search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DIMITHI FESTIVAL"

    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    திருக்கடையூர்:

    திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக மாலை 5 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக்காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.

    பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.

    தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு.
    • சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம்.

    ஆலயத் தோற்றம்

    நம் பாரதத்தில் மகாபாரதத்துடன் தொடர்புடைய பல ஆலயங்கள் உண்டு. அப்படி ஒரு ஆலயம்தான், சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள திரவுபதி அம்மன் ஆலயம். திரவுபதியுடன் பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த நேரத்தில், உபமன்யு முனிவரிடம் ஆசி பெறுவதற்காக தில்லை வனத்திற்கு வந்தனர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அப்படி அவர்கள் வந்து தங்கியிருந்த இடத்தில்தான், தற்போது திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு காலச் சூழல்களில் சிதிலமடைந்ததன் காரணமாக, சமீப காலங்களில் புதியதாக கட்டப்பட்டிருக்கிறது.

     இந்த ஆலயம் பல காலமாக சிதிலமடைந்து கிடந்ததால், அதில் இருந்த அம்மனை மட்டும் ஒரு இடத்தில் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனா். ஒரு முறை திரவுபதியை வணங்கும் ஒரு பெண்ணிற்கு, கிணற்றில் குதித்து நீராடுவது போல் கனவு வந்துள்ளது.

    கனவில் கிணற்றில் குளித்து விட்டு வெளியே வந்த பக்தையை, கரையில் நின்ற ஒரு பெண் பார்த்து, "நீ தினமும் நீராடுகிறாய்.. நான் எவ்வளவு நாளைக்கு தான் நீராடாமல் இருப்பது?" என்று கேட்டு புன்னகைத்தாளாம். அதற்கு அந்த பக்தை, "யாரம்மா நீ?" என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் "இந்த இடத்தின் சொந்தக்காரி" என்று கூறி மறைந்துவிட்டாளாம்.

    தான் கண்ட கனவை மறுநாள் காலையில் வீட்டாரிடமும், ஊர்க்காரர்களிடமும் அம்மனை வழிபடும் பெண் கூறியிருக்கிறார். மேலும், "என் கனவில் வந்தது வேறு யாருமல்ல. இங்கே சிதைந்து கிடக்கும் ஆலயத்தில் இருந்தபடி நம்மை எல்லாம் காத்து ரட்சிக்கும் திரவுபதி அம்மன்தான்" என்று கூறியிருக்கிறார்.

    இதையடுத்து அந்த ஊர் மக்கள் சார்பில், சிதைந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துக் கட்டும் பணி தொடங்கப்பட்டது. திரவுபதி அம்மனின் அருளால் ஆலயம் கட்டும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றது. சிறு ஆலயமாக கட்டி முடித்து குடமுழுக்கும் செய்தனர்.

    அதன்பிறகு ஆலயம் மீண்டும் சிதலமடைந்து சுமார் 50 ஆண்டு காலமாக அப்படியே இருந்தது. இதையடுத்து மீண்டும் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இணைந்து ஆலயத்தை திருப்பணி செய்து புதுப்பித்தனர். இந்தப் பணி 1988-ம் ஆண்டு தொடங்கி, 1989-ம் ஆண்டு முடிந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் ஆலயம் முன் மண்டபம் கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

     ஆலய அமைப்பு

    ஆலய முகப்பில் இருப்பது சுப மண்டபம். அதனுள் நுழைந்தால், கருடாழ்வார், கொடிமரம், பலிபீடம், நந்தி, காவல் தெய்வமான முத்தால் வழிவகுத்தார், விநாயகர், பாலமுருகன், அரவான், உள்ளடியார், அய்யனார் சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. கருவறையில் திரவுபதி அம்மன் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இரு திருக்கரங்களோடு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கோஷ்டத்தில் சன்னிதிகள் இல்லை.

    திருமணத் தடை உள்ளவர்கள், தொடர்ந்து 9 வாரம் வெள்ளிக்கிழமைகளில் பூசணிக்காய், அன்னாசிபழம் ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், அர்த்த மண்டபத்தில் அம்மனுக்கு நேராக தலை வாழை இலை போட்டு, அதில் அட்சதை நிரப்பி, அதன் மேல் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

    கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்காகவும் இங்கே வழிபாடு செய்கிறார்கள். அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இந்த ஆலயத்தின் சுப மண்டபத்தில் வைத்து வளைகாப்பு செய்து கொள்கிறார்கள். அப்போது திரவுபதி அம்மனிடம் இருந்து பெறப்பட்ட வளையலையே, முதல் வளையலாக கருவுற்ற பெண்ணுக்கு அணிவிக்கிறார்கள்.

