search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ் பாரதி"

    • சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க.வின் மாநில முன்னாள் தலைவரும்-மகளிருமான டாக்டர் தமிழிசை துணை நிலை கவர்னராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற- இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி "பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா…? என கேட்கிறேன்.

    அத்துடன், "உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மை தான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.



    அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை-அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை!

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித் தனமான கொலையையும்-பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜ.க. ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங்கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.
    • முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை.

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

    சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்தார். அவர் மறைந்த செய்தி வந்த சில மணி நேரத்திலேயே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அவரிடம் பிரேமலதா உள்பட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அவராகவே உத்தரவிட்டார்.

    2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைக்க கலைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.

    அவர் மட்டும் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், கலைஞர் முதலமைச்சராக இறந்திருப்பார். இன்னும் சொன்னால் அவர் மறைந்திருக்வே மாட்டார். அந்த தெம்பிலேயே அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.

    இன்னும் ஒரு படி மேலே சொன்னால், ஜெயலலிதா கூட இறந்திருக்க மாட்டார். கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் ஜெயலலிதா அமெரிக்கா சென்று அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்.

    அதேபோல், விஜயகாந்தும் இறந்திருக்க மாட்டார். அன்று படுத்தவர் அதோடு எழுந்திருக்கவில்லை. அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்து, இன்றும் எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பார்.

    ஆனால், விஜயகாந்த் திமுகவுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தார். எதிர்க்கட்சி தலைவராக இல்லாத நிலையில் கலைஞர் மறைய செய்ய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்.

    இருந்தாலும், விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின் அரசு மரியாதை செய்தார் என்றால் அந்த வலி அவருக்கு தெரியும். கலைஞர் இறந்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கை போட்டு கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
    • தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

    ஆனால் 5 ஆண்டு காலம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எய்ம்ஸ் கல்லூரிக்காக பிரதமர் மோடி நாட்டிய ஒற்றை செங்கல்லை வைத்து இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.

    ஆனாலும் இன்னும் எய்ம்ஸ் கல்லூரி கட்டப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஆனாலும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வுக்கு வந்து சென்ற பிறகும் நிவாரணத்துக்காக சல்லி பைசா கூட தரவில்லை.

    எங்களிடம் இருந்து பறித்து வைத்துள்ள நிதியில் 71 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்தை கொடுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.

    தமிழகத்துக்கு நிதி வழங்காமல் ஒன்றிய அரசு அல்வா கொடுப்பதால் அதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு அல்வா கொடுக்கப்போகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பா.ஜனதா கட்சிக்கு கிடைக்காது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • கஜா புயல் தாக்கியபோது எடப்பாடி பழனிசாமி மாமனார் வீட்டு விசேஷத்தைச் சிறப்பித்துக் கொண்டிருந்தார்.
    • வெள்ள பாதிப்பின்போது மக்களோடு களத்தில் நிற்கும் எங்கள் இளைஞரணிச் செயலாளரை அவர் விமர்சிப்பதா?

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

    சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எப்போதாவது வெளியில் வந்து, முகத்தைக் காட்டி விட்டு மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருப்பவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி.

    நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத் திருவாய் மலர்ந்து பேட்டிகள் கொடுப்பார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னால் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்ட பழனிசாமி, தோல்வியை மட்டுமே தனது கட்சிக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார். சென்னையைச் சுற்றிலும், நெல்லையைச் சுற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கான நிவாரணப் பொருள்களை வழங்கி மக்கள் பணி செய்ய மனமில்லாமல், பொதுக்குழு என்ற பெயரால் பொழுதுபோக்குக் கச்சேரியை நடத்தி முடித்திருக்கிறார் பழனிசாமி. அதில் கழக அரசைப் பற்றி வாய்க்கு வந்ததை வழக்கம்போல உளறி இருக்கிறார்.

    'நான் சில விஷயங்களை அவிழ்த்து விட்டால் எடப்பாடி பழனிசாமி திகாருக்கு சென்று விடுவார். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன்; முதல்வராக என் கையெழுத்து இல்லாமல் ஒரு கோப்பும் சென்றது இல்லை' என அ.தி.மு.க. பொதுக்குழு நடந்த அன்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறாரே… அந்த ரகசியங்களை எடப்பாடி சொல்வாரா? அப்படி என்ன டீலிங் நடைபெற்றது?

