search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur By election"

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமு.க.வை ஆதரிப்பது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருபது சட்டப்பேரவை தொகுதிகள், பேரவை உறுப்பினர்கள் இன்றி உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் ஜனவரி 28-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    கலைஞர் வெற்றிபெற்ற திருவாரூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வரவேற்கிறது.

    அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படவும், மதச்சார்பின்மை காக்கப்படவும் மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதே போன்று மாநில உரிமைகள், அதன் நலன்கள் மற்றும் மக்கள் நலன் என்று எதுக் குறித்தும் கவலைப்படாமல் மத்திய ஆட்சியின் தயவு ஒன்றே போதுமானது என்ற நிலையில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்பட வேண்டும்.



    ஆங்கில புத்தாண்டான 2019 மோடி, எடப்பாடி தலைமையிலான மத்திய, மாநில ஆட்சிகளுக்கு விடை அளித்திடும் ஆண்டாகும்.

    இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமு.க.வை ஆதரிப்பது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.

    தேசம் காக்க, தமிழகம் மீட்கப்பட திருவாரூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள், தி.மு.க.விற்கு பேராதரவு அளித்து, வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய், மாநில செயற்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ThiruvarurByElection #DMK #MKStalin #CPI #Mutharasan
    திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கின. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

    தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 3-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 10-ந்தேதி மனுத்தாக்கலுக்கு இறுதி நாளாகும்.


    11-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களைத் திரும்பப் பெற 14-ந்தேதி கடைசி நாளாகும். 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடப்பதைத் தொடர்ந்து 31-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்தன.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கின. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று இரு கட்சிகளும் அறிவித்து உள்ளன. மனு கொடுத்தவர்களிடம் அ.தி.மு.க., தி.மு.க. மூத்த தலைவர்கள் 4-ந்தேதி நேர்காணல் நடத்த உள்ளனர்.

    அதன் அடிப்படையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க., தி.மு.க. முடிவு செய்துள்ளன. நேர்காணல் முடிந்த சிறிது நேரத்தில் 4-ந்தேதி இரவே தி.மு.க. வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அறிவித்து விடுவார் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. சார்பில் திருவாரூரில் களம் இறங்க உள்ளூர் நிர்வாகிகள் பலரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு போட்டியிட தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. சார்பில் கடந்த தடவை போட்டியிட்ட திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் இருவரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    இதன் காரணமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளில் அ.தி.மு.க., தி.மு.க., மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர் தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதியாகும். 1962-ம் ஆண்டு முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.

    தி.மு.க. 1971, 1977, 1996, 2001, 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 7 தடவை வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1967, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் 5 தடவை வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. திருவாரூரில் ஒரு தடவை கூட வெற்றி பெற்றதில்லை.

    இந்த தடவையும் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. இந்த தடவை திருவாரூரில் பலமுனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை திருவாரூர் தேர்தல் பற்றி ஆலோசித்து வருகின்றன.

    எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி ஏற்படும். தி.மு.க.வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ஆதரவாக உள்ளன.

    அ.தி.மு.க.வை எத்தனை கட்சிகள் ஆதரிக்கும் என்பது இனி தான் தெரியும். கஜா புயல் கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவம் ஆடியபோது திருவாரூர் தொகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கஜா புயலின் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. பிரசார பணிகளில் மாற்றம் ஏற்படுத்தி புதிய வியூகத்தை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் இப்போதே திருவாரூர் தொகுதிக்குள் உலா வரத் தொடங்கி விட்டனர். இதனால் திருவாரூர் தொகுதியில் இன்றே விறுவிறுப்பு உருவாகி விட்டது. #ThiruvarurByElection
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் தேவை இல்லை என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார். #Krishnasamy #ThiruvarurByElection #GajaCyclone
    தேனி:

    தேனியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இன பிரிவில் இருந்து விலக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு, சலுகை தேவை இல்லை, எங்களுக்கான அடையாளமும் உரிமையும் வேண்டும். தமிழகத்தில் கஜா புயலால் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த சூழ்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் நடத்த கூடாது. அவ்வாறு நடத்தினால் முறைகேடு நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

    மக்களவை தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். புயல் நிவாரண பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒரு சிலரின் தூண்டுதலால் போராட்டங்கள் நடந்து வருகிறது.


    நடிகர் கமல்ஹாசன் ஒரு தரப்பினரை கொம்பு சீவிவிட்டு வருகிறார். அதனால்தான் அவரது தேவர்மகன்-2 படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நான் கமல்ஹாசனுக்கு எதிரானவன் இல்லை. சினிமா மூலம் தத்துவம் அறிவுரைகளை எடுத்துகூறிய காலம் மாறி தற்போது தனிநபர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. காதல் தற்கொலைகள், ஆணவ படுகொலைக்கு சினிமாவே முக்கிய காரணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #ThiruvarurByElection #GajaCyclone
    திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #HCMaduraiBench
    மதுரை:

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகிய இருவரும் மரணம் அடைந்ததால் அந்த 2 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.

    தேர்தல் விதிகளின்படி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நேரத்தில் பருவமழை காரணமாக இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணம் இல்லை.

    ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனதற்கு எதிராக தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

    எனவே தேர்தல் விதிகளின்படி உடனடியாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல்களை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு அறிக்கை தாக்கல் செய்தார்.


    அதில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு இடைத்தேர்தலை நடத்த முடியாது.

    திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். #ThiruvarurByElection #HCMaduraiBench
    ×