search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police firing"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து போராடிய நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர்.
    திசையன்விளை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட‌னர். இதனால் கடந்த 23-ந் தேதி முதல் இடிந்தகரை, கூத்தென்குழி, உவரி, பெரு மணல் உட்பட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தங்களது நாட்டுப்படகுகளை அவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்ப‌ட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    மற்ற உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ள 6 பேர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று கடலுக்கு சென்றனர். 10 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள‌னர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க வந்த 8 இளைஞர்களை போலீசார் கடத்தி விட்டார்கள் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #ThoothukudiFiring #SterliteProtest

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் மே 22-ந் தேதி அன்று காவல்துறையினர் கொலைவெறியுடன் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இதுவரை நடை பெற்ற போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தமிழரசன் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை. புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த இவர் திருமணம் ஆகாத இளைஞர்.

    சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரசனின் உடலைக் காணச் சென்ற அவரது ஒன்றுவிட்ட அண்ணனையும் காவல்துறையினர் கைது செய்து விட்டு, தமிழரசனின் உடலை வாங்காவிட்டால் அவரது அண்ணனையும் சுட்டுக் கொல்வோம் என்று குடும்பத்தாரிடம் மிரட்டினர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரசனின் அண்ணன் ஸ்டெர்லைட் போராட்டங்களிலும் எங்கள் இயக்க நடவடிக்கைகளிலும் ஆதரவாக இருந்தவர். இவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டார்.

    தமிழரசன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற என்னிடம் அக்குடும்பத்தினர் அரசாங்கத்தின் நிதி எங்களுக்கு வேண்டாம், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்தி கோரமாக 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினர்.


    இந்நிலையில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் உண்மை கண்டறியும் குழுவினர் தூத்துக்குடிக்கு சென்று பொதுமக்களிடம் 22-ந்தேதி சம்பவம் குறித்த விவரங்களையும், செய்திகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவில் அந்தக்குழுவில் இருந்த 8 பேரையும் காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து எவரும் அறிய முடியாத இடத்தில் கொண்டு போய் அடைத்து வைத்துள்ளனர்.

    இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்த மதுரை வக்கீல் சரவணக்குமார், கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகன், மணி, சமயன், அருப்புக்கோட்டை கோவேந்தன், தூத்துக்குடி வன்னி பெருமாள் ஆகிய எட்டு பேரும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினர் யாரைக் கைது செய்தாலும் உடனடியாக அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு, வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்க வேண்டியது கடமை ஆகும்.

    நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காவல்துறையின் ஜனநாயக விரோதமான அடக்குமுறைக்கு ம.தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விக்கிரவாண்டியில் சுங்க சாவடி பூட்டை உடைத்தார் என்று பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

    மேலும் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். வேல்முருகன் தொடர்ந்து போராடி வருகிறார் என்பதற்காக அவர் மீது தேச விரோத வழக்கு பதிந்துள்ளனர்.

    ஆட்சி அதிகாரம் இருப்பதால்தான் அ.தி.மு.க.வில் பலர் இருக்கிறார்கள். எதிர்த்து பேசுபவர்கள் மீது இந்த அரசு பொய் வழக்கு போடுகிறது. இது பாசிச போக்காகும். மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் போலீசார் உயிரை காக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று ஐகோர்ட்டில் டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். #BanSterlite #SterliteProtest

    சென்னை:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் வெடித்தது.

    அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 47 பேருக்கு இன்னமும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு முன்பும், பின்பும் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதன் காரணமாக 141 வாகனங்கள் சேதம் அடைந்தன.

    இதில் 20 வாகனங்கள் காவல் துறைக்கு சொந்தமானவை. 63 வாகனங்கள் அரசின் பல்வேறு துறைக்கு சொந்தமானவை. 58 வாகனங்கள் தனியாருக்கு உரியவை. இந்த வாகனங்களை சேதம் செய்ததாக 177 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கலவரத்தில் 72 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களில் 26 பேருக்கு உள் நோயாளியாகவும், 46 பேருக்கு புற நோயாளியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசை தாக்கியதாக மொத்தம் 185 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

     


    துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானதற்கு போலீசார் விரிவான விளக்கம் தர வேண்டும் என்று 3 வக்கீல்கள் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் 13 பேர் உயிரிழக்கும் அளவுக்கு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பதை முழுமையாக விளக்கி சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் டி.ஜி.பி. ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் அதை தாக்கல் செய்தார்.

