என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kapil dev"
- நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம்.
- சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு குறை இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்று கபில்தேவ் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து கபில்தேவ் கூறியதாவது:-
இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் அனைத்தும் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
இந்திய அணியின் பந்துவீச்சு ஆங்காங்கே குறைகள் இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி நான் முக்கியம் இல்லை என சொல்லவில்லை. அந்த ஆட்டங்களில் நீங்கள் நோபால், வைடு வீசக்கூடாது.
சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும்.
இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். வெற்றிகரமாக எட்டுவார்கள் அதேபோன்று ராகுலும் முக்கிய போட்டிகளுக்கு முன்பு ரன்களை அடிக்க வேண்டும்.விராட் கோலியை பொருத்தவரை அவர் 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிக்கலாம்.
என்று கபில்தேவ் கூறினார்.
- 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம்.
- டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும்.
அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.அவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஷாட்கள் எல்லாம் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்சர் மிகவும் அற்புதமாக இருந்தது.
காலை பின் பக்கமாக (பேக்புட்) கொண்டு சென்று நேராக சிக்சர் அடித்தார்.
விராட் கோலியின் இந்த சிக்சரை முன்னாள் கேப்டன் கபில்தேவ் வியந்துள்ளார். அவர் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரோடு கோலியின் சிக்சரை ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மெதுவான பந்தில் நேராக சிக்சர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம். இந்த சிக்சரை ஆயிரம் முறை பார்க்கலாம்.
டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அது போல அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். அவர் தலைமையிலான அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிடைத்தது. டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையும் கிடைத்து இருந்தது.
இந்திய அணி இதுவரை 3 உலகக்கோப்பையை (1983, 2011-ஒரு நாள் போட்டி, 2007-இருபது ஓவர்) கைப்பற்றி உள்ளது.
- ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது.
- நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன்.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. உலகக்கோப்பைக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
வேகப்பந்து வீரர் பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் ஆடவில்லை. முன்னணி வீரர்களான இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உலகக்கோப்பைக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார். அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிக அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்து உள்ளேன். இதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன்.
ஐ.பி.எல்.லில் ஆடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அழுத்தமாக உணர்ந்ததால் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.
வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன். கிரிக்கெட் அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. வீரர்களும் விளையாட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் எதுவும் இருக்காது.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
- விராட் கோலி போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்.
- விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கபில் தேவ் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான அணியிலும் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து பல வெற்றிகளை குவித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று தன்னை நிரூபித்த அவர் கடைசியாக கடந்து 2019-ல் சதமடித்திருந்தார்.
அதன்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கும் மேலாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் ஆனார்.
எத்தனை நாட்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பை கொடுக்க விடாமல் காலத்தை தள்ளுவீர்கள் என்று கடுமையாக விமர்சித்த கபில்தேவ் டெஸ்ட் அணியில் அஷ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் டி20 அணியில் விராட் கோலியை நீக்குவதில் எந்த தவறுமில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார்.
விராட் கோலி குறித்து கபில் தேவ் கூறியதாவது:-
விராட் கோலி போன்ற பெரிய வீரரை நீக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. அவர் மிகப்பெரிய வீரர். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஓய்வு கொடுக்கப்பட்டதாக நீங்கள் கூறியிருந்தால் அதில் எந்தத் தீங்கும் இல்லை. இருப்பினும் அவரைப்போன்ற வீரரை எப்படி பார்முக்கு திரும்ப வைக்க முடியும் என்பது முக்கியமான கேள்வியாகும்.
தனித்துவம் நிறைந்த வீரரான அவர் நிறைய பயிற்சிகளை எடுத்து அதிக போட்டிகளில் விளையாடினால் தான் பார்முக்கு திரும்ப முடியும். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை விட பெரிய வீரர் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் சரியாக செயல்படவில்லையெனில் தேர்வுக் குழுவினர் அவர்களின் முடிவை எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படாத யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் அல்லது நீக்கலாம் என்று தெரிவித்தார்.
விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கபில் தேவ் கூறினார்.
அவரைப் போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரை நீக்கினாலும் ஓய்வு கொடுத்தாலும் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.
அதற்காக ரஞ்சி கோப்பை அல்லது வேறு ஏதேனும் தொடர்களில் பெரிய அளவில் ரன்களைக் குவித்தால் அது அவரின் தன்னம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும். மேலும் சிறந்த வீரருக்கும் மிகச்சிறந்த வீரருக்கும் அதுதான் வித்தியாசமாகும். மிகச்சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இத்தனை நேரங்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் அவர் ஃபார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் எடுத்துகொள்வது கவனிக்க வேண்டியுள்ளது.