    "பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டோம்" என பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இல்லை என முடிவாகிவிட்டால் பா.ஜ.க.வை விமர்சிக்க வேண்டியதுதானே! அ.தி.மு.க.வை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்தோ அல்லது பா.ஜ.க.வைக் கண்டித்தோ ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றவில்லையே ஏன்? தமிழ்நாடு அரசு தொடர்பான தீர்மானங்களில் கண்டனம்; ஒன்றிய அரசு தொடர்பான தீர்மானங்களில் எல்லாம் வலியுறுத்தல் என்பது இரட்டை முகமூடிதானே!

    பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற பழனிசாமியின் பச்சைப் பொய் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளின் காரணமாகக் கழக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டதை ஏளனம் செய்து மட்டமாகக் கருத்து தெரிவித்துப் பேசியிருக்கிறார் பழனிசாமி.

    புயல், மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மாநாடு நடத்தவேண்டாம் என்று எங்கள் தி.மு.கழகத் தலைமை முடிவெடுத்ததைப் பழனிசாமி பாராட்டி இருக்கவேண்டும். ஏதோ தான் சாபம் விட்டதைப் போல சவடால் விட்டுள்ளார் பழனிசாமி.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையே டிவியைப் பார்த்துத் தெரிந்து கொண்டவர் பழனிசாமி. அதனால் அவர் டிவி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இளைஞர் அணி மாநாடு 2 முறைதான் தள்ளி வைக்கப்பட்டது. அதுவும் மக்களுக்காக! சென்னை வெள்ளம் ஏற்பட்ட போதும், தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு உண்டானபோதும் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. முதலில் மக்களுக்குத்தான் சேவை செய்யும். கட்சி மாநாடு இரண்டாம்பட்சம்தான்.

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் தொண்டர்களுக்கு மோசமான வகையில் உணவு வழங்கப்பட்டதால் அண்டா அண்டாவாக உணவைத் தரையில் கொட்டி விரயமாக்கியது எல்லாம் மறந்துவிட்டதா? தவழ்ந்து சென்று முதல்வரான எடப்பாடிதான் அரசியலில் கத்துக்குட்டி. கஜா புயல் டெல்டாவைத் தாக்கியபோது சேமூர் அம்மாபாளையத்தில் மாமனார் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்த பழனிசாமி எல்லாம் வெள்ள பாதிப்புக் களத்தில் மக்களோடு நிற்கும் அமைச்சர் உதயநிதியைப் பற்றிப் பேசவே அருகதை அற்றவர்.

    'எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில், சிறப்பான முறையில் கொண்டாடப்படும்' என அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவர்கள் முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்த தீர்மானப் புத்தகத்தில் இது இல்லை. ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை மறந்து விட்டதால் அதனைத் தீர்மானப் புத்தகத்தில் சேர்க்கவில்லை. கடைசி நேரத்தில் யாரோ நினைவுபடுத்த வேறு வழியில்லாமல் சிறப்புத் தீர்மானம் என்ற பெயரில் தனியாகக் கொண்டு வந்து தொண்டர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

    2022, நவம்பர் 30-ம் தேதிதான் ஜானகி அம்மாளின் 100-வது பிறந்தநாள். அந்த நூற்றாண்டைக் கூட கொண்டாட முடியாமல் அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க.வில் உட்கட்சிக் குழப்பம் நடந்து வந்தபோது ஜானகி அம்மாளை மறந்துவிட்டு திடீரென தேர்தல் நேரத்தில் ஜானகி அம்மாளின் நூற்றாண்டைக் கொண்டாட நினைக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு ஜானகி அம்மாள் 100-வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் கலந்துகொண்டார். டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடந்த ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார். ஜானகி அம்மாள் நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார். ஜானகி அம்மாளை வாழ்த்தியும் பேசினார். ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவே முடிந்த பிறகு திடீரென எந்த போதி மரத்திலோ ஞானோதயம் பெற்று அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் எனப் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

    'காவிரி நதிநீர் பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுந்தபோது, தொடர்ந்து 22 நாட்கள் பாராளுமன்றத்தைத் தமிழக மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் முடக்கினார்கள்' என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