    தூத்துக்குடியில் எந்தெந்த இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, பலியானவர்கள் தூத்துக்குடியில் எந்தெந்த பகுதியில் வசித்தனர் என்பதை காட்டும் வரை படத்துடன் அந்த விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் டி.ஜி.பி. கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் மே 22-ந்தேதி 100-வது நாளை எட்டிய போது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்ற தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சம்மதித்தனர்.

    மே 22-ந்தேதி காலை தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். பிறகு அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    அதே போன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மடத்தூர் ஜங் ஷன் பகுதியில் திரண்டனர். அவர்களும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

    இருமுனைகளில் இருந்தும் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்களை போலீசார் குறிப்பிட்ட சில இடங்களில் தடுத்து நிறுத்தினார்கள்.

    ஆனால் போலீசாரை மீறி ஊர்வலத்தில் வந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது அவர்களில் சிலர் பல்வேறு விதமான விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டனர். சாலையின் எதிர்புறம் வந்த வாகனங்களை உடைத்தனர்.


    அவர்களைத் தடுத்து நிறுத்த போலீசார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. போலீசாரையும் தாக்கி விட்டு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நெருங்கினார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தை ஊர்வலம் அடைந்ததும் வன் முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக மாறியது. போராட்டக்காரர்களில் சிலர் சரமாரியாக கற்களை வீசினார்கள். சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    அவர்களை தடுக்க போலீசார் அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்து, தீ வைத்து கடுமையாக சேதப்படுத்தினார்கள்.

    அந்த வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.

    இந்த நிலையில் சூழ்நிலையை தங்களுக்கு சாதக மாக்கிக் கொண்ட சிலர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குள் ஊடுருவினார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஸ்டெர்லை ஆலை ஊழியர்களின் மோட்டார்சைக்கிள், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    அவற்றுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். கீழ்தளத்தில் இருந்த ஜெனரேட்டர் அறைக்கும் தீ வைத்தனர். கீழ்தளத்தில் எரியத் தொடங்கிய தீ அந்த குடியிருப்பு முழுமைக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது.

    அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சுமார் 150 பேர் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் தீ வைக்கப்பட்ட காரணத்தால், அந்த 150 பேர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்புப் படையினரும் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற் கொண்டனர்.

    ஆனால் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி விட்டனர். போலீஸ்காரர்களையும் அந்த குடியிருப்புக்கு அருகில் வர முடியாதபடி தொடர்ந்து கல்வீசி தாக்கினார்கள்.

    வன்முறை அதிகரித்தப் படி இருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பில் இருந்த சுமார் 150 பேர் மற்றும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. அவர்களை காப்பாற்ற கடைசி கட்டமாக வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    கலெக்டர் அலுவலகத்தையும், சுற்றுப்புற பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி சூடு நடத்துவதை தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை உருவான தால்தான் போலீசார் துப்பாக்கி சூடு பிரயோகத்தை மேற்கொண்டனர். இல்லையெனில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

    அன்று மதியம் 1 மணிக்கு சுமார் 3 ஆயிரம் பேர் இந்திய உணவுக் கழக குடோன் பகுதியில் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். இதனால் அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடியும் நடத்தினார்கள்.

    உடனே கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்று திரண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கி கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதில் கார்த்திக் என்பவர் உயிரிழந்தார்.

    மதியம் 1.35 மணிக்கு மீண்டும் ஒரு கலவர கும்பல் திரண்டு வந்து போலீஸ்காரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. 2 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அந்த கலவர கும்பல் மீது தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரத்தில் ஒரு கும்பல் பயங்கர கலவரம் செய்தது. இதனால் துணை தாசில்தார் கண்ணன் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டது.

    மதியத்துக்குப் பிறகு வன்முறையாளர்கள் நிறைய சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். முத்துக் கிருஷ்ணாபுரம், பொன்னகரம், சுந்தரவேல்புரம் ஆகிய இடங்களில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    மே 23-ந்தேதி அண்ணாநகரில் சுமார் ஆயிரம் பேர் திரண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் டுவிபுரத்தில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அடித்து உடைத்தனர்.

