search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sundar Pichai"

    • சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    வாஷிங்டன்:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

    மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா இன்று முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக தகவல்.
    • கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். பின்னர், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம் என சுந்தர் பிச்சை கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், " அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் கிப்ட் நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் (fintech) செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.

    டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது. இதனை மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக நான் இப்போது பார்க்கிறேன்" என்றார்.

    • எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது.
    • குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்.

    16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்! குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆல்பபெட் சிக்கன நடவடிக்கைகளை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
    • ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் வழங்கப்பட்டு உள்ளது.

    கலிபோர்னியா:

    கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கைகளை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

    இதனை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் (ரூ.1,850 கோடி) வழங்கப்பட்டு உள்ளது.

    இது சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும் என ஆல்பபெட் பங்கு சந்தையிடம் அளித்த ஆவணங்களில் சுட்டிக் காட்டியுள்ளது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியத்தில் 21.8 கோடி டாலர் (ரூ.1,800 கோடி) பங்கு சார்ந்த பரிசுகளும் அடங்கும்.

    ஆல்பபெட் நிறுவனம் உலகளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக இவ்வாண்டு ஜனவரியில் அறிவித்தது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் 6 சதவீதத்துக்கு சமமாகும்.

    இந்த நிலையில் சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டில் வாரி வழங்கப்பட்டுள்ள பல கோடி டாலர் சம்பளம் சாதாரண பணியாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இடையிலான இமாலய அளவிலான ஊதிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என பணியாளர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.

    ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு இடையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் பேர்ட் சாட்போட்டை உருவாக்கும் பணிகளில் ஆல்பபெட் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது.
    • சமீபத்தில் கூகுள் நிறுவனம் உலகளவில் சுமார் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    கூகுள் நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கித் தவிப்பதாக தெரிகிறது. ஊழியர்களிடம் மேஜைகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள கூகுள் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனம் காசை மிச்சப்படுத்த முடியும் என சுந்தர் பிச்சை தெரிவித்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 12 ஆயரம் பேரை பணி நீக்கம் செய்த நிலையில், கூகுள் இந்த நடவடிக்கை மூலம் செலவீனங்களை குறைக்க முயற்சிக்கிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஆல்-ஹேண்ட்ஸ் சந்திப்பில் பேசிய சுந்தர் பிச்சை, "என்னை பொருத்தவரை அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்கின்றனர். அதே சமயம் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பர், எப்போதும் மேஜைகள் காலியாகவே உள்ளது. இதை பார்க்க பேய் நகரம் போன்று காட்சியளிக்கும். இது நல்ல அனுபவம் இல்லை," என்று தெரிவித்து இருக்கிறார்.

     

    சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்காவின் நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ போன்ற பகுதிகளில் கூகுள் கிளவுட் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களின் சக பணியாளர்களுடன் அலுவலகம் மற்றும் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டனர். தற்போது மேஜைகளை பகிர்ந்து கொள்வது கிளவுட் பிரிவுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற குழுக்களை சேர்ந்தவர்களும் இதனை முயற்சிக்கலாம் என கூகுள் சிஇஒ தெரிவித்து இருக்கிறார்.

    மேஜை பகிர்வதோடு மட்டுமின்றி ஊழியர்கள் செலவீனங்களில் கவனமாக இருக்கவும், தேவையின்றி பணம் மற்றும் பொருட்களை செலவிட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். "நிதி தேவைகளை கையாள்வதில் நாம் சிறப்பாக செயலாற்ற வேண்டும். நமக்கான ரியல் எஸ்டேட் செலவீனங்கள் அதிகம் ஆகும். இவை 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும் எனில், இந்த விஷயத்தில் நாம் சரி செய்வது எப்படி என யோசிக்க வேண்டும்," என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    • சந்திப்புக்கு பிறகு பிரதமருக்கு நன்றி தெரிவித்து சுந்தர் பிச்சை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது

    புதுடெல்லி:

    கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'சுந்தர் பிச்சை, உங்களை சந்தித்து புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி. மனித சமுதாய முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலகம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது முக்கியம்' என கூறி உள்ளார்.

    பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பிரதமருக்கு நன்றி தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குகிறேன். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு முழு ஆதரவை அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google



    தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருக்கும் அறிக்கையில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்து இருக்கிறார். 

    "தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக கிடைக்க வேண்டும். கூகுளின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க நான் சந்திப்பவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்கின்றனர்.



    "தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும். கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது." இவ்வாறு சுந்தர் தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்தார். #SundarPichai



    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்து பேசியதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    இச்சந்திப்பின் போது கூகுள் நிறுவனம் சீன ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவது பற்றியும், அரசியல் சார்பு மற்றும் சீன வியாபாரம் பற்றி இருவரும் பேசியதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். 

    "தான் அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே முழு ஒத்துழைப்பு வழங்குவதாக," சுந்தர் பிச்சை தெரிவித்ததாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "சுந்தருடன் அரசியல் சார்பு பற்றியும் கூகுள் நிறுவனம் நம் நாட்டிற்கு செய்யக் கூடிய பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினேன். சந்திப்பு மிகச்சிறப்பாக நிறைவுற்றது!," என டிரம்ப் தெரிவித்தார். 



