search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chariot festival"

    • புதுவைப் பகுதியில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன.
    • மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள்.

    புதுவை மக்கள் அனைவரும் வில்லியனூருக்கு வந்து தங்கி விழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலை நிறுத்திய பின் அவரவர் ஊருக்குப் போக வேண்டும் என்று சாதிக்கு ஒரு மடம் கட்டினார்கள்.

    அந்த மடத்தில் தங்கி உண்டு, உறங்கி, விழா பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மீனவர்களுக்கு 3 மடம் கட்டினார்கள்.

    1. பட்டினவர் மடம் 2. செம்படவர் மடம் 3, பனிச்சவர் மடம் என 3 மடங்களை கட்டிக்கொடுத்தார்கள். புதுவை பகுதியில் உள்ள கடற்கரையோர மீனவர்களும் ஆற்றில் மீன் பிடிக்கும் செம்படவர்களும் மீனவர்களுக்கு உதவிகள் செய்யும் பனிச்சவர்களும் வில்லியனூரில் திருவிழா காலங்களில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    புதுவைப் பகுதியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன. இவைகளில் பெரிய மீனவ கிராமம் வீராம்பட்டினம் ஆகும்.

    வீராம்பட்டினம் கிராமப்பஞ்சாயத்தும் பொது மக்களும் முன்னிருந்து கோவில் விழாவில் கலந்து கொள்வார்கள்.

    கடற்கரையோரம் உள்ள மீனவர்கள், உறவு முறையினர், பட்டினவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கித் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலைநிறுத்துவார்கள்.

    அதேபோல் ஆற்றில் மீன் பிடிப்பவர்களும் செம்படவர் மடத்தில் தங்கி சமைத்து உண்டு உறங்கி தேரை இழுத்து நிலை நிறுத்துவார்கள். பனிச்சவர்களும் பனிச்சவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கி தேர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

    வில்லியனூர் கோகிலாம்பிகை மற்றும்

    திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு மீனவர்களுக்கு என முக்கியத்துவம் கொடுத்தார்கள். தேர்த்திருவிழா அன்று தேரைவடம் பிடித்து இழுத்து மறுபடியும் நின்ற இடத்தில் நிலை நிறுத்துவது மீனவர்கள்.

    வில்லியனூர் ஊருக்கு நடுவில் கோவிலின் நான்கு புறமும் மாட வீதி, மண்ரோடு அந்த ரோட்டில் தேர் இழுப்பதற்கு வலுவான ஆட்கள் மீனவர்கள் தான் என்று உணர்ந்தார்கள்.

    மீனவர்கள் பெரிய வலை போட்டு இழுத்து பழக்கப்பட்டவர்கள். கைகள் காய்ப்பேறி இருக்கும். கைகள் மரமர என்று இருக்கும். மாட வீதியில் மண் வீதியில் மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள். இந்த சம்பவம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    • பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்

    அணைக்கட்டு:

    வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலஅகலமாக நடைபெற்றது இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம்,யானை வாகனம், குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவம் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் அருள்மிகு எல்லையம்மன் அலங்கரிப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

    வீதியில் வந்த தேரின் மீது பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். திருத்தேர் முக்கிய மாட வீதிகளின் வழியாக சென்றது.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான செங்கழுநீர் அம்மன் கோவில் அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடி யேற்றமும் நடந்தது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பஞ்சமுக மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத் தலைவர் உதயசங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இருசப்பன், உறுப்பினர் முத்துவேல், விழா குழுவினர், மக்கள் குழுவினர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
    • மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.

    3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.

    4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

    6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

    8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.

    9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

    10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.

    11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

    12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.

    13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

    14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.

    15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

    16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

    17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

    அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

    18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.

