search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS Bharathi"

    • அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
    • தி.மு.க. வரலாறு தெரியாமல் சிலர் சவால் விடுகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆளும் கட்சியினராக இருப்பதால் தி.மு.க.வினருக்கு பழைய உணர்வுகள் இல்லை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பத்தை விட்டு வருகிறவன் தி.மு.க. தொண்டன். அதுபோல வேறு எந்த கட்சியிலும் கிடையாது. அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. வரலாறு தெரியாமல் சிலர் சவால் விடுகிறார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெங்களூரு சென்று விட்டு திரும்ப முடியாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். முடிந்தால் அவர் முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும். பிறகு என்ன நடக்கும்? என தெரியும். மற்ற கட்சிகளை போல் தி.மு.க. வில் தற்போது வந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் மோடிகள் வந்தாலும் தி.மு.க. வை அழிக்கவும் முடியாது. ஒழிக்கவும் முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் பழைய வழக்குகளை திமுக வாபஸ் பெறவில்லை.
    • பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். வீடியோவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    * செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

    * மாரடைப்பு எப்போது எப்படி வேண்டும் என்றாலும் ஏற்படலாம். இதுகூட தெரியாமல் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி எப்படி இருந்தார் என தெரியவில்லை.

    * உடல் நலம் பாதித்தவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் என்ன தவறு?. திகார் சிறைக்கு சென்று கனிமொழியை ஸ்டாலின், டிஆர் பாலு உள்ளிட்டோர் பார்த்தனர்.

    * இஎஸ்ஐ மருத்துவமனை அறிக்கையை கொச்சைபடுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    * செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் பழைய வழக்குகளை திமுக வாபஸ் பெறவில்லை.

    * செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான்.

    * பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல...

    * பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்.

    * அதிமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை நிரூபித்து காட்டியுள்ளது திமுக.

    * பிடிஆர் ஆடியோ தொடர்பாக தவறான தகவலை ஈபிஎஸ் பரப்புகிறார்.

    * 15 மாதத்தில் மருத்துவமனை திறந்த எங்கள் முதல்வரை போல ஈபிஎஸ் செய்த சாதனை ஒன்றுமில்லை.

    * செந்தில் பாலாஜி மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டால்தான் அவர் குற்றவாளி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
    • பல்வேறு சோதனைகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் திமுகவினர்.

    சென்னை:

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வருகை தந்தனர்.

    செந்தில் பாலாஜி இல்லத்தின் முன் காத்திருந்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பல்வேறு சோதனைகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் திமுகவினர். ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

    மனித உரிமையை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறிய விரும்பினோம். ஆனால், அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதிமுக- பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதலை திசை திருப்பும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

    தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெறாமலேயே தலைமைச் செயலகத்தில் அத்துமீறி சோதனை நடைபெறுகிறது.

    கர்நாடகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ஆனால் அங்கு காங்கிரஸ் தான் வென்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.
    • எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படும் நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. கர்நாடக தேர்தல் முடிவானது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை, ஐடி, சிபிஐ ஆகியவற்றை பாஜக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில் திட்டமிட்டே பாஜக ஐடி ரெய்டை நடத்துகிறது. முதல்வர் வெளிநாட்டு பயணம் மூலம் முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில் அதை திசை திருப்ப இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    கரூர், கோவை உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற்றுத் தந்த செந்தில் பாலாஜியை முடக்க திட்டமிட்டு ஐடி சோதனை நடத்தப்படுகிறது.

    திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே போலீசுக்கு தெரிவிக்காமல் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எத்தனை சோதனை நடத்தினாலும் திமுகவுக்கு கவலையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
    • முன்னுக்குப்பின் முரணான சில கருத்துக்களை, ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும் ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க.வில் அதிக அளவு சொத்துக்கள் வாங்கி குவித்த அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கடந்த 14-ந்தேதி 12 பேரின் சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டார்.

    அதில் தி.மு.க.வுக்கு மொத்தம் ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாகவும் கூறி இருந்தார். அது மட்டுமின்றி தி.மு.க.வினருக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,474.18 கோடி என்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு ரூ.34,184.71 கோடி என்றும் கூறி இருந்தார்.

    அண்ணாமலை இந்த சொத்து பட்டியலை வெளியிட்ட அன்றைய தினமே தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவித்தார்.

    குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை 15 நாளில் எங்களிடம் வழங்காவிட்டால் அண்ணாமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    ஆனால் அண்ணாமலை இதற்கு பதில் அளிக்கையில், தான் சொன்னதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இன்னும் பகுதி-2, பகுதி-3, பகுதி-4 என தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நேற்று அனுப்பிய வக்கீல் நோட்டீசில் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்ததற்காக 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். வீடியோ பதிவை நீக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இதை செய்ய தவறினால் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    தி.மு.க. நோட்டீசுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட காணொலி மற்றும் அதைத் தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை முழுவதுமாக பார்த்ததற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அந்த காணொலியின் இணைப்பையும், இணைய தள முகவரியையும் தாங்கள் அனுப்பிய சட்ட அறிக்கையில் வெளியிட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினர் செய்த சொத்துக் குவிப்பை, தமிழக மக்கள் அறிந்து கொள்ள, ஏப்ரல் 14-ந் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உதவியதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில், தி.மு.க.வினருக்கு சொந்தமான 3,478.18 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளும், 34,184.71 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்துவிட்டு, அடுத்த வரியில், ஒருவர் தி.மு.க. உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

    ஒரு புறம் இது தி.மு.க. சொத்து இல்லை என்றும், மறுபுறம் வழங்கப்பட்ட தி.மு.க.வினரின் சொத்து விவரம் பொய் என்று கூறுவதற்கு மட்டும் தி.மு.க. அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா?

    தி.மு.க. பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ், ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க.வினருக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டது.

    கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில், சென்னை மெட்ரோ ரெயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அவற்றை சி.பி.ஐ.யிடம் அளிக்க உள்ளோம்.

    உங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமல்லாது, முன்னுக்குப்பின் முரணான சில கருத்துக்களை, ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும் ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.

    ஒன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மற்றொன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குனராக இருந்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார்.

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம். இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பஷீர் முகம்மதுடன் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம். அப்துல்லா இயக்குனராக இருந்துள்ளார்.

    நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை, நேற்று எனது டுவிட்டர் பக்கத்திலே கேள்வியாக எழுப்பி உள்ளேன்.

    நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட், நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ், இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும், தி.மு.க.வினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்புகிறேன். இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா?

    நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார்.

    என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் பிரதமர் நிவாரண நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.

    4,400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை, 2021-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுக் கொண்ட புகைப்படம் ஒன்றை, சமூக வலைத்தளத்தில் நான் பார்த்தேன்.

    100 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்?

    அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும்.

    மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் விடுத்துள்ளார்.
    • தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் விடுத்துள்ளார்.

    அதில், தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக இணைய தளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும்.

    48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

    மேலும், இழப்பீடு தொகையாக தி.மு.க.வுக்கு ரூ.500 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • எங்களை விட, ஜெயலலிதாவைவிட அண்ணாமலை அறிவார்ந்த மேதையல்ல.
    • தி.மு.க. நடத்தியதாக கூறும் கல்லூரிகளுக்கான ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    அண்ணாமலைக்கு பதில் அளித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று காலையில் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னார்.

    1972-ல் எம்.ஜி.ஆர். ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னரிடம் கொடுத்ததை குறித்து கருணாநிதி சட்டமன்றத்தில் வரிக்கு வரி பதில் சொன்னார். அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் என்று சொன்னார்.

    அதுபோல இன்றைக்கு அண்ணாமலை சொல்லி இருப்பதை பார்க்கும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது. அவருடைய அறியாமையை பார்த்து இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஐ.பி.எஸ். எழுதி பாஸ் செய்தார். எப்படி அவரை போலீஸ் துறையில் இவ்வளவு நாள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகம் வருகிறது.

    எம்.ஜி.ஆரே எங்கள் மீது புகார் கொடுத்த போது அண்ணாசாலையில் உள்ள அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தம் என்று கையெழுத்து போட்டு கவர்னரிடம் புகார் கொடுத்தார். அந்த தியேட்டர் ஒரு இஸ்லாமிய தோழர்களுக்கு சொந்தம்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருண் ஓட்டல் இருந்தது. அந்த ஓட்டல் கருணாநிதிக்கு சொந்தம் என்று எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டு கவர்னரிடம் கொடுத்தார். அது அவருக்கு சொந்தமில்லை. அதே போல்தான் அண்ணாமலை யார் யாருக்கோ சொந்தமானதையெல்லாம் இவர்களுக்கு சொந்தம் என்று எழுதி கொடுத்து இருக்கிறார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைப்பார்கள்.

    அண்ணாமலை ரபேல் கை கடிகாரத்துக்கு ஒரு சீட்டை காட்டி மோசடி செய்து விட்டார்.

    ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். அவர் பல ஆண்டுகளாக தொழில் துறையில் இருப்பதால் ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கும் வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகள் எல்லாமே மோடியின் கையில் இருப்பதுதான் வேடிக்கை. நாங்கள் திறந்த புத்தகம். எங்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. தி.மு.க. இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை சந்தித்து இருக்கிறது.

    நான் சவால் விட்டு சொல்கிறேன். தி.மு.க. 6 முறை ஆட்சியில் இருந்து உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள். யாராவது ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபித்தது உண்டா?

    எம்.ஜி.ஆர். எங்கள் மீது குற்றச்சாட்டு சொன்னார். 10 வருடம் அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். போலீசை தன் கையில் வைத்திருந்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறையை கையில் வைத்து இருந்தார். அவர் சொன்ன ஒரு குற்றச்சாட்டையாவது நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்ததா? அப்படி நிரூபிக்க முடியாததால் தான் எங்களை சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் இருந்து காலி செய்து வெளியே அனுப்பினார். 10 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தார். ஆனால் எங்கள் மீது .... வழக்கு போட அவரால் முடியவில்லை. காரணம் அதை நிரூபிக்க அவர்களால் முடியவில்லை. அதன் பிறகு வந்த ஜெயலலிதா கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து பாலம் ஊழல் வழக்கு போட்டார்.

    மு.க.ஸ்டாலினை கடலூர் சிறையில் வைத்தார். 10 வருடம் ஆட்சியில் இருந்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. நான் சவால் விட்டு கேட்கிறேன் எங்களை விட, ஜெயலலிதாவைவிட அண்ணாமலை அறிவார்ந்த மேதையல்ல.

    ரூ.1408.97 கோடி என்கிறார். இந்த 1408 கோடி ரூபாய் சொத்துக்கான பத்திரங்களை இன்று முதல் 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும். எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். தி.மு.க.வுக்கு சொந்தமான பள்ளிகள் 3418 கோடி ரூபாய்க்கு இருக்கிறது என்கிறார்.

    அந்த பள்ளிகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை பேர் பட்டியலோடு வெளியிட்டு அதற்குரிய மொத்த ஆவணங்களையும் எங்களிடம் உடனடியாக 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தி.மு.க. நடத்தியதாக கூறும் கல்லூரிகளுக்கான ஆவணங்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதானியின் ஊழலை பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எழுப்பினார்கள். அதற்கு பதில் சொல்ல ஒரு நாள் கூட சபையை கூட்டவில்லை.

    ரூ.20 ஆயிரம் கோடியை செல் கம்பெனியில் மோடி போட்டார் என்று ராகுல் உள்ளிட்ட எல்லோரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். அதற்கு பதில் சொல்லவில்லை. இதில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு ஆருத்ராவில் முதலீடு செய்து விட்டு வயிற்றெரிச்சலடன் இருக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதா அலுவலகமான கமலாயத்துக்கும் சென்று மறியல் செய்தனர்.

    ரூ.2 ஆயிரம் கோடி ஊழலில் பல கோடி ரூபாய் அண்ணாமலை நேரடியாக பெற்றிருக்கிறார். ரூ.84 கோடியை நேரடியாக இவருக்கும், இவரது சகோதரருக்கும் கொடுத்ததாக அவர்களின் கட்சியில் இருப்பவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

    அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் இருக்க கூடிய குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காக அண்ணாமலை நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். நான் அவருக்கு ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வில் இருப்பவர்களை பொருத்தமட்டில் தங்கள் மடியில் கணமில்லை. வழியில் எங்களுக்கு பயமில்லை. இன்னும் சவால் விட்டே சொல்கிறேன்.

    அண்ணாமலை கூறும்போது சாப்பிடுவது அவர் போடுகிறார். கண்ணாடி மக்கள் கொடுத்தது. பேனா இவர் கொடுத்தது. இதுதான் அவருக்கு சொந்தம். மூளையாவது சொந்தமானதா என்று தோன்றுகிறது. இதை பொதுமக்கள் கேட்கிறார்கள். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவராக அண்ணாமலை இருந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான்.
    • அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை.

    சென்னை:

    சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முக்கிய தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட அண்ணாமலை சொல்லவில்லை.

    * அனைவரின் நேரத்தையும் அண்ணாமலை வீணடித்துள்ளார்.

    * அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது.

    * அண்ணாமலை பட்டியல் வெளியிட்ட 12பேரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள்.

    * தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வார்கள்.

    * தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் சாதாரண குடிமகன் கூட வழக்கு தொடரலாம்.

    * அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான்.

    * அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை.

    * அண்ணாமலை தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வார்.

    * திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

    * எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைவிட அண்ணாமலை பெரும் தலைவர் இல்லை.

    * ரூ.1,408 கோடி சொத்தை 15 நாட்களுக்குள் அண்ணா அறிவாலயத்தில் அண்ணாமலை ஒப்படைக்க வேண்டும்.

    * ஆருத்ரா முறைகேட்டில் ரூ.84 கோடியை அண்ணாமலை பெற்றுள்ளார்.

    * திமுகவினர் எதற்கும் பயப்படமாட்டார்கள்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்.எஸ்.பாரதியை நீக்க வேண்டும்.
    • நாடார் அமைப்பினர் போராட்டத்தையொட்டி தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் இழிவாக பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

    ஆலந்தூர் நாடார் சங்க திருமண மண்டபம் அருகில் நாடார் அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார் தலைமையில், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம். சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

    பா.ம.க. மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். 'கைது செய்... கைது செய்... ஆர்.எஸ்.பாரதியை கைது செய்...' என்று முழக்கமிட்டனர். போராட்டம் நடந்த இடத்துக்கு அருகில் ஆர்.எஸ். பாரதியின் வீடு உள்ளது.

    அதனை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடந்து செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன தலைவர் போரூர் ஆனந்த ராஜ், செயலாளர் சந்திர சேகர பாண்டியன், தட்சண மாற நாடார் சங்கம் சென்னை கிளை சேர்மன் செல்வராஜ், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவராஜிராஜன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பூமி நாதன்,

    அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், காமராஜர் வம்ச பேரவை தலைவர் பெர்னட் ஜென்சன், மேடவாக்கம் நாடார் சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம், நாடார் பாதுகாப்பு பேரவை கவுரவ தலைவர் வி.எல்.சி. பிரேம்குமார், நாடார் சங்க தலைவர் சேகர், கோயம்பேடு நாடார் சங்க தலைவர் என்.ஆர்.பி. ஆதித்தன்.

    கீழ்கட்டளை நாடார் சங்க தலைவர் பால முருகன், பாண்டியநாடு நாடார் பேரவை தலைவர் சுருக்கு வேல்ராஜன், கலாம் காமராஜர், கக்கன் அறக்கட்டளை பொதுச்செயலாளர் வேல்முருகன், தமிழ்நாடு நாடார் சங்க பொதுச் செயலாளர் வீரகுமார், தலைமை நிலைய செயலாளர் பொன்ராஜ், நாடார் பாதுகாப்பு பேரவை செயலாளர் கோயம்பேடு சுரேஷ், பால்பாண்டியன்.

    ஆலந்தூர் ஸ்ரீதர், மார்க்கெட் ஞானபால், பத்மநாபன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், உயர்மட்டக்குழு செயலாளர் உதயகுமார், தென்சென்னை மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜன், தென்மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் ராஜீ, கவிராஜ், கருணைதாசன், வக்கீல் ஆல்பின் மனோ உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கூறும்போது, 'தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நாடார் சமுதாயத்தை இழிவாக பேசி வருகிறார். நாடார் பெண்கள் மட்டுமின்றி தமிழ் பெண்களையும் இழிவுபடுத்துகிறார்.

    அவரை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து போராட்டம் நடத்துவோம்' என்றார்.

    நாடார் அமைப்பினர் போராட்டத்தையொட்டி தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.
    • அறிவுரையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள், தோழர்கள் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.

    பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக்கூடாது.

    இந்த அறிவுரையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்க ஆளும் தி.மு.க.வே முயற்சி செய்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க.வினர் உயிருடன் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. சட்டமன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியது குறித்து மவுனம் காத்த முதல்வர் தற்போது பா.ஜ.க.வினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

    ஆளும் கட்சி என்ற ஆணவத்தில் இதுபோன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு இதேபோன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால் தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்க ஆளும் தி.மு.க.வே முயற்சி செய்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
    • காவல் நிலையத்துக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை வயதில் இளையவராகவும், முன்னேறிய வகுப்பினரல்லாதவராகவும் இருப்பதால் வழக்குகள் எதுவும் போடாமல் விட்டு வைத்திருப்பதாக விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை. மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஆதலால் சாதி வெறுப்பை விதைப்பதற்கு முயற்சி செய்து காலம் கடத்தி கொண்டிருக்கின்றீர்கள்.

    இரண்டு நாட்களில் இரண்டு லாக்-அப் மரணங்கள். காவல் நிலையத்துக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

    கடந்த ஒரு வருடத்தில் 7 லாக்-அப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×