search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "constituency"

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள். #Congress

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள்.

    அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதிக்கு 62 பேர் மனு கொடுத்து உள்ளனர். கிருஷ்ணகிரி- 15, ஆரணி- 36, கரூர்- 17, திருச்சி- 25, சிவகங்கை, தேனி- 18, விருதுநகர்- 12, கன்னியாகுமரிக்கு 54 பேர் மனு கொடுத்துள்ளார்கள். விருப்பமனுவை பரிசீலித்து பட்டியல் தயாரிக்கும் பணி இன்று நடந்தது.

    காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சஞ்சைதத், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், மற்றும் குஷ்பூ, செல்வப்பெருந்தகை, ஆரூண், கே.ஆர். ராமசாமி, டாக்டர் செல்லக்குமார் உள்பட 26 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்தனர்.

    இந்தப் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்படுகிறது. டெல்லி மேலிடம் வேட்பாளர்களை தேர்வு செய்து இன்னும் இரண்டு நாளில் அறிவிக்க உள்ளது.

    தேனி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி ஆரூண் வாய்ப்பு கேட்டுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான அசன் ஆரூணும் மனு கொடுத்துள்ளார் ஒரே தொகுதிக்கு தந்தையும், மகனும் வாய்ப்பு கேட்டு இருப்பது ருசிகரமாக அமைந்துள்ளது. #Congress

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParliamentElection #BJP #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆனால், அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பா.ம.க.வும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

    அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பா.ஜ.க. விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.



    அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

    மேலும், பா.ஜ.க.வுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. #ParliamentElection #BJP #ADMK
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.

    வழக்கம்போல அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் சேர மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்த கமல்ஹாசன் காங்கிரஸ் பக்கம் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பேசியதால் காங்கிரஸ் அணியில் நிச்சயமாக அவர் இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அவர் எந்த அணியிலும் சேராமல் தனித்து போட்டியிட தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியவன் அல்ல. ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இது ஒரு கடினமான பணி என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சினிமாவும் கூட கடினமான பணிதான். இருந்தாலும் அதில் நான் அனுபவித்து பணிகளை செய்தேன். சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.

    அதே போன்று அரசியலும் இருக்கும். மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்கள். எங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் நிலை உருவாகும்.

    மக்கள் நீதிமய்யம் கட்சியின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று நினைத்தோம். ஆனால், அதை முறியடித்து இருக்கிறோம்.

    இப்போது அனைத்து கிராமங்களிலும் கூட நாங்கள் பிரபலம் அடைந்து இருக்கிறோம். அதாவது எல்லா இடங்களிலும் எங்களது கட்சி சென்றடைந்துள்ளது.

    கிராம சபை கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம். இதன் மூலம் அடிமட்ட மக்களை சென்றடைந்து வருகிறோம். எங்கள் திட்டங்களைத்தான் இப்போது பல கட்சிகளும் காப்பி அடிக்கின்றன.

    எங்களுக்கு தடை ஏற்படுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. எங்களது கூட்டத்துக்கு அனுமதி தருவது போன்றவற்றில் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.

    அதே நேரத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் பல லட்சம் மக்களை நான் சந்தித்து விட்டேன்.

    நான் சிறு வயதில் இருந்தே இது போன்ற கூட்டங்களை பார்த்து பழக்கப்பட்டு உள்ளேன். கடந்த காலங்களில் மக்கள் என்னை சந்தித்ததற்கும், இப்போது சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    அன்று என்னை சினிமா நடிகர் என்ற அடிப்படையில் பார்ப்பதற்கு கூடினார்கள். இப்போது அதில் மாற்றம் உள்ளது. என்னை முக்கிய தலைவராக கருதி பார்க்கிறார்கள்.

    பல மக்கள் என்னை ஒரு தலைவராக பார்த்ததால் தான் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உருவானது. என்னை தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். நம்பிக்கையோடு களம் இறங்குகிறோம்.

    எங்களுடைய சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயமாக சாதனை செய்வோம்.

    எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக பலர் பேசுகிறார்கள். சில கட்சிகளை பொறுத்தவரை எங்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    மக்கள் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், யாரையும் எங்கள் தோளில் சவாரி செய்ய அனுமதிக்க மாட்டோம்.

    தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம்.

    காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோமா? என்பது பற்றிய வி‌ஷயத்தில் தமிழ்நாடு நலன் தான் எங்களுக்கு முக்கியம்.

    மாநில நலனுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து முடிவுகள் இருக்கும்.

    நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறோம். இதில், எந்த மாற்றமும் இருக்காது. நாங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய முடியாது.

    நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னது எனது கட்சியை குறிப்பிட்டு தான் சொன்னேன். நான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது சூழ்நிலைகளை பொறுத்தது. தேவைப்பட்டால் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

    எங்கள் கட்சியில் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வேட்பாளராக நிறுத்துவோம்.

    தேர்தலில் எங்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய வி‌ஷயத்தில் மற்ற கட்சிகளுக்கு நாங்கள் கடுமையான சவால் ஏற்படுத்துவோம். நாங்கள் ஆழமாக ஊடுருவி செல்வோம்.

    ஊழல் புகார் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க.- தி.மு.க. இருகட்சிகளுமே தவறு செய்துள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை இது அகற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த அரசால் தமிழ்நாட்டில் பேரழிவும், தோல்விகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மதச்சார்பற்ற தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சீரழித்து வருகிறது. நாட்டின் நிலைமையே இந்த ஆட்சியால் சீர்குலைந்து இருக்கிறது.

    பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அந்த கட்சி, ஆட்சியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு காரணமாக இருக்கின்றன.



    ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டுமா? என்ற வி‌ஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஒருநபரை முன்னிறுத்தி எதுவும் சொல்ல முடியாது.

    ஆனால், ஒரு மனிதன் மட்டுமே நாட்டை நடத்தி சென்று விட முடியாது. அது ஒரு இயக்கமாக இருக்க வேண்டும். அதற்கு ராகுல்காந்தியை பயன்படுத்தி கொள்ளலாம். சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு கருவி வேண்டும்.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைந்தால் அது எங்களுக்கு சாதகமான வி‌ஷயம்தான். சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எங்களது ஒரே நோக்கம்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பழைய கட்சிகள் செய்கின்றன. அவர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்து பணத்தை சுரண்டி வைத்து இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் சாதாரண மக்களுக்கு எதிராக இருக்கின்றன. அந்த மக்களின் ஆதரவு எங்களை நோக்கி இருக்கும்.

    தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள்தான் சாதிக்க முடியும் என்று சொல்வது தவறான கருத்து. அன்றைய கால கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகள் தேவைப்பட்டு இருக்கலாம். எங்களை பொறுத்தவரையில் இந்தியை எதிர்க்கவில்லை. அதை திணிப்பதை மட்டும்தான் எதிர்க்கிறோம்.

    ஊழல் அனைத்து மட்டத்திலும் ஒழிக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் இலவசம் என்பது கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றில் மட்டும்தான் இருக்க வேண்டும். மது வியாபாரம் மூலம் சாராய மாபியாக்கள் ஆழமாக காலூன்றி இருக்கிறார்கள்.

    மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வருவது அவசியமானது. இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அழிக்க முடியும்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சம்பந்தமான வி‌ஷயத்தில் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவருடைய தனிப்பட்ட வி‌ஷயம்.

    ஜெயலலிதா மரணம் சில சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஜெயலலிதா மரணம் மட்டும் அல்ல, கொடநாடு கொலை விவகாரம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு வயதான பெண் என்னிடம் நடந்து வந்து மற்றவர்களை போல் நீயும் என்னை ஏமாற்றி விடாதே? என்று கூறினார்.

    இதேபோல் மக்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக என்னை சந்திக்கிறார்கள். மாநிலத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம். அதை சிறப்பாக செயல்படுத்துவது எங்களது ஒரே நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 8000 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிக்கோட்டை நெருங்கியுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க அந்த மேஜிக் எண்ணை நெருங்க ஆரம்பித்தது.

    10.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 45 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. இந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.



    100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நெருங்கியிருப்பதால் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறியுள்ளார். அவர் தான் போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
     
    ×