search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Gambling"

    • தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:-

    தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதிமன்றம், சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்யவில்லை.

    வேறு சில காரணங்களை சொல்லி அதாவது இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீங்கள் புதிய சட்டம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி சட்டமன்றத்துக்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

    அதன்படி இந்த புதிய சட்டம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு. நீங்கள் புதிய சட்டம் இயற்றுங்கள் இதில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு இயற்றுங்கள் என்று சொல்கிற போது அதை அதிகாரம் இல்லை என்று கூறி நீக்க எந்த அடிப்படையில் கவர்னர் நீக்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

    அதைப்பற்றி தெளிவாக அவர் என்ன அனுப்பி இருக்கிறார் என்பதை கோப்புகளை படித்து விட்டு தெளிவான விடையை நிச்சயமாக முதலமைச்சர் தருவார்.

    இந்த மசோதா 2-வது முறை அல்ல, முதல் முறையாக திருப்பி அனுப்பி உள்ளார்கள். இதற்கு முன்பு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லி இருந்தோம்.

    இதை திருப்பி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது. அது தான் சட்டம்.

    கேள்வி: கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவுடன் ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்: நான் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தான் சென்னை வந்தேன். கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியாது. அவர் அனுப்பியதை படித்து பார்த்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும். நானாக எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது.
    • தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை சேர்ந்த அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 'ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை; மற்றவர்களை காப்பதற்காவது அதை தடை செய்யுங்கள்' என்று சுரேஷ் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த எதார்த்தமும், வலியும் கவர்னருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உரைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கவர்னருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    • வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் வினோத் குமார் இணையதளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

    தாம்பரம்:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதால் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்தனர்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை தாம்பரத்தை அடுத்த கணபதிபுரம் கோபால் தெரு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர் பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், பிரணவ், தர்ஷன் என 2 மகன்களும் உள்ளனர். மேலும் வீட்டில் தாயார் தமிழ்செல்வியும் வசித்து வருகிறார். வினோத்குமாரின் மனைவி லதா தாம்பரத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் இணைய தளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் கடன் கொடுத்த தனியார் ஆப் நிறுவனங்கள் தொடர்ந்து கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தி நெருக்கடி கொடுத்து வந்தது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் தனது தாயார் தமிழ்செல்வியை அழைத்து தனக்கு தூக்கம் வருவதாகவும், அதனால் தான் தூங்கச் செல்வதாகவும் குழந்தைகளை கடைக்கு அழைத்து சென்று தின்பண்டம் வாங்கி கொடுக்கும்படி கூறினார்.

    குழந்தைகளுடன் தாயார் வெளியே சென்ற போது வினோத்குமார் அறைக்கு சென்று புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த லதா தனது கணவர் இருந்த அறைக்கு செல்வதற்காக திறந்த போது மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

    இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார் பிணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ந்தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
    • தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வினோத்குமார் அவரிடம் இருந்த பணம் முழுவதையும் ஆன்லைனில் சூதாடி இழந்துள்ளார். கடன் வழங்கும் செயலிகள் மூலமாகவும் கடன் வாங்கி சூதாடியுள்ளார். சூதாடுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 44-வது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-வது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ந்தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்டம் மாநில எல்லைகளை கடந்த பிரச்சினை என்பதால் மத்திய அரசு சட்டம் இயற்றுவது சரியாக இருக்கும்.
    • ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்.

    புதுடெல்லி:

    ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் உயிரை மாய்த்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    தமிழக சட்டசபையில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த சட்ட மசோதா கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு கவர்னர் முதலில் கையெழுத்திடவில்லை.

    பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இது தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் சில விளக்கங்களை கேட்டு பின்னர் அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசினார்.

    ஆன்லைன் சூதாட்டம் மாநில எல்லைகளை கடந்த பிரச்சினை என்பதால் மத்திய அரசு சட்டம் இயற்றுவது சரியாக இருக்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கினார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடிதாக கூறப்படுகிறது.

    அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் நாம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியதாக தெரிகிறது.

    அதிலும் சிவன்ராஜ் தான் விளையாண்ட விளையாட்டிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார். அதன்படி மொத்தம் ரூ.15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மனமுடைந்து தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் குளிர்பானம் கலந்து குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ்ஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வசந்தகுமாருக்கு ஆன்லைன் விளையாடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • நகைகளை அடகு வைத்த பணத்தை அவர் ஆன்லைன் விளையாட பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகையன்(63). விவசாயி. இவரது மனைவி சரோஜா(55).

