search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்: நிதின் கட்காரி தகவல்
    X

    துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்: நிதின் கட்காரி தகவல்

    • கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது.

    இந்தநிலையில் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

    இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளால் உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாமதமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலைகளாக (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப்பட்டது. மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரெயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த மத்திய மந்திரி கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகையில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்காததால் பணிக்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. உத்தரவாதத்தை சமர்ப்பித்ததும், வேலை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    மேம்பாலத்தின் ஒரு பகுதி டபுள் டெக்கராக இருக்கும். துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே இருக்கும் பாலத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

    மேல் பாலத்தில் மற்ற வாகனங்கள் உள்ளே நுழையவோ வெளியேறவோ வழிகள் இருக்காது.

    முன்னதாக, நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் துறைமுகம் மற்றும் பாலத்தின் முடிவில் மட்டுமே இருக்கும்படி முன்மொழியப்பட்டது. இப்போது, 13 பகுதிகளில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையில் தொடரும். தொடர்ந்து மதுரவாயல் வரை தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு மேம்பாலம் அமைய உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். மேம்பாலத்திற்கான நிலத்தை அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது.

    சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும் சாலை திட்டம் முடிவுக்கு வரும்போது சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    Next Story
    ×