    அரசு சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டன. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த நேரிட்டது. அதில் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் உயிரிழந்தார். இந்த வன்முறை தாக்குதலில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது.

    தூத்துக்குடியில் மே மாதம் 22 மற்றும் 23-ந்தேதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் 5 இடங்களில் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கலெக்டர் அலுவலகம் அருகில், எப்.சி.ஐ. அருகில், அண்ணாநகர் மெயின் ரோடு பகுதியில், திரேஸ்புரம் ஆகிய 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எப்.சி.ஐ. அருகில் போலீசார் தடியடி நடத்தினார்கள்.

    மே 22-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு திரேஸ்புரம் பகுதியில் நிறைய பேர் திரண்டதால் துப்பாக்கி சூடு நடத்தும்படி மண்டல துணை தாசில்தார் உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஜான்சிராணி (37) மரணம் அடைந்தார். (இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட தாசில்தார் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை)

    வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி நாசமாக்கிய கலெக்டர் அலுவலக பகுதி மற்றும் அரசு சொத்துக்களை பொதுப் பணித் துறைக்குட்பட்ட என்ஜினீயர் ஒருவர் ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளார். அவரது கணக்குப்படி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.28.12 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் டாஸ்மாக் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைத்தது காரணமாக ரூ.15.67 கோடிக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SterliteProtest

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த 12 வழக்குகள் தொடர்பான விசாரணை வருகிற 6-ந் தேதி நடக்கிறது. #BanSterlite #SterliteProtest

    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டம் கலவரமாக வெடித்தது.

    போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் அடுக்கடுக்காக 14 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

    * துப்பாக்கிச்சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக தலைமைச் செயலாளர். உள்துறை செசலாளர் போலீஸ் டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

    * இந்த சம்பவம் பற்றி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    * சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    * துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கவும் உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு கடந்த 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது.


    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று வாதாடினர்.

    இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன் ஆஜராகி அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதையடுத்து நீதிபதிகள் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரிய மனு தொடர்பாக சி.பி.ஐ. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது அரசு தரப்பில் தாக்கலாகும் பதில் மனுக்களை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பிக்கிறது.

    இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகள் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் கடந்த 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிடுமா? என்பது குறித்து வருகிற 6-ந் தேதி வழக்கு விசாரணையின் போது தெரியவரும்.

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சம்பவமே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். #SterliteProtest #ThoothukudiShooting

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய கொடூரமான தாக்குதல் சம்பவமே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. இனி மக்கள் போராட நினைக்கக்கூடாது என்பதற்காக, மக்களை அச்சுறுத்தும் விதமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆலை தொடர்பாக அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் அறிவிக்கும் அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு பிறப்பித்த அரசாணை மக்களை ஏமாற்றும் நாடகம்.

    துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள், உயரதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி மற்றும் ஆலோசனை பெறாமல் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட முடியாது. இந்த சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமூக விரோதிகள் என தமிழக முதல்வரும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒரே குரலில் பேசுகின்றனர். சமூக விரோதிகளால் தான் இந்த துரதிருஷ்டமான சம்பவம் நிகழ்ந்தது எனக் கூறுகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள்.

    துப்பாக்கிச் சூட்டில் பலியான 10-ம் வகுப்பு மாணவி சமூக விரோதியா. இது உரிமைக்காக போராடும் மக்களை அவமதிக்கும் செயல், கண்டனத்துக்குறிய செயல். இதற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

    உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தை அமைத்து, முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். மே மாத இறுதிக்குள் காவிரி நதி நீரை மேட்டூருக்கு கொண்டுவர தமிழக அரசு, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அதிகாரம் மிக்க ஆணையத்தை அமைக்கவும் பெற்றுத்தரவும் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் குறுவை சாகுபடி சாத்தியமில்லாமல் போய்விடும்.

    தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிகாரமில்லாத ஆட்சியும், ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அதிகாரமிக்க இன்னொரு ஆட்சியும் நடத்துகிறார். மாநில உரிமையில் தலையிடும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். ஆனால், இங்கிருக்கும் அரசு ஆளுநர் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது.