     இவ்வாலயத்தில் வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் பெருந்தீமிதித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தவிர கார்த்திகை தீப விழா, ஆடி கடைசி வெள்ளியில் திருவிளக்கு பூஜை, மாத பவுர்ணமி பூஜை ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையத்தில் இருந்து வீரராகவன் தெரு வழியாக சென்றால் ½ கிலோமீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம்.

    • தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர்
    • தருமர் பட்டாபிஷேகம் நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு மதுரா வீரக்கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

    இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் அலகு நிறுத்தப்பட்டது. நேற்று கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் பீமன் வேடமணிந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர்.

    இன்று காலை தருமர் பட்டாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை படவேடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • மகாபாரத நாடகங்கள் நடைபெற உள்ளது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு மதுரா வீரக்கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 18-ந் தேதி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் அலகு நிறுத்தப்பட்டது.

    தினமும் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை தினமும் மேல்பள்ளிப்பட்டு வெ.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகா பாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 25-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை தினமும் கோவிலின் முன்பு போத்துராஜாமங்கலம் குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடைபெற உள்ளது.

    • ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை கட்டிக் கொண்டால் விரைவில் எண்ணம் கைகூடும்.
    • அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பானது.

    சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் படவேட்டம்மன் ஆலயம் உள்ளது. இங்கு கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

    வலது கையில் அன்னம், உடுக்கையை பின்னிரு கைகள் தாங்கி நிற்க, முன்னிருகைகள் அபய ஹஸ்தமாகக் காட்சிதர, வருகின்ற பக்தர்களுக்கு கருணைக் கண்களோடு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    அம்மன் பீடத்துக்கு கீழே இரண்டு முக வடிவ விக்ரகம் காணப்படுகிறது. அதில் ஒன்று சுமார் ஆயிரம் வருடங்களாக முந்தையது என்கிறார்கள்.

    வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத வகையில் இத்தலத்தில் தென் கிழக்கில் அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பான செய்தியாகும். இக்கோவிலில் நடைபெறும் தீமிதி விழாவில் அக்னியை மூட்டி இந்த அக்னிதேவன் சன்னதியில் வைத்து ஆராதித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் மிகச் சிறப்பான விழாவாக, ஆடி மாதம் நாலாவது வார ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் தீமிதி விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீமிதியில் பக்தியுடன் கலந்து கொள்கின்றனர்.

    கல்யாணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தைப் ேபறு வேண்டி நிற்பவர்கள் இத்தலத்து ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை வாங்கி கட்டிக் கொண்டால் வெகு விரைவிலேயே எண்ணம் கைகூடுகிறது.

    • தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
    • மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.

    3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.

    4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

    6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

    8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.

    9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

    10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.

    11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

    12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.

    13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

    14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.

    15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

    16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

    17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

    அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

    18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.

    19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

    20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • சீர்காழியில் இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாள்தோறும் இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவில் சென்றடைந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து மாலை பச்சகாளி, பவளக்காளி வேடம் அணிந்து பக்தர்கள் வீதியுலா வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இத்திருகோவிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி வெள்ளிக்கிழமை கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்றிலிருந்து நாள்தோறும் பல்வேறு வகையான பூஜைகள்,கரகம் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, கூழ் ஊற்றும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.நேற்று மாலை ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள முனுசாமி தாத்தா கோவில் அருகே காப்பு கட்டி விரதம் இருந்த குமார மக்கள் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், பூக்களாலும்,மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது.இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இதன் பின்னர், மங்கள வாத்தியம் இசைக்க பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆத்துப்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெறறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீமிதித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் தர்மராஜா கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள திரவுபதி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 19-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து தினமும் மூலவர், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு வீதி உலா காட்சி ஆகியவை நடைபெற்று வந்தது. இதன் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெறறது. இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீமிதித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்தனர்.

    • முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. கிராம தேவதையான ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை இரவு பொன்னியம்மன் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கடந்த 23-ம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை தர்மராஜா கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திரெளபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை புனித நீர் ஆடி, காப்பு கட்டி விரதம் இருந்த கிராம மக்களை, அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர்,கோவில் வளாகத்தில் வான வேடிக்கையும், அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும், தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே கொண்டல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் அம்பாள் திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.

    அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    அப்போது ஏராளமான பக்தர்கள் சாட்டையடி பெற்று சென்றனர்.

    ×