    கடந்த 21-ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்தை அறுத்து படுகொலை செய்ப்பட்டார். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த சில நகைகளும் மாயமாகி இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளை யம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேளாங்கண்ணி உதய ரேகா, நித்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வ நாயகம், பாண்டியராஜன், சுல்தான் இப்ராகிம், ஆனந்த குமார்,மற்றும் போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(19) என்ற கல்லூரி மாணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. வசந்தகுமார் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சிறுமுகை தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் மூதாட்டியை கொன்று நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்தனர்.

    விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    வசந்தகுமாரின் தாயார் தையல் தைத்து கொடுத்து வருகிறார். இவரிடம் இறந்த சரோஜா துணிகளை தைப்பதற்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர் துணிகளை வசந்தகுமார் எடுத்து சென்று மூதாட்டியிடம் பணம் வாங்கி வருவார். அப்போது மூதாட்டி தனியாக இருப்பதையும், வீட்டில் நகை இருப்பதையும் வாலிபர் அறிந்தார். இதனால் அதனை எடுக்க வாலிபர் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று வசந்தகுமார் பாட்டியிடம் பணம் வாங்குவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாலிபர், மூதாட்டியை கத்தியால் குத்தி கொன்று விட்டு, வீட்டில் இருந்த 14 பவுன் நகையை திருடி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வசந்தகுமார் நகையை வீரபாண்டியில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

    வசந்தகுமாருக்கு ஆன்லைன் விளையாடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகைகளை அடகு வைத்த பணத்தை அவர் ஆன்லைன் விளையாட பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டம் இயற்றப்பட்டு 63 நாட்கள் ஆகியும் ஆளுனர் ஒப்புதல் அளிக்காததால் ஏமாற்றம்.
    • ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை தடுக்க மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டம் இயற்றப்பட்டு இன்றுடன் 63 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுப்பதற்கான அவசியத்தை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும் போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு கூறுகிறது.

    எனவே, தமிழக அரசு எந்த தயக்கமும் இல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும். அதை நீதிமன்றங்களில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நண்பர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதும், அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதும் தெரியவந்தது.
    • கடிதத்தில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும் என்று எழுதியிருந்தார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி.நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). என்ஜினீயர்.

    இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் வருமானம் வந்ததால், தொடர்ந்து ஆன்லைன் விளையாடினார். ஆனால் பணத்தை இழந்துவிட்டார். தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் இழந்தார்.

    இந்த நிலையில், கோவை ராம்நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சங்கர் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அறிந்த காட்டூர் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    கடிதத்தில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.

    அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சங்கர் எவ்வளவு பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார் என்று விசாரித்தனர்.

    விசாரணையில், சங்கர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தான் அவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட தொடங்கி உள்ளார்.

    முதலில் விளையாடியபோது அவருக்கு வருமானம் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் மேற்கொண்டு தான் கையில் வைத்திருந்த பணம் மற்றும் வெற்றி பெற்றதில் வந்த பணத்தையும் செலுத்தி விளையாட தொடங்கினார். ஆனால் முதலில் வந்த மாதிரி இந்த முறை வருமானம் வரவில்லை.

    இதனால் தான் இழந்த பணத்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என நினைத்தார். இதற்காக தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடினார். இதுவரை தனது நண்பர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதும், அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சென்னையில் இருந்து அவர் கோவைக்கு வந்தார். இங்கும் இழந்த பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும், தோல்வியே மிஞ்சியதால் வேதனை அடைந்தார்.

    தொடர்ந்து பணத்தை இழந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கோவைக்கு வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு கூட ஊட்டிக்கு சென்ற அவர் அங்கும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் அதனை கைவிட்டதும் தெரியவந்தது. 2 முறை தற்கொலைக்கு முயன்ற அவர், 3-வது முயற்சியில் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் யாராவது மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டரா? என்ற கோணத்திலும் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
    • சங்கர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29). என்ஜினீயர்.

    இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்தது. நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானார். அதன் மூலம் தான் சேர்த்து வைத்து இருந்த பணத்தை இழந்தார்.

    எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

    அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும்.

    இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.

    ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை. பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார்.
    • வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் வி.ஜி.பி. கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22). இவர் சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் சூதாட்டம் மூலமாக இவருக்கு வருமானம் வந்தது. அந்த ஆர்வத்தில் சல்மான் தொடர்ந்து ஆன்லைனின் சூதாட்டம் ஆடினார். அதில் அவர் தனது சம்பள பணத்தை இழந்தார். மேலும் தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சல்மான் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நடந்த சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் சொல்லாமல் அவர் மறைத்தார். சம்பவத்தன்று சல்மான் வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சல்மான் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைனில் சூதாட்டம் ஆடினேன். அதில் சம்பள பணம் முழுவதையும் இழந்து விட்டேன். எனக்கு வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சல்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×