search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Droupadi Murmu"

    • இந்தியாவின் ஜி20 தலைமைக்கு 'வசுதைவ குடும்பகம்' என்பது மையக்கரு
    • பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்

    உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

    வருடாவருடம் மாறிவரும் இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் நாளையும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மையத்தில் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பான உபசரிப்பும், தீவிர பாதுகாப்பும் புதுடெல்லியில் வழங்கப்பட்டுள்ளது. வருகை தந்திருக்கும் தலைவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் பல நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

    இந்தியா, இந்த மாநாட்டிற்கான கருப்பொருளாக "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் பொருள்பட வசுதைவ குடும்பகம் எனும் கருத்தை மையப்படுத்தியுள்ளது.

    இதை முன்னிலைப்படுத்தி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

    இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் உலக தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மனமார வரவேற்கிறேன். இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்" எனப்படும் இம்மாநாட்டிற்கான மையக்கருத்து, உலகளாவிய வளர்ச்சிக்கான நிலையான, மனித முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகும். இதனை அடைவதற்கான உங்களின் முயற்சிகள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு இந்திய ஜனாதிபதி கூறியுள்ளார்.

    தற்போதைய ஜி20 தலைமையில் இந்தியா அனைவருக்குமான ஒரு உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், பருவகாலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் மற்றும் சமமான உலகளாவிய சுகாதாரம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

    ஜி20 உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 85 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

    நடப்பாண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது உயர்கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    • லடாக்கில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு நேற்று 3 ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த வாகன அணிவகுப்பு தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    அந்த வாகனத்தில் 10 வீரர்கள் இருந்தனர். பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த வீரர்கள் அனைவரும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன.

    காயமடைந்த வீரர்களை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், லடாக்கில் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லடாக் விபத்து பற்றிய செய்தியால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என பதிவிட்டுள்ளது.

    • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஐ.என்.எஸ். விந்தியகிரி போர்க்கப்பல்.
    • இந்த போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார்.

    கொல்கத்தா:

    இந்திய கடற்படைக்கு 7 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2019-2022 காலகட்டத்தில் 5 போர்க்கப்பல்கள் தொடக்க விழாக்களை கண்டுள்ளன. இந்த வரிசையில் 6-வது போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 'கார்டன் ரீச்' கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வந்தன.

    இந்தப் பணிகள் நிறைவடைந்து தொடக்க விழாவுக்கு தயாராகி இருந்த இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். விந்தியகிரி என பெயரிடப்பட்டு உள்ளது.

    149 மீட்டர் நீளமும், 6,670 டன் எடையும் கொண்ட இந்த போர்க்கப்பல் தரை, கடல், வான்வழி என 3 பகுதிகளில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தது. மேலும் எதிரியின் எல்லைக்குள்ளேயே ஊடுருவி சென்று தாக்கும் திறன் பெற்றது. இந்தக் கப்பலில் உள்ள 75 சதவீத தளவாடங்களும் உள்நாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.

    இந்நிலையில், ஐ என் எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த நவீன போர்க்கப்பல் உற்பத்தி, தற்சார்பு இந்தியாவின் அடையாளமாகவும், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாகவும் உள்ளது. இது, கப்பல் கட்டுமானத்தில் நமது தன்னம்பிக்கையின் அடையாளமாகும். இது போன்ற திட்டங்கள் இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

    விந்தியகிரி கப்பலை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

    நாம் தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறோம். வருங்காலத்தில் 3-வது இடத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நமது வர்த்தகப் பொருட்களின் பெரும் பகுதி கடல் வழியாகவே செல்கின்றன. இது நமது வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படையின் பங்கு மிகப்பெரியது. இவ்வாறு ஜனாதிபதிதிரவுபதி முர்மு கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கவர்னர் ஆனந்தபோஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இணைத்து கடலில் வெள்ளோட்டம் விடப்படும். அதைத்தொடர்ந்து இந்த கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.

    • சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
    • தேநீர் விருந்தில் துணை ஜனாதிபதியுடன் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

    நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும்.

     

    அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி குடியரசு தலைவவர் திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவவர் மாளிகை) தேநீர் விருந்து அளித்தார். இதில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது துணைவர் சுதேஷ் தன்கர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இவர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். 