    பழனிசாமி சொல்லும் அந்த நிகழ்வு நடந்தது 2018 மார்ச் மாதம் நடந்தது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்துத் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அப்போது கொண்டுவந்தனர். அதனை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல நாட்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தை முடக்கினார்கள். ''அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் மேட்ச் பிக்சிங் உள்ளது'' என்று அன்றைக்கு காங்கிரஸ் பாராளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில்தான் ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம்'' என சொன்ன கே.சி.பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு நீக்கி மோடி விசுவாசத்தைக் காட்டினார் பழனிசாமி. எனவே காவிரிக்காக பாராளுமன்றத்தை முடக்கினோம் என அவர் சொன்னதும் பச்சைப் பொய்யே ஆகும்.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான பல குற்றச்சாட்டுகளைப் பழனிசாமி வைத்துள்ளார். பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். சசிகலாவின் பொம்மையாக எடப்பாடி முதலில் இருந்தார். டிடிவி தினகரனின் பொம்மையாக மாறினார். பின்னர் மோடியின் பொம்மையாக மாறினார். கமலாலயத்தில் ஒரு அறையில் அ.தி.மு.க. அலுவலகத்தை நடத்திக்கொள்ளும் வகையில் பா.ஜ.க.வுக்கு அடிமையாக சேவகம் செய்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்குக் கொஞ்சமும் தகுதி இல்லாதவர். இப்போதும், அமித் ஷா ஆட்டுவிக்கும் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மையாகச் செயல்பட்டு வருபவர்தான் பழனிசாமி என்பதை அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என்ற மனநிலையில் மக்கள் இருப்பதாக பழனிசாமி பேசி இருக்கிறார். 2019 பாராளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என 8 தேர்தல்களில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அ.தி.மு.க.

    தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி. அவரால் அ.தி.மு.க.வை அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது என்பது அக்கட்சியினருக்கே தெரியும். வரப்போகிற பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியைத் தழுவி 'தோல்விசாமி' என்பதை அவர் மெய்ப்பிக்கத்தான் போகிறார். இதனை நாடு பார்க்கத்தான் போகிறது என தெரிவித்துள்ளார்.

    • கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது.
    • தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பார்க் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளான இன்று கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது. பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு செய்த சாதனைகளை தி.மு.க.வினர் மட்டுமல்லாது தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


    கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டமன்றம் அ.தி.மு.க.வின் குறுகிய மனப்பான்மையினாலும் , பொறாமை எண்ணத்தாலும் மருத்துவ மனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள். டெல்லியில் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    இதில் மிச்சாங் புயல் - தென் மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் முன்வைப்பார். அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    பேரிடர் தொடர்பாக கவர்னர் ஆய்வுக்கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. பேரிடர் காலம் என்பதால் நல்லதை யார் செய்தாலும் அதனை தி.மு.க., வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
    • நாகாலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். தமிழகத்தில் காவல்துறையின் கவனம் சட்டம்-ஒழுங்கு மீது இல்லை. அவர்களின் கவனம் வேறு பக்கம் சிதறி போயிருக்கிறது. தமிழக காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. பா.ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும். பா.ஜனதா கட்சியினரை கைது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு அதற்கே நேரம் போதாதபோது, பெட்ரோல் குண்டு வீசுபவர்களையும், வழிப்பறி செய்பவர்களையும் பிடிக்க எப்படி நேரம் இருக்கும்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டது, ஆச்சரியம் அளிப்பதுடன் தவறானது என்று சென்னை ஐகோர்ட்டு இன்று (நேற்று) தான் தீர்ப்பு கொடுத்துள்ளது. இந்த விசயத்தில் காவல்துறையை பொறுத்தவரை நடுநிலை தவறிவிட்டனர். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை, தி.மு.க. ஆட்சியில் தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    சட்டத்துறையை நாம் கையில் எடுப்பது தவறுதான். பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு போவதை டிரைவரும், கண்டக்டரும், போலீசாரும் கண்டிக்கவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த சகோதரி சமூக அக்கறையுடன் கேட்டுள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் கேட்டது நியாயம். அதனை பார்த்து தான் அவருக்கு நீதிபதி ஜாமீன் கொடுத்துள்ளார்.

    நாகாலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள். ஆனால், அவர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள்தான் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்றும் பேசி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அந்த மக்களை அவமானப்படுத்தியுள்ளார். கடந்த, 30 மாதமாக அவர் தொடர்ச்சியாக இதுபோன்று பேசி வருகிறார். அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    ஆர்.எஸ்.பாரதி மீது தமிழகத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நாகாலாந்தில் யாராவது ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் போதும். இந்திய தண்டனை சட்டம் 153அ என்ற சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு அவரை கைது செய்து, நாகாலாந்து அழைத்து சென்றுவிடலாம்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே ஆளுநராக இருந்த ஆர்.என். ரவியை அனுப்பி விட்டார்கள்
    • அப்போது உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம்- ஆர்.எஸ். பாரதி

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் "நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என. ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது" என ஆளுநர் ஆர்.ரவியின் கண்டனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    முன்னதாக,

    திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

    நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நடந்தது என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக் கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவியை அனுப்பிவிட்டார்கள், அப்போது உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பேசியிருந்தார்.

    ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் "நாகாலாந்து மக்களை பகிரங்கமாக இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" என தெவரித்திருந்தார்.

    மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி. கூறியதாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், "நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். கண்ணியமானவர்கள். அவர்களை திமுக-வின் ஆர்.எஸ். பாரதி நாய்க்கறி உண்பவர்கள் என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன்" எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது அதற்கு ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

    திமுக அரசு- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, திமுக-வின் கொள்கையை விமர்சிப்பது போன்ற செயல்களால் தற்போது நீதிமன்றத்தில் திமுக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலைக்கு சென்றுள்ளது.

    • முதலமைச்சரை கைகுலுக்கிய இடம், ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சியில் தான்.
    • தமிழ்நாட்டு அரசியல் விவரங்களுடன் தொடர்பு விட்டுப் போனவர் போல் பேசியிருப்பது வேதனைக்குரியது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மீது தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வம்புக்கு இழுத்து, "பாரதியாருக்கு மரியாதை செலுத்தத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நேரமில்லையா" என்று கேட்டிருக்கிறார்.

    அத்தோடு நிற்கவில்லை அவர். "அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கை குலுக்கத் தெரிந்த முதலமைச்சருக்கு" என்று கூறியிருக்கிறார். முதலமைச்சரை கைகுலுக்கிய இடம், ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சியில் தான்.

    தமிழிசைக்கு கவர்னர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? அல்லது ஜி-20 மாநாட்டிற்கு இப்படியொரு விளம்பரத்தைச் செய்தது வருத்தமா? பாரதியாரையும் வம்புக்கு இழுத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சரை வசைபாடியிருக்கிறார்.

    ஆனால் இவை எதுவுமே தெரியாதது போல், அண்டை மாநில ஆளுநராகச் சென்று விட்டதால், தமிழ்நாட்டு அரசியல் விவரங்களுடன் தொடர்பு விட்டுப் போனவர் போல் பேசியிருப்பது வேதனைக்குரியது.

    அவரது பிறந்தநாளன்று முதலமைச்சரே மரியாதை செலுத்தி, நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். ஆகவே தெலுங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை, பாரதியாரின் பெருமையை மட்டுமல்ல அனைத்துக் கவிஞர்களின் புகழையும் பரப்பி வரும் தி.மு.க. அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஆளுநர் பொறுப்பை வகிக்கும் தமிழிசை தன் அதிகாரிகளிடமாவது, "அவ்வப்போது தமிழ்நாடு அரசியல் நிலவரங்களைச் சொல்லுங்கள்" என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, தி.மு.க. மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.

    • சைலேந்திரபாபு போலீஸ்துறையில் எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றியவர்.
    • பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் வரும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சைலேந்திரபாபுவின் பெயரை பரிந்துரை செய்து அரசு சார்பில் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதுதான் முறையாக இருக்கும். ஆனால் திட்டமிட்டு மறுப்பதற்குரிய உள்நோக்கம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். அரசு உயர் பதவிகளில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற வகையில் கருணாநிதி செயல்பட்டார். அதே நோக்கத்துடன் இன்றைக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் இதுவரையில் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து கவர்னருக்கு பரிந்துரை அனுப்பி இருந்தார்.

