search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nitin gadkari"

    • கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது.

    இந்தநிலையில் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

    இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளால் உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாமதமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலைகளாக (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப்பட்டது. மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரெயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த மத்திய மந்திரி கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகையில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்காததால் பணிக்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. உத்தரவாதத்தை சமர்ப்பித்ததும், வேலை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    மேம்பாலத்தின் ஒரு பகுதி டபுள் டெக்கராக இருக்கும். துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே இருக்கும் பாலத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

    மேல் பாலத்தில் மற்ற வாகனங்கள் உள்ளே நுழையவோ வெளியேறவோ வழிகள் இருக்காது.

    முன்னதாக, நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் துறைமுகம் மற்றும் பாலத்தின் முடிவில் மட்டுமே இருக்கும்படி முன்மொழியப்பட்டது. இப்போது, 13 பகுதிகளில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையில் தொடரும். தொடர்ந்து மதுரவாயல் வரை தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு மேம்பாலம் அமைய உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். மேம்பாலத்திற்கான நிலத்தை அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது.

    சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும் சாலை திட்டம் முடிவுக்கு வரும்போது சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    • செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் 1,040 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிவேகமாக வாகனம் ஓட்டிச் சென்று 40 ஆயிரத்து 450 பேர் பலியாகினர்.

    புதுடெல்லி:

    சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமாரின் கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

    அதில், கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடைபெற்றது. இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் இறந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிவேக இயக்கம், குடிபோதை, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 விபத்துகள் ஏற்பட்டதாகவும், அதில் 56 ஆயிரத்து ஏழு பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிவேகமாக சென்று 40,450 பேரும், செல்போன் பேசியதால் ஏற்பட்ட விபத்தில் 1,040 பேரும் பலியாகியது குறிப்பிடத்தக்கது

    • நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தகவல்.
    • நிலம் சரியும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவு.

    இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங் தெரிவித்துள்ளார்.

    இந்த நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சிங் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளைச் சுற்றி நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவிட்டுள்ளதாக சிங் கூறினார்.

    மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும், மாநில பொதுப்பணித்துறை சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டதாக சிங் கூறினார்.

    • சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க இயலும்.
    • இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் 60 சதவீதம் எத்தனாலுக்கு மாறவேண்டும். 40 சதவீதம் மின் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் (மின்சார வாகனம்). சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும்.

    இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலமாக வாகனங்கள் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது. வாகன பயன்பாட்டிற்கு சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்துக் கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் மக்களும் பயனடைவார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மாசுபாடு குறைவதுடன், இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுகிறது. உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தால், நாம் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க தேவையில்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது.

    கரும்பு சக்கை, வைக்கோல், கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், அந்த பொருட்களை கொள்முதல் செய்வதன்மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும். நம் தேவை குறையும்போது கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு கேட்க முடியும்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தின்படி, அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்திற்கு மாறும்  நடைமுறைகள் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும்.

    அனைத்து வாகனங்களும் மின்சாரம் மற்றும் எத்தனாலுக்கு மாறிவிட்டால், அதற்கு பிறகு ஒருசில பயன்பாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஒருசிலர் வைத்திருக்கும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஆனால் இது நடைமுறைக்கு வர 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

    ஏனென்றால் இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனம் இனிமேல்தான் வர உள்ளது. முதல் வாகனத்தை ஆகஸ்ட் மாதம் நிதின் கட்காரி அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பிறகு எத்தனால் வாகனங்கள் அதிகரிக்க வேண்டும், மின்சார வாகனங்களும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான், பெட்ரோல்-டீசல் தேவை குறைந்து விலை குறையும். அப்படியே குறைந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தேவைப்படாது என்பதே நிதர்சனம்.

    • பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது.
    • இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.

    நாக்பூர் :

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

    பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது. அதில் முதலாவது தேசியவாதம். இது எங்கள் கட்சியின் ஆன்மா. நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் நாடு பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுபெற வேண்டும். இரண்டாவது நல்லாட்சி மற்றும் வளர்ச்சியுடன் முன்னேறி சுயசார்புடைய நாடாக மாற வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம்.

    அதேபோல சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய மற்றும் தலித்துகளுக்கு சேவை செய்வதே கட்சியின் 3-வது நோக்கம்.இந்த நாடு தனி நபருக்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு மதத்திற்கோ சொந்தமானது அல்ல. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் ஊடகம் ஆகிய 4 தூண்களில் நிற்கும் ஜனநாயகத்தின் தாய் நாங்கள்.

    எங்களுக்கு அரசியலமைப்பு என்பது பகவத் கீதை, பைபிள் மற்றும் குரான் போன்றதுபோன்றது. அதன் கொள்கைப்படி நமது சமுதாயத்தை வடிவமைத்தால், அனைவரும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியும். ஒவ்வொரு தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்ய நாங்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது.
    • நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.

    மும்பை :

    மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் பண்டாராவில் நடந்த பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். விழாவில் அவர், பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் சிச்கர் என்ற தலைவர் அவரை காங்கிரசில் சேருமாறு அறிவுரை கூறியதை நிராகரித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.

