லைசென்சு, பத்திர ஆவணங்கள் மற்றும் சிலிண்டர் இணைப்பு புத்தகம் ஆகியவைகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    எனவே இன்றும், நாளையும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
    • கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பேய் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் அந்த பகுதிகளை பெருமளவில் பாதித்தது.

    இந்தநிலையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, அந்த பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்.பி. நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார். அப்போது அந்த சிறுமி 'தனக்கு கண் பார்வையில் பிரச்சனை இருக்கிறது என்றும், அதற்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்' என்றும் வேண்டுகோள் வைத்தார். சிறுமியின் அந்த வார்த்தையை கேட்டதும், உடனடியாக கண் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்..

    • நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த அதி கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் பொருட்களை நிவாரணமாக வழங்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் துறை மூலமாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொருட்கள் வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார், நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட வட்டங்களாக நெல்லை, பாளை, சேரன்மகாதேவி ஆகியவை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, மானூர் உள்ளிட்ட வட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 16 கிராமங்களும், நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் மாவட்டம் முழுவதும் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், அதன் அடிப்படையில் அரசு அறிவித்த நிவாரண தொகை எந்தெந்த கிராமங்களுக்கு எவ்வளவு என்பது கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை.
    • சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள சடையனேரிகுளம் கனமழையால் உடைந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக அடைக்கப்பட்டது.

    குளம் உடைப்பால் பாதிக்கப்பட்ட பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், வட்டன் விளை, மருதூர்கரை ஆகிய கிராமங்களில் இன்றும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை. தொடர் விடுமுறைக்கு பின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று திறந்து செயல்படுவதால், நேரடி போக்குவரத்து வசதி இல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    • ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
    • நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவரது மனைவி ரம்யா (வயது 24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 18-ந் தேதி காலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அப்போது, கனமழை பெய்தது. இதனால் ரம்யாவின் தாயார் பாத்திமா, அவரது தம்பி ஜேசுபால் மற்றும் உறவினருடன் அன்று காலையில் சரக்கு ஆட்டோவில் ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் ஏரல் அருகே உள்ள சூழைவாய்க்கால் சாலையில் வெள்ளம் அதிகமாக சென்றதால் ஆட்டோவில் செல்ல முடியவில்லை.

    இதனால் ஜேசுபால், ரம்யாவை தோளில் தூக்கிக் கொண்டும், அப்பகுதி மக்கள் சேர்ந்து கையை பிடித்து சேர்த்து கொண்டு தண்ணீரைக் கடந்து ஏரலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர். மாலை 6 மணி அளவில் வெள்ளம் ஆஸ்பத்திரி உள்ளே வந்தது. அப்போது, ரம்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

    அங்கிருந்த நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார். முட்டளவுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தபோது, ரம்யாவுக்கு, ஜெயலட்சுமி பிரசவம் பார்க்க தொடங்கினார். இரவு 7 மணிக்கு ரம்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    வெள்ளம் குறைந்த 3 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து ரம்யா, குழந்தை மற்றும் குடும்பத்தினரை படகு மூலம் சிறுத்தொண்டநல்லூரில் கொண்டு விட்டனர். அங்கிருந்து போலீசார் தங்களது வாகனத்தில் பட்டாண்டிவிளையில் விட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

    இதுகுறித்து ரம்யாவின் தாயார் பாத்திமா கூறுகையில், 'எங்களுக்கு நர்ஸ் ஜெயலட்சுமிதான் தெய்வம். நாங்கள் எப்படி தப்பிப்போம். குழந்தையை எப்படி காப்பாற்றுவோம் என நினைத்தோம். ஆனால் கடவுள் அருளால் ஜெயலட்சுமி எங்களுக்கு உதவி செய்தார்' என்றார்.

    இதுதொடர்பாக நர்ஸ் ஜெயலட்சுமி கூறுகையில், 'ரம்யா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரும்போது தண்ணீர் இல்லை. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வந்தபோது, எனக்கு பயமாக தான் இருந்தது.

    மின்சாரமும் இல்லாததால் இன்வெர்ட்டர் மூலம் ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த பல்ப்பை நாடித்துடிப்பு பார்க்கும்போது இயக்குவேன். சரியாக இரவு 7 மணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருந்தனர். அப்போது, பல்ப்பும் அணைந்து விட்டது. கடவுள் புண்ணியத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை' என்றார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.
    • 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த மழையால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    குறிப்பாக தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டிணம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, நெல்லை- திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


    2 மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைபட்டது. இதைப்போல மின்வினியோகம், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ள சேத பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் அறிவித்தார்.

