search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL 2019"

    மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஸல் 3-வது வீரராக ஆடியது நல்ல முடிவு என வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். #IPL2019 #KKRvsMI
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா 5-வது வெற்றியை பெற்றது.

    ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன் குவித்தது.

    ஆந்த்ரே ரஸலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 40 பந்தில் 80 ரன்னும் (6 பவுண்டரி, 8 சிக்சர்), உஸ்மான் கில் 45 பந்தில் 76 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் லின் 29 பந்தில் 54 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்திக் பாண்டியா, ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    233 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை விளையாடியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தா 34 ரன்னில் வெற்றி பெற்றது.

    ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. ரஸலை மிரட்டும் வகையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த ஆட்டம் பலன் அளிக்காமல் வீணானது. ஹர்திக் பாண்டியா தனி ஒருவராக போராடி 34 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும்.

    சுனில்நரைன், ரஸல், குர்லே தலா 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    கொல்கத்தா அணி தொடர்ந்து ஏற்பட்ட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

    வெற்றி குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    ஆந்த்ரே ரஸல் 3-வது வீரராக முன்னதாக களம் இறக்கப்பட்டது நல்ல முடிவாகும். அவர் ஒரு சிறப்பு மிக்க வீரர் ஆவார். அவரது வளர்ச்சியை நாங்கள் நேரில் பார்ப்பது சிறந்தது. மேலும் ஒரு அதிரடியான ஆட்டத்தை ரஸல் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

    ஹர்திக் பாண்டியா ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் 5-வது தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, “நாங்கள் வெற்றி இலக்கை நெருங்கி வந்துதான் 34 ரன்னில் தோற்றோம். ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு ஆதரவாக எதிர் முனையில் வீரர்கள் இல்லை. கொல்கத்தா அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பின்னர் வந்த ரஸல் விளாசி தள்ளி விட்டார். எஞ்சிய 2 ஆட்டங்களும் உள்ளூரில் விளையாடுவதால் மீண்டும் எழுச்சி பெறுவோம்” என்றார்.

    கொல்கத்தா அணி 13-வது ஆட்டத்தில் பஞ்சாப்பை மே 3-ந்தேதி சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் ஐதராபாத் அணியை மே 2-ந்தேதி சந்திக்கிறது. #IPL2019 #KKRvsMI
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று சென்னையில் மே 7-ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 8-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 10-ம் தேதியும், இறுதிப்போட்டி ஐதராபாத்தில் மே 12-ம் தேதியும் நடக்கிறது. 

    தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.

    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் அரை மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது. #IPL2019
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. #IPL2019 #SRHvsRR #IPL2019 #SRHvsRR

    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோன், ஆஷ்டன் டர்னர் இடம் பிடித்தனர். ஐதராபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோ தாயகம் திரும்பி விட்டதால் விக்கெட் கீப்பர் இடத்திற்கு விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன் 13 ரன்னில், சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

    இதன் பின்னர் டேவிட் வார்னரும், மனிஷ் பாண்டேவும் இணைந்து சரிவை தடுத்தனர். ஆனால் வார்னர் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக ஆடினார். 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்ற போதிலும் அவர் பந்தை ஒரு முறை கூட எல்லைக்கோட்டிற்கு விரட்ட முடியாமல் தவித்தது ஆச்சரியம் அளித்தது. அதே சமயம் பாண்டே வேகம் காட்டினார். 11.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதம் அந்த அணி 180 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும், நிலைமை தலைகீழாக மாறியது.




    டேவிட் வார்னர் 37 ரன்களில் (32 பந்து) கேட்ச் ஆனார். மனிஷ் பாண்டே 61 ரன்களில் (36 பந்து, 9 பவுண்டரி) வெளியேறினார். விஜய் சங்கர் (8 ரன்), தீபக் ஹூடா (0), விருத்திமான் சஹா (5 ரன்), ஷகிப் அல்-ஹசன் (9 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்கவில்லை. எப்படியோ கடைசி ஓவரில் ரஷித்கான் (17 ரன், நாட்-அவுட்) பவுண்டரி, சிக்சர் அடித்து அணி 150 ரன்களை கடப்பதற்கு உதவினார்.