    "நாங்கள் சீன ராணுவத்துடன் பணியாற்றவில்லை. நாங்கள் அமெரிக்க அரசு, பாதுகாப்பு அமைச்சகத்துடன் சைபர்செக்யூரிட்டி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வருகிறோம்," என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

    கூகுள் நிறுவனம் சீனாவில் மேற்கொள்ளும் பணிகளால் சீன ராணுவம் ஆதாயமடைந்து வருவதாக அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த ராணுவ அதிகாரி ஜோசப் டன்ஃபோர்டு குற்றஞ்சாட்டியிருந்தார். கூகுள் கோரிக்கையை ஏற்று டன்ஃபோர்டு சுந்தர் பிச்சையை சந்தித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் மேற்கொள்ளும் வியாபாரத்தால், அதிகளவிலான மிகமுக்கிய விவரங்கள் மறைமுகமாக சீன ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுவது அமெரிக்காவுக்கு ஆபத்தாக அமையலாம் என்று ஜெனரல் டன்ஃபோர்டு வருத்தம் தெரிவித்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் பட்ரிக் ரைடர் தெரிவித்தார். 

    சீனாவில் பல ஆண்டுகளாக கூகுள் முதலீடு செய்து வருகிறது. மேலும் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சந்தர் பிச்சை தெரிவித்தார். 
    கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேரை கூகுள் பணிநீக்கம் செய்திருக்கிறது. #Google



    கூகுள் நிறுவனத்தில் சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த சில ஆண் ஊழியர்களை கூகுள் நிறுவனம் காப்பாற்றியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
     
    இந்த அறிவிப்பு கூகுள் ஊழியர்களுக்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அனுப்பிய மின்னஞ்சலில் இடம்பெற்று இருந்தது. 

    இது 2014ம் ஆண்டில் ஆன்ட்ராய்டு மென்பொருள் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு நேரடி பதிலாக அமைந்தது.

    சுந்தர் பிச்சை எழுதியிருக்கும் மின்னஞ்சலில், 2015ம் ஆண்டு கூகுள் பல்வேறு கடின முடிவுகளை எடுத்தது. இவற்றில் கூகுள் துணை தலைவர்கள், மூத்த துணை தலைவர்கள் கூகுள் நிறுவனத்தில் ஒரே துறை அல்லது மற்ற துறைகளில் பணியாற்றுவோருடன் உறவு பாராட்டும் பட்சத்தில் அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. என குறிப்பிட்டிருக்கிறார்.

    இத்துடன் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 48 ஊழியர்களில் 13 பேர் மூத்த மேளாலர்கள் அல்லது அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர் என சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார். இந்த 13 பேருக்கும் கூகுள் சார்பில் பணிவிடுப்பு மற்றும் நிலுவைத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    "கூகுளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்," என்றும் சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார். 
    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார். #RaviShankarPrasad #Google



    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார்.

    இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்று பல்வேறு இதர திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும், என சுந்தர் பிச்சையிடம் தெரிவித்ததாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். 

    "கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் கூகுள் நிறுவன குழுவினருடன் சிறப்பான சந்திப்பு. இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்ற பல்வேறு திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என சுந்தர் பிச்சையிடம் கேட்டுக் கொண்டேன்," என ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நவீன விவசாய முறை மற்றும் வானிலை குறித்த விவரங்களை இந்திய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூகுளிடம் கேட்டுக் கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு மூன்று நாட்கள் அலுவல் ரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரவி சங்கர் பிரசாத், தொழில்நுட்பத் துறையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து இந்தியாவின் டிஜிட்டல் பரிணாமத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
    கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனின் அபராத நடவடிக்கைக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதில் அளித்திருக்கிறார். #Google



    உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமாக கூகுள் இருக்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள், ஆன்ட்ராய்டு உற்பத்தியாளர்களிடம் தனது செயலிகளை வலுக்கட்டாயமாக புகுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஐரோப்பிய யூனியனில் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. 

    விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு 500 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்பட்டது.



    இத்துடன் கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கூறியது.

    ஐரோப்பிய யூனியனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளதாவது:-

    ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை இலவச-ஆன்ட்ராய்டு வியாபாரத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். பயனர்கள் சராசரியாக 50 செயலிகளை தாங்களாகவே இன்ஸ்டால் செய்கின்றனர். மேலும், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அன்-இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.



    மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் எங்களது செயலிகளை தங்களது சாதனங்களில் அனுமதிக்காத போது, ஆன்ட்ராய்டு தளத்தை இது பெரிதும் பாதிக்கும். இதுவரை எங்களின் வியாபார யுக்தியானது, மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் எங்களது தொழில்நுட்பத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தவோ அல்லது கடினமான விநியோக முறையை பின்பற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தவில்லை.

    இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    கூகுள் தனது செயலிகளை சாதனங்களில் வழங்குவதை எவ்வாறு முறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஐரோப்பிய யூனியன் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஒருவேளை, மொபைல் போன் உற்பத்தியாளர்கள் தாங்களாகவே பிரவுசரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தால், கூகுளின் மொபைல் விளம்பர வருவாயினை அதிகம் பாதிக்கும். கூகுளின் டிஜிட்டல் வருவாயில் விளம்பரங்களில் இருந்து மட்டும் 50% அதிகம் ஆகும்.

    ஆன்ட்ராய்டு வியாபார யுக்தி மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூகுள் எச்சரித்துள்ளது. இதன் மூலம் மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உரிமம் அடிப்படையில் வழங்க துவங்கும். கூகுள் க்ரோம் பிரவுசர் மொபைல் போன்களின் டீஃபால்ட் பிரவுசர் பகுதியில் இருந்து நீக்கப்பட்டாலும், பயனர்கள் இதனை அவர்களாகவே பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்வர் என்றே கூறலாம்.
    ×