    மோடி அரசு 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்குவோம் என கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #SterliteProtest #ThoothukudiShooting

    திமுக ஆட்சியின் போது ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு முன்பு இதேபோல் முடிவெடுத்து மறுபடியும் நீதிமன்றம் சென்று திறக்கப்பட்டது. இதேபோல் மீண்டும் நடைபெறக் கூடாது.

    ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போராட்டத்தில் சமூக விரோதிகள் இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.

     


    இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒரு கண்துடைப்பு என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    1996-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது அபாயகரமான மூடப் படவேண்டிய ஸ்டெர்லைட் ஆலையை திறந்த பாவத்தை தி.மு.க. ஆட்சி தான் செய்தது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆலையை திறந்ததற்கான காரணத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை திறந்ததில் காங்கிரசுக்கு என்ன பங்கு என்று திருநாவுக்கரசர் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.#SterliteProtest #BanSterlite

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி டி.டி.வி.தினகரன் பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். #ThoothukudiFiring #TNCM #EdappadiPalanisamy

    சென்னை:

    தூத்துக்குடி சம்பவம் குறித்து சட்டசபையில் நடந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதுதான் அங்கு சகஜ நிலை திரும்புகிறது.

    இங்கு முதல்-அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சிலவற்றை குறை சொல்லி மக்கள் மத்தியில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன். எதிர் காலத்தில் எந்த ஆட்சியிலும் இது போன்ற கொடிய சம்பவம் நடக்கக்கூடாது என்று கூறிக்கொள்கிறேன்.

    முதல்- அமைச்சரின் அறிக்கையில், கலெக்டர் அலுவலகர் முற்றுகை போராட்டத்தை மக்கள் கைவிட்டு தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக போராட்டம் நடத்த ஒப்புக் கொண்டதாகவும் என்றாலும் முன் எச்சரிக்கையாக 2 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    அப்படி இருக்கையில் 144 தடை உத்தரவு எதனால் போடப்பட்டது? அங்கு எல்லா கட்சிக்காரர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஆனால் முதல்வரின் அறிக்கையில் அவர்களை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா?

    பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதல்வர் கூறியுள்ளார். போலீஸ் உளவுத்துறை என்ன செய்தது?

     


    நாங்கள் எல்லாம் சென்று அங்கு ஆறுதல் கூறுகிறோம். ஆனால் நீங்கள் (அ.தி.மு.க.) அங்கு செல்ல துணிச்சல் இல்லை. நான்கு, ஐந்து நாட்களாக உங்கள் எம்.எல்.ஏ.க்களை தூத்துக்குடியில் பார்க்க முடியவில்லை என்றார்.

    உடனே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பி டி.டி.வி. தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தினகரன், “உண்மையை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. அமைதியாக இருங்கள்” என்றார்.

    ஆனாலும் டி.டி.வி. தினகரனுக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்குவாதம் நீடித்தது.

    சபாநாயகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார். டி.டி.வி. தினகரன் பேசி முடித்ததும் மின்துறை அமைச்சர் தங்கமணி எழுந்து விளக்கம் சொல்ல முற்பட்டார்.

    அப்போது தினகரனும் எழுந்து பேச முயன்றார். உடனே, அமைச்சர் தினகரனை பார்த்து “நீ யார் கேட்பதற்கு?” என்றார்.

    இதைப்பார்த்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எழுந்து, “எப்படி ஒரு உறுப்பினரை நீங்கள் ஒருமையில் பேசலாம்?” என்றார். உடனே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அமைச்சர் தங்கமணி, “நான் தெரியாமல் ஒருமையில் பேசி இருந்தால் அதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்” என்றார். உடனே அமளி முடிவுக்கு வந்தது. #ThoothukudiFiring #TNCM #EdappadiPalanisamy

    ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வழிவகுக்காது என்று வைகோ, ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #SterliteProtest #ThoothukudiShooting
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மக்களை ஏமாற்றுவதற்காக, தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.

    ஸ்டெர்லைட் நிறுவனரும், வேதாந்தா குழுமத்தின் அதிபருமான அனில் அகர்வால், அரசிடம் அல்லது நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ஆலையைத் தொடர்ந்து இயக்குவேன் என்று நான்கு நாள்களுக்கு முன்பு திமிராக அறிவித்தார்.

    ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் தமிழ் மண்ணில் நடத்த விட மாட்டோம். ரத்தின கிரியில் திரண்டது போல், லட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஆலையை அப்புறப்படுத்துவோம்.