விராட் கோலி ஓய்வெடுத்தாலும் நீக்கப்பட்டாலும் எனக்கு பிரச்சினை கிடையாது. அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அவரைப் போன்ற நல்ல வீரர் ஃபார்முக்கு திரும்ப ஒரு சிறந்த இன்னிங்ஸ் போதுமானது. இருப்பினும் அது எப்போது வரும் என்று நமக்கு தெரியவில்லை. அதற்காக நாம் 2 வருடங்களாக காத்திருக்கிறோம் என்று ஆதரவு கலந்த விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.
- ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும்.
மும்பை:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் பார்ம் இன்றி இருப்பதால் கடும் விமர் சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.
இதுதொடர்பாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும்போது, 'பல ஆண்டுகளாக கோலி பேட்டிங் செய்ததை போல் தற்போது செயல்படவில்லை. 20 ஓவர் போட்டியில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
உலகின் நம்பர் 2 பந்து வீச்சாளரான அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும் போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியையும் நீக்கலாம்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து கபில்தேவ் தெரிவித்த கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு ரோகித்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கபில்தேவ் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
அவர் (கபில்தேவ்) வெளியில் இருந்து விளையாட்டை பார்க்கிறார். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது. நாங்கள் எங்கள் அணியை உருவாக்குகிறோம். இதற்கு பின்னால் நிறைய சிந்தனை இருக்கிறது.
நாங்கள் வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். இவை வெளியில் இருந்து நீங்கள் அறியாத விஷயங்கள். எனவே வெளியில் நடப்பது முக்கியமல்ல. உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பார்மை பற்றி பேசினால், எல்லோரும் ஏற்ற-தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் வீரரின் தரம் பாதிக்கப்படாது.
ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும். இது அவரை மோசமான வீரராக மாற்றாது. அவரது கடந்த கால ஆட்டத்தை பார்க்கக்கூடாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.
விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.
- விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இடம் பெறாத கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த போட்டிக்கு திரும்பியுள்ளனர். இந்த போட்டிக்கு ஆடும் லெவன் எடுப்பதில் கடும் போட்டி நிலவும். விராட் கோலி, பும்ரா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார்கள். இதனால் டாப் ஆர்டரிலும் பந்து வீச்சாளர் பக்கமும் மாற்றம் இருக்கலாம்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வினை நீக்கும் போது டி20 போட்டியில் இருந்து விராட் கோலியையும் நீக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-
தற்போது உள்ள சூழ்நிலையில் விராட் கோலி டி20 ஆடும் லெவனில் விளையாடுவதை விட பெஞ்சில்தான் அமர வேண்டும். 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கிறார். அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியும் என்றால் விராட் கோலியையும் டி20 அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும்.
விராட் கோலி பார்மில் இல்லை. அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் அவரை உட்கார வைக்கக் கூடாது, ஆனால் பார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக்கூடாது.
நான் அணியில் ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறேன். இந்த இளம் வீரர்கள் விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு விராட் கோலி ஓய்வளிக்கப்பட்டார் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றே விவரம் அறிந்த வேறு சிலர் கருதுவார்கள். ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.
இவ்வாறு கபில் தேவ் காட்டமாக பேசியுள்ளார்.
விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி பும்ரா முன்னேறி உள்ளார். 1981-1982-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அந்த சாதனை தற்போது பும்ரா (23 விக்கெட்டுகள்) முறியத்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா (SENA) ஆகிய நாடுகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அனில் கும்ளே (141), இஷாந்த் சர்மா (130), ஜாகீர் கான் (119), முகமது சமி (119) கபில் தே (119) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றது. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.
முதல் 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் இன்று நமீபியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட்கோலி பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
20 உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறாததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி தொடங்கு வதற்கு முன்பு இந்தியா தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த தோல்விக்கு விராட்கோலி தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐ.பி.எல். போட்டிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனால் நாம் என்ன சொல்ல முடியும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இப்போதே திட்டமிட வேண்டும். எதிர்கால இந்திய அணி மிகவும் முக்கியமானது. ஐ.பி.எல்.க்கும் உலக கோப்பைக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்திருக்க வேண்டும்.
உலக கோப்பையில் இந்திய வீரர்களால் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தவில்லை.
வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் நாடு அதற்குபிறகுதான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் வீரர்கள் இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.
இவ்வாறு கபில்தேவ் கூறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) விராட்கோலி கேப்டனாக உள்ளார். 20 ஓவர் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு உலக கோப்பைக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி தெரிவித்து இருந்தார். 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் கூறி இருந்தார்.
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுகிறார். ரோகித் சர்மா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் லோகேஷ் ராகுலும் இதற்கான போட்டியில் உள்ளார்.
இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து 1983-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகிதாச்சாரத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த வகையில் மற்ற அணிகளை விட இந்திய அணி அதிக அனுபவம் கொண்டதாகும். வீரர்கள் கலவை சரிசமமான விகிதத்தில் உள்ளது. 4 வேகப்பந்து வீச்சாளர்களும், 3 சுழற்பந்து வீச்சாளர்களும், விராட்கோலி, டோனி ஆகியோரும் அணி யில் அங்கம் வகிக்கிறார்கள்.
இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்தியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி உறுதியாக அரைஇறுதிக்கு முன்னேறும். அதன் பிறகு போட்டி நிச்சயம் கடினமாக இருக்கும். அரைஇறுதிக்கு பிறகு முன்னேறுவதில் அதிர்ஷ்டமும், தனிப்பட்ட வீரர்கள் மற்றும் அணியின் கூட்டு முயற்சியும் அவசியமானதாகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மற்ற அணிகளை விட வலுவானதாகும். நியூசிலாந்து மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியவையாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போதைய கால கட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமின்றி யாரும் 4-வது வீரராக களம் இறங்கி விளையாட முடியும். ஹர்திக் பாண்ட்யாவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட விட வேண்டும். நான் எந்தவொரு வீரரையும், மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பமாட்டேன். ஏனெனில் அது அந்த வீரருக்கு நெருக்கடியை அளிக்கும்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார். #WorldCupCricket #KapilDev #India
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய சேவைகளை செய்தவர் டோனி. அவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது. உடல் தகுதியை பொறுத்து அவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
ஆனால் டோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என்றே சொல்வேன். அவரை மதிக்க வேண்டும். அதோடு அவரை வாழ்த்தவும் வேண்டும்.
டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று நம்புகிறேன். தற்போது உள்ள இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் உலககோப்பையை வெல்வது எளிதல்ல. அணியாக ஆடவேண்டும். காயம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் நிச்சயம் இந்த அணி உலககோப்பையை வெல்லும்.
உலககோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு குழுவினர் செய்து உள்ளனர். நாம் அதனை மதிக்க வேண்டும். ரிஷப் பந்துக்கு பதிலாக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள். அப்படியென்றால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் தேர்வு குழுவினரின் சிறந்த பணியை நம்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு கபில்தேவ் தான் முதல் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ம் ஆண்டு அவரது தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது.
28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது உலககோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2011-ம் ஆண்டு அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது.
தற்போது விராட்கோலி தலைமையில் இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டோனி ஆட்டத்தை நிறைவு செய்வதில் தொடர்ந்து வல்லவராக இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.
12-வது உலககோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. #MSDhoni #KapilDev
‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
காஷ்மீரில் உள்ள புலவாமாவில் கடந்த 14-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடுர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுடன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜூன் 16-ந் தேதி மோத இருக்கும் ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்களில் ஒரு சிலர் வற்புறுத்தி உள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானுடன் மோதி அந்த அணியை வீழ்த்தி வெளியேற்ற முயற்சிக்க வேண்டும் என்று சில வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டுமா? என்பது குறித்து ஆலோசிக்க கூடிய இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் உரிய நேரத்தில் இந்த விஷயம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் பங்கேற்க விசாகப்பட்டினம் சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியிடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுமா? என்று கேட்டதற்கு பதில் அளிக்கையில், ‘புலவாமா தாக்குதலில் உயிரை இழந்த துணை ராணுவ படை வீரர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். நடந்த துயர சம்பவத்தால் இந்திய அணி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது. எங்களது நிலைப்பாடு மிகவும் எளிதானது. நாடு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதன்படி நாங்கள் நடப்போம். இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறதோ? அது தான் எங்களது அடிப்படை கருத்தாகும். இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு எடுக்கிறதோ? அதன்படி நாங்கள் நடப்போம். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் மதித்து செயல்படுவோம். இந்த விஷயத்தில் இது தான் எங்களது நிலைப்பாடாகும்’ என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கேப்டன்கன் அசாருதீன், கங்குலி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், தெண்டுல்கர் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடி வீழ்த்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது.
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
தற்போது நிலவும் சூழ் நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை பற்றி நம்மை போன்ற மக்கள் முடிவு எடுக்க கூடாது. இது மத்திய அரசால் முடிவு எடுக்கப்பட வேண்டியது.
இதனால் நமது தனிப்பட்ட கருத்துக்களை திணிக்காமல் இருப்பது நல்லது. எனவே இந்த முடிவை அரசு மற்றும் அது தொடர்புடையவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.
இந்த முடிவு நாட்டின் நலன் கருதி எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும். எனவே அதன்படி நாம் செயல்படுவோம்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
அரசு அனுமதிக்கும் வரை இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறாது என்று ஐ.பி.எல். தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்து இருந்தார்.
உலக கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16-ந்தேதி நடக்கிறது.
கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ல் முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #KapilDev #pulwama #IndiavsPakistan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்