    சைலேந்திரபாபு போலீஸ்துறையில் எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றியவர். ஆனால் கவர்னர் அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது பெயரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் கடந்த காலங்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று அந்த தவறுகள் எல்லாம் நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலங்களில் அப்படி இருக்க கூடாது என்பதற்காகதான் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசு பெருந்தன்மையுடன் நியமித்து அனுப்பியது. ஆனால் இதை கவர்னர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது.

    சென்னை தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். கவர்னர் 'மெட்ராஸ் டே' என்று பதிவு போடுகிறார். அவர், தமிழ்நாட்டு மக்களை சீண்டி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார். அவருடைய இந்த செயலை தமிழக மக்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள். சகித்துக்கொள்ள மாட்டார்கள். இதற்குரிய விலையை கவர்னர் ஆர்.என்.ரவி தர வேண்டியிருக்கும்.

    டி.என்.பி.எஸ்.சி. பதவி நியமனம் தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு எல்லாம் பதிலளித்து ஒரு மாதமாகி விட்டது. சைலேந்திரபாபு அரசியல்வாதி அல்ல. ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.வினரை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்தார். எங்கள் கட்சியிலும் பல அனுபவசாலிகள், வக்கீல்கள் இருக்கிறார்கள். எனினும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை.

    வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நாடார் சமுதாயத்தினர் இதுவரையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக வந்தது இல்லை. எனவே நாடார் சமுதாயத்தை சேர்ந்தவரை சமூக நீதி நோக்கத்தோடு இந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதை நாங்கள் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. இதுவரை இந்த பதவிக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறோம். இதனை கவர்னர் வரவேற்று இருக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் வரும். அப்போது கவர்னர் தானாகவே ஓடி விடுவார். தற்போது தி.மு.க. ரொம்ப மென்மையான இருக்கிறது. எங்கள் தலைவர் அனுமதித்தால் பழைய தி.மு.க.வாக மாறுவோம். அப்படி மாறக்கூடியவர்கள் தி.மு.க.வில் இருக்கிறார்கள். அவர்களை தலைவர் (மு.க.ஸ்டாலின்) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். சீண்டி பார்த்தால் நிச்சயம் தி.மு.க. பழைய உருவத்தை எடுக்க வேண்டிய நிலைமை வரும். அ.தி.மு.க.வை நாங்கள் அழிக்க மாட்டோம். அவர்கள் எங்கள் பங்காளி. நாங்கள் எல்லாம் ஒரே பிராண்ட் தான். அவர்கள் வருங்காலங்களில் எங்களுடன் வந்து இணைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்.
    • அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம் என ஆர்.எஸ் பாரதி கூறினார்.

    திருச்சி:

    திருச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார்.

    தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்.

    அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. இந்த புகாரால் மக்கள் அண்ணாமலைக்கு வேறு வேலையே இல்லையா என நினைப்பார்களே தவிர, தி.மு.க.விற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது.

    நாங்கள் எதையும் சந்திக்க தயார். பிரச்சனைகளை திசை திருப்ப அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம். என தெரிவித்தார்.

    • ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

    சென்னை:

    டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

    இது குறித்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை செல்லாது என அறிவித்தது.

    இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதனிடையே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தக்கல் செய்யப்பட்டது.

    • 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில் எந்த தவறும் இல்லை.
    • ஆட்சி மாற்றம் காரணமாக பழைய புகாரை புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணிகளை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதில் ரூ. 4800 கோடி முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் செய்தார்.

    இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சிறப்பு புலனாய்வு அமைப்பு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ். பாரதி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் இந்த மனுவை ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பியது. இதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் இருந்து வந்தது.

    அப்போது சிறப்பு புலனாய்வு அமைப்பை அமைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தன்னுடைய மனுவை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ். பாரதி தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

    இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான முகமது ரியாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

    அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா இந்த குற்றச்சாட்டு குறித்து புதிதாக விசாரணை நடத்த விஜிலென்ஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் உத்தரவை விரைவில் பிறப்பிப்பதாக கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த உத்தரவை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    அதில் சிறப்பு புலனாய்வு விசாரணை கேட்ட ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்தார்.

    2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில் எந்த தவறும் இல்லை. அதில் குறை காண எதுவும் இல்லை.

    ஆட்சி மாற்றம் காரணமாக பழைய புகாரை புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×