    20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன், ஒஷானே தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும், லிவிங்ஸ்டோனும் (இங்கிலாந்து நாட்டவர்) அட்டகாசமான தொடக்கத்தை தந்தனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவருக்குள் 60 ரன்களை திரட்டினர். ரன்மழை பொழிந்து ரசிகர்களை குதூகலப்படுத்திய லிவிங்ஸ்டோன் 44 ரன்களில் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ரஹானே 39 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் சுமித் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.



    ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டர்னர் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தானுக்கு இது 5-வது வெற்றியாகும். ஏற்கனவே ஐதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. 11-வது லீக்கில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 6-வது தோல்வியாகும். #IPL2019 #SRHvsRR

    ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. #ipl2019 #rrvssrh

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 45-வது ‘லீக்’ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    அந்த அணி ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.

    அந்த அணியின் பேட்டிங்கில் ரகானே (352 ரன்), கேப்டன் சுமித் (297 ரன்), சஞ்சு சாம்சன் (261 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் ஷிரேயாஸ் கோபாலும் (13 விக்கெட்), நல்ல நிலையில் உள்ளனர். பட்லர், பென்ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் இங்கிலாந்து திரும்பி இருப்பது அந்த அணிக்கு பாதிப்பே.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    ராஜஸ்தானை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. இதனால் அந்த அணியை மீண்டும் தோற்கடித்து 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் ஐதராபாத் அணி உள்ளது.

    அந்த அணியின் பேட்டிங்கில் வார்னர் (574 ரன்), பேர்ஸ்டோவ் (445) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். பேர்ஸ்டோவ் நாடு திரும்பியது பேட்டிங்கில் பலவீனத்தை காட்டும்.

    ஏற்கனவே அந்த அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருக்கிறது. பந்துவீச்சில் ரஷீத்கான், சந்தீப் சர்மா (தலா 10 விக்கெட்), தற்காலிக கேப்டன் புவனேஷ்வர்குமார் (8 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #ipl2019 #rrvssrh 

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது என்று வெற்றி குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். #rohitsharma #dhoni #ipl2019

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் சரண்டர் ஆனது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது.

    கேப்டன் ரோகித்சர்மா 48 பந்தில் 67 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), லீவிஸ் 32 ரன்னும் எடுத்தனர். சான்ட்னெர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், இம்ரான்தாகீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    156 ரன் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டு 46 ரன்னில் தோற்றது.

    முரளி விஜய் அதிகபட்சமாக 35 ரன்னும், சான்ட்னெர் 22 ரன்னும் எடுத்தனர். மலிங்கா 4 விக்கெட்டும், பும்ரா, குணால் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, அங்குல் ராய் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் வீழ்ந்தது. ஏற்கனவே வான்கடே மைதானத்தில் 37 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. ஓட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. கேப்டன் டோனி ஆடாதது அணிக்கு பாதிப்பு என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி உள்ளது.

    தோல்வி குறித்து சூப்பர் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ்ரெய்னா கூறியதாவது:-


    நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. 156 ரன் எடுக்க கூடிய இலக்குதான். பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஒவ்வொரு 2 முதல் 3 ஓவர்களுக்கு இடையே விக்கெட்டுகளை பறி கொடுத்தோம். இதனால் தோல்விக்கு பேட்ஸ் மேன்களே பொறுப்பு.

    ஆனால் எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. எங்கள் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களும் அனுபவம் வாய்ந்தவர்களும் இருந்தும் சாதிக்க இயலவில்லை. அனைத்துமே தவறாக அமைந்தது. பேட்டிங் மீண்டும் பலம் பெறுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 7-வது வெற்றியாகும். 3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அந்த அணி இந்த சீசனில் 3 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்சை 2 முறையும் வீழ்த்தியது. ‘பிளே ஆப்’ சுற்றில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    டாஸ் தோற்றும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் முதல் பேட்டிங் செய்வதா? அல்லது பந்து வீசுவதா? என்பதை அறிந்து இருந்தோம். நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது. எந்த ஒரு அணிக்கும் எதிராகவும் அவர் இல்லாமல் இருந்தால் அந்த அணிக்கு சாதகமானதே. சேசிங்கில் அவரை கட்டுப்படுத்துவது சவாலானதே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை மே 1-ந்தேதி சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் 12-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை எதிர் கொள்கிறது. #rohitsharma #dhoni #ipl2019

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvMI
    ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் சுரெஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்

    அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது டி காக் 15 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய எவின் லெவிஸ் 32 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 48 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 23 ரன்னுடனும், பொல்லார்டு 13 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே ரசிர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த வாட்சன் 8 ரன்னில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

    அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா பந்தில் ரெய்னா 2 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன்ஏதும் எடுக்காமலும் குருணால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் முரளி விஜய் நிலைத்து நிற்க மறுபக்கம் விக்கெட் வீழந்த வண்ணமே இருந்தது.