    கடந்த 22-ஆம் தேதி போல காவல்துறையை அனுப்பி துப்பாக்கி வேட்டை நடத்தலாம் என்று நினைத்தால், அதனையும் எதிர்கொள்வோம். மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பினாலும், எங்கள் மண்ணையும், மக்களையும் காக்க, மரணத்தைத் துச்சமாக நினைத்து, அடக்குமுறையை எதிர்கொண்டு ஆலையை அகற்றியே தீர்வோம்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தமிழகக் காவல் துறை டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலக வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் ஆதாரங்களோ, காரணங்களோ குறிப்பிடப்படாமல் அது வெளியிட்டுள்ள அரசாணை நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களை கொண்ட அரசாணையை அது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஏன்?

    தமிழக அரசு தற்போது செய்திருப்பது போராட்டக்காரர்களையும், எதிர்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவும், வழக்கம் போல ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கு வசதி செய்வதற்காகவுமான தந்திரம் என்றே கருத வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி:- தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொது மக்களை கொடூரமாக படுகொலை செய்ததால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக் கொள்ளவே இப்படி ஓர் ஆணையை அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால் இது யாருக்கும் பயனளிக்காத, அப்பட்டமான ஏமாற்று வேலையாகும்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலுத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அத்தகைய விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, ஆலைக்கு எதிராக பொது மக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் பதிவு செய்து அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உத்தரவு பிறப்பித்து இருந்தால் அது மிகவும் வலிமையானதாக இருந்திருக்கும். அதை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையால் வெற்றி பெற முடியாது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:- ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படுவதற்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிபர் அறிவித்தது போல் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வெறுமனே அரசாணை வெளியிடுவது ஏற்புடையது அல்ல. அமைச்சரவை உடனே கூடி ஆலையை நிரந்தரமாக மூடுவதை தமிழக அரசின் கொள்கையை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பொதுமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் கவர்னர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். #SterliteProtest #Kamalhaasan
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ளதாவது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மையம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இன்று புகார்க்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதில் கோரப்பட்டுள்ளது. 
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் சென்னையில் நாடார் சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting

    சென்னை:

    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே 29-ந் தேதி(நாளை) காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவருமான த.பத்மநாபன் தலைமை தாங்குகிறார். சின்னமணி நாடார், ஜி.டி.முருகேசன், மயிலை எம்.மாரித்தங்கம், டி.செல்வகுமார் நாடார், எஸ்.ஜெயகுமார், எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், மகாஜன சங்கத்தலை வர் ஜி.கரிகோல்ராஜ் நாடார், நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன்,சென்னைவாழ் நாடார் சங்கத்தின் செயலாளர் டி.தங்கமுத்து நாடார், சிம்மப்பேரவை தலைவர் ராவணன் ராமசாமி, காமராஜர் ஆதித்தனார் சங்கத் தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ், நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜகுமார் நாடார், பாரதிய கல்சூரி ஜெய்ஸ்வால் நாடார் சங்க செயலாளர் தங்கம் ஆர்.செல்வராஜ், நாடார் மக்கள் சக்தி அமைப்பாளர் ஏ.ஹரி நாடார், தமிழ் நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் நாடார், கிறிஸ்தவ நாடார் சங்கத் தலைவர் பி.தாமஸ் நாடார், தட்சண நாடார் சங்க சென்னை கிளை இயக்குனர் கே.சி.ராஜா உள்பட பல்வேறு நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.

    முன்னதாக துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. #SterliteProtest #ThoothukudiShooting

    ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு இருந்தால் நிரூபித்து காட்டட்டும் என்று ஆலை அதிபர் அனில் அகர்வால் கூறியுள்ளார். #SterliteProtest #ThoothukudiShooting #Anilagarwal

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் லண்டனில் இருக்கிறார். அவர் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயரம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    பதில்:- 13 அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இந்த சம்பவம் எங்களது ஆலையில் இருந்து சில கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் நடந்துள்ளது.

    எங்களது வேதாந்தா நிறுவனம் மனிதாபிமான விவகாரங்களில் பொறுப்புள்ள இந்திய தொழில் நிறுவனம் ஆகும். நாங்கள் இதில் உயிர் இழந்தவர்கள் குடும்பம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.