    மேலும் மத்திய குழுவினரும், நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சாலை, மின்வினியோகம், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தூத்துக்குடி நகரில் புதிய பஸ்நிலைய பகுதிகள், குறிஞ்சி நகர், இந்திராநகர், பச்சாது நகர், பாரதிநகர், தங்கமணிநகர், காந்திநகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் இன்னும் வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.


    சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நகரில் பல இடங்களில் இயல்புநிலை திரும்பினாலும் வெள்ளம் வடியாத பகுதிகளில் 9-வது நாளாக இன்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம் சாலையில் குளம் போல் வெள்ளநீர் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    தொடர்ந்து வெள்ளத்தில் நடப்பதால் கால்களில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்தப்பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    புன்னக்காயல் உள்ளிட்ட சில கிராமங்களில் 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் நிவாரண முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் பலர் வீடுகள் இழந்தும், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் ஏற்பட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    • 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
    • லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளமானது தாமிரபரணி ஆற்றில் கரை புரண்டு ஓடியது.

    இந்த வெள்ளத்தினால் ஆற்றில் குடிநீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த உறைகிணறுகள் மூழ்கியது. பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரையிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூழ்கி அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தன. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    மேலும் பல்வேறு வகையான கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் எடுத்துச்செல்ல ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாய்களும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வெள்ளம் சற்று தணிந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகளில் மோட்டார்கள் பழுது பார்க்கப்பட்டு குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக ஆறுகளில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்த கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் தொழில்நுட்ப குழு வரவழைக்கப்பட்டது. அதன்படி 9 பேர் கொண்ட குழு வந்து 2 நாட்களாக குடிநீர் திட்டங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் உறைகிணறுகளை சுற்றிலும் நீர் அதிகமாக இருந்தாலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொழில்நுட்ப குழுவினர் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு பணி செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி பாளை சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உரை கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் சிவந்தி பட்டியில் உள்ள நெடுஞ் சான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் அதனையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, வேளாண்துறை, நீர்வளத் துறை என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து சீரமைப்பு பணிகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    சீவலப்பேரி பகுதியில் ஆய்வு செய்த பின்னர் தற்போது சிவந்திபட்டியில் குளம் உடைந்த பகுதியை ஆய்வு செய்துள்ளேன்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 328 உடைப்புகள் இதுவரை சரி செய்யப்பட்டுள்ளன.


    மீதமுள்ள குளங்களில் உடைப்புகளை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவந்திப்பட்டியில் ஏற்பட்டுள்ள குளம் உடைப்பு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குளங்கள் அடைக்கப்பட்டு சரி செய்யப்படும். நீர்வளத் துறை மூலமாக மீண்டும் இந்த குளங்களுக்கு அந்தந்த அணைகள் மூலமாக தண்ணீர் நிரப்பி விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யப்படும்.

    சாலைகளை பொறுத்த வரை இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 175 இடங்களில் சாலைகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 150 இடங்களில் சாலைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளோம். அதன் பின்னர் சாலைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.

    அதேபோல் மின்சார இணைப்புகளை பொருத்த வரை நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று 2 இடங்களில் மட்டும் வெள்ளம் வடியாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் மின்விநியோகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

    இதுபோல் தூத்துக்குடி பகுதியிலும் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்விநியோகம் வழங்கப்பட வேண்டி உள்ளது. ஏரலில் இரவு முழுவதும் மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையிலும் அனைவரும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு மின் வினியோகம் வழங்கி உள்ளனர்.

    இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், கால்நடை துறை உள்ளிட்டவையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரை தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 2 மாவட்டங்களிலும் உள்ள 101 கூட்டு குடிநீர் திட்டங்களில் 71 திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் 34 திட்டங்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இன்னும் 36 திட்டங்கள் சரி செய்யப்பட வேண்டி உள்ளது.

    வெள்ளத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளை பொறுத்தவரை இதுவரை நெல்லை மாவட்டத்தில் 13 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தால் இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    அதன் பின்னர் முழுமையான விவரம் தெரியவரும். இது தவிர நெற்பயிர்கள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்தது தொடர்பான கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறு வணிகர்கள், தொழிற்சாலை உள்ளிட்டவர்களின் பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் பின்னர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து அரசு உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கும். இது போன்ற வணிகர்கள் மற்றும் தொழிற் சாலை நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக உதவுவதை தவிர வங்கிகள் மூலமாகவும், காப்பீடு திட்டங்கள் மூலமாகவும் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த கால கட்டங்களில் கேரளாவுக்கு நிவாரண பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து அதிக உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது கேரளாவில் இருந்து நீர்வளத்துறைக்கு டெக்னிக்கல் குழு இங்கு வந்துள்ளது. அவர்கள் குடிநீர் சப்ளை பணிகளுக்கு தேவையான அனைத்து சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளம் பாதித்துள்ள மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தற்போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.
    • இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் வடக்கே 4 தெற்கே 4 என்று 8 மாவட்டங்களை அடியோடு புரட்டிப் போட்டது. சென்னையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன.