    19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

    20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
    • வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை சாமிநாதப் பிள்ளை வீதியில் முத்து மாரியம்மன் 32- ம் ஆண்டு செடல் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஆடி மாதம் 3 ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி கூழ்வார்த்தல், செடல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை தொடர்ந்து சக்தி கரகத்தோடு, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக முதலியார் பேட்டையில் உள்ள பல வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து செடல் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராஜி என்ற பாவாடைராயன், சங்கரய்யா, ராமதாஸ், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
    • வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி சிலைகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருவிழா நடத்திட ஊர் பெரியதனக்காரர்கள் முடிவு செய்தனர். முன்னோர்கள் வழக்கப்படி கிராமம் முழுவதும் வீடுகள் தோறும் கோயில் காளை அலங்கரித்து அழைத்துச் சென்று தேர்திருவிழா செலவுக்கு வரி வசூல் செய்தனர்.

    இதனையடுத்து நாளை சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்களும் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் பிறப்பு குறித்த இசைப்பாட்டு சொற்பொழிவு 2 வாரங்களாக நடந்து வருவதும், வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவில் இருந்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை விருந்துக்கு அழைத்துச் சென்று, மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து தினந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருவதும் குறிப்பிடதக்கதாகும்.

    • இன்று ரத உற்சவம் நடக்கிறது
    • மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சியில் கிராம தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று 13-ந் தேதி காலை தொடங்கியது.

    முன்னதாக கடந்த 30-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டி தினமும் பாலாபிஷேகம் நடைபெற்றது. 6-ந் தேதி அப்பனூர் மாரியம்மனுக்கு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ரத உற்சவம் தொடங்கியது. இன்று அப்பனூர் மாரியம்மனுக்கு ரத உற்சவம் நடக்கிறது.

    இரவு 10 மணி அளவில் நாடகமும், வாணவேடிக்கையும், மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.

    • வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவிலில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது.
    • திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவி லில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடே சன், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வாழ்த்தி பேசினார். அவர் பேசுகை யில், தி.மு.க. ஆட்சியில் திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி கோட்டம் அமைய உள்ளது. இங்கு அடுத்த வருடம் அர்த்தநாரீஸ்வரர் புதிய தேரில் வலம் வர உள்ளார் என்றார்.

    விழாவில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அனி தாவேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் வரவேற்று பேசினார். நகர செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

    • ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது.

    ஏர்வாடி:

    ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இங்கு கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தேரோட்ட திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங் களில் சுவாமி அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதேபோல் களக்காடு கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவினை வெவ்வேறு சமூகத்தினரை சேர்ந்தவர்கள் மண்டகபடி செய்து விழாவை சிறப்பித்து வருகின்றனர்.

    • இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
    • உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    கடலூ:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    புதுச்சேரி:

    வில்லியனூரில் தர்மபால சோழ மன்ன ரால் கட்டப்பட்ட திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. 

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு தேர் திருவிழா தொடங்குகிறது. 

    இதையொட்டி கடந்த 5 நாட்களாக பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆடு பலிகொடுக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.  7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 

    தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 10-ந் தேதி திருக்கல்யாணம்,  11-ந் தேதி தேரோட்டம்,  12-ந் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. 

    விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். 

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    புதுச்சேரி:

    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும்  வைகாசி மாதம் பிரம்மோற்சவவிழா சிறப்பாக கொண்டா டப்படும். கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டாக தேர் திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு விழா நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

    இதையடுத்து பிரம்மோற்சவ தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சாமி வீதியுலா நடக்கிறது. வருகிற 10-ந் தேதி மாலை 6.30  மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7.15 மணிக்கு  கோவில் முன்பு தேரோட்டம் தொடங்கி மாட வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைகிறது. விழாவில் கவர்னர் தமிழயிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். 12-ந் தேதி  நண்பகல் தீர்த்தவாரியும், மாலை தெப்ப உற்சவமும், 13-ந் தேதி முத்து பல்லக்கும் நடக்கிறது. 

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலரும் சிறப்பு  அதிகாரியுமான திருவரசன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.
    ×