என் மலர்
நீங்கள் தேடியது "Nerthikadan"
- பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர்.
- தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
பின்னர் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து அம்மன் வீதி உலா புறப்பட்டது.
நேற்று முன்தினம் காலையில் இருந்து சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் இரவில் சிக்கரசம்பாளையம் புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம்பாளையம் புதூர் பகுதியில் வீதி உலா சென்றுவிட்டு இக்கரை நெகமம் காலனி பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தாரை, தப்பட்டை முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
பின்னர் அங்கிருந்து அம்மனின் சப்பரம் புறப்படும்போது ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சப்பரம் வரும் வழியில் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சப்பரத்தை தூக்கி வந்தவர்கள் மற்றும் பூசாரி ஆகியோர் ஒவ்வொரு பக்தர்களையும் தாண்டியபடி அம்மனின் சப்பரத்தை தூக்கி சென்றனர்.
இதையடுத்து பக்தர்கள் பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் சப்பரம் இரவு வெள்ளியம்பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் அங்கு தங்க வைக்கப்பட்டது.
- அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் உள்ள தமிழர் காலனியை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அழகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.
முன்னதாக ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- 18-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது.
- இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை.
திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பழமையான தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் கிடாவெட்டுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், பால்குடம், பறவை காவடி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ஆனால் தனி லிங்கபெருமாளுக்கு பக்தர்கள் நாடகங்கள் நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது விசேஷம். நாடகங்கள் நடத்துவதற்காகவே கோவில் வளாகத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நேர்த்திக்காக நடத்தக்கூடிய நாடகங்களை வலையங்குளம் கிராம மக்கள் மட்டுமல்லாது சோளங்குருணி, கொம்பாடி உலகாணி நல்லூர், எலியார்பத்தி, பாரப்பத்தி உள்பட பல கிராம மக்கள் கண்டுரசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 30 முதல் 70 நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நேர்த்திக்கான நாடகங்கள் நடத்த கோவிலில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வகையில் இந்த ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நாடகங்கள் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பினும் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதால் 32 நாடங்கள் நடத்துவது என்று ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வழக்கம்போல வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை. கோவில் வாசல் முன்பு நின்று பெண்பக்தர்கள் வழிபடுகின்றனர். பெண் பக்தர்கள் வாசலை தவிர்த்து கோவிலுக்குள் செல்லாதது இந்த கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.
- பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
- பக்தர் ஒருவர் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தினார்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தானியங்கள், காசு, பண முடிச்சு மற்றும் கன்றுகுட்டிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிகருப்பணசுவாமிக்கு பக்தர்கள் சந்தனம், எலுமிச்சம்பழ மாலைகள், பூவண்ண மாலைகள் மற்றும் அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்,
இதில் நேற்று ஒரு பக்தர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். மேலும் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
- ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமியிடம், பக்தர்கள் தங்களுடைய குறைகளை தீர்க்கும்படி வேண்டி கொள்வார்கள். அந்த குறைகள் தீர்ந்ததும், கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர்.
பொதுவாக காணிக்கையாக செலுத்தப்படும் அரிவாள்கள் இரும்பு தகடுகளால் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஒருசில பக்தர்கள் தங்கத்திலான அரிவாள்களையும் சாமிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை, பரம்பரையாக அந்த ஊரில் அரிவாள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-ந்தேதி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.
இ்தையொட்டி காணிக்கை செலுத்துவதற்கு அரிவாள் செய்யும் பணி கடந்த மார்கழி மாதம் 1-ந்தேதி தொடங்கியது. இதற்காக விரதம் இருந்து தொழிலாளர்கள் அரிவாள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து திருவிழாவில் கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக அரிவாள் செய்தவர்களின் வீட்டில் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்த அரிவாள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கோவில் சாமியாடிகள், பூசாரிகள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் மேளதாளம், வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரக்கணக்கான அரிவாள்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
இந்த ஊர்வலத்தை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோட்டை கருப்பணசாமி கோவிலில் அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டன. இதில் குறைந்தபட்சம் 2 அடி முதல் 15 அடி உயரம் கொண்ட அரிவாள்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் பக்தர்களால் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- இந்த ராட்சத அரிவாள் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் ஆனது.