    • முதல் ஐந்து கப்பல்கள் 2019-2022-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன.
    • விந்தியகிரி போர்க்கப்பல் , உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படையில் 'நீலகிரி', 'ஹிம்கிரி', 'உதய கிரி', 'துனகிரி, 'தாரகிரி' என்று பெயரிடப்பட்ட 5 போர்க்கப்பல்கள் உள்ளன. 6-வதாக விந்தியகிரி என்ற பெயரிலான போர்க்கப்பல் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் கப்பல் கட்டும் நிலையத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 17-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ், மும்பையை தளமாகக் கொண்ட எம்.டி.எல். நிறுவனத்தில் 4 கப்பல்களும், கொல்கத்தா ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனத்தில் 3 கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன.

    முதல் ஐந்து கப்பல்கள் 2019-2022-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. இந்த போர்க்கப்பல்களில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் மற்றும் பிளாட்பார்ம் மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் உள்ளன என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    "விந்தியகிரி போர்க்கப்பல் , உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும். அதே வேளையில், அதன் வளமான கடற்படை பாரம்பரியத்துக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக உள்ளது" என்று கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
    • ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    புதுச்சேரி,

    புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வந்தார். 2-வது நாளான இன்று காலை கடற்கரை சாலையில் வாக்கிங் சென்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை ஜனாதிபதி சந்தித்தார். அவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    பின்னர் பிற்பகல் 11:25 மணியளவில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார் ஜனாதிபதி. ஆசிரம நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து மகான் அரவிந்தர், அன்னையின் சமாதியில் மலர்களை வைத்து தியானம் செய்தார்.

    பின்னர் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகளை பார்வையிட்டார். பின்னர் அரவிந்தர் ஆசிரம நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அரவிந்தர், அன்னையின் வரலாறை ஆசிரம நிர்வாகிகள் எடுத்துக்கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்தார்.

    தொடர்ந்து அங்கிருந்து சாலைமார்க்கமாக ஆரோவில் சென்றார். ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் மாத்ரி மந்திர் சென்றார். மாத்ரி மந்திர் அமைவிடம் குறித்து அவர்கள் விளக்கினர். அங்கே ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அங்கேயே ஜனாதிபதி மதிய உணவருந்தினார். இதன்பின் ஆரோவில் நகர் கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டார்.

    ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதை ஜனாதிபதி பார்த்தார். தொடர்ந்து ஆரோவில் கருத்தரங்கு அறையில் அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

    இதன்பின் அங்கிருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

    • சென்னை வந்தடைந்த ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
    • அப்போது ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

    அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஜனாதிபதி உரையாற்றுகிறார்.

    சென்னை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் 8-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தரும் அவர், தமிழ்நாட்டில் உள்ள யானைகள் பராமரிப்போருடன் கலந்துரையாடுகிறார்.

    இதன்பின், சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஜனாதிபதி உரையாற்றுகிறார். அன்றைய தினம், சென்னை கவர்னர் மாளிகையில், தமிழ்நாட்டின் பழங்குடியின பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.

    மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்தைத் திறந்து வைப்பதுடன், கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பாரதியார் மண்டபம் என பெயர் சூட்டும் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

    அதன்பின், புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்) லீனியர் ஆக்சிலரேட்டர் உபகரணத்தை ஆகஸ்ட் 7-ம் தேதியன்று தொடங்கிவைக்கிறார்.

    தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்துவைக்கும் அவர், புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.

    ஆகஸ்ட் 8, 2023 அன்று, ஆரோவில்லில் நகர கண்காட்சியான மணிமந்திரைப் பார்வையிடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு மாநாடு ஒன்றையும் தொடங்கி வைக்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • எதிர்க்கட்சி கூட்டணியினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்திக்க உள்ளனர்.
    • உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று ஜனாதிபதி முர்முவை நேரில் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்தும் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    • அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஆரோவில் மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் ‘போன்பயர்’ எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானமும் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆரோவில் சர்வதேச நகரம் 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அதன் நோக்கம் வேற்றுமையில் மனித ஒற்றுமையாகும்.

    இந்த நிலையில் ஆரோவில் நிறுவன தினத்தையொட்டியும், அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டியும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 8-ந்தேதி ஆரோவில்லுக்கு வருகை தருகிறார்.

    அன்று நண்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ஆரோவில் மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் 'போன்பயர்' எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானமும் நடக்கிறது.

    அரவிந்தர் பிறந்த மாதமான ஆகஸ்டு மாதம் முழுவதும் ஆரோவில்லில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஒற்றுமை நடைபயணம், மரம் வளர்ப்பு குறித்து கலந்துரையாடல், 25 முதல் 27-ந் தேதி வரை அரவிந்தரின் பன்முக திறன் குறித்து சர்வதேச எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வர உள்ளார்.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

    இதற்காக ஜனாதிபதி ஆகஸ்ட் 6-ந்தேதி சென்னை வர உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×