search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Family"

    • மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    மதுரையை சேர்ந்தவர் சலீம்முகமது (வயது 45). இவரது மனைவி மும்தாஜ். 3 மகள்கள் உள்ளனர். சலீம் முகமது தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் வசித்துக்கொண்டு அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் ஷகிலாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஷகிலா, கணவர் ஷபிபுல்லாவை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வர ஷபிபுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோருடன் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார்.பின்னர் மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லாவும் அவரது தம்பியும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் மாமனார் சலீம் முகமதுவை தாக்கினர்.மும்தாஜையும் தாக்கினர். இைதயடுத்து ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இந்தநிலையில் படுகாயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஷபிபுல்லா மற்றும் அவரது தம்பி அயூப்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். ஷபிபுல்லாவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனக்கும் எனது மனைவி ஷகிலாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்க நாட்களில் நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினோம். சில நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைக்காக எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஷகிலா என்னை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து விட்டார். இதில் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து் வாழ வேண்டும் என்று விரும்பினேன். இதனால் எனது அப்பா மற்றும் தம்பி, சகோதரியுடன் திருப்பூர் வந்து மாமனார் வீட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு கூறினேன். இதற்கு மாமனார் சலீம் முகமது அனுப்ப முடியாது என்று வாக்குவாதம் செய்தார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த நான் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினேன்.இதில் அவர் உயிரிழந்து விட்டார். நான் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
    • மனைவியுடன் உரையாடும்போது அவரது பேச்சின் மீது 66 சதவீதம் பேர் கவனம் பதிப்பதில்லை.

    ஸ்மார்ட்போன் உலகம், தொலை தூரத்தில் வசிப்பவர்களை முகம் பார்த்து வீடியோ காலில் பேசும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரே குடும்பத்துக்குள் இடைவெளியை அதிகப்படுத்தியும் விடுகிறது. நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு நேரம் கிடைத்தாலும் கூட தங்கள் அறைக்குள் இருந்தபடி செல்போனிலேயே மூழ்கி பொழுதை கழிக்க வைத்துவிடுகிறது.

    குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மட்டுமல்ல கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பான ஆய்வை நடத்தியது. இந்தியாவை பொறுத்தவரை திருமணமான தம்பதியர்களில் 88 சதவீதம் பேர் அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்கள் உறவை பாதிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். ஸ்மார்ட்போன் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் திருமணமான தம்பதிகளிடையே நடத்தை மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது திருமணமான இந்திய தம்பதியரில் 67 சதவீதம் பேர், தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும்போது கூட ஸ்மார்ட்போனுடன் இணைந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். ஸ்மார்ட்போன் காரணமாக தங்கள் மனைவியுடனான உறவு பலவீனமடைந்திருப்பதாக 66 சதவீத கணவர்கள் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும்போது தங்கள் மனைவி குறுக்கீடு செய்தால் எரிச்சல் அடைவதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மனைவியுடன் உரையாடும்போது அவரது பேச்சின் மீது 66 சதவீதம் பேர் கவனம் பதிப்பதில்லை. செல்போனை பார்த்தபடியே மனைவியின் பேச்சுக்கு தலையாட்டுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    84 சதவீதம் பேர் தங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும், ஆனால் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கும், செல்போன் பார்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுவதால் மனைவியுடன் குறைந்த நேரத்தையே செலவிட முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் மக்களை சோம்பேறிகளாக்குகின்றன என்பதற்கு முரணாக, 55 சதவீதம் பேர் தங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்க ஸ்மார்ட்போன் உதவுவதாக கூறியுள்ளனர். தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு உதவியாக இருப்பதாகவும் 59 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    • கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
    • முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரைபுதூரை சேர்ந்த சந்திரன் (வயது 55) என்பவர் மதுரை கலெக்டர் அலுவல கத்தில் உறவினர்களுடன் வந்து இன்று மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கணேஷ்பிரபு, சுதாகர் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கணேஷ்பிரபு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சுதாகர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    அவர் கடந்த 5-ந்தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக நண்பர்களுடன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் வைகை ஆற்றில் விழுந்து இறந்து விட்டார்.

    சுதாகர் எங்களை நல்லமுறையில் பாதுகாத்து பராமரித்து வந்தார். அவர் இறந்து விட்டது எங்களுக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனது மகன் இறந்ததற்கு தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை.
    • வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள்.