    இது தொடர்பாக நிதின் கட்காரி பேசியதாவது:-

    ஸ்ரீகாந்த் சிச்கர் ஒருமுறை என்னிடம் 'நீ நல்ல கட்சி தொண்டன், தலைவன். நீ காங்கிரசில் சேர்ந்தால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' என்றார். நான் அவரிடம், நான் கிணற்றில் குதித்தாலும் குதிப்பேன், காங்கிரசில் சேரமாட்டேன் என்றேன். ஏனெனில் எனக்கு பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தில் அதிக நம்பிக்கை இருந்தது. எனவே அதற்காக தொடந்து உழைப்பேன்.

    காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் அந்த கட்சி பல முறை உடைந்து உள்ளது. நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது. கடந்த காலம் மூலம் நாம் எதிர்காலத்துக்கு கற்றுக்கொள்ள வேண்டும். தனது 60 ஆண்டுகால ஆட்சியின் போதும் வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் முழங்கி வந்தது. ஆனால் அவர்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக கல்வி நிறுவனங்களை தான் திறந்தார்கள். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்து உள்ளது. நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததைவிட 2 மடங்கு அதிகமான நலத்திட்ட பணிகளை 9 ஆண்டில் பா.ஜனதா அரசு செய்து உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.
    • பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்து, 'ஹாட்ரிக்' அடிக்க பா.ஜ.க. முனைப்பாக உள்ளது.

    ஆனால் இந்த முறை பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைத்துப் போட்டியிடச்செய்யும் முயற்சியில் ஐக்கிய ஜனதாதளம் தலைவரான பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்

    இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மந்திரியுமான நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2024 மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    நாங்கள் நல்ல பணியாற்றி உள்ளோம். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைப்போம். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

    இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகள் பட்டினி, ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

    இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.

    ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் வாகன போர்டலில் இணையும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று தெலுங்கானா மற்றும் லக்ஷதீப் பகுதிகளுக்கான விவரங்கள் மத்திய அரசு முனையத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

     

    மத்திய அரசின் வாகன பதிவு முனையத்தில் உள்ள விவரங்களின் படி 2021 ஆம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 யூனிட்கள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 யூனிட்கள் பதிவானது. இந்த வரிசையில், இந்த ஆண்டு துவங்கிய முதல் மூன்று மாதங்களிலேயே சுமார் 2.78 லட்சம் யூனிட்கள் பதிவாகி இருக்கின்றன.

    நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி மக்களைவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • மத்திய மந்திரி நிதின் கட்கரி அலுவலகத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.
    • நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும்.

    மும்பை:

    பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரது மக்கள் தொடர்பு அலுவலகம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஆரஞ்சு சிட்டி மருத்துவமனை எதிரில் உள்ளது.

    இந்நிலையில், நிதின் கட்கரி அலுவலகத்துக்கு நேற்று காலை ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர் போன் செய்தார். அவர் ரூ.10 கோடி தரவேண்டும் என கேட்டார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் நிதின் கட்கரியை தாக்குவேன் என மிரட்டினார். அவர் காலை 2 முறையும், மதியம் 12 மணியளவில் ஒரு முறையும் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மிரட்டல் போன் அழைப்பு வந்ததை அடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்கரியின் வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி புஜாரி எனக் கூறி ஒருவர் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார். அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    • சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை.

    புதுடெல்லி:

    சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதிலளித்து கூறியதாவது:

    கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ரூ.4,183 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து ரூ.3,642 கோடியும், தமிழ்நாட்டில் இருந்து ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

    பாஸ்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை. சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.

    • பூண்டியாங்குப்பம், சட்டநாதபுரம், நாகப்பட்டினம் இடையிலான 113 கிலோ மீட்டர் தூர பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
    • முகையூர்-மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்று இ.சி.ஆர். எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை.

    கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? என்று பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோ எம்.பி. மற்றும் தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை இந்த கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும், என்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ரூ.24 ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் நடந்து வருகிறது.

    விரிவாக்கத்தின்போது பாலங்கள், இணைப்பு சாலைகள், வாகன சுரங்க பாதைகள் போன்றவை அமைக்கப்படும். இப்பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

    விரிவாக்கம் செய்யப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை 697 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இதனை 8 பிரிவுகளாக பிரித்து விரிவாக்கம் செய்து வருகிறார்கள். இதில் புதுச்சேரி முதல் கடலூர் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கிலோ மீட்டர் தூர பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவு பெறும் என தெரிகிறது.

    இதுபோல மகாபலிபுரம்-முகையூர் இடையிலான 31 கிலோ மீட்டர் சாலை பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்த சாலை பணி முடியும் என்று தெரிகிறது.

    மேலும் பூண்டியாங்குப்பம், சட்டநாதபுரம், நாகப்பட்டினம் இடையிலான 113 கிலோ மீட்டர் தூர பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

    இதுபோல முகையூர்-மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையிலான சாலை விரிவாக்க பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மரக்காணம்-புதுச்சேரி இடையிலான 46 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இச்சாலை விரிவாக்க பணியில் தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இடையிலான சாலை விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.

    சாலை விரிவாக்க பணிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வந்ததால் இது தொடர்பாக மாநில அரசுடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து கொண்டது.

    கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சாலை விரிவாக்க பணிகள் வேகமாக நடப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
    • தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.

    சென்னை:

    மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    * ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    * ஒப்பந்ததாரர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நிலவும் பிரச்சினையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    * தற்போது சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால், உடனடியாக ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட வேண்டும்.

    * சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

    * தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×