    கே:- இந்த கலவர சம்பவத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை காரணம் இல்லை என்கிறீர்களா?

    ப:- எங்கள் ஆலையில் இருந்து 5 கி.மீட்டருக்கு அப்பால் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. மே 22-ந் தேதி ஏதோ நடக்கப் போகிறது? என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது.

    நாங்கள் இது சம்பந்தமாக கோர்ட்டை அணுகினோம். கோர்ட்டு உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தது. அதன்படி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.


    கே:-ஸ்டெர்லைட் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மூலம் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் மேலும் உள்ளூர் மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறதே?

    ப:- அப்படி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எந்த தனி அமைப்புகள் வேண்டுமானாலும் நிரூபித்து காட்டட்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்கள் நிறுவனம் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி நடத்தப்படுகிறது. எந்த கழிவுகளும் ஆலையில் இருந்து வெளியேறுவதில்லை. எந்த ஒரு தனி அமைப்பும் ஆய்வு செய்து பார்க்கட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்.

    சுற்றுச்சூழல் விதிமுறைகளை நாங்கள் கடுமையாக கடைபிடிக்கிறோம். எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்பதை நிரூபிக்க எங்களிடம் போதுமான தகவல்களும், ஆய்வு அறிக்கைகளும் உள்ளன. தேவை என்றால் எந்தவொரு இந்திய அமைப்போ, அல்லது வெளிநாட்டு அமைப்போ ஆய்வு செய்து பாதிப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்கட்டும்.

    கே:- அப்படியானால் பொதுமக்கள் போராட்டத்துக்கு காரணம் என்ன?

    ப:- மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம். இதில், சில சக்திகள் தூண்டுகோலாக இருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த சக்திகள் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

    நாங்கள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக ஆலைக்கு வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தோம். அதுபோல் பல தலைவர்களையும், போராட்ட அமைப்பினரையும் அழைத்தோம். ஆனால், யாரும் உள்ளே வந்து பார்வையிடவில்லை. தூத்துக்குடி மக்களுக்கு இதுபற்றிய அனைத்து விவரங்களையும் தருவதற்கு தயாராக இருக்கிறோம்.


    கே:- இந்த விவகாரத்தை கையாண்டது தொடர்பாக தமிழக அரசு மீது நீங்கள் அதிருப்தியில் இருக்கிறீர்களா?

    ப:- தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் யாரையும் நோக்கி கைகாட்ட விரும்பவில்லை. இந்த போராட்டக்காரர்களால் என்ன நடக்கும்? என்பது யாரும் எதிர்பார்க்காதது.

    போராட்ட குழுவில் பல அமைப்பினர் உள்ளனர். அவர்களில் பலர் எங்களை சந்தித்து உரிய விளக்கங்களை பெற தயாராக இருக்கிறார்கள்.

    ஆனால், அவர்களை சிலர் தடுக்கிறார்கள். எங்களை பொருத்த வரை நாங்கள் தொழில் செய்கிறோம். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறோம்.

    எங்களுக்கு அரசின் உறவு வலுவாக தேவை. அதே நேரத்தில் எங்கள் தொழிலை அரசியலுக்கு அப்பால் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வர்த்தகத்தை அரசியலோடு கலந்தால் அது வெற்றிகரமாக அமையாது.

    இந்தியாவில் எங்களோடு சேர்த்து 3 ஆலைகள் உள்ளன. இந்துஸ்தான் காப்பர், பிர்லா காப்பர் ஆகிய நிறுவனமும் செயல்படுகின்றன. நாங்கள் 20 ஆண்டுகளாக ஆலையை நடத்தி வருகிறோம். ஆலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட காற்றின் தரம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது.

    அதேபோல் நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்துள்ளது. நாங்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குகிறோம். உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கு மட்டும் நாங்கள் ரூ.500 கோடி வரை செலவு செய்து இருக்கிறோம்.

    இவ்வாறு அனில் அகர்வால் கூறினார். #SterliteProtest #ThoothukudiShooting #Anilagarwal

    மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #BanSterlite #SterliteProtest

    காரைக்குடி:

    காரைக்குடியில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு உள்ளது. தீய சக்தியாக விளங்கக் கூடியதும் இந்த அரசுதான். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kanimozhi #BanSterlite #SterliteProtest

    ×