- இந்த அரிவாள் மொத்த எடை 250 கிலோ கொண்டது.
திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள், மேலும் இறைச்சி வெட்ட பயன்படும் கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயாரித்து கொடுக்கின்றனர்.
இதுகுறித்து 18 அடி நீள அரிவாள் தயாரித்துள்ள சதீஷ்குமார் நாகேந்திரன் கூறியதாவது:-
எங்களிடம் மதுரை சர்வேயர்காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 18 அடி நீளத்திற்கு கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க ராட்சத அரிவாள் தயார் செய்ய வேண்டும் என்றனர். அடிக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கூலி பேசி தயார் செய்துள்ளோம். இந்த ராட்சத அரிவாள் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் ஆனது.
இதில் அரிவாள் 15 அடி உயரத்திலும் கைப்பிடி 3 அடி உயரத்திலும் மொத்த 18 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிவாள் மொத்த எடை 250 கிலோ கொண்டது. இந்த ராட்சத அரிவாள் மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்க தயார் செய்துள்ளோம். இந்த அரிவாள் பெரிய சரக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது,
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏழு கங்கையம்மன் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. ஏழு கங்கையம்மன்களான பொன்னாலம்மன், முத்தியாலம்மன், காவம்மன், அங்கம்மன், கருப்பு கங்கையம்மன், அங்காளம்மன், புவனேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரில் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
எழுந்தருளிய இடங்களில் அம்மன்களுக்கு பக்தர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். பூஜைகள் முடிந்ததும் ஏழு அம்மன்களும் மீண்டும் ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, அந்த இடத்தில் இருந்து ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு புறப்பட்டனர். ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.
திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆங்காங்கே தோரணங்கள் கட்டுப்பட்டு இருந்தது. அம்மன்கள் ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
- பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருக்கும்.
- ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.
ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி சோம வார திருவிழா தொடங்கியது. விழாவில் வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், பரக்கலக்கோட்டைக்கு இயக்கப்பட்டன.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த ஆடு, கோழி, நெல், தேங்காய், உளுந்து, நவதானியங்கள், தென்னங்கன்று, மாங்காய், பலாப்பழம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு மத்தியபுரீஸ்வரர் வீற்றிருக்கும் ஆலமரத்தின் இலையும், விபூதியும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 6 மணிக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் பொருட்கள் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்பட்டது. நேற்று கடைசி சோம வார திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். இவை ஏலம் விடப்பட்டன.
வெளியூரில் இருந்து வருகை தந்த பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை உதவி ஆணையர் நாகையா தலைமையில் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல் துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம், மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள், ஊர் பிரமுகர்கள் செய்து இருந்தனர்.
- இந்த கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
- விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை வழிபட்டு செல்வார்கள்.
அந்த வகையில் நடப்பாண்டு புரட்டாசி மாத முதல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர். இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேவநாதசாமி கோவிலுக்கு திரண்டு வந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மொட்டை அடித்துக் கொண்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தேவநாதசாமியை தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மேலும் 3-ம் சனிக்கிழமையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர இன்று 3-ம் வார சனிக்கிழமை பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பகுதி மற்றும் சாலைகளில் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- இந்த கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை ஒன்று உள்ளது. இதற்கு தனி சன்னதியும் இந்த கோவிலில் அமைந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகவும் தொன்மையான மற்றும் பழமையான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலின் வளாகத்தில் வீடுகள் அமைப்பு போன்று ஓட்டுக் கற்களை வரிசையாக அடுக்கி வைத்து செல்கின்றனர். இதுபற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-
மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இங்கு வரக்கூடிய பக்தர்கள் சொந்தமாக வீடுகட்ட வேண்டும்.
தங்களது சொந்த வீடு கனவு இல்லம் ஆசை நிறைவேற மங்களநாதரிடம் பிரார்த்தனை செய்து வளாகத்தில் கற்களால் வீடுகட்டி வேண்டிக்கொள்கின்றனர். பலருக்கு வீடுகட்டும் ஆசையும் நிறைவேறி உள்ளதால் அதன் நம்பிக்கையில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போன்று அடுக்கி வைத்து செல்கின்றனர்.
இவர் அவர் கூறினார்.