    கேதர் ஜாதவ் 6 ரன்னிலும், ஷொரே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய முரளி விஜய் 38 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #IPL2019 #CSKvMI
    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வருண் ஆரோன், மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். #IPL2019 #KKRvRR
    கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியால் 175 ரன்களே எடுக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்தான்.

    அவர் நான்கு ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தொடக்க பேட்ஸ்மேன்களான கிறிஸ் லின் (0), ஷுப்மான கில் (14) ஆகியோரை அவுட்டாக்கியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் ஏற்கனவே இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார். மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



    இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள வருண் ஆரோன் இதுகுறித்து கூறுகையில் ‘‘எல்லாமே சிறப்பாக உள்ளது. நான் எப்போதுமே என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த போட்டிக்கு முந்தைய போட்டியில் ஒரு ஓவர்தான் வீசினேன். அதில் நான் தவறு ஏதும் செய்ததாக உணரவில்லை. எப்போதுமே சிறந்ததாகவே உணர்கிறேன். நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதே எனது விருப்பம்’’ என்றார்.

    வருண் ஆரோன் கடைசியாக 2014-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ராஜஸ்தான் அணியிடம் கொல்கத்தா வீழ்ந்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். #DineshKarthik #ipl2019 #kkrvrr

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று கொல்கத்தாவில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 பந்தில் 97 ரன் எடுத்தார். அவர் 7 பவுண்டரி 9 சிக்சர் அடித்தார்.

    பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 6 விக்கெட்டுக்கு 123 (15.2 ஓவர்) எடுத்து இருந்தது. அதன்பின் இளம் வீரர் ரியான் பராக்சம்- ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. அதில் ஆர்ச்சர் முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும் அடித்தார்.

    ராஜஸ்தான் 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. பராக் 31 பந்தில் 47 ரன்னும், ஆர்ச்சர் 12 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.

    கொல்கத்தா தொடர்ந்து 6 தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்த தோல்வி சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். ஆனால் எங்களது நாளாக அமையவில்லை. வெற்றி பெறும்போது எப்போதுமே நல்ல உணர்வை அளிக்கும். ஆனால் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கும்.


    கடைசி ஓவரில் 2-வது பந்தில் ஆர்ச்சர் நல்ல ஷாட் அடித்தார். ஆனால் முதல் பந்தில் எட்ஜ் ஆகி பவுண்டரி சென்று விட்டது. இதனால் இலக்கை எட்டுவது அவர்களுக்கு எளிதாகி விட்டது.

    பந்து வீச்சாளர்கள் மீது அதிக நெருக்கடியை திணிக்க முடியாது. பனியின் தாக்கத்தால் பந்து ஈரபதமானது.

    எங்களது அணி வீரர்கள் போராடிய விதத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் முடிவை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை.

    டிரெசிங் அறையில் நல்ல சூழ்நிலையை வைத்திருப்பது முக்கியது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வெற்றி எல்லையை அடைய முடியாதது எங்களுக்கு நல்ல உணர்வை அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறும்போது, “இளம் வீரர் ரியான் பராக் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அவரிடம் பந்து வீச்சு திறமையும் நன்றாக இருக்கிறது” என்றார்.

    கொல்கத்தா 11 ஆட்டத்தில் 7-வது தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் 4-வது வெற்றியை (11 ஆட்டம்) பெற்றது. #DineshKarthik #ipl2019 #kkrvrr

    ஐபிஎல் போட்டியில் இன்று நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். #KKRvsRR #IPL2019
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் 43-வது ‘லீக்‘ ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணி 4 வெற்றி 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றது. தோல்வியில் இருந்து மீண்டு 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் அந்த அணி உள்ளது.

    கேப்டன் தினேஷ் கார்த்திக், உத்தப்பா ஆகியோரது ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக் உள்ளார்.