    தன் நலம் பேணாமல் குடும்பத்தினர் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாளும் சுபாவம் கொண்டவர்கள் குடும்பத் தலைவிகள். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அவ்வப்போது பரிசுகளோ, இனிப்பு பண்டங்களோ கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது தங்கள் நலனில் குடும்பத்தினர் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் விதைக்கும். மேலும் உற்சாகத்துடன் செயல்படவும் அவர்களை தூண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை. ஒப்பனை விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒப்பனை செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை என்ற மனக்கவலை அவர்களிடம் இருக்கும். அவர்கள் செய்யும் எளிய ஒப்பனையை பாராட்டினாலே குஷியாகிவிடுவார்கள். 'உன்னுடைய ஹேர் ஸ்டைல் வழக்கத்தைவிட ஸ்டைலாக இருக்கிறது, உன் முகமும் இன்னைக்கு பொலிவாக இருக்கிறது' என்று பாராட்டுவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.

    * புது ஆடை உடுத்தும்போது கணவர் ஏதாவது கருத்து சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் மேலோங்கும். அதனை புரிந்து கொண்டு 'இந்த ஆடை உனக்கு சூப்பராக இருக்கிறது, உன் வயதும் கொஞ்சம் குறைந்துவிட்டது போன்று தோன்றுகிறது' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

    * திருமணமான பிறகு உடல் எடை சற்று அதிகரிப்பது இயல்பானதுதான். பெண்கள் பலர் அதனை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுவார்கள். ஒவ்வொரு நாளும் எடையை குறைக்கும் முயற்சிகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'நீ பயிற்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே மாற்றம் தெரிய தொடங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும் போலிருக்கே' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்தும். உடல் எடையை இன்னும் குறைப்பதற்கான பயிற்சிகளில் தீவிரமாக களமிறங்கிவிடுவார்கள். உடற்பயிற்சியாளர்களின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பதையும் அவர்களிடம் கூறிவிடுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நீங்களே முன்னின்று மேற்கொள்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

    * உண்மையான வயதை காட்டிலும் வயதை சற்று குறைத்து பேசுவதும் பெண்களை உற்சாகப்படுத்தும்.

    * வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள். காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ துணையுடன் பயணம் மேற்கொள்வதும் அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். விடுமுறை காலங்களில் ஓரிரு நாள் வெளி இடங்களுக்கு சென்று வரும்படியான சுற்றுலா பயணங்களை திட்டமிடுங்கள். அவர்களின் பள்ளி, கல்லூரி பருவ காலத்தில் சென்றிருந்த இடமாக அது இருந்தால் இன்னும் சந்தோஷமடைவார்கள். தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஆர்வமுடன் கேட்க தொடங்கினால் குதூகலமாகிவிடுவார்கள்.

    * பிறந்தநாள், திருமண நாளின்போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை, அவர்கள் எதிர்பார்க்காத பரிசுகளை கொடுத்தாலோ உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.

    • நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.
    • குடும்பம் வழிவழியாக தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழாஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் ஆலய வளாகத்தில் லெட்சார்ச்சனையுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளி திருமணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற உள்ளன.

    தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடை பெறும்.

    இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல.

    இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள்.

    மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை,மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

    தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது.

    பாகவத மேளா நாடக விழா முதல் நாளன்று இரவு பிரகலாதா சரித்திரம் எனும் நாட்டிய நாடகம் நடை பெற்றது.

    துவக்கவிழா நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த தீனாபாபு, பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சி.கே.கரியாலி உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் எஸ்.குமார் செய்திருந்தார்.

    • உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி.
    • பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார்.

    பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நகராட்சி பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசுகையில்:-

    பிளாஸ்டிக் கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், காடுகள் அழிப்பினாலும் பூமியில் மண், நீர், காற்று பாதிக்கப்படுகிறது.

    இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

    எனவே, பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும் என்றார்.

    இதில் நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழுதலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலா ளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சின்னமேடு மீனவ கிராம மக்கள் 149 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, மருதம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மதியழகன் மற்றும் சின்னமேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் மதியழகன், கனக்குபிள்ளை, குழந்தைவேல், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    • மாரிமுத்து குடும்பத்தினருடன் தாலுகா அலுவலகம் எதிர்புறம் தர்ணாவில் ஈடுபட்டார்.
    • கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு மாரிமுத்து குடும்பத்தினர் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவரது அண்ணன் மாரிவேல்.