    இதனால் பழுதடைந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்க வாகன ஷோரூம்களில் வாகனங்கள் குவிந்து உள்ளன. இந்த வாகனங்களை பழுது நீக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

    தண்ணீரில் மூழ்கிய கார்களை முற்றிலும் மூழ்கியிருந்தால் 'பி' பிரிவு, பாதி டயர் அளவு மூழ்கி இருந்தால் 'சி' பிரிவு என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கேற்ப தொகைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

    ஆனால் பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக இல்லை என்றே பலரும் புலம்புகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சுமதி அன்பரசு. காங்கிரஸ் நிர்வாகியான இவரது காரும் தண்ணீரில் சிக்கியது. அந்த காரை பழுது நீக்குவதற்காக அம்பத்தூரில் ஒரு ஷோரூ மில் விட்டிருக்கிறார். அந்த காரை பழுது நீக்க சுமார் ரூ.8 லட்சம் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

    இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்ட போது, ரூ.4 லட்சம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். சரி, அந்த காரை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று மதிப்பிட்ட போது ரூ.5 லட்சம் என்று மதிப்பிட் டுள்ளார்கள்.

    இதனால் திகைத்து போன சுமதி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவர்கள் தர ஒப்புக் கொண்டுள்ள ரூ.4 லட்சத்தையாவது தந்தால் மீதி பணம் போட்டு வேறு காராவது வாங்கலாம் என்று நினைத்துள்ளார்.

    ஆனால் பணத்தை உங்களுக்கு தர முடியாது பழுது நீக்கும் நிறுவனத்துக்குத் தான் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இன்சூரன்ஸ் கட்டுவது நான்தானே. பணத்தை என்னிடம் தருவது நியாயம் தானே? என்று கேட்டுள்ளார்.

    ஐந்து லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.8 லட்சத்தை செலவழிப்பதில் எந்த நன்மையும் கிடையாது. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தவித்து வருகிறார். இதே போல் இன்னும் பலர் தவிப்பதாக கூறப்படுகிறது.

    • வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.
    • தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.

    திருச்சி:

    பெரியார் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் பெரியார். சனாதானத்தை நமது பகை தொடர்ந்து வேரறுப்பது மூலமே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என உலகுக்கு உணர்த்திய அவரது அரசியலை நீர்த்துப் போவதற்கு சில சனாதான சக்திகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

    தொடர்ந்து அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

    வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பொருட்டாக மதிப்பதில்லை, அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது.

    மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். வருகிற 29-ந் தேதி தமிழக, முழுவதும் ஏ.வி.எம். எந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.


    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு திருச்சியில் நடைபெற இருந்த 'வெல்லும் சனநாயக மாநாடு' தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.

    முதலமைச்சரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம். அமைச்சர் பொன்முடி வழக்கை முனைப்போடு எதிர்கொள்வதற்கு தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சட்டப்படி உரிய தீர்வை பெறுவார்கள்.

    பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். சி.ஏ.ஜி. மெகா ஊழல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. முன்பு இல்லாத வகையில் இந்த ஆட்சி ஊழலில் முன்மாதிரியான ஆட்சியாக உள்ளது.

    ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய 900 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்குகிற நிதி. ஆனால் பாதிப்புக்கு ஏற்றார் போல புயல் மழைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

    அதை பா.ஜ.க. அரசு பொருட்படுத்தவே இல்லை. ரூ.21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதி ஒரு பைசா காசு கூட வழங்கவில்லை.

    வழக்கம் போல ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி வழங்கிவிட்டு தாங்கள்தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்வது போன்ற முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல தொணியை ஏற்படுத்துகிறார். எந்த வகையில் ஏற்புடையது அல்ல.

    இந்த பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்.
    • தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஒரு வேளை உணவு, குடிநீர், பால், உறைவிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நானும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் அவர்களை தினசரி சந்தித்து எங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.

    கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் இது. வெள்ள நிவாரண பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை எடை போட்டு பார்க்க கூடாது.

    அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை விட அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×