    ஆந்த்ரே ரஸ்சலின் அதிரடி ஆட்டத்தை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஏற்கனவே ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் கொல்கத்தா அணி நம்பிக்கையுடன் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வென்றால் தான் அந்த அணி தொடர்ந்து வாய்ப்பில் இருக்கும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. #KKRvsRR #IPL2019
    வேடிக்கையாக விளையாடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #KXIP #RCB #ViratKohli
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாபை மீண்டும் வீழ்த்தியது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 34 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் படேல் 24 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சமி, விஜோயன்ஸ், கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது.

    நிக்கோலஸ் பூரன் 28 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ராகுல் 27 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஸ்டோன்ஸ், மொய்ன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.



    பெங்களூர் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று அந்த அணி வாய்ப்பில் நீடித்து வருகிறது. வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    எங்களது ஒரே நோக்கம் அணிக்காக சிறப்பாக விளையாடுவது தான். தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் தோற்றது உண்மையிலேயே காயத்தை ஏற்படுத்தி விட்டது. இது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பே. வேறு எந்த அணியும் இதே மாதிரி 6 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது இல்லை. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் நான்கில் வென்றுள்ளோம். 5 ஆட்டத்திலும் வென்று இருந்தால் மகிழ்ச்சியுடன் இருந்து இருப்போம். வேடிக்கையாக விளையாடிதான் இந்த ஆட்டத்தில் வென்றோம். நாங்கள் எந்தவித நெருக்கடியிலும் ஆடவில்லை. எப்படி ஆட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KXIP #RCB #ViratKohli
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி பதில் அளித்துள்ளார். #CSK #IPL2019 #MSDhoni
    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    மனீஷ்பாண்டே 49 பந்தில் 83 ரன்னும், (7 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் வார்னர் 45 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டும், தீபக் சாஹர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    176 ரன் இலக்குடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடியது.

    தொடக்க வீரர் வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வாட்சன் 53 பந்தில் 96 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரெய்னா 24 பந்தில் 38 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர்குமார், ரஷீத்கான், சந்தீப்சர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8-வது வெற்றியாகும். இதன்மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளேஆப்’ சுற்றை உறுதி செய்து மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. மேலும் இந்த வெற்றி மூலம் ஐதராபாத்திடம் அதன் சொந்த மண்ணில் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது.

    வெற்றி குறித்து சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    தனி நபர்களால் சில ஆட்டங்களில் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது. பல போட்டிகளில் அணியாக வெற்றி பெறுகிறோம். எங்கள் அணியின் மேட்ச் வின்னர் வாட்சன். சில ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவருக்கு ஆதரவு அளிப்பது அவசியமானது. கடந்த ஆண்டு அவர் பல்வேறு ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நிலையாக விளையாடி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைவது குறித்து கேட்கப்படுகிறது. இந்த வெற்றியின் மந்திரத்தை வெளியில் சொல்லக்கூடாது. ஏனென்றால் ஏலத்தில் என்னை வாங்க மாட்டார்கள். அது வியாபார ரகசியம்.

    சென்னை அணியின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு, சென்னை அணியின் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதைத் தவிர நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்ல மாட்டேன்.

    எனது முதுகுவலி மோசமாக இல்லை. ஆனால் உலக கோப்பை நெருங்குவதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். அச்சப்படும்படி எதுவும் இல்லை. உலககோப்பை தான் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐதராபாத் அணி 5-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர் குமார் கூறும்போது, “175 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் பனி துளியால் ஆடுகளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேற இயலும்” என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 26-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    ஐதராபாத் அணி 11-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 27-ந்தேதி சந்திக்கிறது. #CSK #IPL2019 #MSDhoni
    விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #RCBvsKXIP

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 42-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணிவெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை மீண்டும் தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பெங்களூர் அணியில் கேப்டன் விராட்கோலி (387 ரன்), டிவில்லியர்ஸ் (332 ரன்), பார்த்தீவ் படேல் (283 ரன்), மொய்ன் அலி (216 ரன்), யசுவேந்திர சாஹல் (14 விக்கெட்) ஸ்டெய்ன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் ராயல்சை 2 முறையும் (14 ரன், 12 ரன்) மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை ஒரு முறையும் வீழ்த்தியது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்), டெல்லி (5 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

    பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் (423 ரன்), லோகேஷ் ராகுல் (399 ரன்), அகர்வால் (227 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ‌ஷமி (13 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (11 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #RCBvsKXIP

    ×