    தர்ணா போராட்டம்

    விவசாயிகளான இவர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் வந்து நெல்லை தாலுகா அலுவலகம் நுழைவு வாயில் எதிர்புறம் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் சந்திப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கூறியதாவது:-

    எங்களது பூர்வீக சொத்து சுத்தமல்லியில் உள்ளது. இதனை எங்களது குடும்பத்தினரும், பெரி யப்பா குடும்பத்தினரும் சரிபாதியாக பங்கிட்டு கொண்டோம். இதற்காக அந்த சொத்திற்கான கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தோம். பெரியப்பா குடும்பத்தினருக்கு விரைவிலேயே தனிப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மாதக்கணக்காகியும் எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கேட்ட போதும், அவர்கள் ஆவணங்கள் சரியில்லை என்று அலைக்கழிப்பு செய்தனர்.

    ஒரே பட்டாவை கொண்ட பெரியப்பா குடும்பத்தினருக்கு தனிப்பட்டா வழங்கிய போது எங்களுக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும் என கூறினார்.

    சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் லட்சுமண பாண்டியன், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • புதிய வாழ்க்கையை தொடங்கும்போது, பல மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
    • இளம் தம்பதியினருக்கு அத்தியாவசியமான நிதிசார் நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.

    'திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பதில் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது. வெவ்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் வளர்ந்த இருவர், ஒன்றாக இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கும்போது, பல மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். அவற்றில் முக்கியமானது நிதி சம்பந்தமான நடவடிக்கைகள். பணம் செலவழிப்பதில் வெவ்வேறு வகையான பழக்கவழக்கங்களை கொண்ட இளம் தம்பதியினருக்கு அத்தியாவசியமான நிதிசார் நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.

    சேமிப்பு : எதிர்காலத்திற்கான முதலீடாக உள்ள பாலிசிகள், வீடு-மனை வாங்குதல் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய இருவரும் ஒன்றாக இணைந்து திட்டமிட வேண்டும். பணி ஓய்வு காலத்துக்கான சேமிப்பு மற்றும் இதர முதலீட்டு வாய்ப்புகளை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, சேமிப்புகளை இணைந்தோ அல்லது தனியாகவோ மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு பின்னர் கணவன் அல்லது மனைவிக்கு அவர்களது குடும்ப சொத்துக்களை நிர்வகிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது இருவரும் ஒற்றுமையாக விவாதித்து செயல்படுதல் அவசியம்.

    பட்ஜெட் : வங்கி தவணைகள், வீட்டு செலவுகள், இதர செலவுகள், எரிபொருள், ஷாப்பிங் செலவு, பெற்றோருக்கு தரும் மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்ட பலவகை செலவு விபரங்களைத் தெளிவாக கணக்கிட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர பட்ஜெட் தயார் செய்து கொள்வது நல்லது. தம்பதிகள் அவர்களது வருமான வரி சம்பந்தமான கணக்குகளையும் இணைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

    ஒருங்கிணைப்பு : திருமணத்துக்கு முன்னர் தனிநபராக மேற்கொண்ட நிதி முதலீடுகளை, மணமான பின்னர் ஒருங்கிணைப்பது அவசியம். ஏனென்றால், அவற்றால் நன்மை ஏற்படும் நிலையில், பிரச்சினை ஏதும் இருக்காது. அதற்கு மாறாக முதலீடு பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், தக்க ஆலோசனைக்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியருக்கிடையே மன உளைச்சல் உருவாகக்கூடும். குறிப்பாக, கணவன் அல்லது மனைவிக்கு நிலுவையில் இருந்த முந்தைய கடன் தவணை காரணமாக குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை உருவாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    எதிர்காலம் : குழந்தைப்பேறு, தொழில் முதலீடு, புதிய கடனுக்கான அவசியம், தனிநபர் காப்பீடு, விபத்து காப்பீடு, பணியிழப்பு போன்ற விஷயங்களில் தம்பதிகள் ஒருமித்த கருத்து கொண்டு, தெளிவாக திட்டமிட வேண்டும். நான்கு மாத வருமானத்தை, எதிர்கால அவசர செலவு நிதியாக 'லிக்விட்டி' முதலீடாக வைத்திருப்பது பாதுகாப்பானது.

    நிதியுதவி : தம்பதியர் கலப்பு மணம் செய்து கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு அரசின் நிதியுதவி கிடைக்கும். மணமான இரண்டு ஆண்டுகளுக்குள் திருமண பதிவு சான்றிதழின் அடிப்படையில் அரசு திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    தீர்மானம் : பழைய நண்பர்கள், மணமாபுதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மைன பின்னர் கிடைத்த புது நண்பர்கள் ஆகியோர்களுடன் வார இறுதி விடுமுறை நாட்களில் செலவு செய்வது, கடனாக பணம் தருவது, இருவரது குடும்ப அங்கத்தினர்களுக்கு அவசர கடன் வழங்குவது, பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் இருவரின் ஒருமித்த முடிவே நல்லது.

    • வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் தலைமை தாங்கி சங்கனாப்பேரி கிராம பஞ்சாயத்தில் உள்ள 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

    வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகம்மது சாகுல் ஹமீது, ஆனந்த், சங்கனாப்பேரி பஞ்சாயத்து தலைவர் சமுத்திரவேல், விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் உணவு மற்றும் நுண்ணூட்ட சத்து விநியோகம் திட்டத்தின் கீழ் சுழற் கலப்பைகளை சங்கனாப்பேரி, திருமலாபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு வழங்கினார். திருமலாபுரம் விதைப் பண்ணைகளையும், தென்மலை மற்றும் ராமசாமி யாபுரம் பகுதி களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தரிசு நில தொகுப்பு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்வது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும்.
    • குடும்ப சுற்றுலா மூலம் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.

    பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம்.

    அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும்.

    அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

    அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.

    குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்

    குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம். அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்

    பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

    குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.

    உற்சாகத்தை தூண்டும்

    குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும். தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.

    • ஜெகதீஷ் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டது.
    • குடும்பத்தின் அன்றாட செலவு உள்ளிட்ட எதற்கும் போதிய வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை அடுத்த வேப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    உடல்நலக்குறைவு

    சென்னையில் லாரி டிரைவராக அவர் வேலை பார்த்து வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டது.

    இதனால் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புக்கு கீழ் செல்லக்கூடிய ரத்த நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை சரி செய்வது கடினம் என கைவிரித்தனர்.

    வருமானம் பாதிப்பு

    இதனல் உடல் உபாதைகளை கூட படுத்த படுக்கையிலேயே பல மாதங்களாக அவர் கழித்து வந்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு தற்போது எழுந்து உட்காரும் அளவிற்கு உடல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அவரது வருமானத்தில் தான் அவர்களது குடும்பம் ஓடி வந்துள்ளது. தற்போது அவரது முடக்கத்தால் மொத்த குடும்பமும் நிலை தடுமாறி உள்ளது. அவரது 2 மகள்களின் படிப்பு, குடும்பத்தின் அன்றாட செலவு உள்ளிட்ட எதற்கும் போதிய வருவாய் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

    அன்றாட தேவை

    கவிதா வைத்துள்ள தையல் எந்திரம் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள நபர்களிடமிருந்து பெறக்கூடிய சிறிய சிறிய துணிகளை தைத்து கொடுத்து குடும்பத்தின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    அவர்களது மூத்த மகள் 7-ம் வகுப்பும், 2-வது மகள் 3-ம் வகுப்பும் படித்து வரும் நிலையில் அந்த குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய முடியாத நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மருத்துவ உதவிக்கு கோரிக்கை

    தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் இது போன்ற பல்வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்களுக்கும் தகுந்த மருத்துவம் வழங்கி அவர்களையும் சாதாரண மனிதர்களை போல செயல்பட வைக்கும் நிலையில் தனது கணவருக்கும் நவீன சிகிச்சை அளிக்க தமிழக அரசும், நெல்லை மாவட்ட நிர்வாகமும் உரிய உதவியை செய்து தர வேண்டும் என்று கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கவனிக்கும் வகையில் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு சிறிய அளவிலான கைத்தொழில் செய்வதற்கும் உதவி செய்திட வேண்டும் எனவும் கவிதா கோரிக்கை வைத்துள்ளார்.

    ×